Written by S NAGARAJAN
Date: 1 February 2017
Time uploaded in London:- 6-39 am
Post No.3594
Pictures are taken from different sources; thanks.
contact: swami_48@yahoo.com
13-1-2017 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை
புத்துலகம் காண விழையும் வித்தகர்கள் – 3
ச.நாகராஜன்
t
“சுமார் நூறு கோடி கடற்பறவைகள் மற்றும் மிருகங்கள் பிளாஸ்டிக் பைகளினால் மடிந்து போகின்றன. பிளாஸ்டிக் பைகள் அவற்றின் குடலைச் சுற்றி இறுக்கவே அவை இறக்கின்றன”
– அறிவியல் தகவல்
சுற்றுப்புறச்சூழல் மேம்பாட்டிற்காக முனைந்து பாடுபடும் இன்னும் சிலரைப் பார்ப்போம்.
மரீனா சில்வா
1958ஆம் ஆண்டு பிறந்த மரீனா சில்வா ஒரு அரசியல்வாதி. பிரேஸிலைச் சேர்ந்த இந்த பெண்மணி ரப்பரை எடுக்கும் ஒருவரின் மகளாகப் பிறந்து அமேஸான் காடுகளில் ரப்பரை எடுத்துக் கொண்டிருந்தவர். சட்டத்திற்கு விரோதமாக மரங்கள் அழிக்கப்படுவதைக் கண்கூடாகக் கண்டு மனம் நொந்து போன இவர் காடுகளைக் காக்க தீவிரமாக களத்தில் இறங்கினார். அரசியலில் தீவிரமாக ஈடுபட்ட இவர் பிரேஸில அமைச்சரானார். பல லட்சம் சதுரமைல் பரப்புள்ள காட்டு வளம் இவரால் காப்பாற்றப்பட்டது. காடுகளை அழிப்பவரை 75 சதவிகிதம் ஒழித்துக் கட்டினார். திடீரென்று 1500 கம்பெனிகளை ரெய்டு செய்து பத்து லட்சம் கியூபிக் அளவுள்ள சட்ட விரோதமாக வெட்டப்பட்ட ம்ரங்களைக் கைப்பற்றி அந்த நிறுவனங்களை சட்டத்தின் முன் நிறுத்தினார். 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு நிற்கக் கூடிய வகையில் இவருக்கு நடுத்தர வர்க்கத்தினரின் ஆதரவு இருந்தது.
அனைத்து நாடுகளும் இந்த விஷயத்தில் ஒன்று சேர்ந்தால் தான் உலக வளம் காப்பாற்றபபட முடியும் என்ற கொள்கையை ஆணித்தரமாக உலகெங்கும் முழங்கி வரும் துணிச்சல்கார பெண்மணி இவர்.
ரெபக்கா ஹாஸ்கிங்
பிபிசியில் காமரா உமனாகப் பணியாற்றிய பெண்மனி ரெபக்கா ஹாஸ்கிங். ஹவாய்க்குப் படம் எடுக்கச் சென்ற போது அங்கு பிளாஸ்டிக் கழிவுகளைத் தின்று இறந்து போன மிருகங்களைக் கண்டு மனம் நொந்து பரிதாபப்பட்டார். விளைவு, பிளாஸ்டிக் பைகளை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. மாட்பரி என்ற சிறு நகரில் உள்ள வர்த்தகர்களிடம் சென்று பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பதற்கு பதிலாக மாற்று வழியைக் கையாளுங்கள் என்று வேண்டினார். நல்ல ஆதரவு கிடைக்கவே பிரிட்டனில் பிளாஸ்டிக் இல்லாத முதல் நகரம் என்ற பெயரை 2007ஆம் ஆண்டு மாட்பரி எடுத்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து பிரிட்டனில் இன்னும் 80 நகரங்கள் பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்தன.
ஆண்டு தோறும் 400 கோடி பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் பிரிட்டனை பிளாஸ்டிக் பை இல்லாத நாடாக மாற்றத் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார் இந்த உத்வேகமூட்டும் பெண்மணி. ‘அரசாங்கத்தை எதிர்பார்க்காதீர்கள்; உங்களிடமிருந்து மாற்றத்தைத் தொடங்குங்கள்’ என்பது இவர் மக்கள் முன் வைக்கும் கோஷம்!
ஆப்ரே மேயர்
தென்னாப்பிரிக்க இசைக் கலைஞரான இவர் லண்டனில் வசிப்பவர். உலக நாடுகளை பணக்கார நாடு ஏழை நாடு என்று பிரிப்பதற்குப் பதிலாக சுற்றுப்புறச் சூழல் அடிப்படையில் வெப்ப மாறுதலை வைத்துப் பிரிக்க வேண்டும் என்கிறார் இவர். நச்சுப் புகையான கார்பன் டை ஆக்ஸைடை ஒரு நாடு எவ்வளவு வெளியேற்றுகிறது என்பதைப் பார்க்க வேண்டும் என்பது இவரது வாதம்.
இசையை விட்டு விட்டு சுற்றுப்புறச் சூழல் ஆர்வலராக மாறிய இவர், 1990இலிருந்து வாழ்க்கை வாழ்வதற்கே பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்து விட்டார். என்றாலும் தான் எடுத்துக் கொண்ட நல்ல பணியை விட்டு விடாமல் தொடர்கிறார்..
முதலில் இவர் கொள்கையை கண்டு கொள்ளாமல் விட்டு விட்ட பிரிட்டன் இப்போது இவரது கொள்கையை ஆதரிக்கிறது. பல நாடுகளும் நச்சுப்புகை வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து விட்டன.
