Written by எஸ்.நாகராஜன்
Research Article no. 1710; dated 12 March 2015
Up loaded at 9–28 London time
சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்
22. வரியை ஏய்க்க நினைத்தவன் கதை!
ச.நாகராஜன்
நியாயங்களின் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்:
घट्टकुटीप्रभातन्यायः
ghattakutiprabhata nyayah
கட்டகுடிப்ரபாத நியாயம்
காலை நேரத்தில் வரி வசூலிப்பவனின் குடிசை முன்னால் வருவது பற்றிய நியாயம் இது.
இந்த நியாயத்திற்கு அடிப்படையான கதை இது தான்:
ஒரு நாள் இரவு வீட்டை விட்டுக் கிளம்பிய ஒருவன் வரியைக் கொடுக்காமல் ஏய்ப்பதற்காக வரி வசூலிப்பவன் இருக்கும் குடிசை இருக்கும் வழியே செல்லாமல் சாமர்த்தியமாக மாற்று வழி ஒன்றில் செல்ல ஆரம்பித்தான். இரவெல்லாம் வழி நடந்த அவன், காலை நேரத்தில் தன் எதிரே இருக்கும் ஒரு குடிசைக்கு வந்து சேர்ந்தான். அது தான் வரி வசூலிப்பவனின் குடிசை.
எதைத் தவிர்க்க எண்ணி அவன் வேறு ஒரு வழியில் சென்றானோ அது பலிக்காமல் அதே இடத்திற்கு அவன் வந்து சேர்ந்தான்.
வரி கொடுக்காமல் ஏய்க்க முடியுமா, என்ன?
இன்றோ, நாளையோ ஏதோ ஒரு நாள் கொடுத்துத் தான் ஆக வேண்டும்.
வரியைக் கொடுத்தே ஆக வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டும் நியாயம் இது!
चित्रपटन्यायः
citrapata nyayah
சித்ரபட நியாயம்
சித்ரபடம் – ஓவியம்
ஓவியம் பற்றிய நியாயம் இது. ஒரு ஓவியத்தின் மதிப்பு அது பார்ப்பவரின் கண்களுக்கு குளுமையை ஊட்டுவதில் தான் இருக்கிறது.
ஒரு நல்ல அழகிய தோற்றம் உடையவன் வேறு குணநலன்கள் இல்லாமல் இருந்தால் அப்போது இந்த நியாயம் பயன்படுத்தப்படும்.
‘அவன் பார்க்கத் தான் நல்ல அழகு; வேறு எந்த வித குணங்களும் அவனிடம் இல்லை’, என்பதைச் சுட்டிக் காட்ட இந்த நியாயம் இது பயன்படுகிறது.
छत्रीन्यायः
chatri nyayah
சத்ரி நியாயம்
குடை பிடித்திருப்போர் பற்றிய நியாயம் இது.
ஒரு கூட்டத்தில் பலர் குடைகளைப் பிடித்து நின்று கொண்டிருக்கும் போது அந்தக் கூட்டத்தைப் பார்த்தால் அனைவருமே குடை பிடித்துக் கொண்டிருப்பது போலவே தோன்றும்.
ஒருவனுக்கு இருக்கும் சில குணநலன்கள் அவனுடன் சேர்ந்து இருக்கும் மற்றவருக்கும் இருப்பதாகச் சுட்டிக் காட்டப்படுவது வழக்கம். சேர்க்கையினால் ஏற்படும் நன்மையைச் சுட்டிக் காட்ட இந்த நியாயம் பயன்படும்.
जामात्रर्थंश्रपितस्य सूपादेरतिथ्युपकारकत्वम्
jamatrartham shrapitaasya supaderatithyupakarakatvam
ஜாமாத்ரர்தம் ஷ்ரபிதஸ்ய சூபாதேரதித்யுபகாரகத்வ நியாயம்
மாப்பிள்ளைக்காகத் தயாரிக்கப்படும் உணவு வகைகளைப் பற்றிச் சொல்லும் நியாயம் இது.
மாப்பிள்ளை வருகிறார் என்பதற்காக வீட்டில் பல உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் அவை மாப்பிள்ளைக்கு மட்டுமா பரிமாறப்படுகின்றன? சாப்பிட உட்காரும் அனைவருக்கும் பரிமாறப்படுகின்றன.
ஒரு விஷயம் சிறப்பாக ஒருவரை உத்தேசித்துச் செய்யப்பட்டாலும் கூட, அது மற்ற அனைவரையும் சேரும் போது இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும்.
तिर्यगधिकरणन्यायः
tiryagadhikarana nyayah
திர்யகதிகரண நியாயம்
பறவைகளின் கூடு பற்றிய நியாயம் இது.
பறவைகள் தங்கி வாழும் கூடுகள் பறவைகள் வசிக்க மட்டும் உதவுமேயன்றி மனிதர்கள் வசிக்கப் பயன்படாது.
ஒரு விஷயம் அனைவருக்கும் பயன்பட வேண்டுமென்றால் அது அப்படிப் பயன்படக்கூடிய சூழ்நிலையைக் கொண்டிருக்க வேண்டும். அப்போது தான் நினைத்த பயனை அது அனைவருக்கும் கொடுக்கும்.
இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இந்த பறவைக் கூடுகளின் நியாயம் சுட்டிக் காட்டப்படும்.
*****************
You must be logged in to post a comment.