பேயை விரட்ட ஈயம்! நோயை ஒழிக்க ஈயம்! அதர்வ வேதம் சிபாரிசு! (10,261)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,261

Date uploaded in London – 26 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக் வேதம் மிகப் பழமையானது; யஜுர் வேதம் ,சாம வேதம் அதைத் தொடர்ந்து வந்தன. கடைசியாக அதர்வண வேதம் வந்தது என்பது வெள்ளைக்காரன் கணக்கு. ஆனால் இந்துக்களோ , வேதங்கள் நான்கையும் நமக்கு வகுத்து, தொகுத்துத் தந்தவர் வேத வியாசர் என்பதில் ஒருமித்த கருத்துக்  கொண்டுள்ளனர். அது மட்டுமல்ல அந்த வேத வியாஸருக்குப் பின்னர்தான் கலியுகம் உதித்தது என்று சொல்லி பஞ்சாங்கமும் வெளியிட்டு அதில் கி.மு 3102-ல் கலியுகம் தோன்றியதையும் வருஷம் தோறும் எழுதி வருகின்றனர். இதை மாயன்  நாகரீகம், சுமேரிய நாகரீகம், எகிப்திய நாகரீகம் ஆகியனவும் முக்கியமாகக் கருதுகின்றன. மாயா நாகரீக காலண்டரும் அப்போதே துவங்குகிறது. மற்ற இரண்டு  நாகரீகங்களில் முதல் மன்னன் மனு அப்போது ஆண்டதாக எழுதுகின்றன. மனு என்பதைக் கொஞ்சம திரித்து மெனஸ் (Menes)  என்றெல்லாம் எழுதுவார்கள். ஆகவே நான்கு வேதங்களும் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்தன என்பதுதான் இந்துக்களுடைய கருத்து.

வெள்ளைக்காரர்கள் இந்து மத விரோதிகள்; இந்து மதத்தைப் பின்பற்றாதவர்கள். அதை நம்பாதவர்கள். ஆகையால் அவர்களை ஒதுக்கி விடுவோம்.

சங்க காலம் முதல் தமிழ் இலக்கியம் முழுதும் நான்மறைகள் – ‘4 வேதங்கள்’ – என்றே பகரும்; ஏனெனில் அவை 2000 ஆண்டுகளுக்கு முன்னர்தான் எழுந்த படைப்புகள். அவற்றுக்கும் முந்திய உப நிஷத்துக்கள் புத்தருக்கும் முந்தியவை. அவற்றில் மூன்று வேதங்கள் என்ற சொற் றொடர் பெரும்பாலும் வரும். காரணம் என்னவெனில் யாக யக்ஞங்களில் அதர்வண வேதத்துக்கு அதிகம் வேலை இல்லை. ஆயினும் அதில்தான் ஏராளமான ரகசியங்கள், மருத்துவ விஷயங்ககள் , எதிரிகளை மாய மந்திரத்தால் ஒடுக்கும் விஷயங்கள் உள்ளன. அதுமட்டுமல்ல; ஆன்மீக விஷயங்களைக் கூறும் முண்டக , மாண்டூக்ய உப நிஷதங்களும் அதர்வண வேதகக்காரர்களால் உருவாக்கப்பட்டனவே.

ஈயத்தின் (Lead) மஹத்துவம்

 அதர்வண வேதத்தின் இரண்டு துதிகளில் ஈ யம் பற்றிய அதிசயக் குறிப்புகள் வருகின்றன. அவற்றைச் சொல்லிவிட்டு எனது விமர்சனத்தையும் தருகிறேன்.

xxx

முதல் காண்டம்  16ஆவது துதியின் தலைப்பே ஈயம் (Lead) !

“1.சக்தி வாய்ந்த அக்னீ , ஓங்கி வளர்ந்து அமாவாசையில் யாதுதானர்களையும் எங் களைத் தின்பவர்களையும் அழிக்கிறான் அவன் எங்களுக்கு பாதுகாப்பு தருவான்

2.வருணன் ஈயத்தைப் புகழ்கிறான். அக்கினி அதை பலப்படுத்துகிறான். இந்திரன் எனக்கு ஈயத்தை அளித்தான் ; அது பேய்களை விரட்டும்.

3.இது விஷ்கந்தத்தை ஜெயிக்கும்.; இது பகைவர்களைப் பாழாக்கும் இதைவைத்து நான் பிசாசுகளையும் அவற்றின் இனத்தையும் அழிப்பேன்.”

இங்கே யாதுதானர்கள் என்போர் அரக்கர்கள். அத்தோடு மனிதர்களை உண்ணும் காட்டுமிராண்டிகள். அமாவாசையன்று நள்ளிரவில் வரும் பேய்களைப் பற்றியும் மந்திரம் பேசுகிறது 

சம்ஸ்க்ருதத்தில் ஸீசம் என்று ஈயத் க்கு பெயர். லத்தீன் மொழியில் ப்ளம்பம் Plumbum  என்று பெயர். சம்ஸ்க்ருதத்தில் இருந்து ஈயம் என்ற சொல் வந்திருப்பதை ஒலிக்குறிப்பு மூலம் நாம் அறிய முடிகிறது . ஆங்கிலத்தில் LEAD (லெட்).

இது பற்றி அடிக்குறிப்பு எழுதிய கிரிப்பித் (Ralph T H Griffith)  என்ற வெள்ளைக்காரர் இதை குதிரை லாடத்துடன் (Horse shoe) தொடர்பு படுத்துக்கிறார் . இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளில், குறிப்பாக ஐ ரிஸ்காரர்கள் வசிக்கும் வீடுகளின் கதவுகளில் குதிரை லாடம் ஆங்கில எழுத்து U போல மேல் நோக்கி பொருத்தப்பட்டிருக்கும். சில இடங்களில் ஆணி அடித்தும் சில இடங்களில் தொங்கவிட்டும் இருப்பர். இது ஈயமோ  இரும்போ  ஏதோ ஒரு உலகத்தில் இருக்கும் இதற்குப் பேயை விரட்டுமாற்றல் உண்டு; மேலும் சூன்யம், மாயாஜாலம் ஆகியன எவரையும் பாதிக்காமல் தடுக்கும். ஆரோக்கியத்தைத் தரும் என்பது அவர்களுடைய மத நம்பிக்கை . அந்த வகையில் மேற்சொன்ன அதர்வண வேத மந்திரத்துடன் ஒத்துப் போகிறது

விஷக்கந்தை என்பது பற்றி எங்கும் முழுவிளக்கம் இல்லை. ஆனால் இந்த வேதத்தில் பல இடங்களில் வருகிறது. இதன் விளக்கத்தை பார்க்கையில் இது கீல் வாதம், மூட்டு வலி என்று உரைகாரர்கள் கூறுவார்கள்..

இந்திய இலக்கியங்களில் குதிரை லாடம் பற்றிய  மாயாஜால  மந்திர நம்பிக்கை எதுவும் இல்லை.

Xxxx

தமிழ் இலக்கியத்தில் பேய், பிசாசு

கடைசியாக, பிசாசுகள் பற்றிப் பார்ப்போம். பிசாசு, பைசாசம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் கலித்தொகை முதலிய சங்கஇலக்கிய நூலிலும் உளது. பேய் என்பது சங்க இலக்கியத்தில் நிறைய இடங்களிலும் வருகிறது இது தவிர பேய் என்பதற்குத் தமிழில் உள்ள அலகை , கூளி , கழுது முதலியனவும் ஆங்கிலம் உளபட பல மொழிகளில் இருக்கிறது. திருக்குறளில் வரும் அலகை – ஒளி மாறும் ஆல்கால்  (Algol- Double Star System) நட்சத்திரம் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்.

XXX

இதோ இன்னும் ஒரு மந்திரம்

12 ஆவது காண்டத்தில் 21-33 (எண் .475) மிருத்யு தேவதைக்கானது . முதல் மந்திரத்தில் ‘இந்த ஈயம் உன்னுடையது வா’ என்று அழைக்கிறார் ரிஷி.

20, 21, 53 மந்திரங்களுக்கு அந்தக் காலத்தில் உரை எழுதியோர் இது தலைவலியை நீக்கும் டி.பி (TB= Tuberculosis) என்னும் காச நோயைப் போக்கும் மந்திரம் என்று எழுதியுள்ளனர்

“ஈயத்திலே மாசைத் துடைத்து விடுங்கள்” என்று மந்திரம் சொல்கிறது (மாசு = அழுக்கு). 53 மந்திரங்கள் உள்ள இந்த துதியில் பொருத்தமில்லாத, தொடர்பில்லாத விஷயங்கள் வருவதாக வெளிநாட்டார் எழுதிகியுள்ளனர்.

xxx

என் கருத்து

பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் நாம் இதை படிப்பதால் பொருத்தம் இல்லாதது போலத் தோன்றுகிறது

அந்தக் காலத்தில் இதைப் பயன்படுத்தியோருக்கு இதில் சொல்லாமல் விடுபட்ட விஷயங்கள் தெரிந்திருக்கலாம்.

U letter in Indus Valley Script

நான் லண்டனில் என் வீட்டிலிருந்து தினமும் ரயிலைப் பிடிக்க, ஸ்டேஷனுக்கு நடக்கும்போது, பல வீடுகளில் ‘u’ வடிவ லாடம் அடித்திருப்பதைப் பார்த்து வியப்பேன் . இப்போதும் லாட நம்பிக்கை இருக்கிறது.

குதிரை லாட தாயத்து அதிர்ஷ்டத்தையும் ஆரோக்கியத்தையும் கொணரும் என்றும் நம்புகின்றனர். குதிரை லாயத்திலும் இதைக் கதவில் அடித்து வைத்திருப்பார்கள்.

இறுதியாக ஒரு விஷயம். சிந்து சமவெளி எழுத்துக்களில் ‘U’ வடிவ எழுத்துக்களே அதிகம். அவைகளுக்கும் வெளி நாடுகளில் கதவில் பொருத்தப்படும் குதிரை லாடங்களுக்கும் ஏதேனும் பொருத்தம் இருக்கிறதா என்பதும் ஆராய்ச்சிக்குரியது

ஆக,  ஈயம் பற்றிய துதியில் நோய் விரட்டலும்,  பேய் விரட்டலும் வருகிறது .

நோய்க்கிருமிகளையே இவர்கள் பேய் பிசாசு என்று சொல்கிறார்களோ என்று நினைக்கிறேன். கிரஹணம் என்பது விண்வெளில் உலவிவரும் சூரியன், சந்திரன்,  பூமி தொடர்பான நிழலே என்று தெரிந்தபோதும் பாமர மக்களுக்காக  சூரியனையோ சந்திரனையோ பாம்பு விழுங்குகிறது என்று சொன்னார்கள். அது போலநோய்க் கிருமிகள் என்று சொல்லாமல் இப்படி பேய் பிசாசு என்று சொல்லியிருக்கலாம். எங்கெல்லாம் பேய், பிசாசு என்ற சொல் வருகிறதோ அங்கெல்லாம் வைரஸ் அல்லது பாக்டீரியா என்ற சொல்லை பிரயோகித்தான் போதும் ! அப் போது நம் முன்னோர்களின் மருத்துவ அறிவு பளிச்சென விளங்கும்

–Subham —

tags- குதிரை லாடம், ஈயம், பேய், பிசாசு நோய், விரட்டும்

மனிதன், தெய்வம், பேய், தலைவன்! (Post No.5782)

Written by S Nagarajan

Date: 15 DECEMBER 2018


GMT Time uploaded in London –7- 14 am


Post No. 5782

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

தமிழ் இலக்கியம்; அறநூல்!

பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு இரகசியம் விளக்கும் கேள்விகள்! – 9

மனிதன், தெய்வம், பேய், தலைவன்!

ச.நாகராஜன்

இன்றுடன் வள்ளுவரின் அருளுரை முடியப் போகிறது என்பதை அறிந்த மக்கள் சற்று வருத்தப்பட்டனர். என்றாலும் மூன்று தினங்களுக்கு மேல் ஓரிடத்தில் இருக்காத வள்ளுவப் பிரான் முப்பெரும் தேவியருக்காக ஒன்பது நாட்கள் இருந்ததை எண்ணி அவர்கள் ஆறுதல் அடைந்தனர்.

