மாயை என்றால் என்ன? காண்பிக்க முடியுமா? (Post No.9794)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9794

Date uploaded in London – 30 JUNE   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மாயை என்றால் என்ன? காண்பிக்க முடியுமா?

ச.நாகராஜன்

ப்ரஹ்மம் சத்யம் ஜகன் மித்யா என்றார் ஆதி சங்கரர். இது பற்றிய ஒரு சுலோகமும் உண்டு.

ஸ்லோக அர்த்தேன ப்ரவக்ஷயாமி யத் உக்தம் க்ரந்த கோடிபி: |

ப்ரஹ்மம் சத்யம் ஜகன் மித்யா ஜீவோ ப்ரஹ்மைவ நபர: ||

கோடி கிரந்தங்கள் சொல்வதை அரை சுலோகத்தில் சொல்கிறேன். ப்ரஹ்மம் சத்யம். ஜகம் பொய். ஜீவனே ப்ரஹ்மம். அதுவன்றி வேறல்ல.

ஆதி சங்கரரின் இந்த சுலோகத்தின் பொருளை ஜீரணிப்பது அவ்வளவு சுலபம் இல்ல. உலகம் பொய்யா? இதோ நான் காண்கிறேனே இந்த வீடு, இந்த மனிதர்கள், பறவைகள், மரங்கள் எல்லாம் பொய்யா?

ஏன், பாரதியாரே ஒரு பாடல் பாடி விட்டார் இப்படி:-

நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ?-பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே, நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ?-உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

வானகமே,இளவெயிலே,மரச்செறிவே,நீங்களெல்லாம்
கானலின் நீரோ?-வெறுங் காட்சிப் பிழைதானோ?
போன தெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ?-இந்த ஞாலமும் பொய்தானோ?

கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ?-அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்,
சோலை பொய்யாமோ?-இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?


காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்ப மன்றோ?
வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதில்லை
காண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம்.

இப்படிப்பட்ட கவி வாக்கை விட வேறு எப்படி நமது உணர்வுகளைக் கூற முடியும்? காட்சிப் பிழையோ? சொப்பனமா? தோற்ற மயக்கமா? காண்பது தான் சத்தியம் என்ற முடிவுக்கு வந்து விட்டோம்.

அப்படியானால் ஆதி சங்கரர் வாக்கு பொய்யா? ஒரு பெரிய அவதாரம் எதைச் சொன்னாலும் அந்த வார்த்தைகளில் பொருள் போய் ஒட்டிக் கொள்ளுமாமே! இதை சாஸ்திரம் அறுதியிட்டு உறுதி கூறுகிறது.

இதென்னடா, பெரிய சிக்கலாக இருக்கிறது. இது பொய்யா, அது பொய்யா, இல்லை இல்லை, இது மெய்யா, அல்லது அது மெய்யா?

இதே சந்தேகம் விவேகானந்தரின் அத்யந்த பக்தரான மன்மத் நாத் கங்கூலிக்கு ஒரு முறை வந்து விட்டது.

எல்லாம் மாயை தானா? என்று அவர் விவேகானந்தரைக் கேட்டார். அத்வைத சிங்கமான ஸ்வாமி விவேகானந்தர் உடனே ஆமாம், ஆமாம் அதில் என்ன சந்தேகம் என்று பதில் கூறினார்.

இல்லை, இதோ பார்க்கிறேனே, இவற்றை எல்லாம் எப்படி மாயை என்று கூற முடியும், விளங்கிக்கொள்ளவே முடியவில்லையே என்றார் சீடர்.

“உனக்கு என்னிடம் ஏதாவது கேட்க வேண்டுமா?”

“ஆமாம், மாயை என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும்.”

“அதை விட வேறு எதையாவது கேளேன்”

“ஊஹூம், வேறு எதுவும் தேவை இல்லை. மாயை பற்றித் தான் அறிய வேண்டும்”

‘அவசியம் தெரிந்து கொள்ள வேண்டுமா?

ஆமாம், ஆமாம், தெரிந்து கொண்டே ஆக வேண்டும்.

உடனே விவேகானந்தர் அவரை உற்றுப் பார்த்தார்.

“இதோ, பார், என்னைப் பார், நன்றாகப் பார்” என்றார் ஸ்வாமிஜி.

சீடர் அவரை உற்றுப் பார்த்தார். மாயைப் பற்றி அவர் பேச ஆரம்பித்தார்.

