Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
சுந்தர மூர்த்தி நாயனாருக்கு சிவபிரான் பொன் கொடுத்த வரலாறு!
ச.நாகராஜன்
சுந்தர மூர்த்தி நாயனார் சிவபிரானைத் தோழனாக நினைத்து வழிபட்ட ஒரு அபூர்வமான சிவ பக்தர்.
இவர் வாழ்வில் நடந்த திருவிளையாடல்கள் ஏராளம்! அனைத்தும் ஆச்சரியமூட்டுபவை.
ஒரு விளையாடல் இதோ:
பேரூர் உள்ளிட்ட மேல் கொங்கு நாட்டுத் தல வழிபாட்டை மேற்கொண்டார் சுந்தரமூர்த்தி நாயனார். அவருக்குப் பொன் கொடுக்கத் திருவுளம் கொண்டார் சிவபிரான் – விக்ருதேசுரர்! ஒரு முதிய அந்தணர் வேடம் பூண்டார் விக்ருதேசுரர்! மூத்த பிள்ளையார் முதலிய திருக்குமாரர்கள் பின் தொடர்ந்து வர, தினந்தோறும் உள்ளார்ந்த அன்புடன் தன்னைப் பூஜித்து வரும் ஒரு கிழமையுற்ற ஆய்மகளிடம் அவர் சென்றார். இந்தக் குழந்தைகளை ஈடாக வைத்துக் கொண்டு பொன் தர வேண்டுமென்று வேண்டினார் அவர். அதற்கு இசைந்த அந்தக் கிழ மாது அந்த முதிய அந்தணர் குறிப்பிட்ட அளவுக்குப் பொன் கொடுத்து உதவினாள். அதைப் பெற்றுக் கொண்ட அந்தணர் தன் முன்
திருப்பதிகம் பாடிய சுந்தர மூர்த்தி நாயனாருக்கு அந்தப் பொன்னைக் கொடுத்தருளினார்.
இந்த நிகழ்வு வெங்கால நாட்டில் நிகழ்ந்தது.
இதை திருவெஞ்சமாக் கூடற்புராணம் பாடிச் சிறப்பிக்கிறது.
இந்த அருமையான நிகழ்ச்சியைப் போற்றிப் பதிவு செய்கிறது கொங்கு மண்டல சதகம் தனது பத்தாம் பாடலில்!
கிழவே தியவடி வாகி விருத்தையைக் கிட்டியெந்தன்
அழகாகு மக்க ளடகு கொண் டம்பொ னருடியென்றேற்
றெழுகாத லாற்றமிழ் பாடிய சுந்தரற் கீந்தவொரு
மழுவேந் தியவிகிர் தேசுரன் வாழ்கொங்கு மண்டலமே
பொருள் :-
சுந்தர மூர்த்தி நாயனார்க்குப் பொன் கொடுக்க வேண்டும் என்று அருளுள்ளம் கொண்டு, மூத்த பிள்ளையார் உள்ளிட்ட திருக்குமாரர்களை ஈடு வைத்துப் பொன் பெற்று அதை ஈந்த விகிர்தேஸ்வரர் விளங்குவதும் கொங்கு மண்டலமே தான்!
(English version of this article is already posted in the blogs: swami)
பொன் என்றால் என்ன? தங்கமா? இரும்பா? ஐந்து உலோகங்களில் எதையும் பொன் என்று கூறலாமா?
பொன் என்றால் இரும்பு, தங்கம், ஐந்து உலோகங்களில் எதையும் குறிக்கலாம். இதனால்தான் கோவிலில் உள்ள சிலைகளை ஐம்பொன் சிலைகள் (பஞ்ச லோக) என்று கூறுகிறோம். தற்கலத்தில் பொன் என்றால் தங்கத்தை மட்டுமே நம் நினைத்துக் கொள்வோம். பொற்கொல்லர் என்பது தங்க வேலை செய்வோரை மட்டுமே குறிக்கும்.
திருக்குறளில் இரண்டு பொருள்களிலும் வள்ளுவர் பயன்படுத்துகிறார். “தூண்டில் பொன் மீன் விழுங்கியற்று” என்னும் இடத்தில் இரும்பு என்ற பொருளிலும், “சுடச்சுட ஒளிரும் பொன்” என்ற இடத்தில் தங்கத்தையும் நினைவுபடுத்துகிறார்.
இதேபோலத்தான் ரிக் வேதத்திலும் அயஸ் என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் வெளி நாட்டு அறிஞர்கள் அனைவரும் இதை இரும்பைக் குறிக்கும் என்றும், இரும்பு பற்றி பேசுவதால் வேத காலம் சிந்து சமவெளி நாகரிகத்துக்கு பிந்தைய நாகரீகமென்றும் பிரசாரம் செய்து வருகின்றனர். வேதத்திலேயே கறுப்பு அயஸ் (இரும்பு), சிவப்பு அயஸ் (செம்பு) என்ற சொற்களும் உண்டு. ஆக முதலில் அயஸ் என்ற சொல்லைத் தங்கத்துக்குக்கூட பயன்படுத்தி இருக்கலாம். பொன் என்ற சொல்லை தமிழர்கள் பயன்படுத்திவரும் முறையைப் பார்க்கையில் இது சாத்தியமே என்று தோன்றுகிறது.
“மா” என்றால் என்ன?
“மா” என்றால் மிருகம் என்று பொருள். இதை அரி+மா (சிங்கம்), பரி+மா (குதிரை), அசுண+மா (பாம்பு என்றும் வேறு ஒரு மிருகம் என்றும் கருதப்படுகிறது. ஆ+மா (காட்டுப் பசு), கல்லா+மா (குதிரை) என்ற பின் உறுப்புச் சொல்லாகப் பயன்படுத்துகின்றனர். அஸ்வ என்ற சொல்லும் இப்படி மா என்ற பொருளிலேயே துவக்க காலத்தில் பயன்படுத்தி யிருக்கலாம். “மா” என்ற தமிழ் சொல் தனியாக வரும் போது எப்படி இடத்தைப் பொருத்து பொருள் கொள்கிறார்களோ அப்படியே அஸ்வ என்பதற்கும் பொருள் கொண்டால் வேதத்தின் பழமை புலனாகும். ஆனால் மேலை நாட்டோர் எல்லா இடத்திலும் அஸ்வ என்பது குதிரையே என்று வாதிட்டு, சிந்து சமவெளியில் குதிரை இல்லாததால் வேத காலத்தை அதற்குப் பிந்தியது வாதிடுகின்றனர்.
துவக்க காலத்தில் அஸ்வ என்பது, ‘வேகம்’, ‘மிருகம்’ என்ற பொருளில் மட்டுமே பயன்படுத்தி இருக்கலாம். இது ஒரு புறமிருக்க சிந்து சம்வெளியில் குதிரை எலும்பு கிடைத்ததாகச் சொல்லுவோரும் சிந்துவெளி முத்திரைகளில் ஒற்றைகொம்புடன் காணப்படும் மிருகங்கள் குதிரையே என்று சொல்லுவோரும் உண்டு.
ஆக அஸ்வ, அயஸ் ஆகியன மிகப் பழங்காலத்தில் வேறு பொருள்களில் வழக்கில் இருந்ததாகக் கொண்டால் பல புதிய உண்மைகள் புலனாகும். வேதத்தில் வரும் சமுத்திரம் என்ற சொல்லை கடல் அல்ல ,வெறும் நீர் நிலையே என்று விதண்டாவாதம் செய்யும் மேலை நாட்டு அறிஞர்களும் உண்டு.
You must be logged in to post a comment.