WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,608
Date uploaded in London – – 29 JANUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தமிழ் வழி ……………………… தனீ…………………..வழீ……………………
தமிழன் கண்ட 3 அற்புத “மை”
வாய்மை, உண்மை, மெய்மை — மூன்றும் அற்புதமான சொற்கள். ஸம்ஸ்க்ருதத்தில் ஸத்யத்திற்கு (TRUTH) இப்படி மூன்று அற்புத சொற்கள் இல்லை
உள்ளத்தால் பொய்யாது வாழ்வது உண்மை ;
வாயால் பொய் சொல்லாது , தீங்கு செய்யாது வாழ்வது வாய்மை ;
உடலால் தீங்கு செய்யாது வாழ்வது மெய்மை ;
இவை அற்புதமான சொற்கள்; தமிழனின் கண்டு பிடிப்பு. மனோ , வாக், காயம் (THOUGHT, WORD AND DEED) ஆகிய மூன்றிலும் பொய்யாது வாழ்வது இந்துக்களின் சிறப்பு. இதை இன்றும் கூட பிராமணர்கள் தினமும் மூன்று முறை சொல்லும் சந்தியா வந்தனத்தில் கடைசியில் சொல்கிறார்கள். ஆனால் இதற்கான விசேஷ சொற்களை — வாய்மை, உண்மை, மெய்மை — என்பதை திருக்குறளிலும் சங்க இலக்கியத்திலும் மட்டுமே காணலாம்.
(வாய்மை, உண்மை என்ற இரண்டு சொற்களை வள்ளுவர் பல இடங்களில் பயன்படுத்துகிறார். மெய்மை என்பது சங்க இலக்கியமான ஐங்குறு நூற்றில் வருகிறது ; தொல்காப்பியத்தில் வரும் ‘மெய்மை’ இலக்கணம் பற்றியது )
வாய்மை விஷயத்தில் வள்ளுவனின் கருத்து தனிச் சிறப்பு உடைத்து. பொய்யும் கூட உண்மைதான்; அது நன்மை விளைவிக்கு மாயின் !!
உண்மையும் கூட தப்புதான்; அது தீமை விளைவிக்குமாயின்!!!
இதை முன்னரே மஹாபாரதக் கதைகள் மூலம் விளக்கிவிட்டதால் இன்று பிரஸ்தாபிக்கப்போவது இல்லை.
நம்மில் பலர்க்கு உள்ளத்தில் ஒரு கேள்வி எழும் ; குமர குருபரர், சகல கலாவல்லி மாலை பாடினார் – அற்புதம் நிகழ்ந்தது .
அபிராமி பட்டர் அந்தாதி பாடினார் – அமாவாசையன்று சந்திரன் உதித்தது.
ஆதி சங்கரர் , ஏழை பாப்பாத்தி வீட்டு வாசலில் நின்று , தாயே, இப்படி ஒரு வறுமையா, இந்தப்பெண்மணிக்கு, என்று கதறி, கனக தாரா ஸ்தோத்திரம் பாடினார் . அந்தப் பார்ப்பனப் பெண்மணியின் வீட்டில் தங்க நெல்லிக்காய் மழை பெய்தது .
அதெல்லாம் சரி ! இதை நானும் உள்ளன்போடு பாடுகிறேனே! ஏன் அற்புதம் நிகழ்வதில்லை என்று நம்மில் பலர் ஐயுறுகிறோம்.
ஒரே விடைதான் ! நமக்கு ‘திரிகரண சுத்தி’ இல்லை.
மனம், வாக்கு, உடல்/காயம் மூன்றும் உண்மையைக் கடைப்பிடிப்பதில்லை. நம்முடைய எண்ணங்களை காகிதத்தில் எழுதிப் படித்தால் நமக்கே வெட்கமாக இருக்கும். எழுதத் துணியவும் மாட்டோம்.. அதே போல கடும் சொற்களை, கொடும் சொற்களை வாயாலும் மனதாலும் வீசி எறிகிறோம். கடவுள் என்ன முட்டாளா? நம்மிடம் அவர் ஏமாந்து போக?
