அருணகிரிநாதர் போற்றும் முருகன்! – 2 (Post No.9932)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9932

Date uploaded in London –  4 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

 ஆடிக் க்ருத்திகை சிறப்பு விழா நாளான 2-8-2021 அன்று லண்டனிலிருந்து ஒளிபரப்பப்பட்ட ஞானமயம் நிகழ்ச்சியில் ச.நாகராஜன் ஆற்றிய உரை.

அபகார நிந்தைப் பட்டுழலாதே, அறியாத வஞ்சரைக் குறியாதே உபதேச மந்திரப் பொருளாலே உனை நான் நினைந்து அருள் பெறுவேனோ இபமாமுகன் தனக்கு இளையோனே இமவான் மடந்தை உத்தமி பாலா, ஜெபமாலை தந்த சற்குருநாதா, திருவாவினன் குடிப் பெருமாளே. முருகன் தனக்கு உபதேசம் செய்ததையும் ஜெபமாலை தந்ததையும் நினைத்து இப்படிப் பாடி உருகுகிறார் அருணகிரிநாதர்.

அவரது திருப்புகழின் பெருமையைக் கண்டு பொறாமை கொண்ட சம்பந்தாண்டான் என்ற தேவி உபாசகன் அரசன் பிரபுட தேவ மஹாராஜனிடம் அருணகிரிநாதர் தான் உபாசிக்கும் மூர்த்தியைச் சபையில் அனைவருக்கும் காட்டினால் அவரே பெரியவர் என்று ஒப்புக் கொள்கிறேன் என்றார். பிரபுடதேவ மஹாராஜன் இந்தப் போட்டிக்கு அருணகிரிநாதரை அழைத்தார். சம்பந்தாண்டான் எவ்வளவு  முயன்றும் தனது உபாசனை தெய்வமான தேவியை அனைவருக்கும் காட்ட இயலவில்லை. அருணகிரிநாதர் ‘அதல சேடனாராட, அகில மேரு மீதாட, அபின காளி தானாட’ என்று பாடத் தொடங்கினார். மதுர வாணி தானாட, மலரில் வேதனாராட மருவு வானுளோராட மதியாட வனச மாமியாராட, நெடிய மாமனாராட மயிலுமாடி நீயாடி வரவேணும் என்று அவர் வேண்ட, முருகப்பிரான் திருக்கையில் வேல் விளங்க மயில் மீது அமர்ந்து ஆடியவாறே வந்து சபையோருக்குக் காட்சி தந்து அருள் பாலித்தார்.  இதை அவரே தனது பாடலில், “சயிலம் எறிந்த கை வேற் கொடு  மயிலினில் வந்தெனை யாட்கொளல், ஜகம் அறியும் படி காட்டிய குருநாதா” என்று குறிப்பிட்டு உருகுகிறார்.

அன்று தொடங்கி இன்று வரை அன்பருக்கு உதவும்  அமுதமாக விளங்குகிறது திருப்புகழ். இந்த முருகனின் புகழைக் கற்று ஓத, ஒரு நூல் அருணகிரி நாதர் அருளிய திருப்புகழே.

வேதம் வேண்டாம் சகல வித்தை வேண்டாம் கீத

நாதம் வேண்டாம் ஞான நூல் வேண்டாம் – ஆதி

குருப்புகழை மேவுகின்ற கொற்றவன் தாள் போற்றும்

திருப்புகழைக் கேளீர் தினம்.

ஆம்! திருப்புகழைத் தினமும் கேட்டால், ஓதினால் மற்ற எதுவும் வேண்டாம், ஏனெனில் திருப்புகழில் சகலமும் அடங்கி இருக்கிறது.

திருப்புகழ் அருணகிரிநாதர் வாயிலிருந்து அருள்மொழியாக வெளிப்பட்டிருப்பினும் அதில் உள்ள ஒரு ரகசியத்தை முருகப் பிரானே அதிலேயே அருளி விட்டார்.

‘யாம் ஒதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற வேலவர் தந்ததனால்’ என்ற கந்தரனுபூதிச் சொற்றொடரால் அருணகிரி வாக்கு முருகன் வாக்கு என்பதையும் அதைத் தாமே பெற வேலவர் அவருக்குத் தந்தார் என்பதும் பெறப்படுகிறது.

திருப்புகழைக் கற்கத் திருப்புகழைக் கேட்க

திருப்புகழை நித்தஞ் செபிக்கத் – திருப்புகழை

அர்ச்சிக்க முத்தியெளிதாகுமே கூற்றை வென்று

கெர்ச்சிக்கலாமே கேடீ

என்பது ஆன்றோர் வாக்கு.