சபை ஆரம்பித்தவுடன் வேகம் வேகமாக கேள்விகள் வர ஆரம்பித்தன.

ஒருவர் எழுந்து கேட்டார்.

நல்ல முறையில் வாழ்க்கை நடத்துகின்ற ஒருவனை நாம் எப்படி வாழ்த்த வேண்டும்?

வள்ளுவர் உடனே கூறினார்:

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.  

அப்படி வாழாதவன்?

ஒத்ததறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும்

பேய் உண்டா?

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து

அலகையா வைக்கப்படும்   

தலைவன் யார் ஐயனே!

முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

இறை என்று வைக்கப்படும்   

ஒரு புலவர் உற்சாகத்துடன் எழுந்தார்.

பார்த்தீர்களா, வாழ்வாங்கு வாழ்பவனை தெய்வத்துள்  வைத்தார்.  மற்றவருக்கு உதவி செய்யாமல் வாழ்பவனை செத்த பிணத்துடன் வைத்தார். உலகத்தோடு ஒட்ட ஒழுகாமல் உலகம் உண்டு என்று சொல்வதை இல்லை என்று சொல்பவனைப் பேயாக வைத்தார். நீதிமுறை தவறாமல் மக்களைக் காப்பாற்றுபவனை தலைவன் என்று வைத்தார். இப்படி நான்கு விதமாக மனிதர்களைப் பிரிக்கிறார் வள்ளுவப் பிரான் என்று அவர் முடித்தவுடன் அனைவரும் கைதட்டி ஆரவாரித்தனர்.

ஒருவரை நடுநிலைமை உள்ளவரா என்று எப்படி அறிவது?

தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப் படும்   

இங்கு புலவர் இரு வரிசையாகப் பிரிந்தனர். ஒரு சாரார் ஒருவன் இறந்த பின் அவனைப் பற்றி நிற்கும் புகழாலும் பழியாலும் அவனது நடுநிலைத் தன்மை காணப்படும் என்றனர். இன்னொரு சாரார் அவனது எச்சம் என்பது அவனது பிள்ளைகளே, அவர்கள் வாழ்வைப் பார்த்து அறியலாம் என்றனர். இரு கருத்துக்களையும் மக்கள் ஏற்றுக் கொண்டனர்.

தர்மவான் போல இல்லாத ஒருவனை எப்படி இனம் காண்பது?

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்

புன்மையாற் காணப் படும்    

மற்றவனைப் பற்றிப் புறங்கூறும் ஒருவன் தர்மவான் இல்லை என்பதை எளிதில் அறிந்து கொள்ளலாம்.

பிறவித் துன்பம் ஒழிவது எப்படி, ஐயனே?

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று

நிலையாமை காணப் படும்  

ஆசைகளை விடு; அப்பொழுதே பிறவித் துன்பம் ஒழியும். இல்லையேல் மாறிமாறிப் பிறக்கும் நிலையாமை காணப்படும்.

அனைவரும் பெரிய ரகசியத்தை உணர்ந்தனர்.

பிறவித்  துன்பம் அற வழி கேட்ட உடனேயே காமம் சம்பந்தமாக ஒருவர் ஒரு கேள்வி எடுத்து வைத்தார். மகளிரும் ஆண்களும் மிகவும் ஆவலாக வள்ளுவரைப் பார்த்தனர்.

ஐயனே!  மனைவி ஊடலின் போது ஒருவர் விட்டுக் கொடுக்கிறார். யார் இதில் வென்றது?

வள்ளுவர் சிரித்தார்.

ஊடலில் தோற்றவர் வென்றார் அது மன்னும்

கூடலிற் காணப் படும்    

மணம் புரிந்த அனைவரும் ஓஹோ என்று சிரித்து அதை ஆமோதிக்க இளம் மங்கையரும் வாலிபரும் புரியாமல் சற்று நாணித் திகைத்தனர்.

புலவர் ஒருவர் எழுந்து நான்கு ‘காணப்படும்’ விஷயங்களை பிரான் உணர்த்தி இருக்கிறார். இத்துடன் புறந்தூய்மை நீரால் அமையும் அகத் தூய்மை வாய்மையால் காணப்படும் என்று சொன்னதையும் சேர்த்துப் பார்த்தால் ஐந்து ‘காணப்படும்’ என்ற ரகசியங்களை அறிகிறோம் என்றார்.

எதைக் கண்டால் அஞ்ச வேண்டும்?

தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்   

தீய செயல்கள் தீயினும் கொடியன. ஆகவே அந்தத் தீமை விளவிக்கும் செயல்கள் அஞ்சப்படும்.

வள்ளுவர் தொடர்ந்தார்:

முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா

வஞ்சரை அஞ்சப் படும்  

முகத்தினால் சிரித்து அகத்தினால் தீமை கொள்ளும் கறுப்பு உள்ளத்தவரை நட்பாகக் கொள்ள அஞ்ச வேண்டும்.

இரு அஞ்ச வேண்டிய விஷயங்களைக் கேட்டவுடன் ஒருவர் ஒருவனை எப்படி ஆராய்ந்து நம்புவது என்று கேட்டார்.

அறம் பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்

திறம் தெரிந்து தேறப் படும்   

அறம், பொருள், இன்பம், உயிரச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஒருவனை ஆராய்ந்து பார். பின்னரே அவனைப் பற்றி அறிய முடியும்!

வள்ளுவர் மன்னனைப் பார்த்துத் தொடர்ந்தார்:

ஒற்றெற் றுணராமை ஆள்க உடன் மூவர்

சொற்றொக்க தேறப் படும்  

ஒரு ஒற்றனை இன்னொரு ஒற்றனால் ஆராய்க; அப்படி ஆளப்பட்ட மூன்று பேர்களின் சொற்கள் ஒத்திருக்கிறதா என்று பார்த்து உண்மையை அறிக. 

எப்போது ஒருவனின் மதிப்பு கெட்டுப் போகும்?

வள்ளுவர் கூறினார்:

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து

சொல்லாடச் சோர்வு படும் 

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்

சொற்பொருள் சோர்வு படும் 

கல்லாத ஒருவன் தன்னைத் தானே உயர்த்திக் கொண்டு பேசும் மதிப்பானது கற்றவர் அவையில் கூடிப் பேசும் போது கெட்டுப் போகும்.

நன்கு படித்த ஒருவன் நல்ல நூலின் பொருளை விரித்து உரைத்தாலும் கூட அவன் வறியவனாக இருந்தால் அவன் சொற்களை மதிப்புக் கொடுத்து யாரும் கேட்க மாட்டார்கள் அவன் சொற்கள் பயனின்றிப் போகும்.

கண்ணுக்கு அணிகலன் எது ஐயனே!  கைகளில் மை தீட்டிய ஒரு அழகிய இளம் பெண் கேட்டாள்.

வள்ளுவர் குரல் புன்சிரிப்புடன் ஒலித்தது:

கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்

புண்ணென்று உணரப் படும்.

அந்தப் பெண்ணை கருணை பொதிந்த கண்களால் பாண்டிமாதேவி பார்க்க அவள் கண்களுக்கு அழகு மை அல்ல; கருணைப் பார்வை இல்லையேல் அது புண் என உணர்ந்து அமர்ந்தாள்.

ஒருவர் எழுந்து கேட்டார்: சற்றுக் கருணையற்றுக் கடுமையான சொற்களால் குடும்பத்தில் உள்ளவர்கள் கடிந்து கொண்டால்?

உறாஅ தவர் போல் சொல்லினும் செறாஅர்சொல்

ஒல்லை உணரப் படும்  

வெளிப்பட அன்பில்லாதவர் போலக் கடுமையாகச் சொன்னாலும் கூட, அது அகத்தே பகையில்லாமல் தன் அன்புக்குரிய ஒருவரின் நன்மைக்காகவெ சொல்லப்பட்டது என்பதை விரைவில் யாரும் உணர்வர்.

வள்ளுவர் உடன் தொடர்ந்தார்:

நட்டார் போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்

ஒல்லை உணரப் படும்   

அதே போல நண்பர்கள் போல நல்லனவற்றைச் சொன்னாலும் கூட,  மனதிலே பகைமை கொண்டவர்கள் கூறும் சொற்களின் உண்மைத் தன்மையை விரைவில் யாவரும் உணர்வர்.

வள்ளுவரின் தீர்க்கமான சொற்களையும் அதற்கு புலவர்களின் விளக்க உரையையும் கேட்ட மக்கள் மகிழ்ந்தனர்.

ஆராயத் தக்கது எது?

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப் படும்  

பொறாமை நெஞ்சம் கொண்ட ஒருவனுடைய செல்வமும், பொறாமை இல்லாத ஒருவனின் கேடு காலமும் ஏன் என்று ஆராயப்பட வேண்டியவை.

எள்ளப்படுவது எது?

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்

எல்லாரும் எள்ளப் படும்  

கேட்டவர்கள் எல்லாரும் வெறுக்கும் படியாக ஒரு பயனும் இல்லாத வெற்றுச் சொற்களைச் சொல்லும் ஒருவன் எல்லாராலும் இகழைப் படுவான்.

உள்ளப்படுவது எது?

வீறெய்தி மாண்டார் வினைத் திட்பம் வேந்தன் கண்

ஊறெய்தி உள்ளப் படும்   

நல்ல செயல் திறன் மூலம் தன் திறமை காட்டி உயர்ந்தவரின் வினைத் திட்பமானது அரசு வரை எட்டும்; அவரை அரசனும் மதிப்பான்.

எள்ளப்படுவதையும் உள்ளப்படுவதையும் கேட்டவுடன் மக்கள் மகிழ அந்தி மாலை வந்தது.

பாண்டிமாதேவி பாண்டியனுடன் வள்ளுவரின் பாதம் தொட்டு பாத பூஜையைச் செய்ய சேரமாதேவியும் சோழமாதேவியும் ஏக்கத்துடன் பார்த்தனர்.

காலையில் பாண்டிமாதேவியிடம் வள்ளுவர் தங்கள் நாட்டிற்கு வருகை தந்து தங்களைப் புனிதப் படுத்தக் கூடாதா என்ற ஏக்கத்தை அவர்கள் கொட்டித் தீர்த்தனர்.

பாண்டிமாதேவி வள்ளுவரிடம் வினயமாக ஏதோ விண்ணப்பித்தாள்.

மக்கள் அப்படி தங்கள் மஹாராணி எதை விண்ணப்பிக்கிறார் என்று அறிந்து கொள்ள ஆவல் கொண்டனர்.

வள்ளுவர் புன் சிரிப்புடன் தலையை அசைக்க பாண்டியன் பெரிதும் மகிழ்ந்து உற்சாகக்குரலை எழுப்பினான்.

மக்கள் புரியாமல் திகைக்கவே ராணி சேரமாதேவியையும் சோழமாதேவியையும் பார்த்துக் கூறினாள் : “காலையில் என்னிடம் வள்ளுவப் பிரான் உங்கள் நாட்டிற்கு வர வேண்டும் என்ற ஆசையைக் கூறினீர்கள் அல்லவா? அதை உங்கள் சார்பில் அவரிடம் விண்ணப்பித்தேன். அவர் வருகிறேன் என்று கூறி விட்டார். சென்று ஏற்பாடுகளைச் செய்யுங்கள். அங்கே உங்கள் மன்னருடன் நீங்கள் பாத பூஜை செய்யலாம்.”

கண்களில் ஆனந்தக் கண்ணீர் ததும்ப இருவரும் ஓடோடி வந்து அக்கா என்று கூவி அவரைக் கட்டி அணைக்க பாண்டிமாதேவி அவர்களைக் கட்டித் தழுவிக் கொண்டாள்.

அவர்கள் வள்ளுவரின் பாதம் பணிய அவர் ஆசீர்வாதம் கூறி எழுந்தார். மக்களும் எழுந்தனர். சிலர் அழுதனர். சிலர் ஆனந்தப் பட்டனர். சிலர் பேசினர்; சிலர் மௌனமாக இருந்தனர்.

