
சங்கீத சாம்ராஜ்யம்: காசு கொடுத்து ரஸிகர் கூட்டம் சேர்த்த பாகவதர்! (Post No.4488)
Written by London Swaminathan
Date: 13 DECEMBER 2017
Time uploaded in London- 8-51 am
Post No. 4488
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
புகழ்பெற்ற வயலின் வித்வான் ப்ரிட்ஸ் க்ரைச்ட்லர் (FRITZ KREISTLER) தனது நண்பருடன் கடைத் தெருவில் நடந்து சென்றார். அங்கே ஒரு மீன் விற்கும் கடை இருந்தது. அதில் வரிசையாக காட் வகை (CODFISH) மீன்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு மீனும் வாயைப் பிளந்து கொண்டு இமைக்காத கண்களுடன் பார்த்துக்கொன்டிருந்தன.
திடீரென்று க்ரைட்ஸ்லர் தனது நண்பரின் கைகளைப் பிடித்தார். அடடா! நான் கச்சேரி வாசிக்கப் போக வேண்டும் என்பது நினைவுக்கு வந்துவிட்டது! என்றார்.
(அவரது ரசிகர்கள் வாயைப் பிளந்து கொண்டு, கண்கொட்டாமல் இசையை ரசிப்பராம்!)
XXXXX

மயக்கமா? தயக்கமா?
பிரான்ஸ் லிட்ஸ் (FRANZ LITSZ) என்ற புகழ் பெற்ற பியானோ வாத்தியக் கலைஞர் காசுகொடுத்து ரஸிகர்களை ‘செட் அப்’ பண்ணுவாராம். நல்ல அழகான பெண்களைக் கூட்டிவந்து, இந்தோ பாரு உனக்கு 25 பிராங்க் (FRANKS) பணம் தருவேன். நான் இந்தப் பாட்டு வாசிக்கும்போது நீ மயக்கம் போட்டு விழுவதாக நடிக்க வேண்டும்; நான் உன்னைக் காப்பாற்றுவதாக நடிப்பேன். ஆனால் யாருக்கும் விஷயத்தை வெளியே சொல்லக்கூடாது. சரியா? — என்று சொல்லி அழைத்துவருவார்.
அவருக்கு மிகவும் புகழ் ஈட்டித் தந்த கிருதியை வாசிக்கும்போது, பணம் வாங்கிய பெண்மணி தடாலென்ற சப்தத்துடன் மயக்கம் போட்டு விழுவாள்; உடனே மேடையில் இருக்கும் பிரான்ஸ், திடீரென்று தனது பியானோ ஆசனத்திலிருந்து கீழே குதிப்பார். அந்தப் பெண்மணியை அலாக்காகத் தூக்கிச் சென்று மேடைக்குப்பின் சென்றுவிட்டு வருவார்.
உடனே ரஸிகர் அனைவரும் அடடா! என்ன வாசிப்பு! என்ன ரசனை; மயக்கமே போட்டுவிட்டாளே! என்று பேசிக்கொள்வர்.
ஒருமுறை இவரது கணக்கு, தப்புக் கணக்காகிவிட்டது; காசு வாங்கிய பெண் மயக்கம்போட்டு விழ மறந்து விட்டாள்! அதை எதிர்பார்த்துக் காத்திருந்த பிரான்ஸ், என்ன செய்வதென்று திகைத்து அவரே மயக்கம்போட்டு விழுந்துவிட்டார்!
XXXX
லண்டன் பெட்டிகோட் லேன் மார்க்கெட் (PETTICOAT LANE MARKET)

(இதைப் படித்தவுடன் எனக்கு எங்கள் லண்டனில் ஞாயிறு தோறும் நடக்கும் ஒரு ஏமாற்று வேலை நினைவுக்கு வருகிறது. லண்டனில் நுற்றாண்டுக் கணக்கில் நடக்கும் சாலை ஓரக் கடைகள் இன்றும் உண்டு. அவர்கள் ஞாயிறுதோறும் ரோட்டில் கடை விரிப்பர். இதில் மிகவும் புகழ்பெற்றது பெட்டிகோட் லேன் எனப்படும், லிவர்பூல் ஸ்ட்ரீட் (LIVERPOOL STREET) மர்க்கெட்டாகும். நான் வெளிநாடுகளில் இருந்து விருந்தினர் வருகையில் அவர்களை அழைத்துச் சென்று காட்டுவேன்; கூட வருபவரிடம் இந்த வேடிக்கை பற்றிச் சொல்லிவிட்டு ஒரு மூலையில் நின்று ஓரக் கண்களால் இதைப் பாருங்கள் என்பேன்.
