வேதத்திலும் ஆழ்வாரிலும் கருப்பு, சிவப்பு! (Post No.4063)

Written by London Swaminathan
Date: 8 July 2017
Time uploaded in London- 22-29
Post No. 4063

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

வேத மந்திரங்களில் பெரும்பாலும் மித்ரனையும் வருணனையும் சேர்த்தே சொல்லுவர். உலகம் என்பது நேர்மறை, எதிர்மறை சக்திகளையுடையது. பூமி என்னும் காந்த மண்டலத்திலும் வட துருவம், தென் துருவம் என்று இருக்கும். மின்சாரத்திலும் பாஸிட்டிவ், நெகடிவ் அம்சங்கள் உண்டு. அப்பொழுதுதான் அது பூர்த்தியாகும். சம்ஸ்கிருதத்தில் இதை த்வந்த்வம் (இருமை) என்பர். பிறப்பு, இறப்பு, சீத, உஷ்ணம் பகல், இருள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

Image of Varuna (sea)

வேதத்தில் வருணன் என்பது இருளையும், கரு நீலக் கடலையும், குளிர்ச்சியையும் குறிக்கும். வேத மந்திரங்கள் இதைத் தெளிவாகக் கூறும்.

மித்ரன் என்பது பல பொருள்களில் வழங்கப்பட்டாலும் சூரியன் என்பதே அதிகம் புழங்கும் அர்த்தம்.

 

சூர்ய நமஸ்கார மந்திரங்களில் முதல் மந்திரம் மித்ராய நம: என்பதாகும்.

 

அர்த்த நாரீஸ்வர உருவத்திலும் உமையை கருப்பாகவும் சிவனை சிவப்பாகவும் காட்டுவர். சங்கர நாராயண உருவத்திலும் சிவனை சிவப்பாகவும் விஷ்ணுவை கார்மேனி வண்ணனாகவும் காட்டுவர். இவை அனைத்திலும் உள்ள பொருள் ஒன்றுதான். ஆக்க சக்தி அழிவு சக்தி இரண்டும் நிறைந்ததே இயற்கை. சிவனின்றி சக்தி இல்லை; சக்தி இன்றி சிவனில்லை.

 

ஆண் முதலில் தோன்றினானா? பெண் முதலில் தோன்றினாளா? என்ற கேள்விக்கு விடை காண முடியாது; ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை. இதை உணர்த்துவதே வேதங்களில் வரும் மித்ர- வருண ஜோடி.

 

என்ன அதிசயம் என்றால் கி.மு.1400 வாக்கில் கையெழுத்திடப்பட்ட துருக்கி-சிரியா (Mitanni Treaty) பகுதி ஒப்பந்தத்திலும் மித்ர-வருணர்கள் உள்ளனர். இதனால் வேதங்களை எவரும் கி.மு 1400-க்கும் முன்னர்தான் வைக்க முடியும்.

Image of Mitra (sun)

பொய்கை ஆழ்வார் முதல் மூவரில் ஒருவர். அவரும் இதே கருப்பு-சிவப்பு தத்துவத்தைப் பாடுகிறார்:-

 

அரன் நாரணன் நாமம்; ஆன்விடை புள் ஊர்தி;

உரைநூல் மறை; உறையும் கோயில்- வரை,நீர்

கருமம் அழிப்பு, அளிப்பு; கையது வேல் நேமி

உருவம் எரி கார்மேனி ஒன்று

 

நாமம்/பெயர்– சிவன், நாராயணன்

 

வாகனம் – ரிஷபம், கருடன்

நூல்கள் – ஆகமம், வேதம்

வசிப்பிடம் – மலை, கடல் (கயிலை, பாற்கடல்)

தொழில்/கருமம் – அழித்தல், காத்தல்

ஆயுதம் – திரிசூலம், சக்ராயுதம்

உருவம் – அக்கினிப் பிழம்பு, மேகத்தின் கருப்பு

ஆனால் உடல் ஒன்றுதான் (சங்கர நாராயணன், அர்த்த நாரீ)

இதைத் தான் வேதம் மித்ர-வருண என்று சேர்த்துச் சொல்கிறது.

இந்த பெரிய இயற்கை நிகழ்வை, விஞ்ஞான உண்மையைச் சொல்வதால் வேதத்தை என்றுமுள்ள சத்தியம் என்கிறோம்.