மந்திரி, படைத்தலைவர், மக்கள் உடன் வர பாண்டியனும் மூன்று தேவிகளும் முன் செல்ல வள்ளுவர் பாண்டிய நாட்டு எல்லையை அடைந்து அனைவரையும் கையை உயர்த்தி ஆசீர்வதித்தார்.

இதற்கு மேல் என்னைத் தொடர வேண்டாம் என்பதை அனைவரும் புரிந்து கொண்டனர்.

நவ ராத்திரி போல ஒன்பது பகல் நடைபெற்ற அறிவு விருந்தைச் சுவைத்த மக்கள் திரும்ப மனமின்றி வள்ளுவரை வணங்கியவாறே திரும்பலாயினர்.

அவர் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்?

கொல்லி மலையை நோக்கியா, பொதிய மலையை நோக்கியா?

யாருக்குத் தெரியும்?

வள்ளுவர் வாழ்க என்ற மாபெரும் ஒலி கொல்லி மலையையும் பொதிய மலையையும் சென்று எதிரொலித்தது.

வள்ளுவர் வாழ்க; தமிழ் வாழ்க; உலகோர் சிறந்து உயர்க!

நன்றி, வணக்கம்!

****

இந்தக் கட்டுரையில் இடம் பெறும் குறட்பாக்களின் எண்கள்

50,214,850, 388,114,185,349,1327, 202, 824,501,589, 405,1046,575, 1096, 826, 169,191,665,

இத்துடன் இந்தத் தொடர் நிறைவடைகிறது.

Index :

Chapter 1 இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள குறட் பாக்களின் எண்கள் 3,4,377,226,439,110                         Total upto this article 6

Chapter 2 இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள குறட் பாக்களின் எண்கள் : 126, 667, 496, 55                       total upto this :10

Chapter 3 இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள குறட்பாக்களின் எண்கள் : 56,54,1101,913,30,543,260             total upto this : 17

Chapter 4 இந்தக் கட்டுரையில் இடம் பெறும் குறட்பாக்களின் எண்கள் 293,306,799,1019,1207 Total upto this : 22

Chapter 5 இந்தக் கட்டுரையில் இடம் பெறும் குறட்பாக்களின் எண்கள் 620,380,619,371,494,505, 655,656,205,206,327,590                                   Total upto this : 34

Chapter 6 இந்தக் கட்டுரையில் இடம் பெறும் குறட்பாக்களின் எண்கள் 759,374,179,36,669,893,512,106,391,725,177,931,414,416,695,587    Total upto this : 50

Chapter 7 இந்தக் கட்டுரையில் இடம் பெறும் குறட்பாக்களின் எண்கள்

350, 12, 15, 291,298, 300, 292, 1081, 1085, 1113,1116, 1117   Total upto this : 62

Chapter 8 இந்தக் கட்டுரையில் இடம் பெறும் குறட்பாக்களின் எண்கள்

972,37,93,,200,645,644,711,712,  197,719, 1134,1164, 215,396,943,477, 725,33 

Total upto this : 80

Chapter 9 இந்தக் கட்டுரையில் இடம் பெறும் குறட்பாக்களின் எண்கள்

50,214,850, 388,114,185,349,1327, 202, 824,501,589, 405,1046,575, 1096, 826, 169,191,665,

Total upto this : 100

 tags –  தெய்வம், பேய், தலைவன்,

–subham–

புத்திமானும் பலவானும் பேயை விரட்டிய கதை! (Post No.5069)

Written by London Swaminathan 

 

 

Date: 2 JUNE 2018

 

 

Time uploaded in London – 14-54

 

Post No. 5069

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

பல நாட்டுப்புறக் கதைகள் பழங்காலத் தமிழில் உள; அவைகளை நான் அவ்வப்பொழுது புதுத் தமிழில் செதுக்கிக் கொடுக்கிறேன்

ஒரு கிராமத்தில் ஒரு பயில்வான் இருந்தான்;  உடல் பலம் இருந்தும் அவனுக்கு புத்தி ‘மந்த புத்தி’தான்; ஒரு கேள்விக்குப் பதில் சொல்ல ஐந்து நிமிடமாவது ஆகும். ஆனால் வேறு எவரும் அசைக்கக்கூட முடியாத பாரத்தை மிக எளிதாகத் தூக்கி விடுவான். அவனை எல்லோரும் வல்லாள கண்டன் என்று அழைப்பர்.

 

அருகிலுள்ள மற்றொரு கிராமத்தில் உடல் பலம் இல்லாத, ஆனால் மஹா புத்திசாலியான ஒருவன் இருந்தான். அவனை வாய்ச்சொல் வீரன் என்று அழைப்பர். மிகவும் புத்திநுட்பம் உடையவன். மற்றவர்களுக்குத் தோன்றாத விஷயங்கள் அவனுக்கு எளிதில் புலப்படும் தட்டுத் தடங்கலின்றி பேசுவான். பதில்கள் அனைத்தும் அக்ஷர லக்ஷம் பெறும்.

வாய்ச்சொல் வீரனின் புகழ் எங்கும் பரவவே வல்லாள கண்டனுக்குப் பொறாமை ஏற்பட்டது. உடல் பலமின்றி வாய்ச் சொல் வீரம் இருந்து என்ன பயன் என்று கிண்டல் செய்தான். ‘பேச்சுக்கு ராவணன், பின்னர் பார்த்தால் கும்பகர்ணன் போல’ இருக்கிறதே என்பான். ‘சொல்லுதல் யார்க்கும் எளிதாம்; சொல்லியவாறு செய்தல் அல்லவோ கடினம்’ என்பான். இருவரும் சந்திப்பது நல்லது என்று இரண்டு கிராம மக்களும் முடிவு செய்தனர்.

 

இருவரும் வாய்ச்சொல் வீரனின் கிராமத்தில் சந்தித்தபோது வல்லாள கண்டன் சொன்னான்; ஒரு நாள் முழுதும் உன்னுடன் தங்கியிருந்து உடல் பலமே பெரிது என்பதைக் காட்டப்போகிறேன் பார்! என்று சவால் விடுத்தான்.

முதல் சோதனை

 

சரி அடுத்த கிராமத்திலுள்ள இடையன் நிறைய ஆடுகள் வைத்திருக்கிறான். அதை என் உடல் பலத்தால் களவாடி வருகிறேன். உன்னால் முடியுமா என்றும் யோசித்துப் பார் என்றான் வல்லாள கண்டன் . மாலையில் இருட்டத் துவங்கியது

 

இடையன் எப்போதும் சாப்பிடப் போகும்போது,  ஒரு ஆள் இருப்பது போலத் தெரியட்டும் என்று ஒரு கம்பளியைக் கம்பின்மீது போட்டுவிட்டுப் போவான்; யாரோ ஒருவர் கூடவே இருப்பது போல பாவனை செய்து பெரிதாச் சொல்வான்: . “தம்பி ஆடுகளைப் பார்த்துக்கொள்; இந்தப் பக்கம் திருடர்களும் பேய்களும், சிப்பாய்களும் அதிகம். ஆடுகளைத் தூக்கிச் செல்லாமல் பார்த்துக்கொள்” என்பான்; இது வழக்கமான பல்லவி.

 

இதை எல்லாம் கவனித்த மஹா புத்திசாலி வா, வா, போய் ஒரு ஆட்டை  எடுத்துக்கொண்டு ஓடி விடுவோம் என்றான். வல்லாளகண்டனுக்குப் புத்தி குறைவு என்பதால் அந்தக் கம்பின் மீது போட்ட கம்பளியை ஆள் என்றே நினத்துத் தயங்கினான். பின்னர் அது வெறும் கம்பளி அங்கு யாரும் இல்லை என்று காட்டவே வல்லாளகண்டனுக்கு ஒரே ஆச்சர்யம்!! ஒரு ஆட்டை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு நடந்தான்.

 

அந்தக் கிராமத்தில் உண்மையிலேயே பேய்கள் உண்டு;  அவைகளும் இடையனின் பேச்சை கேட்டு ‘’சிப்பாய்கள்’’ என்றால் என்ன என்று யோசித்துக் கொண்டிருந்தன. அப்போது ஆட்டைத் திருடிய வல்லாளகண்டனும்  வாய்ச்சொல் வீரனும் வந்தனர். இதுவரை இந்த மாதிரி ஆட்களைப் பார்த்ததே இல்லை. ஓ! இவர்கள்தான் சிப்பாய்கள் போல என்று நினைத்து ஆடுகள் உருவத்தில் போய் செடி கொடிகளை பேய்கள் மேய்ந்தன. அப்படிச் செய்தால் வெறும் ஆடுகள் என்று எண்ணி இருவரும் போய்விடுவர் என்று அவை எண்ணின

அவைகளைப் பார்த்துக் கொண்டு வந்த வல்லாள கண்டன் ஒரு பேய் ஆட்டைத் தொட்டுப் பார்த்து, அட, இது நாம் திருடிய ஆட்டை விடக் கொழுத்து இருக்கிறது என்று கருதி அதில் ஒன்றைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டான்.

பேய் ஆட்டுக்குப் பயம் வந்துவிட்டது. எப்படித் தப்பிக்கலாம் என்று யோசித்த போது, பின்னால் வாய்ச் சொல்வீரன் நடந்து வருவதைப் பார்த்து அவனும் ஒரு சிப்பாய் என்று பயந்தது. அந்த நேரத்தில் கொழுத்த ஆட்டின் எடை தாங்காமல் ‘ஏய், இதை ஒரு நிமிடம் உன் தோளில் வைத்திரு. கொஞ்சம் முதுகை நெளித்து வளைத்து உடலைச் சரி செய்கிறேன் என்று சொல்லி மஹா புத்திசாலியின் தோளில் வைத்தான். அவனுக்கு உடல் வலு இல்லாததால் அவன் அதை ‘தொபுக்’ என்று கீழே போட்டான். பேய் ஆடு தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி விட்டது பின்னர் மாயமாய் மறைந்தும் போனது.

 

ஏற்கனவே இடையன் பேச்சில் பேய்கள் பற்றிச் சொன்னதைக் கேட்டு இருந்ததால் அது பேய்தான் என்று பயந்து இருவரும் வேகமாக நடந்தனர்.

 

இதைப் பார்த்த சில பேய்கள் நம்மைத்தான் ‘சிப்பாய்கள்’ பிடிக்க வருகிறார்கள் என்று பேசிக்கொண்டு தலை தெறிக்க ஓடின. மற்ற பேய்கள் சிரித்துக் கொண்டே சிப்பாய்களும் இல்லை, குப்பாய்களும் இல்லை என்று நக்கல் அடித்தன.

இருவரும் வீட்டுக்குப் போய் தாங்கள் பார்த்த கொழுத்த ஆடு பேய்தான் என்று பேசிக்கொண்டே தூங்கிவிட்டார்கள். அந்த வீட்டில் அன்று எதேச்சையாக பேய்கள் போய் மதில் ஏறிக் குதித்தன. இதைப் பார்த்த வல்லாள கண்டன் அவனது நண்பன் வாய்ச்சொல் வீரனிடம் போய் பேய்கள் இங்கும் வந்து விட்டன. நாம் என்ன செய்வது? என்றான். உடனே மஹா புத்திசாலியான வாய்ச்சொல் வீரன் ‘’நீ ஒன்றும் தெரியாதது போல உருண்டு போய் உன்     இடத்திலேயே படுத்துக்கொள்’ என்று சொல்லிவிட்டு ரஹஸியமாக தாழ்ந்த குரலில் தனது பெண்டாட்டியிடம் சொன்னான்: நீ போய் இலை போட்டு, இருக்கும் சாப்பாட்டைப் பரிமாறு; என்ன இது? இன்று காலையில் நான் பிடித்து வந்த மூன்று பேய்களைச் சமைக்கவில்லையா? அவை எல்லாம் பழையதாய்ப் போனால் நன்றாக இராது என்பேன்; நீ உடனே  மூன்று பேய்களையும் உங்கள் மகன் பக்ஷணம் பண்ணிவிட்டு மேலும் வேண்டும் என்றான்; நான் இல்லை என்று சொன்னவுடன் கோபித்துக்கொண்டு பேய் பிடிக்கப் போய்விட்டன் என்று சொல்லு’’ என்றான். மனைவியும் சரி என்று சொல்லிவிட்டு அவன் சொன்ன படியெல்லாம் செய்தாள்.