முருகன், ‘அடியவர் வேண்டியபோது வேண்டிய போகம் உடனே தருவான்’ என்பதை கோங்கிள நீர் என்னும் திருவேங்கடப் பாடலில் அவர் கூறி உறுதி செய்கிறார்.

வீர ஜெயத் திருப்புகழ் என்று பெருமையுடன் அழைக்கப்படும் ‘சினத்தவர் முடிக்கும்’ என்று தொடங்கும் திருத்தணிகைத் திருப்புகழில் திருப்புகழின் பெருமையை அவரே கூறுவதைப் பார்க்கிறோம்.

“சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ் செகுத்தவர் உயிர்க்குஞ் சினமாக

சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பு என்றறிவோம் நாம்

நினைத்ததும் அளிக்கும் மனத்தையும் உருக்கும் நிசிக்கருவறுக்கும் பிறவாமல்

நெருப்பையும் எரிக்கும் பொருப்பையும் இடிக்கும் நிறைப் புகழ்” என்பதுவே திருப்புகழின் பெருமை.

திருப்புகழைப் படித்தால் தமிழறிவு கூடும். வேத இதிஹாஸ புராணங்களின் அற்புத சம்பவங்களையும் சாஸ்திர தத்துவார்த்தங்களையும் உபநிடத ரகசியங்களையும் அறிய முடியும். இகபர சௌபாக்யம் கிட்டும்.முக்திப் பேறும் கிட்டும்.

திருப்புகழின் பெருமையை பாரெல்லாம் உணரும் வண்ணம் செய்த ஸ்ரீ வள்ளிமலைத் திருப்புகழ் ஸச்சிதானந்த ஸ்வாமிகளின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் இது. இரண்டாவது உலக மகா யுத்தத்தின் போது ஜப்பான், ஜெர்மனி ஆகிய பகை நாட்டினர் இந்தியா மீது குண்டு மழை பொழியத் திட்டமிட்டனர். மக்கள் அனைவரும் பயந்து நடுநடுங்கினர். அப்போது ஸ்வாமிகள் திருப்புகழ் பாராயணக் குண்டு என்று அவர்களின் குண்டுக்கு எதிர் குண்டாக திருப்புகழ் பாடல்களைத் தொகுத்து 1942ஆம் ஆண்டு ஜனவரியில் ஒரு நூலாக வெளியிட்டார்; அன்பர்கள் அதை ஓதினர். பயம் தெளிந்தனர். பகை நாடான ஜப்பான் அணுகுண்டால் பாதிக்கப்பட்டு தோற்று அழிந்தது. ஜெர்மனி வீழ்ந்தது.

எவ்வளவு கஷ்டம் வந்த போதிலும் கூட அதை நீக்கும் அரு மருந்து திருப்புகழே என்பதை இந்த ஒரு சம்பவமே நமக்கு உணர்த்துகிறது. நமக்கு அன்றாடம் உதவும் சில பாடல்களை இப்போது பார்ப்போம்:-

அச்சமற்று வாழ, ‘மரண ப்ரமாதம் நமக்கில்லை யாம் என்றும் வாய்த்த துணை’ என்ற பாடல்.

தாழ்வின்றி வாழ, ‘சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனை’ என்ற பாடல்.

நோய்கள் வந்தால் அவை தீர ஓத வேண்டிய திருப்புகழ் – ‘இருமல் உரோகம்’ என்ற பாடல்.

தனியே வழி நடக்கும் போது ‘வேலும் மயிலும் துணை’ என்ற கந்தரலங்காரப் பாடல்.

மனதிலே கலக்கம் வந்தால் ‘இதயந் தனிலிருந்து கிருபையாகி இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே’ என்ற பாடல்

ஆபத்துக்கள் வந்தால் ‘நாள் என் செயும் எனை நாடி வந்த கோள் என் செயும்’ என்ற கந்தரலங்காரப் பாடல்

திருமணம் தடைப் பட்டுக் கொண்டிருந்தால் அல்லது தாமதமாகிக் கொண்டிருந்தால் ‘நீலங்கொள் மேகத்தின் மயில் மீதே’ என்ற பாடல்

முருகனை தரிசிக்க மலை மீது ஏறும் போது திருப்புகழ் பாடல்களைப் பாடிக் கொண்டே ஏறுதல் மரபு.

முருக நாமம் கூறும் திருப்புகழைப் பாடுபவரின் பெருமை என்ன? ‘வேலன் வாய்த்த திருப்புகழ் கற்றவர் சீலம் ஏத்திய சித்த ப்ரஸித்தரே!’ என்பது தான் பதில்!

