Compiled by London Swaminathan.
Post No. 1133; Date: 27 June 2014
பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா என்றழைக்கப்படும் ஆதி சங்கரரின் துதி பற்றி பல கட்டுரைகள் எழுதினேன். அதில் இதுவரை வெளியாகாத சில விஷயங்கள் இதோ:-
ஆதிசங்கரர் எழுதிய ஒவ்வொரு துதியும் அற்புதமானது. அவைகளில் மிகவும் வியப்பான விஷயங்களைச் சொல்லும் ஒரு ஸ்தோத்திரம் பிரஸ்ன உத்தர (பிரஸ்னோத்தர= வினா விடை) ரத்ன மாலிகா.
இது ஒரு கேள்வி பதில் துதி. மஹா பாரதத்தில் உள்ள யக்ஷப் ப்ரஸ்னம் போல கேள்வி—பதில் பாணியில் அமைந்தது. மொத்தம் 67 ஸ்லோகங்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் 3, 4 கேள்விகளும் பதில்களும் இருக்கும். சுமார் 200 கேள்விகளை அவரே எழுப்பி அழகான பதில்களைக் கூறுகிறார்.
இதைப் படித்தால் என்ன கிடைக்கும் என்று முதல் பாட்டிலேயே கூறிவிடுகிறார். வாழ்க்கையில் நாம் எதிர் பார்க்கும் , மற்றும் எதிர்பாராத பலன்கள் கிடைக்கும், அதாவது தெரிந்த தெரியாத பலன்கள் கிடைக்கும்.
1. & 2. கொள்ளுவன எது? தள்ளுவன எது? என்பது கேள்வி.
ஒவ்வொரு பாட்டிலும் பல கேள்விகளும் அதற்கு ரத்தினச் சுருக்கமான பதில்களும் இருக்கும். இரண்டாவது பாட்டில் எதை எடுத்துக் கொள்ளவேண்டும்? என்று கேட்டதற்கு—- குரு வசனம், —-அதாவது குருவின் கட்டளை என்கிறார் சங்கரர்.
நாம் முதலில் வகுப்புக்குள் நுழைந்தவுடனேயே சொல்ல வெண்டிய ஸ்லோகம் “குருர் பிரம்மா, குருர் விஷ்ணோ”…………….. என்ற ஸ்லோகம் தான். எல்லோரும் அறிந்த ஸ்லோகம். குருவையே த்ரிமூர்த்திகளாக வணங்கும் ஸ்லோகம் அது. குரு என்பவர் ‘பிறவிப் பிணிக்கு மருந்து கொடுக்கும் டாக்டர்’ — என்று இன்னும் ஒரு ஸ்லோகமும் ( குரவே சர்வலோகானாம் பிஷஜே பவரோகினாம்) உண்டு. ஆகையால் அவர் சொல்லுக்கு அவ்வளவு மதிப்பு.
எதை விட வேண்டும்? என்பது அடுத்த கேள்வி.. தகாத—செய்யக் கூடாத செயல்களை விட வேண்டும். பாவம் உண்டாக்காத செயல்களைச் செய்தால் இந்த ஜன்மத்திலேயே சுகங்களை அனுபவிப்பர்.
தடை செய்யப்பட்ட செயல்கள் என்ன என்பதை பஞ்ச மா பாதகங்கள் விளக்கும்:- கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பொய் சொல்லுதல், ஏமாற்றுதல். சிறைச் சாலைக்குச் சென்றாலோ, பத்திரிகைகளில் வரும் குற்றச் செய்திகளை ஆராய்ந்தாலோ மேற்கூறிய ஐந்து வகைகளில் எல்லா குற்றவாளிகளையும் அடக்கிவிடலாம்.
(மூன்றாவது ஸ்லோக விளக்கம் 27-02-14 வெளியானது)
Sri Abhinava Vidya Thirtha Swami, Sri Sringeri Shankaracharaya (1917–1989)
4.அறிஞர்கள் உடனே செய்யவேண்டிய செயல் என்ன?
பிறப்பு இறப்பு என்னும் சுழலில் இருந்து விடுபடுவதே முதல் கடமை.
வள்ளுவனும் இதையே சொல்கிறான்.:
கற்றதனால் ஆய பயன் என்? (குறள் 2)
கடவுளைத் தொழுவதே கல்வியின் பயன் என்பான்.
ராமகிருஷ்ண பரமஹம்சர் இதை புரியும்படியான உவமையுடன் சொல்வார்: ஒரு ஊருக்குப் போகும் யாத்ரீகன் முதலில் ஒரு நல்ல விடுதியைப் பார்த்து அறைகளை ஏற்பாடு செய்துவிட்ட பின்னர்தான் ஊர் சுற்றிப் பார்க்கப் போவான். இதே போல இந்த உலகில் வந்த நாம் முதலில் இறைவனை உணர்ந்துவிட்டுப் பின்னர் சுகங்களை அனுபவிக்கலாம் என்பார்.
5. விடுதலை என்ற மரத்துக்கு விதை எது?
சரியான அறிவு (ஞானம்), அதைச் செயலில் காட்டும் பயிற்சி என்பது சங்கரரின் பதில்.
அந்தக் காலத்தில் பெரியோர்களை மெத்தப் படித்தவர், வேத வித்து, கல்வியில் கரை கண்டவர் என்றெல்லாம் அறிமுகப் படுத்திவைப்பர். அதாவது ஒருவரைப் படித்தவர் என்று சொன்னால், அதை வாழ்க்கையில் பின்பற்றும் ஒழுக்க சீலர் என்று பொருள். இந்தக் கால பள்ளிக்கூடம் முதல் பல்கலைக் கழக ஆசிரியர்கள் வரை யாரிடமும் ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியவில்லை. சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாக இருக்கிறது.
ஊருக்குதாண்டி உபதேசம் ,உனக்கில்லை என்ற பழமொழிக் கதையை நாம் அறிவோம். இப்பேற்பட்டவர்கள் யாரையும் முன்னேற்ற முடியாது.
லூயி பிஷர் என்பவர் காந்தி பற்றி எழுதிய கட்டுரையில், இவர் ஏன் பெரியவர் என்றால்
He preached what he practised and practised what he preached. Had he lived two thousand years ago in India, they would have built him a temple for him by this time.
பொருள்:– “அவர் (காந்தி) எதை உபதேசித்தாரோ அதை வாழ்க்கையில் பின்பற்றினார். அவர் எதை வாழ்க்கையில் பின்பற்றினாரோ அதைத்தான் மற்றவர்களுக்கும் உபதேசித்தார். அவர் மட்டும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் வாழ்ந்திருந்தால் இந்நேரம் இந்தியர்கள் அவருக்கு கோவிலே எழ்ப்பி இருப்பார்கள்” — என்று எழுதினார். ஆகையால் ஞானம், அதில் பயிற்சி இரண்டும் அவசியம்.
Sri Chandra Sekarendra Sarasvati, Kanchi Sri Sankaracharya (1894–1994)
உண்மைதான்! மனிதனும் தெய்வமாகலாம் என்பது இந்து மதத்தில் மட்டுமே உள்ள கொள்கை. தமிழ் ஹிந்து வள்ளுவன் இதை மிக அழகாகச் சொல்கிறான்:
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும் (குறள் 50)
–சுபம்–
You must be logged in to post a comment.