 

இதைக் கேட்ட பேய்கள் நடுநடுங்கி ஓட்டம் பிடித்தன. ஏற்கனவே ஆடாக இருந்து தப்பித்த பேயிடம் அவை எல்லாம்,’ நீ சொன்னது உண்மைதான்; சிப்பாய்கள் பொல்லாதவர்கள்; அவன் மகனே மூன்று பேய்களைத் தின்றுவிட்டு நம்மையும் பிடிக்க அலைகிறானாம். நாம் வேறு காட்டுக்குப் போய்விடுவோம் என்று ஓடி விட்டன. அப்போதுதான் வல்லாளகண்டனுக்குப் புரிந்தது: உடல் பலத்தை விட புத்தி பலமே பெரிதென்று.

 

இருவரும் மறு நாளைக்கு வேறு ஒரு கிராமத்துக்குப் போவோம் என்று புறப்பட்டனர். பேய்கள் போன புதுக் காட்டின் வழியே திரும்பி வந்து கொண்டிருந்தனர். மாலை நேரம் ஆகி இருட்டத் துவங்கியது. வல்லாள கண்டனுக்கு ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயா’கத் தென்பட்டது. ஆகையால் நாம் ஒரு அரச மரத்தின் மீது ஏறி இரவைக் கழிப்போம்; பொழுது விடிந்ததும் புறப்படுவோம் என்றான். அதற்கு இணங்கிய மஹா புத்தி சாலியும் இரவு முழுதும் பல கதைகளைச் சொல்லிப் பொழுதைக் கழித்தான். அதே மரத்துக்கு அடியில் நள்ளிரவில் பேய்கள் வந்து குழுமி கூட்டம் போட்டன. அதைப் பார்த்த வல்லாள கண்டன் பயந்து நடுங்கி பேய்கள் மீது தொபுக் என்று விழுந்தான். அவன் வாய் குளறிப் போய் ஏதோதோ பிதற்றத் துவங்கினான்.

அவைகளைக் அதைக் கேட்ட மஹா புத்தி சாலி, அட நீ ஏன் இந்தப் பேய்களையும் தின்ன வேண்டும் என்று துடிக்கிறாய்? இன்றுதான் ஐந்தாறு பேய்களை அடித்துக் கொன்று தின்னோமே; இவைகளை நாளை இரவுச் சாப்பாட்டுக்கு வைத்துக் கொள்வோம். சூடாகச் சாப்பிடுவோம்’’ என்று மரத்தின் மீதிருந்து சொன்னான்.

 

இதைக் கேட்ட அவை அனைத்தும் அடக்கடவுளே! இவன் மூன்று பேய்களை பக்ஷணம் பண்ணியவனின் தகப்பன் அல்லாவா? என்று பயந்து நடுங்கி ஓட்டம் பிடித்தன.

 

மறு நாள் காலையில் வல்லாள கண்டன் சொன்னான்: “புத்திமான் பலவான் ஆவான்; உடல் பலம் இருந்தும் என்னால் பேய்களை விரட்ட முடியவில்லை; நீ உன் புத்திசாலித் தனத்தால் விரட்டிவிட்டாய் என்று புகழ்ந்துவிட்டு தனது கிராமத்துக்கே சென்றான்.

 

–சுபம்–

அடங்காப்பிடாரியை அடக்கும் வித்தை! (Post No.4894)

COMPILED by London Swaminathan 

 

Date: 8 April 2018

 

Time uploaded in London –  11-29 am (British Summer Time)

 

Post No. 4894

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

நடேச சாஸ்திரியார் என்னும் தமிழ்ப் பெரியார், தமிழ் மொழிக்கு அரிய பெரிய சேவை செய்துள்ளார். அக்காலத்தில் அவர் கேட்ட நாட்டுப்புற கதைகளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் 100 ஆண்டுகளுக்கு முன்னர் புஸ்தகமாகவும் ஆராய்ச்சி இதழ்களில் கட்டுரைகளாகவும் வெளியிட்டுள்ளார். அவர் தொகுத்த ஒரு கதை வில்லியம் ஷேக்ஸ்பியரின் டேமிங் ஆf தெ ஷ்ரூ ( TAMING OF THE SHREW) போன்ற கதை. இதோ நடேச சாஸ்திரியின் நடையிலேயே படியுங்கள்:-

 

 

 

 

 

 

TAGS– கெட்ட பெண், நல்ல பெண், பேய், அடங்காப்பிடாரி

 –subham–

பேயை விரட்டிய விவேகாநந்தர்! அதீத உளவியல் ஆற்றல் (Post No. 2535)

viveka namste

Written by S Nagarajan

 

Date: 13  February 2016

 

Post No. 2535

 

Time uploaded in London :–  7-07  AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

 

 

ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத அனுபவங்களும் ஆற்றலும்! – (3)

 

ச.நாகராஜன்

 

இமயமலை கிராமம் ஒன்றில்!

 

ஸ்வாமிஜி ஒரு முறை 1898ஆம் ஆண்டில் பல்ராம் பாபுவின் வீட்டில் இருந்த போது அமானுஷ்ய சக்தி பற்றி பேச்சு திரும்பியது.அதீத உளவிய்ல ஆற்றல் பற்றி பேச ஆரம்பித்தார் ஸ்வாமிஜி.

 

 

மனதை ஒருமுகப் படுத்துவதால் சுலபமாக சில அபூர்வமான சக்திகளைப் பெறலாம் என்ற ஸ்வாமிஜியின் வார்த்தைகளைக் கேட்ட சீடர் அதனால் பிரம்மம் பற்றிய ஞானத்தை அடைய முடியுமா என்று கேட்டார்.

 

நிச்சயமாக முடியாது என்று பதிலிறுத்தார் ஸ்வாமிஜி. அப்படியானால் அப்படிப்பட்ட ஆற்றல் எங்களுக்கு வேண்டாம் என்று கூறிய சீடர், இருந்தாலும் அப்படிப்பட்ட உங்களின் சொந்த அனுபவங்களைக் கேட்க ஆசைப்படுகிறோம் என்று கூறினார்.

உடனே இமயமலையில் தனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்றைக் கூறத் தொடங்கினார் ஸ்வாமிஜி.

 

 

இமயமலைப் பகுதியில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த போது ஒரு நாள் இரவு மலைப் பகுதி மக்கள் வாழும் ஒரு கிராமத்தில் தங்க நேர்ந்தது.திடீரென்று நள்ளிரவில் பெரிதாக முரசு அறையும் பேரொலியைக் கேட்ட ஸ்வாமிஜி என்ன விஷயம் என்று தான் தங்கியிருந்த வீட்டாரைக் கேட்டார்.

 

vivekananda-rock-and-valluvar

Picture of Vivekananda Rock in Kanyakumari

ஆவி வந்து பீடிக்கப்பட்ட மனிதன்

 

அதற்கு அவர் அந்த கிராமத்தில் ஒருவர் மீது நல்ல ஆவி ஒன்று ஆவிர்ப்பித்து இருப்பதாக பதில் கூறினார்.

ஆவல் உந்த சத்தம் வந்த இடத்திற்கு கூட வந்தவர்களுடன் ஸ்வாமிஜி சென்றார்.

 

அங்கு ஏராளமான மக்கள் கூட்டம் குழுமி இருந்தது. அதில் நடுவே உயரமான மனிதர் ஒருவர் இருந்தார். நீண்ட தலைமுடி அவருக்கு! அவரைச் சுட்டிக் காட்டி அவரிடம் தான் ஒரு தேவதை ஆவிர்ப்பித்து இருப்பதாகச் சொன்னார்கள்.

 

அங்கு ஒரு கோடாலி தீயில் நன்கு பழுக்கக் காய வைக்கப்பட்டிருந்தது. அக்னியில் இருந்து சிவப்பாக மாறி இருந்த அந்க்த கோடாலியை எடுத்து அவர் தன் உடம்பு மீதும் தலை முடி மீதும் வைத்தார்.

 

ஆச்சரியத்திலும் ஆச்சரியம். அந்தப் பழுக்கக் காய்ச்சிய கோடாலி அவர் மீது எந்த தீப் புண்ணையும் ஏற்படுத்தவில்லை. அவர் முடியிலும் எந்த பாதிப்பும் இல்லை. அவர் வலியினால் துடிக்கவும் இல்லை,

 

மௌனமாக வாயடைத்துப் போனார் ஸ்வாமிஜி.

 

அப்போது அந்த கிராமத் தலைவன் அவரிடம் வந்து, “ஸ்வாமிஜி! தயவு செய்து இந்த தேவதையை நீங்கள் தான் போக்க வேண்டும், சற்று கருணை காட்டுங்கள்” என்று வேண்டிக் கொண்டான். என்ன செய்வதென்று ஒரு கணம் ஸ்வாமிஜி திகைத்துப் போனார்.

 

ஆனால் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற கருணை உள்ளத்துடன் ஆவியால் பிடிக்கப்பட்டிருந்த அந்த மனிதனை அணுகினார். அங்கு சென்றவுடன் அந்தப் பழுக்கக் காய்ச்சிய கோடாலியை சோதிக்க எண்ணம் கொண்டு அதைத் தொட்டார்.  அவர் கை தீப்புண்ணால் சிவந்தது. அப்போது அந்தக் கோடாலி சற்று குளிர்ந்து சிவப்பு நிறத்தை இழந்து தான் இருந்தது. அதற்கே அவ்வளவு சூடு!!

 

 

கோடாலியில் ஏதாவது இருக்கும் என்ற ஸ்வாமிஜியின் எண்ணம் காற்றில் பறந்து போனது – கையில் ஏற்பட்ட தீப்புண்ணால்!

இருந்தாலும் அந்த புண்ணான கையுடன் அந்த  மனிதனின் தலை மீது கை வைத்து ஒரு ஜபத்தை உச்சரித்தார் ஸ்வாமிஜி.

என்ன ஆச்சரியம்! பத்து பன்னிரெண்டு நிமிடங்களில் அந்த தேவதை அவனை விட்டு நீங்க, அவன் சுய உணர்வைப் பெற்றான்.

 

உடனே அங்கு குழுமி இருந்த அனைவரும் பரவசம் அடைந்து ஸ்வாமிஜியை விழுந்து வணங்கினர்.

 

அடடா! அவர்களின் பக்தியைக் கண்ட ஸ்வாமிஜி திகைத்துப் போனார்.

 

அவர்களுக்கு ஒரு தெய்வீக மனிதராக அவர் ஆகி விட்டார்.

என்ன நடந்தது என்று ஸ்வாமிஜிக்குப் புரியவில்லை..

ஆகவே மௌனமாக தன்னுடன் வந்தவருடன் வீட்டிற்குத் திரும்பினார்.

கையில் பட்ட தீக்காயத்துடனும் என்ன நடந்திருக்கும் என்ற எண்ணத்துடனும் படுக்கையில் படுத்த ஸ்வாமிஜிக்கு உறங்கவே முடியவில்லை.

 

உடம்பில் பழுக்கக் காய்ச்சிய கோடாலியை வைத்துக் கொண்ட அந்த மனிதனை நினைத்த போது ஸ்வாமிஜிக்கு ஷேக்ஸ்பியரின் வரிகள் தாம் நினைவுக்கு வந்தன:

 

“THERE ARE MORE THINGS IN HEAVEN AND EARTH,

HORATIO, THAN ARE DREAMT OF YOUR PHILOSOPHY”

 

ஸ்வாமிஜி பேச்சை நிறுத்த பிரமித்துப் போயிருந்த சீடர், “ஸ்வாமிஜி பின்னால் எப்போதாவது அந்த மர்மத்தை நீங்கள் விடுவிக்க முடிந்ததா?” என்று கேட்டார்.

 

 

“இல்லை” என்று பதிலிறுத்தவர், இப்போது தான் சட்டென்று அது என் நினைவுக்கு வந்தது. அதை உங்களிடம் சொல்கிறேன்” என்றார்.

