நகைச்சுவை மன்னன் மஹேந்திர பல்லவன் (Post No.4434)

Written by London Swaminathan 

 

Date: 26 NOVEMBER 2017

 

Time uploaded in London- 9-09 am

 

 

Post No. 4434

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

அப்பர் என்னும் திருநாவுக்கரசரைப் படாதபாடு படுத்திய மன்னன் மஹேந்திரபல்லவன். சைவ சமயத்திலிருந்து சமணத்துக்குத் தாவி மீண்டும் சைவத்துக்கே திரும்பிய கட்சி மாறி; இக்கால ஆயாராம், கயாரம் கட்சிமாறிகளுக்கு முன்னோடி.

அப்பர் காலம் வரை நிலவிய அழியும் கோவில்களை அகற்றி முதலில் குகைக் கோவில்களை நிறுவியவன். திருச்சி வரை ஆட்சியை விஸ்தரித்து திருச்சி அருகில் பல கோட்டைகளை நிறுவியவன். மாபெரும் சம்ஸ்கிருத பண்டிதன்; பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணுவின் மகன். வாதாபி கொண்ட நரசிம்ம பல்லவனுக்குத் தந்தை.

 

ஷேக்ஸ்பியருக்கும் முன்னால் காமெடி (Comedy) எழுதி புகழ்பெற்றவன்.

பாஷா, சூத்ரகன், காளிதாசன் முதலானோர் எழுதிய நாடகங்களில் நகைச்சுவை (comedy) நடிகர்கள் (விதூஷகன்) உண்டு. ஆயினும் முழுக்க முழுக்க முதல் காமெடி நாடகம் எழுதியவன் இவனாகத்தான் இருக்க வேண்டும்.

இவன் எழுதிய நகைச் சுவை நாடகத்தின் பெயர் மத்த விலாசப் பிரஹசனம்.

 

காவியக் கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை விற்பன்னன். 1400 ஆண்டுகளுக்கு முன்னர் பல் கலை வித்தகன், ஒரு மாபெரும் மன்னனாக விளங்கமுடியும் என்பதற்கு இவன் ஒரு சான்று. வடக்கில் ஒரு போஜ மன்னன் என்றால் தெற்கில் ஒரு மஹேந்திர பல்லவன்.

 

மஹேந்திர பல்லவன் சகல கலா வல்லவன். இதோ அவனது பட்டப் பெயர்களையும் விருதுகளையும் பாருங்கள்:-

 

மத்தவிலாஸன்= ஆனந்த ஆட்டக்காரன்

குணபரன்= நற்குண நாயகன்

அவநிபாஜனன்= பூமியாகிய பாத்திரத்தில் தன் புகழை நிரப்பியவன்

சத்ரு மல்லன்= பகைவரை புறங்காட்டச் செய்த மாவீரன்

லளிதாங்குரன்= பல்லவ குல மரத்தின் இளம் தளிர்

விசித்திரசித்தன்= புதுமைகளைப் படைப்போன், சிந்திப்போன்

ஸங்கீர்ணஜாதி=பல நறுமணம் கமழும்ஜாதி மலர் போன்றவன்

சேதக்காரி= நினைத்தை முடிப்பவன்

பிரஹசனம் என்பது நகைச்சுவை நாடகம்; இதில் மூன்று வகை உண்டு:சுத்தம், விகிர்தம், சங்கீர்ணம்; அவைகளில், மத்தவிலாசப் பிரஹசனம் , சுத்தப் பிரஹசனம் வகையினது.

 

கதைச் சுருக்கம் பின்வருமாறு:-

காபாலி ஒருவனும், பாசுபதன் ஒருவனும், ஒரு பௌத்த பிக்ஷுவும், பைத்தியக்காரனும், சூத்திரதாரனும், காபலிகனுடைய காதலியும் ஆகிய அறுவர் இதில் நடிப்பவர்கள் ஆவர். அவர்கள் நகைச்சுவை வசனம் மொழிந்து அனைவரையும் மகிழ்விப்பர்.

 

நாடக சூத்திரதாரி முன்னுரை வழங்கிய பின்னர், காபாலியும் அவனது காதலியும் காஞ்சீபுர வீதிகளில் உலா வருவதுடன் காட்சி துவங்குகிறது.