திடீரென்று எதிரில் இருந்த அனைத்தும் உருகிப் பொடிப் பொடியாக ஆரம்பித்தது. துகள் துகளாக.. இன்னும் சிறிய துகளாக, அதிர்வுகள், ஆனந்த நடனங்கள்.

வைப்ரேஷன்.. வைப்ரேஷன்.. வைப்ரேஷன்.

ஒன்றுமே தெரியவில்லை.

மன்மத நாதரால் தாங்க முடியவில்லை இந்தக் காட்சியை.

சில கணங்களில் அவரை விடுவித்தார் ஸ்வாமிஜி.

தன் இயல்பான நிலைக்குத் திரும்பிய சீடர் விக்கித்துத் திகைத்திருந்தார்.

பேச முடியவில்லை. ஒன்றும் புரியவில்லை.

“இப்போது தெரிகிறதா, மாயை என்றால் என்ன என்று உனக்கு?”

தலையை ஆட்டினார் அவர். மன்மத் நாத் கங்கூலி தனது இந்த அனுபவத்தை அப்படியே  எழுதி வைத்துள்ளார்.

அவரது அனுபவங்கள் வேதாந்த கேஸரி பத்திரிகையில் 1960ஆம் ஆண்டு

ஜனவரி மற்றும் ஏப்ரல் இதழ்களில் வெளியாகியுள்ளன.

உலகம் மாயை என்பதை நல்ல விசாரத்தின் மூலம் மட்டுமே தான் அறிந்து  கொள்ள முடியும். நான் யார், உலகம் என்ன? இப்படி நித்யா நித்ய விவேக விசாரம் செய்தால் நமது நிலை உயரும்.

அப்போது ப்ரஹ்மம் சத்யம் ஜகன் மித்யா என்ற அபூர்வமான பெறுதற்கு அரிய ஒரு நிலை பற்றி உணர முடியும்.

விவேகானந்தர் போன்ற மகான்களால் மட்டுமே இப்படி விளக்க முடியும். அதுவும் அந்த சீடர் அதிர்ஷ்டசாலியாக இருந்ததால் அவருக்க்கு இப்படி ஒரு அதிசய அனுபவம் கிடைத்தது!

சாஸ்திரமும் பொய்யில்லை; சங்கரர் வாக்கும் பொய்யில்லை.

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!!

****

Index

ஆதி சங்கரர் ப்ரஹ்மம் சத்யம் ஜகன் மித்யா

பாரதியார் பாடல் – நிற்பதுவே, நடப்பதுவே

மன்மத் நாத் கங்கூலி, விவேகானந்தரின் சீடர், மாயை பற்றி கேள்வி

ஸ்வாமி விவேகானந்தர் மாயை பற்றி விளக்கம்

விவேக விசாரம்

tags- – விவேகானந்தர், மாயை, 

தூக்கம் வராத நான்கு பேர் யார்?

sleepless

Wriiten by S Nagarajan
Post No.1165; Dated 11th July 2014

This is the eighth part of S Nagarajan’ article from his Tamil book “Honey Drops from the Puranas”. First seven parts were published in this blog.

சுகருக்கு ஜனக ராஜன் கூறிய ரகசியம்!

ஜனக மஹராஜனை சுகர் அவனது அரண்மனைக்கு வந்து சந்திக்கிறார். அப்போது அவரிடம் ஜனக ராஜன் கூறியது:-

சுகரே! இந்திரியங்கள் வலுப் பெற்றிருக்கும் காலத்தில், அதை அடக்குவது ஒருவராலும் முடியாது.அது அசாத்தியம். இந்திரியங்கள் பரிபாகம் இல்லாதவனைத் தாம் செல்லும் வழியில் எல்லாம் ஈர்த்து ஆசையை எழுப்பி, அறிவை ஆகர்ஷித்துக் கொண்டு பல விதமாகக் கெடுத்து விடுகின்றன. எப்படி என்றால், ஆகாரத்தின் மீதுள்ள ஆசையினாலும் சுகத்தின் மீதுள்ள இச்சையினாலும், சயனத்தின் மீதுள்ள ஆசையினாலும் எண்ணம் உண்டாக்கிக் கெடுக்கின்றன. ஆகையால் இந்திரியங்களை வைத்துக் கொண்டு சந்யாசியாக சென்றால் பயன் என்ன?