 

விஞ்ஞான உண்மைகளை நாம் கண்டுபிடித்தாலும் கண்டுபிடிக்காவிட்டாலும் அவை என்றும் இருக்கும் அழியாது— நியூடனும் ஐன்ஸ்டைனும் இல்லாவிட்டாலும் அந்த உண்மைகள் இயங்கிக் கொண்டே இருக்கும். வேதகால ரிஷிகள் தன் அருட் பார்வையால் மித்ர– வருணனை நமக்குக் கண்டுபிடித்துக் கொடுத்தனர். அவர்கள் கண்டுபிடிக்காவிடிலும் வேத உண்மைகள் வானில் முழங்கிக் கொண்டே இருக்கும்.

ஏனெனில் வேதங்கள் சத்திய மானவை; நித்தியமானவை.

 

—சுபம்–

 

ரோம் நகரில் 700 மித்ரன் கோவில்கள்!

vatican mithra
Mithra in Vatican Museum

தொகுத்து வழங்குபவர்- கட்டுரை மன்னன் லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்..1311; தேதி- 26 செப்டம்பர் 2014

லண்டன் நகரில் இருந்து வெளிவரும் ‘டெய்லி டெலிகிராப்’ (Daily Telegraph) பத்திரிக்கையில் சில நாட்களுக்கு முன் ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது. லண்டனில் 60 ஆண்டுகளுக்கு முன் மித்ரனென்னும் தெய்வத்தின் கோவில் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை உண்டாக்கியதன் அறுபதாவது ஆண்டு தின நினைவாக (60th Anniversary) இக்கட்டுரை வெளியானது. அதில் கண்ட வியப்பான, சுவைமிகு தகல்களை மேலும் மூன்று என்சைக்ளோபீடியா தகவல்களுடன் தொகுத்து அளிப்பேன்.

பிரிட்டனை ரோமானியர்கள் 400 ஆண்டுக்காலம் ஆண்டனர். ஆகையால் முதல் 4 நூற்றாண்டுகளைச் சேர்ந்த சின்னங்கள் லண்டனில் ஆண்டுதோறும் கிடைத்து வருகின்றன. சென்ற ஆண்டு மட்டும் 10,000 ரோமானியப் பொருட்கள் கிடைத்தன. இதில் 250 ஜோடி தோல் (Leather Shoes) செருப்புகள், மட்பாண்டங்கள், கோப்பைகள், தட்டுகளும் அடங்கும். ரோமானியரின் ஒரு சின்னமான கழுகும் அதன் வாயில் பாம்பும் உடைய (Eagle and Snake) ஒரு கற்சிலையும் அண்மையில் கிடைத்தது.

மித்ரன் யார்?

மித்ரன் (Vedic God Mitra) என்பது வேத காலத்தில் வழங்கப்பட்ட ஒரு தெய்வம். வியப்பான விஷயம் என்ன வென்றால் இன்றும் பிராமணர்கள் நாள்தோறும் செய்யும் சந்தியா வந்தனத்தில் இந்த தெய்வத்தை வழிபடுகின்றனர். சூரிய நமஸ்காரம் செய்வோர் சொல்லும் முதல் மந்திரம் “ஓம் மித்ராய நம:”. மித்ரன் என்ற சொல்லுக்கு சூரியன், ஒப்பந்தம், நண்பன் (Sun, Contract, Friend) என்ற பொருள் உண்டு. விஷ்ணு சர்மா எழுதிய பஞ்ச தந்திரக் கதைகளில் ஒரு தந்திரம் மித்ர பேதம் என்பதைப் பலரும் அறிவோம்.

mithraeum in Rome hidden

Mithra hidden underground in Rome.

இதை எல்லாம் விட வியப்பான விஷயம் மித்ரன் பொறித்த களிமண் பலகைக் கல்வெட்டு சிரியா- துருக்கி ஆகிய முஸ்லீம் நாட்டு பிதேசத்தில் கிடைத்ததாகும். கி.மு. 1380 ஆண்டில் மிட்டனிய (Mittanian) வம்ச அரசன் ஒருவன் பக்கத்து நாட்டுடன் சமாதான நட்புறவு ஒப்பந்தம் செய்து கொண்டான். மிட்டனிய வம்சம் வேத கால இந்துக்கள் ஆவர். அவர்கள் மித்ரன், வருணன், இந்திரன், நாசத்யர்கள் (அஸ்வினி தேவர்கள்) பெயரில் சத்தியப் பிரமாணம் செய்து சமாதான ஒப்பந்தம் நிறைவேற்றினர். ஆகவே 4000 ஆண்டுகளாக மித்ரன் வழிபாடு நடக்கிறது!!!