 

பிறகு தொடர்ந்தார்: “ஆனால் ராமகிருஷ்ணர் இந்த மாதிரி சித்திகளை ஒரு போதும் ஆதரித்ததில்லை.இப்படி மனதை வேறு ஒரு பக்கம் செலுத்துவதாலெல்லாம் மெய்ப்பொருளை அறியவே முடியாது என்று கூறி இருக்கிறார்”

 

ஸ்வாமிஜி தொடர்ந்து மேலை நாடுகளில் இப்படிப்பட்ட அற்புதங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் பற்றிப் பேசலானார்.

அற்புதங்கள் தொடரும்

 

குறிப்பு: மனதின் அபூர்வ ஆற்றல்கள் பற்றி முழுவதுமாக அறியவும் மேற் கூறிய சம்பவத்தை ஆங்கிலத்தில் படிக்கவும்,

“TALKS WITH SWAMI VIVEKANANDA “ (RAMAKRISHNA MUTT) என்ற புத்தகத்தைப் பார்க்கலாம் 500 பக்கங்கள் அடங்கியுள்ள இந்த நூலில் ஸ்வாமிஜி பல விஷயங்களைத் தெளிவு பட விளக்குகிறார். மேலே உள்ள சம்பவம் 110ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

 

-Subham–

 

பிரேதக் கடத்தல்

கனடா நாடு ஆண்டுதோறும் பேய்கள் பற்றிய தபால்தலைகளை வெளியிடுகிறது

Written by S NAGARAJAN

Post No.2224

Date: 8   October 2015

Time uploaded in London:  16-17

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

பாக்யா வார இதழில் கடந்த நாலரை ஆண்டுகளாக வெளி வந்து கொண்டிருக்கும் அறிவியல் துளிகள் தொடரில் 25-9-2015 இதழில் 240வது அத்தியாயமாக வந்த கட்டுரை

பிரேதக் கடத்தல்

.நாகராஜன்

சுவர்க்கத்திற்குப் போக விரும்புபவர்கள் கூட இறக்க விரும்புவதில்லை.” –  ஸ்டீவ் ஜாப்ஸ்

மனிதன் இறக்கும் போதும் கூடத் தன்னை நல்ல விதமாக “அனுப்பி வைப்பதையே” விரும்புகிறான். எரித்தாலும் சரி, புதைத்தாலும் சரி, கௌரவமாக அனுப்புங்கள் என்பதே ஒவ்வொருவரின் வேண்டுதலும்!

ஆகவே, கடத்தல்களில் மோசமான கடத்தல் பிரேதக் கடத்தல் தான் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வர். மிகவும் பிரபலமானவர்களின் உடல்களைப் புதைத்தால் அபாயத்தையும் கூடவே புதைப்பது போலத் தான்.

சமீபத்தில், லைவ் ஸயின்ஸ் ஜூலை 2015 இதழில் ஸ்டீபனி பப்பாஸ் என்ற அறிவியல் ஆய்வாளர் தந்திருக்கும் தகவல் நம்மை பரபரப்படைய வைக்கிறது.

ஜெர்மனியில் உள்ள கல்லறை ஒன்றிலிருந்து பிரபல டைரக்டரான எஃப்.டபிள்யூ.மர்னாவ் என்பவரின் உடலைக் கடத்தப் பலமுறைகள் முயற்சிகள் நடந்திருக்கின்றன. இவர் 1922ஆம் ஆண்டு அந்தக் கால  மௌனப் படமான ‘நொஸ்பெராடு’ என்ற படத்தில் பேய்களைப் பற்றிச் சித்தரித்திருந்தார்.

இவர் 1931ஆம் ஆண்டு மரணமடைந்தார். ஜெர்மனியின் தென்மேற்கில் உள்ள ஸ்டான்டார்ஃப் கல்லறையில் இவரது உடல் முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.ஆனால் இன்றோ?

இவரது தலையை, அதாவது மண்டைஓட்டைக் காணோம் என்ற தகவலை பிரபல பத்திரிகையான வாஷிங்டன் போஸ்ட் தருகிறது. அவரது கல்லறையில் மெழுகுவர்த்தி ஒன்று எரிந்து கொண்டிருந்தததாம்.

நிச்சயமாக பிசாசுப் பேர்வழிகளின் கைவரிசை தான் இது என்று அனைவரும் வருத்தத்துடன் கூறுகின்றனர். சில சமயம் கொள்ளைக்காரர்கள் இதற்கு ஒரு விலையை வைத்து சவத்தை வாங்க விரும்புவர்களிடம் அதை ஒப்படைப்பதும் உண்டு.

பிரபல நகைச்சுவை நடிகரான சார்லி சாப்ளின் 1977இல் இறந்தார். அவரது உடலை அடுத்த ஆண்டே திருட முயற்சித்தனர். அமைதிக்குப் பெயர் பெற்ற ஸ்விட்சர்லாந்தில் அமைதியாக மீளா உறக்கத்தில் இருந்த அவருக்கா இந்த கதி என்று உலகமே அல்லோலகல்லோலப் பட்டது. 2014இல் இண்டிபெண்டண்ட் பத்திரிகைக்குப் பேட்டி அளித்த அவரது மகன் உலகின் மோசமான சம்பவம் இது என்று விமரிசித்தார்.

உடலைத் திருப்பித் தர பெரும் தொகையை சவத் திருடர்கள் கேட்ட போது சார்லி சாப்ளினின் மனைவி பணம் தர மறுத்து விட்டார். செத்த உடலுக்கு என்ன மதிப்பு இருக்கிறது என்ற அவரது பதிலைக் கேட்டத் திருடர்கள் அதிர்ந்து போனார்கள்.

ஆனால் நல்ல வேளையாக இந்தப் பேச்சை ஒட்டுக் கேட்ட போலீஸார் கிழக்கு ஐரோப்பாவில் பதுங்கி இருந்த இரண்டு பிரேதத் திருடர்களைப் பிடித்தனர். ஒரிஜினல் கல்லறையிலிருந்து சற்று தூரத்தில் சவத்தைப் புதைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் ஆப்ரஹாம் லிங்கனுக்கே ஆபத்து என்பதைத் தான் யாராலும் ஜீரணிக்க முடியவில்லை! 1876இல் அவரது உடலுக்கு பெரும் தொகை பிணையாகக் கேட்கப்பட இருந்த ஒரு முயற்சியை ஆரம்பத்திலேயே ரகசிய போலீஸார் தகர்த்தனர். அவரது மகன் ராபர்ட் அறிவியல் ரீதியில் தன் தந்தையின் உடலைக் காப்பாற்றி விட்டார்.

சவப்பெட்டியை கெட்டியான எளிதில் தகர்க்க முடியாத கான்க்ரீட் சுவர் ஒன்றை அமைத்து அதன் கீழ் புதைத்து விட்டார் அவர்.

அதனால் அதை யாராலும் தோண்டி எடுக்க முடியாது, அப்போதும், இப்போதும், எப்போதும்!

அர்ஜெண்டினாவின் ஜனாதிபதியான ஜுவான் பெரானுக்கு 1955இல் மகத்தான சோதனை ஒன்று ஏற்பட்டது. பதனிடப்பட்டு இருந்த அவரது அன்பு மனைவி ஈவா பெரானின் உடலை ராணுவ அதிகாரிகள் கடத்திக் கொண்டு சென்று விட்டனர். அர்ஜெண்டினாவில் இடம் விட்டு இடமாக அந்தப் பிரேதம் “பயணம்” செய்து கொண்டிருந்தது. ஒருவழியாக பெரும் முயற்சியின் பேரில் ஸ்பெயினில் தஞ்சமாகப் புகலிடம் கொண்டிருந்த பெரான் 1971இல் அதைத் திரும்பப் பெற்றார். போனஸ் அயர்ஸில், நல்ல ஒரு கோட்டை போல அரண் செய்யப்பட்ட இடத்தில் அவர் தன் மனைவியை மீண்டும் நல்லடக்கம் செய்தார்.

சமீபத்தில் 2009 டிசம்பர் 11ஆம் தேதி சைப்ரஸ் ஜனாதிபதியான டஸாஸ் பபடோபௌலஸ் என்பவரின் கல்லறையைக் காணச் சென்ற அவரது முன்னாள் மெய்காப்பாளர் அதிர்ச்சி அடைந்தார். அங்கு ஒரு பெரும் பள்ளம் தான் இருந்தது. அலறி அடித்துக் கொண்டு தேட ஆரம்பித்த போலீஸார் அவரது உடல் இன்னொரு கல்லறையில் ஒளித்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு பிடித்தனர். விசாரணையில் சகோதரர்கள் இருவரின் வேலை இது என்பது தெரிய வந்தது. அவர்களில் ஒருவன் ஆயுள் கைதியாக இருந்தான்.  அவனை சிறையிலிருந்து விடுவிக்க வெளியில் இருந்த ‘புத்திசாலியான’ அவனது சகோதரன் பிணையாக இந்த உடலைப் பயன்படுத்த திட்டமிட்டான். கடைசியில் பிடிபட்டான்.

திருடு போகும் பிரேதங்கள் ஒருபுறம் இருக்க, இறந்த பின்னர் உடலைத் தானம் செய்வோரின் எண்ணிக்கை அமெரிக்கா, பிரிட்டன், இந்தியாவில் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

ஆராய்ச்சிக்காகவும் மருத்துவ மாணவர்களின் கல்விக்காகவும் பலரும் தங்களின் உடலைத் தானமாகத் தருகின்றனர். இப்படி உடலைத் தானமாகத் தருவதில் சட்ட சிக்கல்கள் நிறையவே உள்ளன. முறைப்படி தனது விருப்பத்தைத் தெரிவித்தவரின் உடலே தானமாகப் பெறப்படும். அவரது நெருங்கிய உறவினர் மட்டுமே அந்த உடலைத் தானமாகத் தர முடியும்.

இந்தியாவில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச்சி காரணமாக உடல் அங்கங்களைத் தானமாகக் கொடுப்போரின் எண்ணிக்கைம் சமீப காலத்தில் அதிகரித்துக் கொண்டே போகிறது.

இந்த அங்கங்களைப் பெறுவோர் மறுவாழ்வு பெறுவதும் இதனால் அதிகரிக்கிறது. பத்திரிகைகளின் சரியான ஆதரவும் சமூக ஆர்வலர்களின் ஊக்கமும் இதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

‘இறந்த பின்னும் நீங்கள் ஃபேஸ்புக்கை பார்க்கலாம் இன்னொருவர் முகத்தில் உங்கள் கண்களைப் பொருத்துவதன் மூலம்’ என்ற ஈமெயிலைப் பெறாதவர் இன்று அநேகமாக இருக்கவே முடியாது.

இருந்தாலும் இறந்தாலும் பிறருக்கு உதவி செய்பவரே மேலோர்!

அறிவியல் அறிஞர் வாழ்வில்

பிரபல விஞ்ஞானியான தாமஸ் ஆல்வா எடிஸன் தன்னை ஒரு விஞ்ஞானி என்று சொல்லிக் கொண்டதேயில்லை. தன்னை ஒரு வியாபாரி என்று சொல்லிக் கொள்வதில் தான் அவருக்கு விருப்பம் அதிகம். ‘எதிலும் லாபம் எப்போதும் லாபம்என்பதே அவரது முக்கியக் குறிக்கோள். ஒரு சமயம் அவரை ஒரு விஞ்ஞானி என்று குறிப்பிட்டிருந்த ஒரு பத்திரிகை கட்டுரையைக் காண்பித்து அவர் தனது நண்பர் ஒருவரிடம் கூறினார் இப்படி:-“இதோ பார், தப்பாகப் போட்டிருக்கிறார்கள். நான் ஒரு விஞ்ஞானி இல்லை. நான் ஒரு கண்டுபிடிப்பாளன் (Inventor). ஃபாரடேயை எடுத்துக் கொள். அவர் ஒரு விஞ்ஞானி. அவர் பணத்திற்காக உழைக்கவில்லை. அவர் அதற்கு நேரமே இல்லை என்று சொல்லி விட்டார். ஆனால் நானோ அதற்காகத் தான் உழைக்கிறேன். நான் ஒவ்வொன்றையும் வெள்ளி டாலரின் அளவை வைத்தே தான் மதிப்பிடுகிறேன். அந்த அளவுக்கு அது வரவில்லை எனில், அது சரிப்படாது என்பதை அறிந்து கொள்வேன்”.

