COMPILED by S NAGARAJAN
Date: 15 April 2018
Time uploaded in London – 7-04 AM (British Summer Time)
Post No. 4915
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
பாரதி போற்றி ஆயிரம் – 78
பாடல்கள் 654 முதல் 665
கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்
தொகுப்பு : ச.நாகராஜன்
பாரதி பத்துப்பாட்டு
நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு பத்தாம் அத்தியாயமான பாரதி பார்வையில் பாரதி இடம்பெறுகிறது.
பத்தாம் அத்தியாயம்: பாரதி பார்வையில் பாரதி
1 முதல் 12 வரை உள்ள பாடல்கள்
காலச்சக் கரத்தின் மேற்பகு தியெனில்
காணுமு யிர்களின் பிறப்பாகும்
சீலமு றவது சுழல்கையில் கீழே
சென்றிட லென்பது இறப்பாகும்
ஓலமிட் டழுவதில் பயனென் பிறந்தோர்
ஒருநாள் மடிவது முறையாகும்
கோலமிட் டழித்தல் போல்பிறப் பிறப்பும்
கோலம்மா றிவரல் இயல்பாகும்
எவரிறந் தாலும் மறுகணம் மறத்தல்
இப்புவி மாந்தர் குணமாகும்
அவர்போல் எனையும் மறந்திடு வாரெனில்
அதுவே வாழ்வின் நிலையாகும்
தவறா ததுவே நிகழும் எனயென்
தமிழ்நாட் டினையும் நினைந்திட்டேன்
தவறாய் நினைத்தேன் எனும்படி என்றும்
தமிழகம் என்னைப் போற்றிடுதே
என்பெய ராலே எண்ணிலா மன்றம்
இருப்பதைக் கண்டு வியக்கின்றேன்
என்கவி தைகளை பலவடி வத்தில்
எங்கணும் பாடக் கேட்கின்றேன்
என்னைப் பற்றிய ஆய்வுகள் பலவும்
ஏடுக ளில்வரக் காண்கின்றேன்
என்தமிழ் நாட்டார் எனைமறப் பாரோ
என்பதைக் கண்டு மகிழ்கின்றேன்
இந்நாள் எனையான் திரும்பிப் பார்க்கின்
என்வாழ் வெனக்கே திகைப்பூட்டும்
அந்நாள் நடந்ததைச் சொல்கிறேன் எந்தன்
ஆடையே பிறர்க்கு நகைப்பூட்டும்
எந்நா ளும்நான் நிம்மதி யாக
இருந்தேன் என்றிட வாய்ப்பில்லை
இந்நாள் அதனை நினைத்துப் பார்த்தால்
எனக்கே என்நிலை புரியவில்லை
சுயபுத்தி இல்லாமல் ஏதேதோ செய்வதாய்
சூழ்ந்தவர் யாரும் சொல்ல
சுயசாதி வெறுப்புக்கு ஆளாகி அவரோடு
சுற்றத்தால் ஒதுக்கப் பட்டேன்
சுயமாக எதனையும் செய்திட இயலாத
சூழ்நிலைக் கைதி யானேன்
சுயசரி தம்எழுத முயன்றாலும் அதனையும்
தொடராமல் நிறுத்த லானேன்
என்னிளம் பருவத்தின் பெருமைகள் ஈதென
இயம்பிட ஏது மில்லை
சின்னஞ்சி றுவர்க்குள விளையாட்டில் கலந்திட
சிறிதேனும் உரிமை யில்லை
இன்னுமோர் கொடுமையாய் சிறுமியைக் கொணர்ந்து
என்மனைவி யாக்கி வைத்தார்
பின்னுமோர் சோதனை தந்தையார் மடிந்திட
போகயிட மின்றி நின்றேன்
நிரந்தர மில்லாமல் ஊர்ஊராய் ஓடிநான்
நிலையற்ற வாழ்வு வாழ்ந்தேன்
அரசனாம் தருமன்போல் அல்லல்கள் பலபட்டு
அஞ்ஞாத வாசம் செய்தேன்
கரம்பிடித் திட்டநல் மனைவியொடு மக்களின்
கடமையைச் செய்தி டாத
முரடனாய் வாழ்வியல் புரியாது முரண்படும்
மூடனாய் தூற்றப் பட்டேன்
இத்தனைத் துயர்கள் இருப்பினும் கவிதை
இயற்றுதல் மட்டும் நின்றதில்லை
எத்தனைத் தடைகள் குறுக்கிட்ட போதும்
எழுதாமல் இருக்க இயலவில்லை
சித்தத்தில் ஒளிரும் சுடரென இருந்தென்னைச்
சிறப்புறச் செய்தது தமிழன்றோ?
நித்தமென் சுவாசக் காற்றென இயங்கி
நிலைபெறச் செய்தது கவியன்றோ?
வறுமையே தொடர்ந்தென்னைத் துரத்திய போதும்
வடித்திடும் பாடலில் ஒருபோதும்
சிறுமையோ குறையோ நேர்ந்திட விடாமல்
சீருடன் ஆய்ந்ததைப் படைத்திட்டேன்
பெறுமிச் சுதந்திரப் பயிரினை வளர்த்திட
பாடுபட் டோரில் என்பெயரும்
உறுமென் பதுவே போதுமத னிலுமே
உயர்நிலை எனக்குத் தந்திட்டார்
என்கவியைப் பாடாத மேடையில்லை எங்கும்
என்புகழைப் பேசாத சபையுமில்லை
என்றாலும் நானன்று பாடியே மகிழ்ந்திட்ட
இனிய பாரதமின்னும் தோன்ற வில்லை
என்சாதி என்மதம் என்னினம் என்மொழி
எனமூளும் சண்டைகள் ஓய வில்லை
என்றுதான் இவையெலாம் தீருமோ அதுவரை
என்பாடல் ஒலிப்பதில் பொருளு மில்லை
நல்லதோர் வீணையைச் செய்ததை மீட்டிட
நல்லிசை அதனிலே கேட்க வில்லை
பல்லெழில் மிக்கதோர் ஓவியம் வாங்கியும்
பார்த்திட விழிகளோ இரண்டு மில்லை
சொல்லழகு கொண்டதென என்கவியைப் பாடினார்
சொல்பொருளை செயலாக்க முனைய வில்லை
அல்லல்கள் பலபட்டு அயராமல் இயற்றிய
அருங்கவிகள் போல்நாடு அமையவில்லை
என்றென் தமிழ்மொழி உலகம் முழுதும்
ஏற்கும் செம்மொழி யாகிடுமோ
என்றென் பாரதம் எல்லா நலனும்
இருக்கும் நாடாய் உயர்வுறுமோ
என்றிவ் வுலகம் மாந்தர் யாவரும்
என்றும் சமமென இணைந்திடுமோ
அன்றென் கவிதைகள் உயிர்பெற் றிடுமே
அவற்றுள் நிலையாய் வாழ்வேனே!!!
பாரதி பார்வையில் பாரதி முற்றும்
பாரதி பத்துப்பாட்டு நூல் முற்றும்
தொகுப்பாளர் குறிப்பு:
பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்த கவிஞருக்கும் சந்தனத் தென்றல் பதிப்பக உரிமையாளர் கவிஞர் சி.காசிநாதன் அவர்களுக்கும் எமது நன்றி.
கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.
***