பாரதி போற்றி ஆயிரம் – 58 (Post No.4779)

Date: 24 FEBRUARY 2018

 

 

Time uploaded in London- 5-35 am

 

 

Written by S NAGARAJAN

 

 

Post No. 4779

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 58

  பாடல்கள் 403 முதல் 411

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்

பாரதி பத்துப்பாட்டு

தமிழ்த்தாய் பார்வையில் பாரதி, பாரதமாதா பார்வையில் பாரதி, பராசக்தி பார்வையில் பாரதி, பாஞ்சாலி பார்வையில் பாரதி, கண்னன் பார்வையில் பாரதி, குயில் பார்வையில் பாரதி, புதுமைப்பெண் பார்வையில் பாரதி, பாப்பா பார்வையில் பாரதி, சித்தர் பார்வையில் பாரதி, பாரதி பார்வையில் பாரதி ஆகிய பத்து அத்தியாயங்களைக் கொண்டுள்ளது இந்தக் குறுங் காவிய நூல்.

முதல் அத்தியாயம்: தமிழ்த்தாய் பார்வையில் பாரதி

37 முதல் 45 வரை உள்ள பாடல்கள்

செந்தமிழ் நாடெனும் போதினிலே – எனும்

சந்தம்நி றைந்தஉன் பாவினிலே

முந்தை சிறப்புகள் யாவையுமே – இங்குத்

தந்துவிட் டாயந்த நாளிலினிலே

 ஆயிர மாயிரம் பாடல்களில் – தரும்

ஆயிரம் கால வரலாற்றை

நேயமு டனொரு பாடலிலே – எந்த

நாளிலும் எங்குமே பாடவைத்தாய்

வள்ளுவ னின்குரல் உலகினுக்கே – எனும்

வாக்குஇந் நாளினில் பலித்ததுவே

தெள்ளிய மொழிகள் அத்தனையும் – அதைத்

தேர்ந்தெடுத் தேதம தாக்கினவே

கம்பனை எத்தனைக் கோணங்களில் – நீயும்

கண்டுகண் டுக்கவி பாடிவைத்தாய்

தம்முன்ன வர்நலம் போற்றுவதே – நல்ல

தமிழ்கவி பண்பென உணரவைத்தாய்

 

தமிழ்மொழி யின்வளம் கம்பனிடம் – உயர்

தமிழ்நாட் டின்வளம் இளங்கோவில்

தமிழ்ப்பண் பாடெனல் வள்ளுவமே – என

தான்தொகுத் தேயவரைப் பாடிவைத்தாய்

 

எண்ணற்ற புலவர்கள் வந்தாலும் – இனி

எவ்விதம் பாடல்கள் தந்தாலும்

திண்ணமு டன்இந்த ஒருபாடலே – எந்தன்

திறமுரைக்க என்றும் போதுமப்பா

 

பிறநாட்டு நல்லறிஞர் நூல்கள் – பாரதி

   பேணியுன் விருப்பம்போல் பெயர்த்திங்கு தந்தார்

திறமான நம்புலமை தன்னை – பிறர்

   தேடிவந்தே போற்றி ஏற்றிடச் செய்தார்

இருதலைக் கொள்ளிநிலை மாற்றி – நீ

    இயம்பிய வண்ணமே நயமுடன் இணைத்தார்

பெருகிடும் விஞ்ஞான வளர்ச்சி – காண

   மறுகணம் கலைச்சொற்கள் படைத்ததைக் கொணர்ந்தார்

 

மெல்லத் தமிழினி சாகும் – என்று

   மனம்நொந்த மைந்தா பாரதி கேளாய்

வெல்லற் கரியதிந்தத் தமிழே – என

   வேற்றுமொழி யார்புறம் போயினர் இந்நாள்

சொல்லில் அடங்காமுன் னேற்றம் – நீ

   சொல்லிய படியிங்கு தோன்றியது காண்பாய்

நல்லதோர் நிலையிங்கு பெற்றேன் – இந்த

   நானிலம் உள்ளவரை நானிங்கு வாழ்வேன்

 

வாழிய பாரதி வாழிய பாரதி

வாழிய வாழியவே!

ஆழியி னும்மிக  ஆழம்மி குந்தவுன்

அருங்கவி வாழியவே!

ஏழிசை யின்சுவை  ஈடிலை இதற்கென

இசைபெற வாழியவே!