 

அவர் ஒரு பிரம்மாண்டமான கோடைகால வாசஸ்தல மாளிகை ஒன்றைக் கட்டியிருந்தார். அதைப் பற்றி அவருக்கு ஏகப்பட்ட கர்வம். அந்த மாளிகையில் அதிக உடலுழைப்பின்றி காரியங்களை ஆற்றவல்ல ஏராளமான இயந்திர சாதனங்களை அவர் அமைத்திருந்தார். ஒரு சமயம் அவர், அவற்றை ஒவ்வொன்றாகத் தன் நண்பர்களுக்குக் காண்பித்தவாறே மாளிகையைச் சுற்றி வந்து கொண்டிருந்தார்.செல்லும் வழியில் திருப்பம் ஒன்றில் சுழல் குகை போன்ற ஒரு வழியில் செல்ல வேண்டியிருந்தது. அந்தச் சுழல் குகையைக் கடக்க பெரும் பிரயத்தனம் செய்தவாறே அனைவரும் கடந்தனர்.

 

அவர்களின் ஒருவர் கேட்டார்:” மிஸ்டர் எடிஸன், இப்படிப்பட்ட அருமையான சாதனங்களை நீங்கள் அமைத்துள்ளீர்கள். இந்த குகை மட்டும் ஏன் இப்படி அமைக்கப்பட்டிருக்கிறது? இந்த வழியைச் சுழற்றிச் சுழற்றி நாங்கள் நொந்து போனோம்

இதைக் கேட்ட எடிஸன் ஹாஹாஹா என்று சிரித்தார். “நண்பரே! இந்த சுழல் வழியை நீங்கள் ஒவ்வொருவரும் தள்ளும் போதும் எனக்கு மேலே மாடியில் உள்ள தொட்டியில் எட்டு காலன் தண்ணீர் நிரம்புகிறது. நீங்கள் வழியையா கடக்கிறீர்கள்? எனக்குத் தண்ணீர் நிரப்புகிறீர்கள்என்றார் அவர்.

 

நண்பர்கள் வியப்பு மேலிட விழுந்து விழுந்து சிரித்தனர்.

எதிலும் லாபம் எப்போதும் லாபம்; இப்படி ஒரு அபூர்வ விஞ்ஞானி!

*****************

தமிழ்ப் பழமொழிகள்: TAMIL- ENGLISH PROVERB BOOK -2 (First Part)

Compiled by London swaminathan

Post No.2219

Date: 6   October 2015

Time uploaded in London: 15-48

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

On 17th August I posted (Post No.2078) an old book with 108 Tamil proverbs and its English equivalents in this blog. Today I am posting another old book with 348 Tamil proverbs and their parallel proverbs in English:

 

Title of the Book: Parallel Proverbs in Tamil and English

Author of the Book: Ramaswami Ayyangar

Year of Publication: 1905

Contents: 348 Tamil Proverbs and 348 English Proverbs or phrases

Source: British Library, London.

Though it is over 100 years old, it is very relevant for today. We can use every proverb even today in our conversation.

Here are the book pages; please zoom in and enlarge and then read the pages.

In the first part I am posting only 10 பக்கங்கள்

IMG_2731

IMG_2732

பழமொழி: அச்சில்லாமல் தேரோடுமா?

பழமொழி: அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

பழமொழி: ஆனைவரும் பின்னே, மணி ஒசை வரும் முன்னே

பழமொழி: உயரவுயரப் பறந்தாலும்,  ஊர்க்குருவி  பருந்தாகுமா?

பழமொழி: ஐயர் வரும் வரைக்கும்    அமாவாசை காத்திருக்குமா?

தொடரும்………………………………………

எகிப்து, சுமேரியாவிலும் த்ருஷ்டி பொம்மை, கந்த சஷ்டிக் கவச வரிகள்!!

Drishti-Bomma

Research Article No. 2040

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 3  August  2015

Time uploaded in London : – 17-51

(This has been published in English already)

கந்த சஷ்டிக் கவசம் தெரியாத அல்லது கேட்டறியாத தமிழர்கள் இருக்க முடியாது.தேவராஜ சுவாமிகள் அருளிய இக்கவசம் மிகவும் சக்தி வாய்ந்தது. வட இந்தியாவில் இதே போல துளசிதாசர் இயற்றிய ஹன்மான் சாலீசா மிகவும் பிரசித்தமானது. இரண்டுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அனுமன் பெயரைச் சொல்லிய மாத்திரத்தில் பூதப் பிசாசுகள் நடுங்கி ஓடி விடும். அதே போல கந்த சஷ்டிக் கவசம் சொன்னால் பேய், பிசாசுகள், பில்லி, சூனியம் அண்டாது.

கந்த சட்டிக் கவசத்தில் வரும் வரிகள், பில்லி சூனியம் பற்றி மிகவும் விளக்கமாக விளம்புகிறது. இதே நம்பிக்கை பழங்கால எகிப்திலும் இருந்தது. மத்தியக் கிழக்கில் இப்பொழுது சிரியா, இராக் நாடுகள் உள்ள சுமேரியாப் பகுதியிலும் இருந்தது. இதற்கெல்லாம் மூலம், அதர்வண வேதம் அதன் பத்தாவது மண்டலத்தில் இந்த விஷயங்கள் வருகின்றன.  கேரளத்தில் இப்பொழுதும் மாந்த்ரீகச் சடங்குகள் நடக்கின்றன. நம்மூர் அரசியல்வாதிகள் கூட எதிரிகளை ஒடுக்கவோ, மடக்கவோ, ஒரேயடியாக ஒழிக்கவோ இத்தகைய “மிளகாய் யாகங்களை” நடத்துகின்றனர்.

வேத கால மக்கள் உலகெங்கிலும் பரவியபோது நல்ல விஷயங்களை எடுத்துச் சென்றது போலவே இது போன்ற “ஆபிசாரப் பிரயோகங்களையும்” எடுத்துச் சென்றனர்.

இங்கிருந்து போனதற்கு என்ன ஆதாரம்? ரிக் வேத கலம் முதல் இன்று வரை இது மட்டுமின்றி எல்லாச் சடங்குகளையும் நாம் மட்டுமே செய்து வருகிறோம். இடையில் வந்த கலாசாரம் என்றால் என்றோ மறைந்து போயிருக்கும்.

bes

எகிப்திய பேஸ்

இப்பொழுது என்னைப் பொன்றோர் லண்டனில் குடியேறி ஒவ்வொரு தலை முறையிலும் எப்படி பழைய வழக்கங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு வருகிறோமோ அப்படி ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் குடியேறிய இந்துக்கள் விட்டு விட்டனர். ஆனால் அவை அனைத்தும் எகிப்திய பபைரஸ் (பேப்பர்) தாளிலும், சுமேரியக் களிமண் பலகைகளிலும் பொறித்து வைக்கப்பட்டுள்ளன.

“பில்லி சூனியம்

பெரும்பகை அகல

……………………………….

ஆனை அடியினில் அரும் பாவைகளும்

பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்

நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்

பாவைகளுடனே பல கலசத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்

ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்

……………………………………………………………………..

இப்படி நாம் கவசம் சொல்லுகிறோம். விநாயக கவசத்தில் சுருக்கமாக மாரணம் என்ற ஒரு சொல்லில் இவை அடக்கப்படுவிட்டது. பில்லி, சூனியம், ஏவல் வைப்போர், இப்படி எதிரிகளின் வீட்டில் மயிர், எலும்பு, நகம், பொம்மைகள் ஆகியவற்ரைப் புதைத்து வைத்து அவர்களை ஒடுக்குவர். இதைத் தான் தேவராய சுவாமிகள் விளக்கமாகப் பாடியுள்ளார்.

bes in Louvre

எகிப்தில் பல சிலைகள் மூஞ்சி சிதைக்கப் பட்டுப் மூளியானதற்கு இத்தகைய சடங்குகள் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் எழுதி யுள்ளனர். ஒருவருடைய உருவத்தைச் செய்து அதன் மீது மந்திரம் ஏவி அதை உடைத்தால் அவர் அழிந்து போவார் அல்லது மனம் உடைந்து போவார் என்ற நம்பிக்கை உலகெங்கிலும் நிலவியது.

எகிப்தியர் கீழ்கண்ட முறைகளைக் கையாண்டனர்:-

1.சாபம் இடும் மந்திரங்களைச் சொல்லுவது

2.களிமண் அல்லது மெழுகு பொம்மைகளைச் செய்து, சில சடங்குகளுக்குப் பின்னர், அவைகளை உடைப்பது

3.துர் தேவதைகளை அழைத்து அவர்களுக்கு கெட்ட சொப்பனங்களை உண்டாக்கி பயமுறுத்துவது

4.ஐஸிஸ் என்னும் தேவதையைக் குறித்தே பெரும்பாலான உச்சாடனங்கள் சொல்லப் படுகின்றன. இதற்கு அடுத்தபடியாக பேஸ் என்னும் குள்ள தெய்வம் உதவி செய்யும். இது நல்லதுக்கும் பொல்லாததுக்கும் உதவும் விகடகவி, பபூன் போன்ற உருவமுள்ள தெய்வம். ஆண்குறி பெரிதாகக் காட்டப் பட்டிருக்கும். திருஷ்டி பொம்மை போல நாக்கு வெளியே தொங்கும். அதைப் போலவே அவலட்சணமாக இருக்கும்.  நன்மை, தீமைகளுக்கு உதவும் மாந்த்ரீக தெய்வம். நம் பண்பாட்டில் கணபதி விக்னங்களை உருவாக்கவும் செய்வார், உடைக்கவும் செய்வார் என்பது போல.

250px-Kanthristi

இது தவிர எகிப்தியர்கள் ஏராளமான வகை தாயத்துகளைப் பயன்படுத்தினர். மம்மி என்னும் சவங்களுடன் நிறைய தாயத்துக்கள் கிடைக்கின்றன. நாம் யந்திரத் தகடுகளில் எழுதி அதை தாயத்துக்குள் போட்டுக் கழுத்தில் தொங்க விடுவதுபோல எகிப்தியர், புதிய பபைரஸ் புல் காகிதத்தில் எழுதி அதை தாயத்தாக வைத்துக் கொண்டனர். நாம் சங்கரன் கோவில் முதலிய கோவில்களிலும் மாரியம்மன் கோவில்களிலும் உடல் உறுப்புகளை வெள்ளியில் செய்து காணிக்கை உண்டியலில் போடுவது போல எகிப்தியர்களும் செய்தனர். எனது முந்தைய ஆராய்ய்சிக் கட்டுரைகளில் இது போன்ற பல விஷயங்களைச் சொல்லி இருக்கிறேன். இந்த நம்பிக்கை கிரேக்க நாடு வரை சென்று பரவியது.

அதர்வ வேதம் பத்தாவது மண்டலம் சொல்லும் விஷயங்கலை தமிழ் மாறன் எழுதிய, “அதர்வ வேதம் அருளும் ஆனந்த வாழ்வு” (பக்கம்175-182) நூலில் காண்க.

hecate 2

கிரீஸ் நாட்டில்

வெளிநாட்டுக் காரர்கள் சரித்திரம் எழுதியபோது பிதகோரஸ், சாக்ரடீஸ், பிளாட்டோ ஆகியோரைக் காட்டி உலகில் மிகவும் முன்னேறிய மக்கள் கிரேக்கர்கள் என்று புகழ்ந்து வைத்துள்ளனர். அவர்களுடைய மூட நம்பிக்கைகளையோ, அட்டூழியங்களையோ பெரிதுபடுத்தவில்லை. ஏனெனில் உலகில் யாரும் அடிமைப்படுத்தாத சுதந்திர நாடு கிரேக்கம்.

ஆனாலங்கும் மேற்கூறிய எல்லா நம்பிக்கைகளும் இருந்தன. சாக்ரடீஸ் விஷம் அருந்தி சாவதற்கு முன்னர். ஆத்ம நண்பன் கிரீட்டொவை அழைத்து, குறிப்பிட்ட தெய்வத்துக்கு மறக்காமல் கோழியடித்துக் கும்பிட்டு விடு என்று சொல்லிவிட்டுச் செத்ததை முன்னரே எழுதி இருக்கிறேன்.அவர் சேவல்கோழி காணிக்கை செலுத்துவதாக வேண்டுதல் செய்திருந்தார்.