தினமும் சில நிமிடங்கள் ஒதுக்கி திருப்புகழைக் கற்று ஓதினால் அது நமக்கு இகபர சௌபாக்யம் அருளும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த நன்னாளில் உலகெங்குமுள்ள அன்பர்களை இணையதள வாயிலாகக் கூட்டி முருகப் பிரானை வழிபடும் பேற்றை நமக்கு நல்கிய லண்டன் சிவ ஸ்ரீ கல்யாண்ஜி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி உரித்தாகுக. இந்த அன்பர்கள் கூட்டத்தில் என்னையும் ஒரு பொருட்டாக்கி சில வார்த்தைகளைப் பேச அழைத்த அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!

“அஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்

வெஞ்சமரில்  ‘அஞ்சல்’ என வேல் தோன்றும் – நெஞ்சில்

ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்

முருகா என்று ஓதுவார் முன்!”


நன்றி வணக்கம்!              

    

***

tags- அருணகிரிநாதர் -2, முருகன்

அருணகிரிநாதர் போற்றும் முருகன்! – 1 (Post No.9927)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9927

Date uploaded in London –  3 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

 ஆடிக் க்ருத்திகை சிறப்பு விழா நாளான 2-8-2021 அன்று லண்டனிலிருந்து ஒளிபரப்பப்பட்ட ஞானமயம் நிகழ்ச்சியில் ச.நாகராஜன் ஆற்றிய உரை.

அருணகிரிநாதர் போற்றும் முருகன்! – 1

குருமகாசந்நிதானம் அவர்களின் பொற்பாத கமலங்களுக்கு நமஸ்காரம். ஞானாசிரியர்களின் பாத கமலங்களுக்கு நமஸ்காரம்.

அன்பார்ந்த பெரியோர்களே, தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். நமஸ்காரம்.

இன்று ஆடிக் ருத்திகை நன்னாள். இந்த நன்னாளிலே உலகளாவிய விதத்தில் சிவ ஸ்ரீ கல்யாண்ஜி அவர்களின் அரும் முயற்சியால் நாம் இணைய தள வாயிலாக் ஒன்று கூடி குன்று தோறாடும் குமர வடிவேலனைத் துதிக்கும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம். இன்று தான் சூரனை அழிக்க முருகப்பிரான் சரவணப் பொய்கையில் 6 குழந்தைகளாக அவதரித்தார். அக் குழந்தைகளை ஆறு கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி, சீராட்டி வளர்த்தனர்.

இந்த கார்த்திகைப் பெண்களும் அவர்கள் வளர்த்த முருகனும் நம் கண் முன்னே தினமும் தோன்றுகின்றனர். அவர்கள் எப்போதும் ஊழி கடந்து இருக்கின்றனர். வானவியலில் வல்லவர்களான முனிவர்கள், அருளாளர்கள், யோகிகள், மகான்கள் இதை நன்கு உணர்ந்தவர்கள்.

இந்த ரகசியத்தை அறிவது சுலபம். சற்று வானத்தை அண்ணாந்து பார்க்க வேண்டியது தான், அது போதும். மாத்ரி மண்டலம் என்னும் நக்ஷத்திர மண்டலத்தை நாம் நோக்கினால் அதில் நானூறு நக்ஷத்திரங்கள் தெரியும். அதில் தீ ஜுவாலை போன்ற தோற்றத்தை உருவாக்கும் அம்பா, தாளா, நிதாக்னி, அப்ரயந்தி, மேகயந்தி, வர்ஷயந்தி ஆகியவை மிக முக்கியமானவை. இவையே கார்த்திகை மாந்தர், கந்தனை வளர்த்தவர்கள் ஆவர்.

மாத்ரி மண்டலம் என்ற பெயரே மாதர்கள் கொண்ட கூட்டத் தொகுதி என்று குறிப்பிடப்படுவது வியப்பிற்குரியது. சரவணப் பொய்கையில் குழந்தை உருவில் இருந்த முருகனை கார்த்திகை மாந்தர் அறுவரும் தனித் தனியே ஆறு உருவங்களில் சீராட்டி மகிழ்வித்ததால் அவன் கார்த்திகேயன் என்ற பெயரைப் பெற்றான். ரிஷப ராசியில் கார்த்திகை நம் தலைக்கு மேலே தோன்றும் போது சந்திரன் தோன்றும். ஆகவே தான் கார்த்திகைக்கு  கார்த்திகை மாதம் என்று நம் முன்னோர் பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