வள்ளுவன் பல இடங்களில் “எல்லா உயிர்களும் கை கூப்பித் தொழும்” என்று நமக்கு சொல்கிறான்.கோபம், காமம் லோபம்/பேராசை/பிறர் பொருள் நயவாமை ஆகிய மூன்றையும் விட்டால் அற்புதங்கள் செய்ய முடியும் என்கிறான். நம்மால் முடிகிறதா?
இந்தக் கட்டுரை யார் இந்த திரிகரண சுத்தியை- மனம், சொல், நடத்தை — ஆகியவற்றைக் கண்டுபிடித்தார்?? என்பது பற்றியது.
இது ஜராதுஷ்ட்ரர் / ஜொராஸ்டர் ஸ்தாபித்த பார்ஸி மதத்திலும் உளது. அவரது காலம் கி.மு 600ஆ அதற்கு முன்னமா என்பது கேள்விக்குறியாக நிற்கிறது. ஆனால் வேதத்திலும் கீதையிலும் இது தெளிவாக உள்ளது.
இதோ குறிப்புகள்
பகவத் கீதையில்
18-15
‘சரீர வாங் மனோபிர் யத் கர்ம ப்ராரபதே’ என்ற வரியில் உடல், சொல், மனது மூன்றும் குறிப்பிடப்படுகிறது .
தம்மபதத்தில் புத்தரும் இதைச் சொல்கிறார் . பிராமணர் பற்றிய 26ஆவது அத்தியாயத்தில் புத்தர் சொல்கிறார் “. எவன் ஒருவன் மனதாலும், வாக்காலும், செயலாலும் பாவம் செய்யவில்லையோ , திரிகரணங்களிலும் கட்டுப்பாட்டுடன் இருக்கிறானோ அவனையே நான் பிராமணன் என்பேன்”.
மனு ஸ்ம்ருதி இதை மேலும் ஒரு படி மேலே தூக்கிச் செல்கிறது.(12-9)
உடலால் பொய்யாக வாழ்பவன், அடுத்த ஜன்மத்தில் மரம் செடிகொடிகளாக, கல், மண்ணாக பிறக்கிறான் ;
வாக்கால் பொய்யாக வாழ்பவன் பறவைகளாக, மிருகங்களாகப் பிறப்பான்;
எண்ணங்களில் பொய்மை உடையவன் மிகவும் கீழ்த்தரமான பிறவிகளாக (கடைசி ஜாதி) மாறுகிறான்
xxxx
பார்ஸி மதத்தில் திரிகரண சுத்தி
பார்சி மதத்தில் 3 நல்ல குணங்கள்
ஹுமதா , ஹுக்தா ,ஹ்வர்ஷ்டா = ஸு மதி , ஸு உக்த , ஸு வரிஷ்ட
பாரசீக மொழியில் ‘ஹ’ என்பது ஸம்ஸ்க்ருதத்தில் ‘ஸ’ என்பதாகும்.
இதனால்தான் நம்மை சிந்து நதி மக்கள் என்று சொல்லாமல் ஹிந்து என்றழைத்தனர் .
இதற்கெல்லாம் மூலம் யஜுர் வேதத்தில் உள்ளது:-
யன் மனஸா த்யாயதி தத் வாச்சா வததி
யத் வாச்சா வததி தத் கர்மா கரோதி
ஒருவனுடைய எண்ணத்தில் உதிப்பது வாக்காக மலர்கிறது ;அதையே அவன் செயலாகச் செய்கிறான்.
மஹாபாரதம், கருட புராணம் முதலியவற்றில் இது வந்தாலும் வேதத்தில் வருவதே முதலில் வந்தவை.
இதோ மேலும் சில வேத மேற்கோள்கள் –
யச் சக்ஷுசா மனஸா யச்ச வாச்சா உபாரிம –அதர்வண வேதம் 6-96-3
யன்மே மனஸா வாச்சா கர்மணா வா துஷ்க்ருதம் க்ருதம் –தைத்ரீய ஆரண்யக 10-1-12
உபநிஷதங்களை சாக்ரடீஸூம் அவரது சீடரான பிளாட்டோவும் நன்கு படித்தமைக்குப் பல சான்றுகள் உண்டு. பிளாட்டோவும் இந்த திரிகரண சுத்தியைக் குறிப்பிடுகிறார்.
–SUBHAM—
TAGS — வாய்மை, உண்மை, மெய்மை, வேதத்தில், பார்ஸி மதம், , தமிழன், அற்புத “மை”