இசையை எழுதுவதும் நச்சுப்புகையைத் தடுப்பதும் பல விஷயங்களில் ஒன்று தான் என்று கூறும் இவர் அதை அழகுற விளக்குகிறார். இசைக்கான நோட்ஸை பேப்பரில் எழுதிப் பார்த்தால் அது என்னவென்றே யாருக்கும் புரியாது. ஆனால் நோட்ஸின் படி இசையை இசைத்தாலோ அனவரும் சொக்கி விடுவர். அதே போல எவ்வளவு நச்சுப்புகையை எந்த நாடு வெளியிடுகிறது என்ற புள்ளி விவரத்தைப் பார்த்தால் ஒன்றும் புரியாது. ஆனால் நச்சுப் புகை கட்டுப்படுத்தப்பட்ட இடத்தில் வாழ ஆரம்பித்தால் அதன் சுகமே தனி. அப்போது தான் அதன் மஹிமையை உணர முடியும் என்கிறார் இவர்.
பிரபல வயலின் வித்வானான இவர் தினந்தோறும் வயலினை இசைப்பதை இன்றும் தொடர்கிறார். ஆர்க்கெஸ்ட்ரா நிகழ்ச்சிகளுக்குப் போவதைத் தான் விட்டு விட்டார்.
உலகத்தை மாற்ற இவ்வளவு காலம் ஆகும் என்று தெரியாமல் போயிற்றே என்று அங்கலாய்க்கிறார் இந்த இசைக் கலைஞர்.
ஜியா ஜாங்கே
நடிகரும் இயக்குநருமான ஜியா ஜாங்கே ஸ்டில் லைஃப் (Still Life) என்ற திரைப்படத்தை எடுத்து உலகப் புகழ் பெற்றார். வெனிஸில் 2006ஆம் ஆண்டு நடந்த விழாவில் இந்தப் படத்திற்காக கோல்டன் லயன் விருதினைப் பெற்றார். சீனாவில் மூன்று அணைகள் கட்டப்பட்டதால் ஏற்பட்ட சுற்றுப்புறச் சூழல் கேட்டினைச் சித்தரிக்கிறது படம். ஹைட்ரோ எலக்ட்ரிக் திட்டம் ஒன்றிற்காக கட்டப்பட்ட இந்த அணைகளால் லட்சக் கணக்கானோர் தாங்கள் வாழ்ந்த இடத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். அதில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தங்கள் துணையைத் தேடி அலைகின்றனர். நகரிலோ வெள்ளப் பெருக்கு. லஞ்சம், நில ஆக்கிரமிப்பு, வன்முறை ஆகிய எல்லாவற்றையும் காட்டும் இந்தப் படம் சீன நாட்டு சென்ஸாரிடம் என்ன பாடுபடுமோ என்ற கவலை முதலில் இருந்தாலும் சென்ஸார் படத்தை அனுமதித்து விட்டது. சீனாவின் சுற்றுப்புறச் சூழல் கேட்டினை திரைப்படத்தில் அற்புதமாகச் சித்தரித்துக் காட்டிய சிறந்த படம் இது. இவரைப் பார்த்து உத்வேகம் கொண்ட இதர கலைஞர்களும் இப்போது சுற்றுப்புறச் சூழல் மேம்பாட்டிற்காக சீனாவில் பாடுபட ஆரம்பித்து விட்டனர்.
இதே போல நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் புத்துலகைக் காண விழையும் வித்தகர்களாக இன்று திகழ்கின்றனர். நாம் தெரிந்து கொண்டது இங்கு சிலரைப் பற்றி மட்டுமே!
உத்வேகமூட்டும் இவர்களைப் பின்பற்றி நாமும் ஒரு சிறு செயலைச் செய்தால் கூட உலகம் புத்துணர்ச்சியுடன் கூடிய புத்துலகமாக மாறும்!
அறிவியல் அறிஞர் வாழ்வில .. ..
ஸ்வாண்டி அகஸ்ட் அர்ஹேனியஸ் (Svante August Arrhenius) ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி.தோற்றம் (19-2-1859 மறைவு 2-10-1927) பூமியில் உயிரினம் ஏற்பட்டதற்குக் காரணம் அயல் கிரகங்களிலிருந்து வந்த உயிரினத்தாலேயே என்று ஆயிரத்தி தொள்ளாயிரமாவது ஆண்டிலேயே முதன் முதலில் அவர் கூறினார். அதை இதர விஞ்ஞானிகள் ஏற்கவில்லை. ஆனால் இதே கருத்தை ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் பிரபல பிரிட்டிஷ் விண் இயற்பியல் விஞ்ஞானியான ஃப்ரெட் ஹாயிலும் கூறிய பின்னர் இந்தக் கருத்தின் மீது அனைவருக்கும் ஒரு மதிப்பு ஏற்பட்டு விட்டது.
அர்ஹேனியஸிற்கு ஏராளமான விஷயங்களில் ஆர்வமும் ந்ல்ல அறிவும் உண்டு. பூமி வெப்பமயமாதல் என்ற கருத்தை சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே 1905ஆம் ஆண்டில் முதலில் சொன்ன அவர், கார்பன் டை ஆக்ஸைடே இதற்குக் காரணமாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.
1903ஆம் ஆண்டு இரசாயனத்திற்கான நோப்ல பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. முதல் உலக மகா யுத்தத்தின் போது ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். சாமர்த்தியமாக பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை அர்ஹேனியஸ் விடுவித்தார்.
1901 லிருந்து 1927ஆம் ஆண்டு முடிய இயற்பியல் மற்றும் இரசாயனம் ஆகிய துறைகளில் நோபல் பரிசு பெறத் தகுதியானோரைத் தேர்ந்தெடுப்பதில் இவர் முக்கிய பங்கு வகித்தார். பல் துறை விற்பன்னர் என்ற பெயரைப் பெற்ற பெரிய விஞ்ஞானி இவர்.
**********