Pleiades என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கார்த்திகை நக்ஷத்திரத்தைப் பற்றிய ஏராளமான அதியசங்கள் உண்டு. 250 ஒளி ஆண்டு அதாவது கற்பனைக்கும் அப்பாற்பட்ட தூரத்தில் உள்ளது இது. ஒரு ஒளி ஆண்டு என்றால் 6 ட்ரில்லியன் மைல்கள் என்று பொருள். ஒன்றுக்கு பக்கத்தில் 12 பூஜ்யங்களைப் போட்டால் வரும் எண் ஒரு ட்ரில்லியன். இது போல 250 ஐ 6ஆல் பெருக்கினால் வருவது 1500. 1500 ட்ரில்லியன் மைல் தூரத்தில் உள்ளது கார்த்திகை. (One light-year is about 6 trillion miles (9 trillion km). That is a 6 with 12 zeros behind it!)

ஒரு வருடத்தின்  365 நாட்களில் கார்த்திகை நக்ஷத்திரம் சூரியனுடன் உதித்து சூரியனுடன் அஸ்தமனமாகும் நாட்களே மிகவும் உஷ்ணமான நாட்கள் என அறிவியல் கூறுகிறது. சதபதபிராஹ்மணம் பல நக்ஷத்திரங்களைக் கார்த்திகைக் கூட்டம் கொண்டிருப்பதால் அதற்கு பகுலா – பல நக்ஷத்திரம் கொண்டது – என்ற பெயரையும் சூட்டுகிறது. கார்த்திகை நக்ஷத்திரத்தின் அதி தேவதை அக்னி. க்ருத்திகா நக்ஷத்திரம் அக்னிர் தேவதா: என்று தைத்திரீய சம்ஹிதை நான்காம் காண்டம் கூறும். அக்னியே ஸ்வாஹா: க்ருத்தியாம்யஹ ஸ்வாஹா என தைத்தீரிய ப்ராஹ்மணம் (||| 1.4.2) கார்த்திகை நக்ஷத்திரத்தைப் புகழும். 18 புராணங்களிலேயே மிகப் பெரியதான சுமார் 81000 ஸ்லோகங்கள் கொண்ட ஸ்காந்த புராணம் கார்த்திகை நக்ஷத்திரத்தின் பெருமையைக் கூறுகிறது. முருகனின் ரகசியங்களை விளக்குகிறது.

வால்மீகி ராமாயணமோ, “அந்த ஸ்கந்த கடவுளின் மீது நம்பிக்கை கொண்டோர் அவனுடன் சேர்ந்து இருப்பதை அனுபவிக்க முடியும் “ என்று கூறுகிறது. மஹாபாரதத்தில் வியாஸ பகவான் வன பர்வத்தில் சுப்ரமண்யருடைய உற்பத்தி, வீர அணிவகுப்பு ஆகியவற்றை விஸ்தாரமாக விளக்குகிறார். காரண காரியத்தில் -CAUSE AND EFFECT இல் -ஒரு செயல் நடந்த பிறகே அதற்கான விளைவு ஏற்படுகிறது. ஒரு மணியை அடித்தால் அடித்த பின்னரே ஓசை ஏற்படுகிறது. ஆனால் முருகனின் விஷயத்திலோ இதற்கு மாறாக இருக்கிறது என்பதை வியாஸர் குறிப்பிடுகிறார். சூரனை சம்ஹாரம் செய்ய முருகன் கிளம்பும் போது ஜெய தேவதைகள் முருகனுக்கு முன்னே அணிவகுத்துப் போகின்றன. அதாவது போருக்கு முன்பேயே அதன் பயனான வெற்றி அவருக்கு உறுதிப்படுத்தப்படுகிறது. செயலுக்கு முன்னாலேயே அதன் நல்ல விளைவு! உஷ்ணமாக கார்த்திகை நக்ஷத்திரத்தில் தோன்றிய முருகனின் முன்னால் அசுர சக்திகள் அழியும்; தீமைகள் ஒழியும். வறுமை ஓடிப் போகும்; கவலைகள் கரையும்; நோய்கள் மாயும். அவனை வணங்குவதால், நினைப்பதால், அவன் திருப்புகழைப் பாடுவதால்,செல்வமும் ஆரோக்கியமும் நிம்மதியும் இறுதியாக அவனுடன் சேரும் முக்திப் பேறும் கிடைக்கும்.