அங்கே ஒருவன் திடீரென்று வந்து துண்டை விரிப்பான். நிறைய பெர்fயூம் பாட்டில்களை (PERFUME BOTTLES) வெளியே அடுக்கிவைப்பான். எல்லாம் பிரபல பிராண்ட் நேம்ஸ் (BRAND NAMES) உடைய சென்ட்கள். ஓடி வாருங்கள், ஓடி வாருங்கள்! போனால் வாராது; பொழுது விடிஞ்சா கிடைக்காது; மூடப்பட்ட ஒரு கடையிலிருந்து வந்த STOCK ஸ்டாக் இவை! இதோ இதைக் கடையில் வாங்கினால் 40 பவுன்; நான் தருகிறேன் 20 பவுனுக்கு; இதைப் பாருங்கள்!! இதைப் போய் கடையில் வாங்கினால் இதன் விலை 30 பவுன்; நான் உங்களுக்கு 15 பவுனுக்கு தருகிறேன் ; இதோ இதைப் பாருங்கள். நீங்கள் AIRPORT DUTY FREE SHOP ஏர்போர்ட் ட்யூட்டி ப்ரீ ஷாப்பில் வாங்குவதில் கால் பங்கு விலைக்குத் தருகிறேன்; போய்விடாதீர்கள்; இனித்தான் முக்கிய ரஹஸியத்தைச் சொல்லப் போகிறேன்; இன்று ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் SPECIAL DISCOUNT ONLY TODAY; அத்தனைக்கும் சேர்த்து 25 பவுன் கொடுங்கள் போதும் என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் அங்கு கூடியிருக்கும் பெருங்க் கூட்டத்தில் இருந்து நாலு ஐந்து இளம் வெள்ளைக்கார அழகிகள் ஓ, வாவ்! எனக்கு இரண்டு வேண்டும் என்று 50 பவுன்களை எண்ணிக் கொடுப்பர்; அதற்குள் இன்னொரு பெண்மணி எனக்கும் வேண்டும் என்று காசு கொடுப்பாள்; மூன்றாவது அழகியோ அனைவரையும் விலக்கித் தள்ளிவிட்டு பிரமாதம் எனக்கும் என் நண்பிக்கும் வேண்டும் என்று காசு கொடுப்பாள்.
அந்த பெட்டிகோட் லேன் மார்க்கெட்டுக்கு வருவோர் பெரும்பாலும் லண்டனில் ஒரு சில நாட்களே தங்கும் டூரிஸ்டுகள்; அவர்களும் முண்டியடித்துக் கொண்டு முன்னால் போய் ஆளுக்கு ஒன்று வாங்குவர்.
ஏற்கனவே வாங்கிய பெண்கள் அனைவரும் ஒரு மூலையில் சென்று ஒளிந்து கொண்டு இருந்துவிட்டு திரும்பிவந்து அவனிடம் பெர்fயூம் பாட்டில்களைத் திருப்பிக் கொடுப்பர். அடுத்த பத்து நிமிடத்தில் மீண்டும் இதே காட்சி துவங்கும்; இவர்கள் கூலிக்கு மாரடிக்கும் அழகிகள்! ஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாற்றுவோரும் இருப்பர்!)

XXX
ஒரு பாகவதரின் சோகம்!
உலகப் புகழ்பெற்ற பியானோ கலைஞர் படெரெவ்ஸ்கி (PADEREWSKI) ஒரு நாள் கச்சேரி முடிந்தவுடன் ஸோகம் ததும்பிய முகத்துடன், மேடைக்குப் பின்னால் போய் அமர்ந்தார். அவருடைய உதவியாளருக்கு மனக் கவலை.
ஐயன்மீர்! உடல்நலம் சரியில்லையா? ஏன் இப்படி முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கிறீர்கள்? என்று வினவினார்.
உடனே படெரெவ்ஸ்கி பதில் கொடுத்தார்?
எனது முக்கிய ரஸிகர்கள் இருவர் இன்று வரவில்லை; அதான் ஒரே கவலை.
அட, இந்த ஊரில் உங்களுக்கு நண்பர்கள் வேறு இருக்கிறார்களா? உங்களுடன் நான் அவர்களை என்றும் பார்த்ததே இல்லை யே என்றார் உதவியாளர்.
இது அமெரிக்காவின் தொலைதூர ஒரு ஊரில் நடந்தது.

ஆமாம் எனக்கு இங்கே ரஸிக நண்பர்கள் உண்டு; ஆனால் நானும் அவர்களைச் சந்தித்ததே இல்லையே என்றார்.
உதவியாளருக்கு ஒன்றும் விளங்கவில்லை. நீங்கள் சொல்லுவது ஒன்றும் புரியவில்லையே என்றார்.