ஊழித னில்புவி மூழ்கிய போதிலும்

உன்புகழ் வாழியவே!

 

தமிழ்த்தாய் பார்வையில் பாரதி என்ற முதல் அத்தியாயம் முற்றும்

  • பாரதிப் பத்துப்பாட்டு தொடரும்

 

தொகுப்பாளர் குறிப்பு:
கவிஞர் கே.பி. அறிவானந்தத்தைக் கடிதம் மூலம் தொடர்பு கொண்ட போது, பாரதி போற்றி ஆயிரம் முயற்சி வெற்றி பெற வாழ்த்தினார். அத்துடன் பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதியும் தந்தார். அவருக்கு எமது நன்றி

2003ஆம் ஆண்டு இந்த பாரதி பத்துப்பாட்டு காவியத்தை இயற்றியுள்ளார் இவர்.

கவிஞர் பிறந்த நாள்: 22-4-1942 பிறந்த ஊர்: குடியாத்தம்

இவர் வேதாந்த பாடசாலை என்னும் குருகுலத்தில் இலக்கண இலக்கியப் பயிற்சியைப் பெற்றார்.

இவரது குருநாதர் ஸ்ரீ சண்முகானந்த சுவாமிகள்.

பத்துக்கும் மேற்பட்ட கவிதை நூல்கள்/ காவியங்களை இயற்றியவர்.

நாடகக் காவலர் R.S. மனோகர் நடத்திய இந்திரஜித், பரசுராமர், நரகாசுரன், துருவாசர், திருநாவுக்கரசர், வரகுணபாண்டியன்  ஆகிய மேடை நாடகங்களை எழுதியவர் இவரே.

ஹெரான் ராமசாமி உள்ளிட்ட பலர் நடத்திய சரித்திர நாடகங்கள், சமூக நாடகங்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார்.

வேலுண்டு வினையில்லை திரைப்படத்திற்கான கதையையும், தோடி ராகம் திரைப்படத்திற்கான வசனத்தையும் இவர் எழுதியுள்ளார்.

சென்னை தொலைக்காட்சிக்காக நரகாசுரன், ஜெயா டி.விக்காக இந்திரஜித், கால பைரவர், சாமியே சரணம் ஐயப்பா, பக்த விஜயம், விஜய் டி.விக்காக பைரவி, சன் டி.வி.க்காக விநாயகர் விஜயம், ஆதி பராசக்தி ஆகிய தொலைக்காட்சித் தொடர்களை எழுதியவர் இவர்.

பெரும்பாலான தலங்களில் சமய சம்பந்தமான சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார்.

இவரது மூன்று நாடகங்களை ஆய்வு செய்து மூவர் ஆய்வில் எம்.பில். பட்டம் பெற்றுள்ளனர்.

பதினைந்துக்கும் மேற்பட்ட பெரும் விருதுகளைப் பெற்றுள்ள இவரைத் தமிழகம் பாராட்டி மகிழ்கின்றது.

இவருக்கு நமது நன்றி.

இவரைப் பாராட்டி மகிழ விரும்பும் அன்பர்கள் கடிதம் அனுப்ப வேண்டிய முகவரி: கவிஞர் கே.பி.அறிவானந்தம், 14, நல்லீஸ்வரர் நகர், வெங்கடாபுரம், குன்றத்தூர், சென்னை 600 069

சந்தனத் தென்றல் பதிப்பகம்: பாரதிப் பத்துப்பாட்டும் பாரதிதாசன் பதிற்றுப் பத்தும் என்ற நூலை வெளியிட்டுள்ள சந்தனத் தென்றல் பதிப்பகத்தின் உரிமையாளர் கவிஞர் சி.காசிநாதன் பாரதி போற்றி ஆயிரம் பகுதியில் பாரதியின் பத்துப்பாட்டு நூலை வெளியிட அனுமதியை மகிழ்ச்சியுடன் தந்துள்ளார். அவருக்கு எமது நன்றி. 128 பக்கங்களைக் கொண்ட நூல் சிறப்புற அச்சிடப்பட்டுள்ளது. விலை ரூ 100/

பதிப்பகத்தின் முகவரி: 10, காமராசர் தெரு, கொல்லைச்சேரி, குன்றத்தூர், சென்னை, 600069

நன்றி: கவிஞர் கே.பி.அறிவானந்தம் நன்றி: சந்தனத் தென்றல் பதிப்பகம், சென்னை.

****