இதைத் தான் அருணகிரிநாதர் அவன் அருளாலே உணர்ந்தார். பல்லாயிரம் பாடல்களை மடை திறந்த வெள்ளமென, பொங்கிப் பாயும் அருவி எனப் பொழிந்தார். வாக்கிற்கு அருணகிரி என்ற பெயரையும் பெற்றார்.அவர் பாடிய பாடல்கள் பதினாறாயிரம் என்பதை “எம் அருணகிரி நாதர் ஓது பதினாறாயிரம் திருப்புகழ் அமுதுமே” என்ற விரிஞ்சைப் பிள்ளைத் தமிழ் வாக்கியத்தாலும், ‘அருணகிரி நாதன் அறைந்த பதினாறாயிர கவிதை என்று உலகில் யாரும் – உரை புகலும் தெய்வத் திருப்புகழ்” என்ற தணிகையுலா வரிகளாலும் நாம் அறிய முடிகிறது. ஆனால் இன்று நமக்குக் கிடைத்தவை 1338 பாடல்கள் மட்டுமே. அருணகிரிநாதர் சுமார் 200 தலங்களுக்குச் சென்று திருப்புகழ் பாடல்களை இசைத்துள்ளார். அவர் வாழ்ந்த காலம் பிரபுடதேவ மகாராஜர் வாழ்ந்த கி.பி. 1450 ஆண்டை ஒட்டிய காலமாகும். திருப்புகழ் ஆய்வில் ஈடுபட்டுள்ளோர் நமக்குக் கிடைத்தவற்றில் உள்ள பாடல்களில் 1088 சந்தங்களும் அவற்றிலிருந்து 178க்கும் மேற்பட்ட தாள அமைப்புகளும் கிடைத்துள்ளன என்று கூறுகின்றனர். தமிழில் ஒரு புது வகைப் பாடலாக தொங்கலுடன் திருப்புகழ் அமைந்திருப்பது முருகப் பிரான் தமிழுக்குத் தந்த வரமே.

திருப்புகழில் இல்லாத அறிவியல் விஷயமோ ஆன்மீக விஷயமோ இல்லை.

‘இருவர் மயலோ’ எனத் தொடங்கும் திருப்புகழ் பாடலில், ‘அணுவில் அசைவாய்’ என்கிறார் அருணகிரிநாதர். அணுவில் எலக்ட்ரான், புரோடான் ஆகியவற்றின் அசைவுகளை விஞ்ஞானிகள் வெகு காலத்திற்குப் பின்னரேயே கண்டு பிடித்து உலகிற்கு அறிவித்துள்ளனர். வேல் விருத்தத்தில், ‘அண்டங்கள் ஒரு கோடி’ என்று பல அண்டங்களைப் பற்றி அன்றே அவர் குறிப்பிடுகிறார். அவர் அன்று கூறியதை, மல்டிவர்ஸ் MULTIVERSE என  ஹ்யூ எவரெட், மாக்ஸ் டெக்மார்க் உள்ளிட்ட விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்து வியக்கின்றனர். இங்கு அண்டங்கள் பற்றிய ஒரு முக்கிய விஷயத்தைக் குறிப்பிட வேண்டும்.

சூரபன்மன் பல்வேறு அண்டங்களில் தனது ரிசர்வ் படைகளை ஒளித்து வைத்திருந்தான். முருகப்பிரான் முதலில் ‘சர்ஜிகல் ஸ்டிரைக்’ செய்து அந்தப் படைகளை அழித்தார். சர்ஜிகல் ஸ்டிரைக் என்பது குறிப்பிட்ட இடத்தை மட்டும் தாக்கி இதர் சுற்றுப்புறங்களுக்குக் கேடு விளைவிக்காமல் செய்யப்படும் அதிரடி நடவடிக்கை. இதனால் சூரபன்மன் நடுநடுங்கிப் போனான். ஆக முதலில் சர்ஜிகல் ஸ்டிரைக் செய்து அரக்கர்களை நடுங்க வைத்தவர் முருகனே என்பது பெறப்படுகிறது!

“சருவிய சாத்திரத் திரளான சடுதிகழ் ஆஸ்பதத்து அமையாத

அருமறையாற் பெறற்கு அரிதாய அனிதய வார்த்தையைப் பெறுவேனோ

என்று அவர் கூறுகிறார்.  இதன் பொருள் என்ன?”

வார்த்தை என்பது என்ன? அது நன்கு பழக்கமான எல்லாச் சாத்திரங்களின் திரண்ட சாராம்சப் பொருளானது, ஆறு என்று விளங்கும் ஆதாரங்களில் பொருந்தி அடங்காதது அது. அரிய வேதங்களால் பெறுவதற்கு அரிதானது அது. இதயத்துக்கு எட்டாத அந்த உபதேச மொழியைப் பெறுகின்ற பாக்கியம் எனக்குக் கிட்டுமோ என்று அவர் கூறுகிறார்.