 

முதல் காட்சியில் காபாலிகன் அவன் காதலி தேவசோமையுடன் வாதாடுகிறான். தனது பிக்ஷை ஏற்கும் கபாலத்தைக் காணவில்லை என்று சொல்கிறான். அதைத் தேட முயற்சி செய்கின்றனர்.

 

இரண்டாவது காட்சி:-மதுக்கடை வருணனை

மூன்றாம் காட்சி:- அவ்வழியே வந்த சாக்கிய (பௌத்த) பிஷுவிடம் இருந்த கப்பரை (கபாலம்) தன்னுடையது என்று பிடுங்க, அந்தப் பக்கம் வந்த பாசுபதனிடம் இருவரும் தங்கள் வழக்கை முறையிடுகின்றனர்

நாலாம் காட்சி:பைத்தியக்காரன் ஒருவன், ஒரு வெறி நாயிடமிருந்து பிடுங்கிய

கப்பரையுடன் வருகிறான்; அ தைக் கண்ட காபாலிகன் மகிழ்கிறான்.

பின்னர் அனைவரும் சமாதானமாகச் செல்கின்றனர். இது சம்ஸ்கிருத மொழியில் அமைந்த நாடகம். நாடகத்தில் மஹேந்திரனின் பட்டப்பெயர்கள், விருதுகள் அனைத்தும் பயன்படுத்தப்படுகின்றன. குடிகாரன் பேச்சு,பைத்தியக்காரன் பேச்சு ஆகியவற்றில் நகைச்சுவை ததும்புகிறது.

TAGS:– மத்தவிலாசப் பிரகசனம், மகேந்திர, பல்லவன், மஹேந்திர,

நகைச்சுவை, நாடகம், மன்னன்

 

–Subham–

ராவணன் கிரீடம் பற்றி கம்பன் தரும் அதிசயத் தகவல் (Post No.3790)

Written by London swaminathan

 

Date: 5 APRIL 2017

 

Time uploaded in London:-15-36

 

Post No. 3790

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

மகரம் என்றால் சுறாமீன் , முதலை என்ற இரண்டு பொருள் இருந்தும் சுறாமீன் என்ற அர்த்தத்திலேயே ஆபரணங்களில், அணிகலன்களில் பயன்படுத்தப்படுகிறது. ராவணன் இப்படி சுறாமீன் வடிவ அல்லது சுறாமீன் பொறித்த ஒரு நீண்ட கிரீடத்தை அணிந்து வந்தான் என்று கம்பன் போகிறபோக்கில் (சுந்தர காண்டம்) சொல்லி விடுகிறான். இது ஒரு அதிசயமான விஷயம். ஏனெனில் இப்படிப்பட்ட மணிமுடி பற்றிய குறிப்பு வேறு எங்கும் இல்லை.

 

வளர்ந்த காதலர் மகரிகை நெடுமுடி

அரக்கரை வரக் காணார்

தளர்ந்த சிந்தை தம் இடையினும் நுடங்கிட

உயிரொடு தடுமாறி

களம் தவா நெடுங்கருவியில்கைகளில்

செயிரியர் கலைக் கண்ணால்

அளந்த பாடல் வெவ் அரவு தம் செவிபுக

அலமரலுறுகின்றார்

பொருள்:

“ராவணன் மீது நாள்தோறும் வளரும் காதலை உடைய வித்தியாதர மகளிர் சிலர், சுறாமீன் வடிவு பொறித்த நீண்ட மகுடத்தைப் பூண்ட ராவவணன், தம்மிடம் வருவதைக் காணவில்லை. அதனால் தளர்ந்த மனம்,  இடையைக் காட்டிலும் அதிகமாமகத் துடித்தது. அவர்கள் தடுமாறினர். இசைக் கலைஞர்கள் கருவிகளை இசைத்து கண்களால் அவற்றை அளந்து பாடிய பாடல்கள் காதுக்குள் பாம்பு புகுந்தது போலப் புகவே அவர்கள் துன்புற்றனர்.”