கிரேக்கர்கள் ஹெகதி என்னும் தெய்வத்தை முச்சந்திகளில் நிறுத்திவைத்து பேய் பிசாசு, துர் தேவதைகளுக்குப் பரிகாரம் செய்தனர். ஹெகதி என்பது சக்தி என்ற சொல்லின் திரிபு. நாம் முச்சந்திகளில் இரவில் போகப் பயப்பட்டது போல அவர்கள் முச்சந்திகளில் உணவு வைத்து வழிபட்டனர். அது நள்ளிரவில் முச்சந்திகளில் ஊளையிடும் நாய்களுடன் தோன்றும் என்று நம்பினர். இப்பொழுது எல்லா, எகிப்திய, சுமேரிய, கிரேக்க தெய்வங்களையும் மியூசியங்களில் காணலாம்.

ரிக் வேதத்தில் பூஷன் என்னும் தெய்வம் சாலைத் தெய்வமாகவும் , வழிப்போக்கர்களுக்கு உதவும் தெய்வமாகவும் போற்றப்படுகிறது.

pazuzu, british museum

சுமேரியப் பண்பாட்டில்

கண் திருஷ்டி விழுந்தால் கெடுதி என்ற நம்பிக்கை சுமேரியாவில் இருந்தது. நாம் வீட்டு வாசல்களிலும் கடை வாசல்களிலும் பூதம் போல, அவலட்சணமான ஒரு உருவத்தை வைக்கிறோம். அல்லது த்ருஷ்டி கழிய பூசனிக்காய் மீது வரைந்து தொங்க விடுகிறோம். சுமேரியர்கள் இதே போல பசசுஜு என்னும் அவலட்சண தேவதையை வாயில்களில் தொங்கவிட்டனர். போதாக்குறைக்கு பொன்னியும் வந்தாளாம் – என்பது போல அதை தாயத்தாகச் செய்து கழுத்திலும் மாட்டிக் கொண்டனர். அவர்களும் இந்துக்களைப் போல சாபங்கள் கொடுத்தனர். தீய சக்திகளை ஒழிக்க இரவு பூஜைகளைச் செய்தனர். அவர்களுடைய உச்சாடனங்கள், அதர்வ வேத மந்திரங்கள் போல இருக்கும்.

பெண்களை வசீகரிக்க மந்திரங்கள் வைத்திருந்தனர். இப்பொழுது வெளிநாடுகளில் காதலர் தின அட்டைகளில் ஒரு இருதயத்தை அம்பு (மன்மதன் மலர் அம்பு) துளைப்பது போல வரைந்து உலகெங்கிலும் பயன்படுத்துகின்றனர். இது அதர்வ வேத மந்திரத்தில் உள்ள வர்ணனை என்பதை முன்னொரு கட்டுரையில் தந்தேன். எல்லா உச்சாடனங்களையும், அதர்வ வேத மந்திரங்களையும் ஒப்பிட்டால் நாம்தான் மூலம்/ வேர் என்பது வெள்ளிடை மலை யென விளங்கும்.

எகிப்தில் பேஸ், சுமேரியாவில் பசுஜு. கிரேக்கர்கள் இவைகளின் பெயருக்கு இணையான கிரேக்க தெய்வங்களைச் சொன்னார்கள்.

pazzuzu assyrian

Source:

Dictionary of the Ancient Near East by British Museum

Ancient Egypt by David Silverman

Atharva Vedam (Tamil Book) by Tamilmaaran

Dictionary of World Myth by Roy Willis

Encyclopaedia of Gods by Michael Jordan

Pictures from various sources

pazuzu 3

பேய்களை விரட்ட வெண் கடுகு!!

Mustard-Seed

வெண் கடுகு (ஐயவி)ம், சாதாரணக் கடுகும்

Research Article No.1745; Date:- 24  March, 2015

Written by London swaminathan

Uploaded at London time  காலை 9-25

(வெண்கடுகு =  ஐயவி = பஜ = சினாபிஸ் ஆல்பா அல்லது பிராஸ்ஸிகா ஆல்பா = ஒயிட் மஸ்டர்ட்)

“ஆ சேது ஹிமாசல பர்யந்தம்” – என்று சம்ஸ்கிருத மொழியில் ஒரு மரபுச் சொற்றொடர் உண்டு. இமயம் முதல் குமரி வரை – என்பது இதன் பொருளாம். சேது என்று குமரி முனைக்கும் ஒரு பெயர் முன்பொரு காலத்தில் இருந்தது. இதை அங்குள்ள பிராமணர்கள் தங்களுடைய பூஜை புனஸ்கார சங்கல்ப மந்திரங்களில் சொல்லி வருகின்றனர். இமயம் முதல் குமரி வரை ஒரே கலாசாரம் நிலவியதை நாம் பல கட்டுரைகளில் கண்டோம். இப்பொழுது எனது ஆராய்ச்சியில் மேலும் ஒரு சான்று கிடைத்துளது. அது என்ன புதிய சான்று?

பேய்களை விரட்ட அதர்வண வேதத்தில் சொல்லப்பட்ட அதே வெண் கடுகுப் (ஐயவி) பொடியைத் தான் சங்க காலத் தமிழர்களும் பயன்படுத்தினர் என்பதை 3000 ஆண்டுக்கும் மேலான பழமை உடைய அதர்வண வேத மந்திரங்களும் 2000 ஆண்டுப் பழமையுடைய சங்கத் தமிழ் இலக்கியங்களும் செப்புகின்றன.

white mustard

வேதத்தில் காணப்படும் கற்புக்கரசி அருந்ததி, புனித இமய மலை, புனித கங்கை நதி, மான்கள் விளையாடும் இமய மலையில் வாழும் முனிவர்கள், ராஜசூய யக்ஞம், பருந்து வடிவ ஹோம குண்டம், ஏழு அடி நடந்து சென்று விருந்தினர்களை வழி அனுப்புதல், ஆறு வகைப் பருவங்கள், நால் வகைப் படைகள், அறம்-பொருள்-இன்பம் (தர்மார்த்த காம), எண்வகைத் திருமணங்கள், நான் மறைகள், கொடிகள், வெண் கொற்றக் குடை, இந்திரன் -வருணன் – சிவன் – விஷ்ணு- வாஹனங்கள், சகுனம், சோதிடம், வெள்ளி கிரகம்-மழை தொடர்பு- ஆகிய நூற்றுக்கணக்கான விஷயங்கள் அப்படியே புறநானூற்றிலும் தொல்காப்பியத்திலும் இருப்பதை ஆதாரங்களுடன் கண்டோம்.

ஆரிய-திராவிடப் பிரிவினை வாதம் பேசியவர்களுக்கு இவை எல்லாம் அடி மேல் அடி கொடுத்து, அந்த வாதங்களைப் ‘புல்டோசர்’ கொண்டு, பொடிப் பொடியாக்கிவிட்டது. இனியும் இப்படி ஆரிய திராவிட இன பேதம் பேசுவோரின் சவப் பெட்டியில் மேலும் ஒரு ஆணி அறைய இதோ புறநானூற்றுச் சான்று:—

white-yellow-mustard-

கடுகுச் செடி

பேய்களை விரட்ட எட்டு அம்ச திட்டம்:-

1.வேப்ப மர இலைகளை வீட்டில் சொருக வேண்டும்

2.வெண் (ஐயவி) கடுகைப் புகைக்க வேண்டும்

3.வெண் கடுகை (ஐயவி) நெய்யுடன் கலந்து அப்ப வேண்டும்

4.யாழ் இசைக்க வேண்டும்

5.ஆம்பல் குழல் ஊதவேண்டும்

6.மணி அடிக்கவேண்டும்

7.காஞ்சி பாட வேண்டும்

8.அகில் புகை போட வேண்டும்

இதோ பாடல்கள்:—

புண் படு குருதி அம்பு ஒடுக்கவும்

நீயே, ஐயவி புகைப்பவும் தாங்காது, ஒய்யென

உறுமுறை மரபின் புறம் நின்று உய்க்கும் (புற.98)

 

தீ கனி இரவமொடு வேம்பு மனைச் சொரீஇ

வாங்கு மருப்பு யாழொடு பல் இயம் கரங்க

கை பயப் பெயர்த்து மை இழுது இழுகி

ஐயவி சிதறி, ஆம்பல் ஊதி,

இசை மணி எறிந்து, காஞ்சி பாடி

நெடு நகர் வரைப்பில் கடி நறை புகை இ (புற.281)

 

வேம்பு சினை ஒடிப்பவும், காஞ்சி பாடவும்

நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும் (புற.296)

 

பொருள்:

 

போரில் காயம்பட்டுக் கிடக்கும் வீரர்களிடம் எமன் வராமல் இருக்கவும், பேய்கள் அண்டாமல் இருக்கவும், குழந்தை பிறந்த வீட்டில் குழந்தைக ளையும் பிள்ளை பெற்ற தாய்மார்களையும் பேய் கள் தாக்காமல் காக்கவும் வெண் கடுகு புகைப்பர் அல்லது நெய்யுடன் கலந்து அப்புவர்.

இதோ குழந்தை பெற்ற தாய்மார்கள் பற்றிய நற்றிணைப் பாடல்கள்:

புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச,

ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈரணிப்

பசு நெய் கூர்த்த மென்மை யாக்கைச்

சீர் கெழு மடந்தை ஈர் இமை பொருந்த (நற்.40)

 

நெய்யொடு இமைக்கும் ஐயவித் திரள் காழ்

விளங்கு நகர் விளங்கக் கிடந்தோட்குறுகி

புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த்து… (நற்.370)

 

பொருள்: நறுமணம் மிக்க மென்மையான படுக்கையில் செவிலித் தாயுடன் புதல்வன் உறங்க, சிறப்புமிக்க தலைவி வெண் சிறு கடுகு அணிந்த நெய்யாட்டு நிறைவேறிய அணிமைக் காலத்தில் நெய் விளங்கும் மெல்லிய உடம்போடு இரு இமைகளும் பொருந்தத் தூங்கினாள்……………..

நெய்யுடனே ஒளிவீசும் வெண் சிறுகடுகு முதலானவற்றைப் பூசி விளங்கிய நம் இல்லம் சிறப்புறுமாறு ஓய்ந்து படுத்திருந்தாள்…………….

திருமுருகாற்றுப் படை (228), மதுரைக் காஞ்சி ( வரி 287), நெடுநல்வடை (வரி 86) – ஆகிய சங்க நூல்களிலும் ஐயவி (வெண் கடுகு) பற்றிய குறிப்புகள் உண்டு. உரைகாரர்கள் எழுதிய உரைகளில் பேயை விரட்ட ஐயவி புகைக்கப்படுவது பற்றி விளக்கியுள்ளனர்.

Neem-flower

வேப்ப மரம்

அதர்வண வேத மந்திரங்கள்

அதர்வண வேதத்தில் கருச் சிதைவு நிகழாமல் இருக்கவும், கர்ப்பிணிப் பெண்களைப் பாதுகாக்க வும், கண்வ (2-25-3) எனப்படும் தீய சக்திகளை

விரட்டவும் வெண் கடுகு, ப்ரிஸ்னிபரணி மூலிகை கூறப்பட்டுள்ளது:–

கர்ப்பிணிகள் வெண் கடுகு தாயத்து உடலில் அணிய வேண்டும். தீய சக்திகள் உண்டாக்கும் கருச் சிதைவை இது அகற்றும் (அ.வே. 8-6-9)

தீய சக்திகள் இடுப்பு வலியை உண்டாக்கும் அல்லது கருவை விழுங்கிவிடும்.(8-6-23) குழந்தையை கருவிலோ பிறந்த பின்னரோ இறக்கச் செய்யும் தீய சக்திகள் (8-6-18);மலடித் தன்மை, குழந்தை இழப்பு ஆகியவற்றை வெண் கடுகு தடுக்கும் (8-6-26)

மேலும் ஆராய வேண்டும்!
கிட்டத்தட்ட 3000 ஆண்டுகளுக்கு மேலாக வடவிமயம் முதல் தென்குமரி ஈறாக —16 லட்சம் சதுர மைல் பரப்பில் —- கர்ப்பிணிப் பெண்களும் காயமடைந்தோரும் வெண் கடுகைப் பயன்படுத்தியதால் இதன் மருத்துவ குணங்களை விஞ்ஞான முறையில் ஆராய்வது பலன்  தரும். இதில் பாக்டீரியா தடுப்பு, வைரஸ் தடுப்பு சக்திகள் இருக்கும் என்றே நான் நம்புகிறேன்.