வாழ்வை வெறுத்து அருணைத் திருக் கோவில் கோபுரத்தின் மீது ஏறி தமது உயிரை மாய்க்கக் கருதிய அந்த நேரத்தில்  அவருக்கு எந்தத் தீங்கும் வரா வண்ணம் அவரைத் தம் திருக்கரத்தால் தாங்கிப் பிடித்த கதிர்வேலன், அடியவர் கூட்டம் தம்மைச் சூழ்ந்திருக்க, வேத ஒலி முழங்க, மயில் மீது தமது திருநடனக் கோலத்தைக் காட்டி அருளினார். அருணகிரிநாத என்று நாமகரணம் செய்வித்து அவரை அழைத்தார்.சக்ஷு தீக்ஷை என்னும் கண்ணோக்கம் செய்து திருவடி தீக்ஷையும் செய்வித்து அவரது நாவில் சரவணபவ என்ற ஆறெழுத்தைப் பொறித்து அவருக்கு முத்தமிழ் ஊட்டி, ஜெபமாலை ஒன்றையும் தந்து அருளினார் முத்துக் குமரன். ‘சும்மா இரு சொல் அற’ என மௌன உபதேசமும் அருளினார். பின்னர் முருகன் அருணகிரிநாதரை நோக்கி, “நமது பாத மலரைப் பாடுக” என்றார்.

“நமது பாதமலரைப் பாடு நீ என்ன, அடியேனும் எப்படி பாட என்ற அளவில் பத்தித் தரு முத்தி நகை யத்தி இறைவா எனப் பாடென்று சொல்லி” என்று இப்படி முருகன் தாமே அருணகிரி நாதருக்கு அடி எடுத்துக் கொடுத்ததை விரிஞ்சை பிள்ளைத் தமிழ் கூறுகிறது. அவரே ‘பக்கரை விசித்ரமணி’ எனத் தொடங்கும் திருப்புகழில், “திக்கது மதிக்க வரு குக்குடமும் ரக்ஷை தரு சிற்றடியு முற்றிய பனிருதோளும் செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பு என எனக்கருள்கை மறவேனே” என்று கூறி அதை உறுதிப்படுத்துகிறார்.

 TAGS – ஆடிக் கிருத்திகை, அருணகிரிநாதர், முருகன்

-தொடரும்

முட்டை என்று தன் பெயரைச் சொன்ன முருகனின் அருள் விளையாடல்! (Post.8848)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8848

Date uploaded in London – – 24 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

கொங்குமண்டல சதகம் பாடல் 97

முட்டை என்று தன் பெயரைச் சொன்ன முருகனின் அருள் விளையாடல்!

ச.நாகராஜன்

அருணகிரிநாதர் திருப்புகழில் ஏராளமான முருகனின் அருள் திருவிளையாடல்களைச் சுட்டிக் காட்டி மகிழ்வார்; நம்மையும் மகிழ்விப்பார்.

அப்படி முருகனின் சிறப்பான ஒரு தமிழ் விளையாட்டை அவர் ‘பத்தி தரள’ என்று தொடங்கும் திருப்புகழின் கடைசி வரியில் கூறுகிறார்.

பாடல் இதோ:

பத்தி தரள கொத்து ஒளிர் வரி

    பட்ட புளக செப்பு இள முலை

    பட்டு இட்டு எதிர் கட்டு பரதவர்     உயர் தாள

 பத்மத்தியர் அற்பு கடுகடு

    கண் சத்தியர் மெத்த திரவிய

    பட்சத்தியர் இக்கு சிலை உரு       விலி சேரும்

சித்த தருணர்க்கு கனி அத

     ரம் புத்தமுதை தரும் அவர்

     சித்ர கிரண பொட்டு இடு பிறை     நுதலார்தம்

  தெட்டில் படு கட்ட கனவிய

     பட்சத்து அருளற்று உற்று உனது அடி

     சிக்கிட்டு இடை புக்கிட்டு அலைவது  தவிராதோ

மத்த பிரமத்த கய முக

     னை குத்தி மிதித்து கழுகுகள்

     மட்டிட்ட இரத்த குருதியில்          விளையாட

  மற்றை பதினெட்டு கண வகை

     சத்திக்க நடிக்க பலபல

     வர்க்க தலை தத்த பொரு படை      உடையோனே

முத்தி பரமத்தை கருதிய

      சித்தத்தினில் முற்ற தவ முனி

      முற்பட்டு உழை பெற்று தருகுற  மகள் மேல் மால்

  முற்ற திரி வெற்றி குருபர

      முற்பட்ட முரட்டு புலவனை

      முட்டை பெயர் செப்பி கவி பெறு     பெருமாளே

இந்தத் திருப்புகழில் ‘முற்ற திரி வெற்றி குருபர முற்பட்ட முரட்டு புலவனை முட்டை பெயர் செப்பி கவி பெறு பெருமாளே’ என்ற வரிகளில் ஒரு பெரும் வரலாறு அடங்கியுள்ளது.

பொய்யாமொழிப் புலவர் என்னும் பெரும் புலவர் ஒருவர் அகத்துறையில் தன்னைப் போலப் பாடுவார் யாரும் இல்லை என்று எண்ணம் கொண்டிருந்தார். ஒரு சமயம் அவர் பாலை நிலத்தின் வழியே சென்று கொண்டிருந்தார். வேடுவ உருவம் மேற்கொண்டு அவரை எதிர்ப்பட்ட முருகக் கடவுள், ‘நீங்கள் யார்?” எனக் கேட்டார்.

“யாம் ஒரு தமிழ்ப் புலவர்” என்று பதில் சொன்னார் புலவர்.

“அப்படியானால் இந்தப் பாலை நிலத்தைச் சிறப்பித்து ஒரு வெண்பா பாடுங்கள் பார்ப்போம்” என்றார் முருகன்.

“உமது பெயர் என்ன?” என்று கேட்டார் புலவர்.

“எனது பெயர் முட்டை” என்றார் முருகக் கடவுள். அத்துடன் புலவர் பாடும் பாடல் சுரம் போக்குத் துறையாய் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

உடனே புலவர்.

“பொன் போலுங் கள்ளிப் பொறி பறக்குங் கானலிலே

என்பேதை செல்லற் கியைந்தனளே – மின்போலும்

மானவேன் முட்டைக்கு மாறாய தெவ்வர் போம்

கானவேல் முட்டைக்குங் காடு

இதன் பொருள் :-

மின் போலும் – மின்னலை நிகர்க்கின்ற

மானம் – பெருமை உடைய

வேல் – வேலாயுதத்தை ஏந்திய

முட்டைக்கு மாறு ஆய – முட்டை என்பவனுக்கு மாறுபட்ட

தெவ்வர் போம் – பகைவர் போகின்ற

கான – மணம் வீசுகின்ற

வேல் முள் தைக்கும் காடு – வேல் முள் தைக்கின்ற காட்டில்

பொன் போலும் – பொன்னை நிகர்க்கும்

கள்ளிப் பொறி பறக்கும் – கள்ளிச் செடிகளிலிருந்து நெருப்புப் பொறி பறக்கின்ற

கானலிலே – கானல் பரவிய பாலை நிலத்தில்

என் பேதை – என் பேதைப் பெண்ணானவள்

செல்லற்கு இயைந்தனள் – செல்வதற்கு மனம் இசைந்தாள்

ஏ – அடடா, இது என்ன பாவம்!

இந்தப் பாடலைக் கேட்ட முருக பிரான், பாடல் அவ்வளவாகச் சிறந்து விளங்கவில்லை என்று கூறித் தானே ஒரு பாடலைப் பாடி அருளினார் இப்படி:

“விழுந்த துளி யந்தரத்தே வேமென்றும் வீழின்

எழுந்து சுடர்சுடு மென் றேங்கிச் – செழுங்கொண்டல்

பொய்யாத கானகத்திற் பெய்வளையுஞ் சென்றனளே

பொய்யா மொழிப் பகைஞர் போல்”

இதன் பொருள் :-

“விழுந்த துளி அந்தரத்தே வேம் என்றும் – விழுந்த மழைத்துளியானது ஆகாயத்திற்குத் தான் ஏகும் என்றும்

வீழின் – வீழ்ந்தால்

எழுந்து – மேலே தாவி

சுடர் சுடும் என்று – அனலானது சுடும் என்று

ஏங்கி – ஏக்கமுற்று

செழுங் கொண்டல் – செழுமையாகிய மேகங்கள்

பொய்யாத கானகத்தில் – பொய்யாத காட்டில்

பொய்யாமொழிப் பகைஞர் போல் – பொய்யாமொழிப் புலவரது பகைவர்கள் போல

பெய்வளையும் சென்றனளே – வளையலை அணிந்த என் பெண்ணும் போனாள்

ஏ – அடடா, இது என்ன பாவம்!