உடனே படரெவ்ஸ்கி தொடர்ந்தார்:-
20 ஆண்டுக் காலமாக நான் இந்த ஊரில் வந்து வாசிக்கிறேன். ஒவ்வொரு முறையும் நான் வசிக்கும்போது இரண்டாவது வரிசையில் அமர்ந்து நரைத்த தலை முடிய ஒரு தம்பதியினர் என் வாசிப்பை ரஸிப்பர்; அவர்கள் ரஸிக்கும் விதத்தைப் பார்த்து நான் கூட வாசிப்பேன். அவர்கள் உண்மையான ரஸிகர்கள்; இன்று வரவில்லிலையே! ஏதேனும் எசகு பிஸகாக ஆகியிருக்குமோ என்று சொல்லிவிட்டு பேசாமடந்தையாகிவிட்டார்
மேலும் உணர்ச்சிவசப்பட்டு விட்டார்.
(ஒரு பாகவதருக்கு ரஸிகர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பது இதிலிருந்து புரியும்; நான் லண்டனில் நான்கு சங்கங்கள் நடத்திக் கொண்டிருந்த காலத்தில் பிரபல வித்துவான் டி.வி.கோபால கிருஷ்ணனின் (SRI T.V.G) இன்னிசையை ஏற்பாடு செய்திருந்தேன்; திடீரென்று ஏற்பாடு செய்ததால் ஒரு 75 பேருக்கும் குறைவாக ரஸிகர் இருந்தனர். கச்சேரி முடிந்தவுடன் எனக்கோ கவலை; கூட்டம் குறைந்ததற்கு ஏதேனும் சப்பைக்கட்டு காரணம், நொண்டிச் சாக்கு சொல்லுவோம் என்று அவரை மெதுவாக அணுகினேன்.
நான் பேசுவதற்கு முன் “எனக்கு இன்று ரொம்ப த்ருப்தி; இப்படிப்பட்ட ஆடியன்ஸுக்கு வாசிப்பதுதான் எனக்குப் பிடிக்கும்” என்றார். மேலும் தொடர்ந்து “இது போல அடிக்கடி ஏற்பாடு செய்யுங்கள்; எனக்கு பணம் முக்கியமில்லை; இப்படிப்பட்ட ரஸிகர்கள்தான் வேண்டும்” என்றார்.
எனக்கு வியப்பும் சந்தோஷமும் மேலிட்டாலும் இதன் பின்னனி நன்கு விளங்கியது. லண்டனில் பல அரங்கேற்றங்கள், கச்சேரிகள் நடக்கும். அதில் வரும் பாதிக் கூட்டத்துக்கு சங்கீத ம் என்றால் அரைக் கிலோ என்ன விலை? என்று கேட்பர். அரங்கேற்றம் செய்யும் மாணவ மாணவியரும் மிலிட்டரி ட்றில் MILITARY DRILL போல அந்த ஆறு பாட்டை மட்டும் உருப்போட்டு வைத்திருப்பர்.
ஏனைய பாட்டுகளுக்கு பொருள் கேட்டாலோ, ‘ராகம் வராகம், தாளம் வேதாளம், க்ருதி ப்ரக்ருதி’ என்பர்; பெற்றோர்களோவெனில் 10,000 பவுண்ட் கடன் வாங்கி அரங்கேற்றம் நடத்திவிட்டு அதன் பொருள் விளங்காப் புதிராக — குதிராக – நிற்பர்.
ஆயினும் எனக்கு சந்தோஷமே; அந்த வீட்டுக் குழந்தைகள் காபரே, கூபரே என்று கிளப்புகளுக்கும் பாப் மியூஸிக் கச்சேரிகளுக்கும் போகாமல், ஏதோ இரண்டு தியாகராஜ கிருதிகளையும் புரந்தரதாஸர் கீர்த்தனைகளையும் பாடுகிறதே என்று மகிழ்வேன்.
‘ஆலை இல்லாத ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரை’ என்ற பழமொழி போல இங்கு யார் வேண்டுமானாலும் எந்த ஸ்கூல் வேண்டுமானாலும் நடத்தலாம். யோகா கற்பிக்கும் முக்கால் வாசிப்பேர் வெள்ளைக்காரர்கள்; ஒரு புத்தர் சிலையோ நடராஜர் சிலையோ வீட்டில் வைத்திருப்பர்!
அவர்களும் வாழ்க!
TAGS:- சங்கீத விநோதங்கள், ரஸிகர், காசு, படரெவ்ஸ்கி, மயக்கம் போட்ட, பாடகர் பாகவதர்
–SUBHAM–