மதுரையில் பெருமாள் தெப்பக்குளம் மீட்பு! (Post No.8556)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8556

Date uploaded in London – – –23 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

மதுரையில் பெருமாள் தெப்பக்குளம் மீட்பு; ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன! மாபெரும் வெற்றி!!

ச.நாகராஜன்

அற்புதமான இரு வீர புருஷர்களின் முயற்சி வெற்றி பெற்றது. தர்மம் வெற்றி பெற்றது – சுமார் ஐம்பது ஆண்டுகள் கழித்து!

ஒருவர் மானனீய கோபால்ஜி ! இந்து முன்னணி தலைவர்!

இன்னொருவர் சேலம் திரு எம்.ராமசாமி. ஹிந்து ஆலயப் பாதுகாப்பு கமிட்டியை கண்ணெனப் பேணிப் பாதுகாத்து அதற்கென தன்னை அர்ப்பணித்தவர்.

ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளின் இறுதியிலும் எழுபதுகளிலும் வீறு நடை போட்டு ஒவ்வொரு ஊர் ஊராகப் பயணம் செய்து ஆலயங்களைக் காக்கப் பெருமுயற்சி எடுத்தார் சேலம் ராமசாமி. அவருக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்துப் பலமாக இருந்தார் கோபால்ஜி.

சேலத்தில் ஹிந்து ஆலயப் பாதுகாப்பு மாநாடு பிரம்மாண்டமாக நடந்தது. ஏராளமான ஹிந்து ஆசாரியர்கள் அதில் பங்கேற்றனர். ஆலயங்கள் மற்றும் ஹிந்து மடங்களின் பொறுப்பு அரசிடமிருந்து மீட்கப்பட்டு அதற்கென உள்ள ஒரு தனி அமைப்பிடம் வழங்கப்பட வேண்டும் என்பது அனைவரின் ஒருமித்த கருத்தாக மிளிர்ந்தது.

இந்த மாநாட்டில் பங்கு பெற மதுரையிலிருந்து தன்னார்வலர்களைத் திரட்டிக் கூட்டிச் செல்லும் பொறுப்பு எனக்குக் கிடைத்தது.

மதுரை ஆதீனம் போன்ற பெரியோர்களின் சந்திப்பு கிடைத்தது;

 ஏராளமான சத் சங்கங்கள் பஜனை மண்டலிகள் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.

சேலம் மாநாடு தமிழகத்தில் ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது; எப்படியேனும் அரசுப் பிடியிலிருந்து ஆலயங்களைக் காக்க வேண்டும் என்பதற்கான விதை விதைக்கப்பட்டது.

இதன் ஒரு அங்கமாக மதுரையில் மதுரை மாவட்ட ஆலயப் பாதுகாப்பு மாநாடு நடந்தது. (நான் தான் செயலாளர்)

அதில் முக்கிய தீர்மானமாக பெருமாள் தெப்பக்குளத்தைச் சுற்றி இருக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கோலாகலமாக நடத்தப்பட்டு பேருக்கு நடத்தும் ‘நின்று விட்ட’ தெப்பக்குள உற்சவத்தை மீண்டும் கோலாகலமாக நடத்த வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரை நகரில் உள்ள அனைத்து சத்சங்கங்களையும் அணுகி ஒரு மாபெரும் ஊர்வலம் நடத்தப்பட்டது.

சுமார் எண்பது சங்கங்கள் இணைந்தன.ஏராளமான நல்லோர் இதில் தீவிரமாக ஈடுபட்டனர்.

ஆனால், தீய சக்திகளுக்குக் கொண்டாட்டம் – அரசின் சில நாத்திக சக்திகள் அவர்களுக்குத் துணையாக இருந்ததால்.

வைஷ்ணவ பக்தர்கள் ஒன்று சேர்ந்தனர்; கேஸ் ஒன்றும் போடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் முனைப்போடு தொடர்ந்து செயல்பட்டு இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றப் பாடுபட்டு வந்திருக்கின்றனர்.