பிராரப்த வாசனா பலத்தை ஜெயிப்பது என்பது பெரும் கஷ்டம். அது ஒருபொழுதும் சமனம் அடைகிறதில்லை.ஆதலால் வரிசையாக ஒவ்வொரு ஆசிரமத்திலும் ஈடுபட்டு அவைகளைப் பற்று அறத் துறக்க வேண்டும்.

சுகரே! உன்னதமான பிரதேசத்தில் தூங்குபவன் கொஞ்சம் சலிப்பை அடைவானாயின் கீழே வீழ்ந்தே தீருவன். கீழே தூங்குபவன் எவ்வளவு சலித்தாலும் விழ மாட்டான். அது போல சந்நியாச ஆசிரமத்தை அடைந்த பின் சபல புத்தி உண்டாகுமானால் அதிலிருந்து நழுவி விடுவான். மீண்டும் அவன் ஈடேற வழியில்லை.

சுகரே! எறும்புகள், பழமுள்ள ஒரு மரத்தில் அண்டி மெல்ல ஊர்ந்து உச்சியில் ஏறி சுவையுள்ள கனிகளைச் சிறிது சிறிதாகச் சாப்பிடுகின்றன. பறவைகளோ அக்கனிகளைச் சாப்பிடுவதற்கு வேகமாய் ஒரே பாய்ச்சலில் கனிக்குச் சமீபத்தில் சென்றும் கூட அங்கு நேரிடும் சில இடையூறுகளினால் மொத்துண்டு சிரமப்பட்டும் பயனற்றுப் போகின்றன. எறும்புகளோ அப்படியன்று. அங்கங்கு சிரமத்தைப் பரிகாரம் செய்து கொண்டும் யாதொரு இடையூறில்லாமலும் அந்தப் பழங்களை அனுபவிக்கின்றன.

ஆதலால் எவருக்கும் மனத்தை வெல்ல முடியாது. ஏனென்றால் மனத்தைக் காலம் விடாது. ஆதலால் அந்த மனத்தை ஆசிரமம் தோறும் சிறிது சிறிதாக அடக்கி வர வேண்டும். சாந்தனாயும், ஞானவானாயும், ஆத்ம விசாரமுடையவனாய் உள்ள புருஷன் கிருஹஸ்த ஆசிரமத்தில் இருப்பவனாயிருந்தபோதிலும் இலாபத்தில் சந்தோஷமும் நஷ்டத்தில் துக்கமும் அடைய மாட்டான்.இவ்விரண்டிலும் சமபுத்தியை உடையவனாக இருப்பான்.

ஆதலால் எவனாயினும் வேதத்தில் விதித்த கர்மங்களைச் செய்து அதன் பலனை விரும்பாமல் ஈசுவர அர்ப்பணம் செய்கின்றானோ அவன் ஆத்மானுபவத்தை அடைந்து ஆனந்தமூர்த்தியாய் சம்சார பந்தத்த்திலிருந்து விடுபடுவான். இதில் சந்தேகமில்லை.

என்னைப் பாரும், யான் ராஜ்ய பரிபாலனம் செய்துகொண்டு, யதேச்சையாக சஞ்சரித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஒன்றிலும் சுகம் துக்கம் என்பது சிறிதுமில்லை. அப்படி பற்றற்று இருக்கின்றமையால் ஜீவன் முக்தனாய் இருக்கிறேன்.

– தேவி பாகவதம் முதலாம் ஸ்கந்தத்தில் 18ஆம் அத்தியாயம் – சுக ஜனக சம்வாதம்
பல ரகசியங்களை விளக்கும் அற்புதமான இந்த உரையாடல் தொடர்கிறது.

Exif_JPEG_PICTURE
Trimurti at Ellora Caves

மும்மூர்த்திகளும் ஒருவரே!

ஏக மூர்த்திஸ்த்ரயோ தேவா: ப்ரஹ்மா விஷ்ணு மஹேஸ்வர: I
த்ரயாணாமந்தரம் நாஸ்தி, குணாபேத:ப்ரகீர்தித: II

ப்ரம்மா, விஷ்ணு,,சிவன் – ஆகிய இந்த மூன்று தேவர்களும் ஒருவரே. இந்த மும்மூர்த்திகளின் ஸ்வரூபத்தில் ஒரு விதமான பேதமும் இல்லை. குணங்களில் மட்டுமே பேதம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
-பத்ம புராணம், பூமி கண்டம், அத்யாயம் 71

மெதுவாகச் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!