மித்ரன், காலை நேர தெய்வம், வருணன், இரவு நேர தெய்வம். நம்மை எல்லாம் சூரியன், சந்திரன் போல எப்போதும் கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள். நல்லாட்சியை மலர வைப்பதும் தீயோரை நையப் புடைப்பதும், விதிகள் (ருதம்) ஒழுங்கு, கட்டுப்பாடு ஆகியனவற்றைச் செயல் படுத்துவதும் இவர்கள்தம் பணி என்று வேதங்கள் முழங்குகின்றன.

சில விஞ்ஞானிகள் பாசிட்டிவ், நெகட்டிவ் (Positive & Negative energy) என்ற இருவகை சக்திகளையே இந்துக்கள் மித்ர—வருண என்று சொன்னார்கள் என்பர். ஏனெனில் வேதத்தில் மித்ர—வருணன் என்று ஜோடியாகவே சொல்லுவர். பிரித்துச் சொல்வது அபூர்வம்.

mithraeum-san-clemente-8966p40
Mthra temple under San Clementine church.

ரோமானிய மித்ரன்

ரோமானிய படை வீரர்கள் இடையே 2000 ஆண்டுகளுக்கு முன்னரே மித்ரன் (Mithras) வழிபாடு பரவிவிட்டது. இவர்கள் ஏது காரணத்தினாலோ மித்ரன வழிபாட்டை ரகசியக் காப்பு பிரமாணத்தோடு, பாதாள குகைகளிலும், அறைகளிலும் நடத்தினர். ஒரு நேரத்தில் ரோம் நகரில் மட்டும் 700 மித்ரன் கோவில்கள் இருந்தன. ரோமானிய மித்ரன், ஈரான் வழியாக வந்த மித்ரன் என்பதால் பாரசீகக் குல்லாயைக் காணலாம். பாரசீக மித்ரன், (Azura Mazda) அசுர மஸ்தாவுடன் சேர்ந்தவன் இவர்கள் மித்ரன், ஒரு காளை மாட்டை கொல்லுவது போல சிலைகள் வடித்துள்ளனர். இதுவே ரோமாபுரி முழுதும் காணக்கிடக்கும். இந்தக் காளையைக் கொல்லும் சின்னம் வானியல் தொடர்பான சின்னமாகும். உண்மையில் காளை வதை அல்ல.

ரோமானியர், காளையை பலியிட்டு வணங்குவர். ஆயினும்அக் காளை வழிபாடு வேறு ஒரு பெண் தெய்வத்துகானதாகும்.

mithraism-carvings-ancient-rome

பாரசீக (ஈரான்) மித்ரன்

பாரசீக நாட்டில் வாழ்ந்த சொராட்ஸ்ரர் (Zoroaster) இந்தியாவின் குஜராத்/சௌராஷ்ட்ர (Saurashtra= Zoroastra) மாநிலத்தில் இருந்து சென்றவர் என்பது காஞ்சி மஹாபெரியவரின் கணிப்பு. அவரது காலமும் கி.மு.800-ஐ ஒட்டியதே. . அவர் வேதத்தின் ஒரு பகுதியை தலை கீழாக மாற்றி வைத்துக் கொண்டார். வேதம் அசுரன் என்று சொன்னால் அவர் தேவர் என்பார். ஆயினும் அவர்களும் தீயை வழிபடுவர், பூணூல் போட்டுக் கொள்வர். பல வகைகளில் ஒருமைப்பாடு காணலாம். அவர்களுடைய மித்ரன் நான்கு குதிரை பூட்டிய ரதத்தில் செல்லும் சூரியனாகவும், போர்த் தெய்வமாகவும், நீதி தேவனாகவும் வழிபடப்பட்டான். இந்த தெய்வம் அவருக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் ரோமானிய சாம்ராஜ்யத் துக்குள் நுழையும்போது இன்னும் உருமாறிப்போனார். எல்லோரும் ஒப்புக் கொள்ளக்கூடிய ஒரு விஷயம் இவர் முதலில் வேதகால தெய்வம் என்பதாகும்.

Mithras in bath

ரோம் ஆட்சி எங்கு எங்கெல்லாம் பரவியதோ அங்கு எல்லாம் ரோமானிய படைவீரர்கள் இந்த தெய்வத்தையும் கொண்டு சென்றனர். லண்டனில் இவரைப் போற்றும் கல்வெட்டுகளும் கிடைத்தன. இப்போது உலகம் முழுதுமுள்ள மியூசியங்களில் மித்ரன் சிலைகளைக் காணலாம். இந்துக்கள் மட்டும் உள்ளத்தில் மித்ரன் வழிபாடு செய்வர். மற்றவர்கள் மியூசியத்தில் காட்சிப்பொருளாகக் காண்பர்.
வாழ்க மித்ரன் புகழ்!

–சுபம்–