WRITTEN by London Swaminathan
Date: 29 JANUARY 2018
Time uploaded in London – 7-22 am
Post No. 4676
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
(என் வாசகர்கள் தமிழர்கள்; அதாவது நல்லவர்கள்; எல்லோரும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவர். ஆகையால் என் எழுத்துக்களைத் திருட மாட்டார்கள். எழுதியவர் பெயருடன் பகிர்வார்கள்; பிளாக் பெயரை நீக்க மாட்டார்கள்)
ஒரு ராஜாவிடம் ஒரு மந்திரி பணியாற்றினார். நாட்டில் எது நடந்தாலும் ‘எல்லாம் இறைவன் செயல்- எல்லாம் நன்மைக்கே’ என்று சொல்லி, சுருக்கமாகப் பேசி முடித்து விடுவார். ராஜாவுக்கு அவ்வளவு திருப்தி இல்லை. ஒரு முறை பழத்தை நறுக்கும் போது ராஜாவின் கை விரல் வெட்டுப்பட்டு விட்டது. மந்திரியிடம் காட்டி என்ன சிகிச்சை செய்யலாம்? என்று கேட்டார். அவர் “எல்லாம் நன்மைக்கே- எல்லாம் இறைவன் செயல்- அவனன்றி ஓர் அணுவும் அசையாது’ என்று பேச்சைத் துவங்கினார்.
அரசனுக்கு வந்ததே கோபம்! யார் அங்கே? இந்த அமைச்சரைக் கொண்டு சிறையில் அடையுங்கள் என்று உத்தவிட்டான். ராஜாவின் கட்டளைப்படி மந்திரியும் சிறையில் தள்ளப்பட்டார்.
வைத்யரை அழைத்தார். அவர் வந்து மூலிகைகளைக் கசக்கி சாறு பிழிந்து ஒரு கட்டும் போட்டார்.
நாட்கள் உருண்டோடின. ஒரு நாள், நாட்டு மக்கள் மன்னரைச் சந்தித்து முறையிட்டனர்:
“மன்னர், மன்னவா! எங்கள் கிராமங்களுக்குள் வன விலங்குகள் புகுந்து ஆடு, மாடுகளைக் கொன்று குவிக்கின்றன. தாங்கள் அவைகளை வேட்டையாடி எங்களைக் காப்பாற்ற வேண்டும்.”
இதைக் கேட்ட மன்னவன் புடை சூழ, படை சூழ வேட்டைக்குப் புறப்பட்டான். காட்டு விலங்குகளை வேட்டை ஆடினான். வழக்கமாக வரும் மந்திரியோ சிறையில் போடப்பட்டதால் பேச்சுத் துணைக்கு ஆள் இல்லை. எல்லோரையும் ஓய்வு எடுக்க சொல்லிவிட்டு ஒரு மரத்தடியில் போய்ப் படுத்தார். திடீரென்று ஒரு சிங்கம் அவர் மீது பாய்ந்தது. அவர் காயங்களின் மீதான கட்டுகளைக் குதறிவிட்டு, அவரைக் கொல்லாமல் போய் விட்டது. மன்னர் பயந்து நடுங்கி, தன் படை சூழ நாட்டுக்குத் திரும்பி வந்தான். சிறையில் அடைத்த அமைச்சரை அழைத்து இதற்கு என்ன விளக்கம் என்று கேட்டான்.
அவர் வழக்கமான பல்லவியை ஆரம்பித்தார்—“எல்லாம் நன்மைக்கே- எல்லாம் இறைவன் செயல்- ஆண்டவன் அருள்- நீங்கள் காயப்பட்டு இருந்ததால் சிங்கம் உங்களைச் சாப்பிடாமல் சென்றுவிட்டது. பொதுவாக சிங்கம் இறந்த விலங்குகளையோ காயம் அடைந்த விலங்குகளையோ உண்ணாது. ஆகையால் அது உங்களை விட்டது அதான்! நான் நீங்கள் விரல் வெட்டப்பட்ட அன்றே சொன்னேனே- எல்லாம் நன்மைக்கே என்று”.
உடனே அரசன் கேட்டான்: “அது சரி; நான் உங்களை சிறையில் அடைத்தேனே.அதுவும் நன்மைக்கோ!” என்று சொல்லி நகைத்தான்.
மந்திரி சொன்னார்
“ஆமாம்; அன்று நீங்கள் வேட்டைக்குப் போனபோது நான் மட்டும் அருகில் இருந்து இருந்தால் என் உடலைக் குதறி இருக்கும்; என் உடம்பில் காயம் ஏதும் இல்லாததால் என்னைச் சாப்பீட்டிருக்கும்.”
இந்தக் கதையை கிருபானந்த வாரியாரும் உபந்யாசங்களில் சொல்லுவார் –கொஞ்சம் மாற்றங்களுடன்.
அமைச்சர் சிறையில் இருந்த போது அரசன் மட்டும் வேட்டைக்குச் சென்றதாகவும், அவரை நரபலி கொடுக்கும் காபாலிகர் கடத்திச் சென்று காளிக்குப் பலிகொடுக்கும் முன், அவர் கைகளில் காயம் இருப்பதைப் பார்த்து விடுதலை செய்ததாகவும் சொல்லுவார். ஏன் எனில் காளிக்குப் பலி கொடுக்கும் உடல் சிறிதும் காயம் இன்றி இருக்க வேண்டும் என்பது காபாலிகரின் நம்பிக்கை!
எல்லாம் இறைவன் செயல் என்பதற்கு இது போல ஏராளமான கதைகள் உண்டு.
–சுபம்—
TAGS– எல்லாம் நன்மைக்கே, இறைவன் செயல், மந்திரி,
காபாலிகர், நரபலி
You must be logged in to post a comment.