வாழ்க அதர்வண வேதம்! வளர்க சங்க இலக்கியம்!!

ஏழு எண்ணின் ரகசியம்: ரிக் வேதம் முதல் சிந்துவெளி வரை!

sapta mata - IVC
சப்த மாதாவுக்கு உயிர்ப் பலி தரும் சிந்து முத்திரை!

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1428; தேதி 22 நவம்பர், 2014.

எண்களில் மிகவும் புனிதமாகக் கருதப்படுவது ஏழு என்ற எண்ணாகும். நான் ஏற்கனவே எழுதிய எண் தொடர்பான கட்டுரைகளின் விவரங்கள் இறுதியில் உள்ளது. அந்தக் கட்டுரைகளையும் படிக்க வேண்டுகிறேன்.

சிந்து சமவெளி நாகரீகத்தில் எண் (7) ஏழும் எண் (3) மூன்றும் அதிகமாகப் பொறிக்கப்பட்டுள்ளன. இவ்விரு எழுத்துக்களும் இந்து மதத்தில் ஆன்மீக விஷயங்களில் மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. சிந்து சமவெளியில் ஏழு பெண்கள் நிற்கும் ஒரு முத்திரை ‘’சப்தமாதா’’ முத்திரை என்று அழைக்கப்படும். தமிழ்நாட்டில் பல கோவில்களிலும் சப்தமாதா சிலைகளை வரிசையாக வைத்திருப்பர். அது போலவே இந்த முத்திரையில் ஏழு மாதர்கள் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றனர்.

ARV_INDUS_12484f

ஏழு கோடு உடைய சீப்பு எழுத்து

இதே போல பாபிலோனியாவில் ஏழு அரக்கர்கள் வரிசையாக நிற்கின்றனர். ஆனால் ரிக் வேதத்தைப் பொறுத்த மட்டில் ஏழு என்பது நல்ல பொருளில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ரிக் வேதம் உலகின் மிகப் பழைய வேதம். யார் சிந்து சமவெளி பற்றி புத்தகம் எழுதினாலும் இந்த வேதத்தைக் குறிப்பிடாமல் புத்தகம் எழுத முடியாது. ஏனெனில் அதே பஞ்சாப் சமவெளியில்தான் வேதத்தின் முக்கியப் பகுதிகள் உருவாயின. சிந்து சமவெளி எழுத்துக்களைப் படிக்கையில் அது சரியா தப்பா என்று கண்டறிய ரிக்வேதம்தான் உதவ முடியும். ஆகையால் இதை அப்படியே காப்பது நம் கடமை.

வேதத்தில் ஏழு என்று வரும் இடங்களைக் கிழே உள்ள பட்டியலில் காணுங்கள்:
சப்த ரிஷிக்கள்
தீயின் ஏழு நாக்குகள்
சப்த சிந்து (ஏழு நதிகள்)
பிருஹஸ்பதியின் ஏழு வாய்
சூரியனின் ஏழு குதிரைகள்
ஏழு புனித இடங்கள்
ஏழு குருக்கள்
வானில் வசிக்கும் அசுரர்களின் 7 கோட்டைகள்
ஏழு புண்ய தலங்கள்
ஏழு புனித பாடகர்கள்
சூரியனின் ஏழு கிரணங்கள் (ஏழு வர்ணங்களில் கிரணம் விழும்)
ஏழு ஆண் குழந்தைகள்
எழு சூத்திரங்கள்
ஏழு சந்தஸ்கள்
ஏழு ஸ்வரங்கள்
விதை கருவில் உள்ள ந்ந்ழு சத்துப் பொருட்கள்
சப்த வத்ரி

சப்த வத்ரி என்னும் பெயருக்குப் பின் ஒரு கதை உண்டு. அவரை அவரது சகோதர்கள் தினமும் இரவு நேரத்தில் ஒரு அலமாரிக்குள் வைத்துப் பூட்டி விடுவர் என்றும் அவர் எந்தப் பெண்ணுடனும் குடும்ப உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என்பதே சகோதர்களின் நோக்கம் என்றும் இறுதியில் அவர் அஸ்வினி தேவர்களின் உதவியுடன் வெளியே வந்தார் என்றும் சொல்லுவர். இந்த சுவையான கதை அடையாளபூர்வ கதையாகும். அதாவது வறண்ட கோடையும் குளிரும் நீங்கி வசந்தகாலம் வருவதைக் குறிப்பதே இக்கதை. வேத கால ரிஷிகள் நாங்கள் மறை பொருளில்தான் பாடுவோம், பேசுவோம் என்று ஒரு மந்திரத்தில் கூறுவர். இதை அறிந்தே சங்க காலத் தமிழன் வேதங்களுக்கு ரஹசியம் (மறை) என்று பெயர் வைத்தான்.

InscriptH8205a_edited-1
சிந்துவெளியில் சீப்பு போன்ற எழுத்திலும் ஏழு கோடுகளைக் காண்க

சப்தகு என்று ஒரு வேத கால ரிஷி முனிவரும் உளர். இன்றும் சப்தரிஷி என்ற பெயர்களை நம் நண்பர்கள் இடையேயும் பார்க்கலாம். வான மண்டலத்தில் வலம் வரும் சப்தரிஷி மண்டல நட்சத்திரக் கூட்டத்தையும் அதில் வசிட்டருடன் இணபிரியாது நிற்கும் கற்புக்கரசி அருந்ததியையும் சங்க இலக்கியத் தமிழ் நூல்கள் ஆறு, ஏழு இடங்களில் விதந்து ஓதுவதையும் முன்னரே பல கட்டுரைகளில் கண்டு மகிழ்ந்தோம்.

பிராமணர்கள் தினமும் மூன்று வேளை செய்யும் சந்த்யாவந்தனத்தில் ஏழு ரிஷிகள் பெயரையும் சம்ஸ்கிருத யாப்பு இலக்கணத்தில் உள்ள ஏழு பெயர்களையும் சொல்லுவர். இது தவிர சப்தபதி, ஏழு கடல், ஏழு மலை, ஏழு நதி, ஏழு புனித நகரங்கள், ஏழு த்வீபங்கள் என்று ஏராளமாக ஏழு ஏழாக வகைபடுத்துவர்.

பிராமணர்கள் சந்தியாவந்தனத்தில் நாள்தோறும் சொல்லும் 7 ரிஷிகள்:
அத்ரி ப்ருகு, குத்ச, வசிஷ்ட, கௌதம, காஸ்ப, ஆங்கிரஸ ரிஷிகள்
பிராமணர்கள் சந்தியாவந்தனத்தில் நாள்தோறும் சொல்லும் 7 செய்யுள் இலக்கண அணிகள்:
காயத்ரி, உஷ்னிக், அனுஷ்டுப், ப்ருஹதி, பக்தி, த்ருஷ்டுப், ஜகதி
பிராமணர்கள் சந்தியாவந்தனத்தில் நாள்தோறும் சொல்லும் 7 வேத காலக் கடவுள்கள்:
அக்னி, வாயு, அர்க்க (சூரியன்), வாகீஸ (பிருஹஸ்பதி), வருண, இந்திர, விஸ்வேதேவா:

இதுதவிர மேல் ஏழு உலகங்களில் பூர், புவர், ஸ்வர் என்று சொல்லுவர். ஆனால் அதன் பொருள் அதற்கு மேலுள்ள மஹர், ஜன, தபோ, சத்ய லோகங்களையும் உள்ளடக்கியதாகும்.

babylon-8
ஏழு ராக்ஷசர்கள் — பூதங்கள், பாபிலோனியா

ராமபிரான் ஏழு மராமரங்களை ஒரே அம்பால் துளைக்கும் பரீட்சையில் தேறியது பற்றியும் அவருக்கு ‘’குட் –பை’’ — சொல்லும் போது விபீஷணன் நினைவுப் பரிசாக ஏழு தங்க பனைமரங்கள் பொம்மையைக் கொடுத்தது பற்றியும் ஏற்கனவே எழுதிவிட்டேன். இதே போல சங்கீத சப்தஸ்வர ரஹசியங்களையும் முன்னரே கண்டுவிட்டோம்.

திருமணத்தில் துவங்கும் சப்தபதி — ( ஏழு அடி நடந்து நட்பை உறுதி செய்து) — முதல் எல்லாவற்றிலும் ஏழு பிரதானம் ஆகும். கரிகால் சோழன் ரிக்வேதத்தில் சொன்ன படி எல்லோரையும் ஏழு அடி நடந்து சென்றுதான் வழியனுப்புவான் என்று சங்க இலக்கியம் செப்பும்:–

பால்புரை புரவி நால்குடன் பூட்டிக்
காலின் ஏழடிப் பின் சென்று கோலின்
தாறு களைந்து ஏறு என்று ஏற்றி வீறு பெறு
–பொருநர் ஆற்றுப்படை வரிகள் 165-167

‘’கரிகால் சோழனின் பருந்து வடிவ யாக குண்டமும் சங்க கால மன்னர் செய்த யாகங்களும்’’ — என்ற எனது 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதக் கட்டுரையில் இது பற்றி எழுதியுள்ளேன்.

bronze-bells
பாபிலோய ஏழு பூதங்கள்

வள்ளுவன் ஒருமைக்கண் கற்ற கல்வி எழுமைக்கும் (ஏழு பிறப்பு) பயன்படுவது பற்றி பாடிவிட்டான். ஆண்டாளோ எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் அடிமை என்று திருப்பாவையில் பாடுவாள். சிலப்பதிகாரத்தில் செங்குட்டுவனைச் சந்தித்து அவன் முன்னால் கான் விளை பரிசுப் பொருட்களைக் குவித்து வணங்கியபோது எங்கள் குலம் உனக்கு ஏழு தலைமுறைக்கு அடிமைப்பட்டது என்று பெருமைபடப் பேசுவர். ஏழு என்றால் மிகப் பல — பரிபூரணம் என்ற பொருளும் இவைகளில் தொனிக்கும்!

பாபிலோனியாவில் உள்ள ஏழு பூதங்கள் குறித்து 3000, 4000 ஆண்டு பழமையான பாடல்கள் உள்ளன. எந்தௌ ஆங்கிலக் கட்டுரையில் பாடல் முழுதும் உளது. சிந்து சமவெளி முத்திரைகளில் காணப்படும் புலி தேவதை, பேய் முத்திரை, கோமுக யக்ஷன் (ஆட்டு முக தக்ஷன் – தக்ஷன் செய்த யாகக் கதை — போன்ற முத்திரைகள்) ஆகியவற்றை சிந்து சம்வெளி முத்திரிகளுடன் ஒப்பிடுவது நலம் பயக்கும். ஆராய்ச்சியை புதிய திசையில் கொண்டு செல்லும்.
–சுபம்–

demon indus
Gods from Indus 5
சிந்துசமவெளி பூத பேய் முத்திரைகள்

எண்கள் பற்றி நான் எழுதிய முந்தைய கட்டுரைகள்

தமிழர்களின் எண் ஜோதிடம்(posted on 16th April 2012)
நீங்கள் நாலும் தெரிந்தவரா? (தமிழ் க்விஸ்)
Mystic No.7 in Music! (posted on 13th April 2013)
Numbers in the Rig Veda (posted on 3rd September2014)
Hindus’ Magic Numbers 18,108,1008! (posted on 26th November 2011)
Most Hated Numbers 666 and 13 (posted on 29th July 2012)
King and 8 Ministries in Vedic Period (posted on 28th May 2013)
Four Stages and Seven Ages of Man (posted on 21st March 2013)

contact swami_48@yahoo.com
babylon demon
பாபிலோனியய பூதம் – சிந்து சமவெளிப் புலிப் பெண் பூத முத்திரை போன்றது