தர்மத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்; மறுபடி தர்மமே வெல்லும் என்ற படி கேஸ் வெற்றி பெற்றது.

நேற்று (20-8-2020) வந்த செய்தி இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் துள்ளிக் குதிக்க வைத்தது. உள்ளம் குளிர வைத்தது.

அனைத்து ஆக்கிரமிப்புகளும் தரைமட்டமாக்கப்பட்டன.

இன்று (21-8-2020) காலை மதுரை சார்டர்ட் அக்கவுண்டண்டும்  ஐக்ய வைஷ்ணவ சபைத் தலைவருமான ஆடிட்டர் திரு என்.சீனிவாசன் அவர்களைத் தொடர்பு கொண்டு என் மன மகிழ்ச்சியைத் தெரிவித்து அவரைப் பாராட்டினேன்.

அடுத்த முயற்சியாக தெப்பக்குளம் சீராக்கப்படும் என்று அவர் நல்ல செய்தியைக் கூறினார்.

இந்தத் தெப்பக்குளத்திற்கு வைகை நதியிலிருந்து ஒரு சுரங்கக் கால்வாய் பழைய காலத்திலேயே ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இரயில்வே காலனி வழியாக வரும் அது தெப்பக்குளத்தைச் சென்று அடைகிறது. மடைகளைத் திறக்க வேண்டியது தான், சிறிது நேரத்தில் வைகை நீர் தெப்பக்குளத்தை வந்து அடையும்.

இதற்கான மேப் இருக்கிறது; கால்வாய் சரியாக இருக்கிறதா என்று பார்த்து தேவைப்பட்ட புனர்நிர்மாண வேலைகளைச் செய்தால் தெப்பக்குளத்தில் நீர் பெருகும் ; தெப்போற்சவம் பிரம்மாண்டமான அளவில் நடக்கும்.

அந்த நல்ல நாளை எதிர்பார்ப்போமாக!

மதுரை கார்பரேஷன் கமிஷனர், மதுரை கலெக்டர் ஆகியோர் நல்ல முறையில் செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

 அரசுப் பணிகளில் உயர் பொறுப்புகள் வகிப்போருக்கும் இதில் ஈடுபட்ட அனைத்து அரசுப் பணியாளர்களுக்கும் ஆடிட்டர் திரு என். சீனிவாசன் உள்ளிட்ட தன்னார்வலர்களுக்கும் நமது வாழ்த்துக்கள்.

என்றோ போட்ட விதை இன்று பயனளிக்கும் விருக்ஷமாகி விட்டது!

தமிழகத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஆலயங்கள் அரசுப் பிடியிலிருந்து விடுபட்டு இதற்கான தனி அமைப்பின் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

இந்தத் தருணத்தில் சேலம் திரு ராமசாமி அவர்களை நினவு கூர்கிறேன்.

1984ஆம் ஆண்டு இலங்கையில் சில காலம்  நான் இருந்த போது ஒரு நாள் அலுவலகத்தில் இருந்து கெஸ்ட் ஹவுஸ் திரும்பிய போது ஹிந்து நாளிதழைப் பார்த்தேன். அதில் சேலம் ராமசாமி அவர்கள் கார் விபத்து ஒன்றில் மரணமடைந்த செய்தி கண்டு ஆற்றொணாத் துக்கம் அடைந்தேன்.

அவரது ஆன்மா சாந்தி அடைவதாக!

இந்த வெற்றியைப் பெற கடுமையாக உழைத்ததோடு  இன்றும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களுக்கு வழி காட்டி வரும் திரு இராம கோபாலன் அவர்களை இந்த நேரத்தில் போற்றி வணங்குகிறேன்.

இன்னும் பல்காலம் இருந்து அவர் நல்வழி காட்டத் துணை புரியுமாறு மதுரை மீனாட்சியைப் பிரார்த்திக்கிறேன்.

வாழ்க ஹிந்து தர்மம்; ஒங்குக ஹிந்து ஆலயங்கள்!

tags – மதுரை, பெருமாள் தெப்பக்குளம், மீட்பு

****