 

உலகில் பல பண்பாடுகளில் மகர தோரணங்கள் உண்டு; மகர மோதிரங்கள் உண்டு; மகர காதணிகள், கை வளையங்கள் உண்டு; ஆனால் மகர வடிவில் கிரீடம் கிடையாது; மகரம் பொறித்த கிரீடமும் இல்லை. ராவணன் ஏன், எப்படி இப்படி ஒரு கிரீடம் அணிந்தான் என்பதற்கான விளக்கமும் இல்லை. உலகில் வேறு எங்குமில்லாத அளவுக்கு ஐரோப்பியர்கள் மட்டும் மன்னரின் மணி முடிளை அப்படியே சேகரித்து வைத்துள்ளனர். அதிலும் கூட இப்படி ஒரு கிரீடம் இல்லை.

 

நம்முடைய மன்னர்களின் கிரீடங்கள் அழிக்கப்பட்டு, நகைகளாகவும் சங்கிலிகளாகவும் செய்யப்பட்டு விட்டன. ஆயினும் எல்லாக் கோவில்களிலும் சுவாமிக்கும் அம்மனுக்கும் உள்ள கிரீடங்கள் ஓரளவுக்கு நம்முடைய பழம்பெரும் கலாசாரத்தைப் பிரதிபலிப்பனவாக உள்ளன. அங்கும் இப்படி இருப்பதாகத் தெரியவில்லை.

 

Elephant Crown of Demetrios

பல்லவ கீரிட அதிசயம்

பல்லவ சாம்ராஜ்யத்திலும் இப்படி ஒரு அதிசய மணிமுடி/ கிரீடம் பற்றிய குறிப்பு கிடைக்கிறது

இந்த வியப்பான விஷயம் பல்லவர் கல்வெட்டில் உள்ளது. இது பற்றி வரலாற்றுப் பேரறிஞர்   டாக்டர் இரா.நாகசாமி , “யாவரும் கேளிர்” என்ற அவரது நூலில் கூறுவதாவது:-

“காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோவிலில் நந்தி வர்மனின் வரலாற்றைக் குறிக்கும் சிற்பங்கள் உள்ளன. அவற்றில் நந்திவர்மனுக்குச் சூட்டுவதற்காக மகாமாத்திரர் முதலானோர் ஒரு தட்டில் முடியை ஏந்தி வந்தனர் என்றும், நந்தி வர்மனின் தந்தையால் அதை என்ன என்று அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை என்றும் அது பல்லவர் முடி என்றும், யானை உருவில் இருந்தது என்றும் குறிப்பு உள்ளது. இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் ஆண்ட அரசர்கள் யானைத்தலை  போன்ற முடிகளைப் பூண்டிருப்பது காண்பிக்கப்பட்டுள்ளது வைகுண்டப் பெருமாள் கோவில் கல்வெட்டு இவ்வாறு கூறினும் சிற்பத்தில் யானைதத்லை போன்ற முடி காணப்படவில்லை”.

எனது கருத்து:

கல்வெட்டிலுள்ள பல விஷயங்கள் சிற்பத்தில் இல்லை. சிற்பத் திலுள்ள பல விஷயங்கள் இலக்கியத்தில் இல்லை என்பதற்குப் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.

 

துர்கையின் மான் வாஹனம் பற்றி சிலப்பதிகாரம், தேவாரம் (கலையதூர்தி) போன்ற பல நூல்களில் குறிப்புகள் உள்ளன. ஆனால் நமது கோவில்களில் மான் வாஹன துர்கையைப் பார்க்க முடியாது. படங்களிலும் கூட மான் வாஹனம் கிடையாது. சிங்கம் அல்லது புலி வாஹனம்தான் இருக்கும். ஆனால் இராக், துருக்கி, கிரீஸ் போன்ற நாடுகளில் மான் வாஹனத்தில் தேவியர் பவனி வரும் சிலைகள் உள்ளன. இது துர்கைதான். ஆனால் ஒவ்வொரு ஊரிலும் வேறு வேறு பெயர்களால் அவளை அழைப்பர்.

 

ஆக, “கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம்” என்ற கதை இலக்கியத்திலும், வரலாற்றிலும் உளது. எங்கேயாவது சுறாமீன் கிரீடத்தின் சிலையோ படமோ கிடைக்கிறதா என்று ஆராய்வது நமது கடமை.

 

–Subham—