சில விஷயங்களில் நிதானம் தேவை. மெதுவாகச் செய்ய வேண்டிய காரியங்களை ‘சனை: கர்தவ்யானி’ (மெதுவாகச் செய்யவேண்டியவை) என்று குறிப்பிடுவர். கருட புராணம் தரும் அறிவுரை இது:

வித்யா – கல்வி கற்பது
அர்த்தா – செல்வம் சேகரிப்பது
பர்வதாரோஹணா – பர்வதம் அதாவது மலையில் ஏறுவது
தர்மா – தர்மம்
காமம் – காமம்
ஆக இந்து ஐந்து விஷயங்களிலும் அவசரம் கூடாது
இதைக் கூறும் கருட புராண ஸ்லோகம் இது:

சனைர்வித்யா சனைர் அர்த்தா சனை: பர்வதமாருஹேத் I
சனை: காமம் ச தர்மம் ச பஞ்சதானி சனை: சனை: II

கல்வியில் மெதுவாக முன்னேறு. பொருள் சேகரிப்பதில் மெதுவாக முன்னேறு. மலை மீது ஏறுவதை மெதுவாகச் செய். காமத்திலும், அதே போல தர்மம் செய்வதிலும் மெதுவாகச் செய்! இந்த ஐந்து விஷயங்களையும் மெதுவாகவே செய்ய வேண்டும்.
-கருட புராணம் 109ஆம் அத்தியாயம் 46ஆம் ஸ்லோகம்

goddess-bhuvaneswari

மாயைக்கு மருந்து

உலகமெல்லாம் மாயா சொரூபமாய் இருக்கிறது. பரமேஸ்வரி அம்மாயா சொரூபமான உலகத்திற்கு எஜமானியாக இருக்கிறாள். ஆதலால் மூன்று லோகத்தாராலும் சுந்தரமான தேவியே புவனேஸ்வரி என்று சொல்லப்படுகிறாள்.

ஓ! அரசனே! மனம் புவனேஸ்வரி ரூபத்தில் சம்பந்தித்து இருக்குமாயின் இந்த சம்சாரத்தில் சதசத்ரூபமான மாயை என்ன செய்யும்? ஆதலால் மாயையை ஒழிப்பதற்குச் சதானந்தரூபியான தேவியைத் தவிர வேறொரு தேவதாந்தரங்கள் சக்தி உள்ளனவல்ல. தமோராசியை நாசம் செய்வதற்கு தமசே காரணமாக மாட்டாது. சூரியன், சந்திரன், அக்னி, மின்னல் இவைகளுடைய காந்தியல்லவோ இருளைப் போக்கடிக்க வல்லமை உள்ளவை. ஆதலால் சம்வித்ரூபமாய்த் தானே பிரகாசித்துக் கொண்டிருக்கிற மாயேஸ்வரியான அம்பிகாதேவியை மாயையைக் கழிப்பதற்காக மிகப் பக்தியோடு பூஜிக்க வேண்டும்.

-வியாஸ முனிவர் ஜனமேஜய மஹராஜனிடம் கூறியது
– தேவி பாகவதம், ஆறாம் ஸ்கந்தம், 36ஆம் அத்தியாயம்.

Awaken man

தூக்கம் வராத நான்கு பேர்!

நான்கு பேர்களுக்குத் தூக்கம் வராது என்று கூறுகிறது கருட புராணம்.
1) தரித்ரன் – ஏழ்மையில் வாடுபவனுக்குத் தூக்கம் வராது.
2) பரப்ரேஷ்ய சர – (சர என்றால் ஒற்றன் என்று பொருள்) அயல் தேசத்தில் உளவு பார்க்கச் சென்ற ஒற்றன்
3) பர நாரி ப்ரசக்த – அடுத்தவன் மனைவி மீது காதல் கொள்பவன்
4) பர த்ரவ்ய ஹர: – அடுத்தவன் பொருளை அபகரிக்கும் திருடன் ஆகிய இவர்களுக்கு நித்திரை வராது.

குதோ நித்ரா தரித்ரஸ்ய பரப்ரேஷ்யசரஸ்ய ச I
பரநாரிப்ரசக்தஸ்ய பரத்ரவ்யஹரஸ்ய ச II

– கருட புராணம் 115ஆம் அத்தியாயம் ஸ்லோகம் 68

To be continued………………………..