மின்னணுக் கருவிகள் கழிவுகளால் ஏற்படும் அபாயம்

world_environment_day_

Written by S NAGARAJAN

Article No.1911; Dated 5 June 2015.

Uploaded at London time: 6-06 am

சென்னை வானொலி நிலயம் A (அலைவரிசை 720 Hz))யில் 29-5-2015 அன்று காலை 6.55 மணிக்கு காலைமலர் நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்

மின்னணுக் கருவிகள் கழிவுகளால் ஏற்படும் அபாயம்

SCRIPT BY : .நாகராஜன்

நாளுக்கு நாள் உலகெங்கும் மின்னணுக் கருவிகளின் பயன்பாடுகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கூடவே இந்தக் கருவிகளின் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாததால் ஏற்படும் அபாயமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

நம் நாட்டில் தகவல் தொழில்நுட்பத்தில் அதிக அளவு மின்னணுக் கருவிகளைப் பயன்படுத்தும் பங்களூரு நகரத்தில் மட்டும் 57000 டன் என்ற மாபெரும் அளவில் மின்னணுக் கழிவு 2014ஆம் ஆண்டில் ஏற்பட இருப்பதை முன்னமேயே நிபுணர்கள் சுட்டிக் காட்டி எச்சரித்தனர். ஆகவே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும் இவற்றை முறைப்படி அகற்றுதல் இன்றியமையாதது. ஏனெனில் இவற்றில் வெளிப்படும் நச்சுக்கள் சுற்றுப்புறச் சூழலை மாடுபடுத்துபவை. இவற்றை அகற்றுவோர் உரிய முறையில் தங்களையும் காத்துக் கொள்ளல் வேண்டும். ஆனால் முறைப்படி கழிவை அகற்றாமல் இருப்பின் இதை அகற்றுவோருக்கு பல்வேறு ஆரோக்கியக் கேடுகள் ஏற்படும்.

சான்பிரான்ஸிஸ்கோ, சியோல் போன்ற நகரங்களில் இவற்றை அகற்றுவதற்கான தனிச் சட்டங்கள் உள்ளன. மறு சுழற்சிக்கு உள்ளாகும் பொருள்களைத் திரும்பிப் பெறும் வசதிகளும் இந்தச் சட்டங்களில் உள்ளடங்கும். மின்னணுப் பொருள்களை உற்பத்தி செய்வோருக்கு அதன் மூலம் ஏற்படும் கழிவுகளை அகற்றுவதிலும் பெரும் பொறுப்பு உண்டு. E-waste disposal எனப்படும் மின்னணுப் பொருள் கழிவை நீக்குவதில் உரிய முறையில் செய்ய வழிகளை இவற்றை உற்பத்தி செய்வோர் அறிவுறுத்துவதோடு அவற்றைத் திரும்பப் பெற்றுத் தாமே அகற்றவும் முற்படுதல் இன்றியமையாதது.

பொருள்களின் பயன்பாடு முடிந்தவுடன் குப்பைக் கூளங்களுடன் இவற்றைச் சேர்த்துப் போட்டு விடக் கூடாது என்பதைப் பயனீட்டாளர்களும் உணர்தல் வேண்டும். கழிவுகளை அப்புறப்படுத்துவதை அதற்கான அங்கீகாரம் பெறப்பட்டவர்களே செய்தல் வேண்டும். கணினி உள்ளிட்ட சாதனங்களைப் பயன்படுத்துவோரும் மின்னணுக் கழிவை அதை அகற்றும் முறை தெரிந்தவர்களிடமே மட்டுமே தருதல் வேண்டும்.

இப்போதுள்ள கழிவே மலைக்க வைக்கும் அளவு ஒவ்வொரு நகரத்திலும் உள்ளது. இது 2020ஆம் ஆண்டில் 500 சதவிகிதம் அதிகரிக்கும் என்ற செய்தி திகைக்க வைக்கும் ஒன்று. ஆகவே கணினிகளும் இதர மின்னணுப் பொருள்களும் ஏராளமாகஉற்பத்தி செய்யப்பட்டு சந்தைகளில் விற்கப்படும் இந்த நாட்களில் அதன் கழிவுகளைப் பற்றிப் பொறுப்புடனும் அக்கறையுடனும் அனைவரும் சிந்தித்துச் செயல்படுதல் வேண்டும்.    மின்னணுக் கழிளவ உரிய முறையில் அகற்றுவோம். சுற்றுப்புறச் சூழலை மாசின்றிக் காப்போம்.

****************************