சாணக்கியனின் புதிர்க் கவிதை! காலையில் சூது, மதியம் மாது, இரவில் களவு! (Post No.4557)
Written by London Swaminathan
Date: 28 DECEMBER 2017
Time uploaded in London- 6-46 am
Post No. 4557
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks
சாணக்கியன் ராஜ தந்திரி மட்டும் அல்ல; பொருளாதார நிபுணன் மட்டும் அல்ல; கவிஞனும் கூட! அவனது சாணக்கிய நீதியில் ஆங்காங்கு சில புதிர்க் கவிதைகளையும் பாடியுள்ளான்.
காலையில் சூதாடுங்கள்!
மதியம் பெண்களிடம் போங்கள்!
இரவில் திருடுங்கள்!
நல்ல போதனை ஐயா! போதையில் சொன்ன போதனையோ என்று எண்ணத் தோன்றுகிறதல்லாவா? மேலும் பார்ப்போம்.
சாணக்கிய நீதி, அத்தியாயம் 9, ஸ்லோகம் 11
ப்ராதர் த்யூதப்ரசங்கேன மத்யாஹ்னே ஸ்த்ரீ ப்ரசங்கதஹ
ராத்ரௌ சௌர்யப்ரசங்கேன காலோ கச்சதி தீமதாம்
பொருள்
புத்திசாலிகள்/ அறிஞர்கள் காலையில் சூதிலும் மதியத்தில் மாது (மகளிர்) இடத்திலும், இரவில் திருட்டிலும் பொழுதைக் கழிக்கின்றனர்.
இதன் பொருள் வியாக்கியானக்காரர்களின்றி நமக்கு விளங்காது. இதோ அவர்கள் பகரும் உண்மைப் பொருள்:-
த்யூதப் ப்ரசங்க என்பது சூதாட்டம்– காலையில் அறிஞர்கள் மஹாபாரதம் படிப்பார்கள்
*தமிழில் நாம் வழங்கும் சூது என்ற சொல் சம்ஸ்கிருத ‘த்யூத’ என்பதுடன் தொடர்புடையது. இரண்டு மொழிகளும் ஒரே மூலத்திலிருந்து வந்ததைக் காட்டும் ஆயிரக் கணக் கான சொற்களில் இதுவும் ஒன்று)
ஸ்த்ரீ ப்ரசங்க– என்பது பெண் பற்றியது; இங்கே பெண் என்பது உலக மஹா உத்தமி சீதையின் சரிதமான — ராமாயணத்தைக் குறிக்கும்; ஆகவே அறிஞர்கள் மதியத்தில் ராமாயணம் படிப்பார்கள் என்பது இதன் உண்மைப் பொருள்; ‘’ஸீதாயாஸ் சரிதம் மஹத்’’– என்பது ஆன்றோர் வாக்கு.
சௌர்ய ப்ரசங்க– என்பது திருட்டு பற்றியது; இது பாகவத புராணத்தைக் குறிக்கும். கிருஷ்ணனைவிட பெரிய திருடன் உண்டா? வீட்டில் வெண்ணை திருடினான்; காட்டில் கோபியர்களின் சேலைகளைத் திருடினான்; கும்பிடும் இடங்களில் எல்லாம் பக்தர்களின் உள்ளத்தைத் திருடினான்; மனம் கவர் கள்வன் அவன்; உள்ளம் கவர் செல்வன் அவன். ஆக, அறிஞர்கள் இரவு நேரத்தில் பாகவத புராணத்தைப் படித்து, போகும் வழிக்குப் புண்ணியம் தேடிக் கொள்வர்.
சாணக்கியனின் கற்பனையும் சொல்லும் நயமும் எல்லோர் மனதையும் வெல்லும்!
என் சொந்தக் கருத்து:–
கண்ணன் திருடிய கோபியர்களின் சேலைகள் எல்லாம் எங்கே போயிற்று? அவன் ஏன் அப்படித் திருடினான்? என்றால் எதிர்காலத்தில்
திரவுபதிக்கு உதவத்தான்! நூற்றுக் கணக்கானோர் முன்னிலையில் துச்சாதனன் அவிழ்க்கப் போகும் நேரத்தில் அவன் கை ஓயும் அளவுக்கு சேலை மழை பொழியவே கண்ணபிரான் திருடினான்!
வாழ்க சாணக்கியன் புகழ்; வளர்க கண்ணன் புகழ்!!
-சுபம்–