Date: 27 DECEMBER 2017
Time uploaded in London- 5-30 am
Compiled by S NAGARAJAN
Post No. 4550
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
பாரதி போற்றி ஆயிரம் – 17
பாடல்கள் 108 முதல் 113
கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்
தொகுப்பு : ச.நாகராஜன்
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் பாடல்கள்
அமரகவி (பாரதி)
(பாடல் தொடர்ச்சி)
விண்ணிலொளிரு மீன்கள் மின்னுமே, அடா! – விண்ணில்
விளங்கும் மதிநிலவு வீசுமே, அடா!
கண்ணுக் கினியசோலை காணுமே, அடா! – அதில்
களித்திள மான்கள்விளை யாடுமே, அடா!
தேனும் தினையும்பாவில் உண்ணலாம், அடா! – மிகத்
தித்திக்கும் முக்கனியும் உண்ணலாம், அடா!
கானக் குழலிசையும் கேட்கலாம், அடா! ஊடே
களிவண்டு பாடுவதும் கேட்கலாம், அடா!
நாட்ட மொழியுமவன் பாட்டினிசையில் – மிக்க
நல்ல கற்கண்டினிமை சொட்டுமே, அடா!
ஏட்டிலிம் மந்திரந்தான் கண்டவருண்டோ? – ஈதவ்
ஈசன் திருவருளென் றெண்ணுவாய், அடா!
உள்ளந் தெளியுமொரு பாட்டிலே, அடா! – மிக்க
ஊக்கம் பிறக்குமொரு பாட்டிலே, அடா!
கள்ளின் வெளிகொளுமோர் பாட்டிலே, அடா! – ஊற்றாய்க்
கண்ணீர் சொரிந்திடு மோர் பாட்டிலே, அடா!
வேறு
‘கரும்புத் தோட்டத்திலே’ – எனுங்கவி
காதைச் சுடுகுதடா!
இரும்பு நெஞ்சமே – நீராய்
இளகியோடுதடா!
செந்தமிழ் நாட்டின் முதன்மொழி
செவியிற் சேருமுன்னே,
அந்தமில் லாமல் – உள்ளத்தில்
அமுதம் ஊறுதடா!
(நீண்ட பாடல் தொடரும்)
அமரகவி என்ற இந்தப் பாடல் எட்டயபுரம் பாரதி மண்டபத் திறப்பு விழாவின் போது கல்கி இதழில் (12-10-1947) வெளி வந்த பாடல்.
பாமரன் ஒருவன் சுப்பிரமணிய பாரதியின் கவிதைகளில் ஈடுபாடு கொண்டு பாடுவது போன்ற அமைப்பை உடையவை. இவை எல்லாமே ஆரம்ப காலக் ‘கலைம்களில்’ வந்தவை. (1944)
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை: கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே வெளியாகியுள்ளது.
குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.
****