
Radio Talk written by S NAGARAJAN
Date: 15 November 2015
POST No. 2330
Time uploaded in London :– 17-47
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!
DON’T USE THE PICTURES;
THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகள்
(நான்காம் பாகம்)
ச.நாகராஜன்
சென்னை வானொலி நிலையம் அலைவரிசை A யில் காலையில் ஒலிபரப்பப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்
Part 1 posted on 6th November 2015; Part 2 posted on 7th ;Part 3 on 8th nov.Part 4 on 9th nov.15;part 5 on 11th Nov.; Part 6- 12th; Part- 7- 13th.Nov.;part 8 on 14th nov.
உலகில் பயோடைவர்ஸிடி எனப்படும் பல்லுயிர்ப்பெருக்கத்திற்குப் பெரிதும் துணை செய்வது பவளப் பாறைகள் அல்லது பவளத் திட்டுகள் ஆகும். இவை வெகுவாக உலகெங்கும் அழிந்து வருகின்றன.சுமார் இருபத்தெட்டுலட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு பவளத் திட்டுகள் உலகெங்கும் உள்ளன.
இவை ஆயிரக்கணக்கான உயிரினங்கள் உயிர் வாழ உதவுகின்றன. இவற்றை ‘கடலில் உள்ள மழைக்காடுகள்’ (“rainforests of the seas”) என்றே அறிவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இவை தரும் நன்மைகள் எண்ணிலடங்கா.
கடல் அலைகளாலும் சூறாவளிகளாலும் கடற்கரைகள் அழியாமல் பாதுகாக்க பவளத் திட்டுகளே உதவுகின்றன. உணவாகவும் மருந்தாகவும் இவை அமைகின்றன.
சுற்றுலாவை மேம்படுத்திஆங்காங்கே வாழும் உள்ளூர் மக்களுக்கும் சமூகத்திற்கும் இவை பொருளாதார ரீதியாக உதவுகின்றன.
சுற்றுப்புறச் சூழல் அமைப்பை எடுத்துக் கொண்டு பார்த்தோமானால் பெருங்கடல்களைப் பாதுகாக்கும் வண்ணம் கடல் அமைப்புகளோடு ஒரு அங்கமென இவைகள் திகழ்வதால் இவற்றின் மதிப்பு மிகவும் அதிகம். நிலத்தில் மழைக்காடுகள் என்று நாம் கூறுவது போல கடலுக்கடியில் அமைந்துள்ள மழைக்காடுகளாக இவை திகழ்கின்றன.

வெப்ப பிரதேசங்களில் உள்ள நீர்நிலைகளில் ஊட்டச் சத்துகள் குறைவாகவே இருக்கும். ஏனெனில் வெப்பமான நீர் இப்படிப்பட்ட சத்துக்களை எல்லைக்குட்பட்டதாக குறைவாகவே இருக்கச் செய்கிறது. ஆகவே தான் இவற்றை ‘கடலில் உள்ள பாலைவனங்கள்’ என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.இந்த நிலையில் பவளத் திட்டுகள் உணவுச் சங்கிலி ஒன்றை அமைத்து உணவை 25 சதவிகிதம் மீன்களுக்கு வழங்குகிறது.இந்த மீன்கள் தங்களது தங்குமிடமாக பவளத் திட்டுகளையே ஆக்கிக் கொள்கின்றன. கடலின் ஏராளமான உயிரினங்களுக்கு இளமைப் பருவத் தாலாட்டும் இடமாகவும் பவளத் திட்டுக்கள் அமைகின்றன. இந்த பவளத் திட்டுகளை அழிந்து பட்டால் இதை நம்பி உள்ள அனைத்து உயிரினங்களும் அழியும்; சுற்றுப்புறச் சூழலுக்கு மாபெரும் கேடு ஏற்படும்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இவை அழிக்கப்பட்டு வருவதாக இன் டர்நேஷனல் யூனியன் •பார் கன்ஸர்வேஷம் ஆ•ப் நேச்சர் (International Union for Conaservation of Nature- IUCN) எனப்படும் உலகின் இயற்கை பாதுகாப்பு பன்னாட்டு சங்கம் தனது ஆய்வின் மூலமாகக் கண்டறிந்து எச்சரிக்கையை விடுத்துள்ளது.உலகின் இருபது சதவிகித பவளத் திட்டுக்கள் அழிக்கப்பட்டு விட்டதாகக் கூறும் இந்த நிறுவனம் இதைப் பாதுகாக்க அனைத்து நாட்டு மக்களும் ஒருங்கிணைய வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளது. கடல்புறம் சார்ந்த மக்களும் சுற்றுலாப் பயணமாக பவளத் திட்டுகளைப் பார்க்கச் செல்லும் மக்களும் இவற்றின் முக்கியத்துவத்தை அறிந்து அவற்றிற்கு ஊறு விளைவிக்கக் கூடாது. இவற்றைப் பேணிப் பாதுகாக்க ஒவ்வொருவரும் உறுதி பூண வேண்டும்
To be continued………………………