இந்தப் பாடலைக் கேட்ட பொய்யாமொழிப் புலவர் பாடலின் அருமை கண்டு திகைத்துப் போனார். எதிரில் இருப்பது குமரக் கடவுளே என்பதை உணர்ந்து அவரைத் துதித்தார்.

முருகனும் அவர் முன் தோன்றி அருள் பாலித்து அவர் நாவில் வேல் கொண்டு ஊன்றிச் சென்றார்.

இதைத் தான் அருணகிரி நாதர் தன் பாடலில் கூறிச் சிறப்பிக்கிறார்.

இந்த நிகழ்ச்சி திருமுருகன் பூண்டித் திருத்தலத்தின் அருகில் நடந்ததாகக் கர்ணபரம்பரை வழக்காகப் பெரியோர் கூறுகின்றனர்.

இப்படி அருள் பெற்ற பெரும் புலவரான பொய்யாமொழிப் புலவர் காளையார் கோயில் சென்று மிகவும் பிரசித்தி பெற்றார். பின்பு அங்கிருந்து புறப்பட்டார். தஞ்சைவாணன் கோவை பாடிப் பெரும் புகழ் பெற்றார். பின் மதுரை சென்று சில அற்புதங்களை நிகழ்த்தினார்.

பின் சீனக்கன் என்ற வள்ளலுடன் நட்பு பூண்டு அவருடன் இருந்தார்.

அவர் உயிர் துறக்கவே அவர் உடலுடன் உடன்கட்டை ஏறினார் என்பர் பெரியோர்.

இத்தகைய முருகனின் அருள் விளையாடலைக் கொண்டது கொங்கு மண்டலமே என்று பாடல் 97இல் கூறிப் பெருமைப் படுகிறது கொங்கு மண்டல சதகம்.

பாடல் இதோ:-

முட்டையென் பேர் சுரம் போக்கா வொரு பா மொழியெனக் கேட்

டிட்ட முறுபொய் யாமொழி பொன்போ லெனவுரைக்கச்

சுட்டழகில்லை யீ தென்று விழுந்த துளியென்றுநன்

மட்டவிழ் தார் முருகோன்சொன்ன துங்கொங்கு மண்டலமே

பாடலின் பொருள் :

முட்டை என்பது என் பெயர். சுரம் போக்காக ஒரு பாடல் கூறுவாயாக எனக் கேட்க, பொய்யா மொழிப் புலவர் மகிழ்ந்து பொன் போலும் என ஒரு வெண்பா பாடலை உரைக்க, அதைக் கேட்டு, இது அழகில்லை என்று கூறி, விழுந்த துளி என்ற ஒரு வெண்பாவை முருக வேள் பாடி அருளியதும் கொங்கு மண்டலத்திலே தான்!

 பொய்யாமொழிப் புலவரின் வாழ்க்கையில் நிகழ்ந்த இன்னும் பல அற்புதங்களைப் படித்து உணர்ந்து அனைவரும் மகிழலாம்!

tags-  பொய்யாமொழிப் புலவன், முட்டை, முருகன்

***

கலாப மயில் பெருமை!

mayil kuttam

Article No 1945

Written by S NAGARAJAN

Date: 21st  June 2015

Uploaded in London at 6-19 am

By ச.நாகராஜன்

அருணகிரிநாதர் அருளிய நூல்கள்

முருகனின் அனைத்துப் பெருமைகளும் சொல்லில் அடங்கா. ஆனால் அருணகிரிநாதர் அந்தப் பெருமைகளில் பெரும்பாலானவற்றைத் தன் பதினாறாயிரம் திருப்புகழ் பாடல்களில் பாடி வைத்துள்ளார். இன்று நமக்குக் கிடைத்திருப்பதோ சுமார் 1311 பாடல்கள் மட்டுமே!

திருப்புகழுடன் அருணகிரிநாதர் அருளியுள்ள இதர நூல்களாவன:-

கந்தர் அந்தாதி    (நூறு செய்யுள்கள்)

கந்தர் அலங்காரம் (நூறு பாடல்கள்)

கந்தர் அநுபூதி    (51 செய்யுள்கள்)

திருவகுப்பு (மொத்தம் 18 வகுப்புகள்)

வேல் விருத்தம்

மயில் விருத்தம்

சேவல் விருத்தம்

திரு எழு கூற்றிருக்கை

 

சிவத்தின் சாமி, நாம் புரியும் பிழை பொறுக்கும் சாமி

முருகனை அவர் விவரிக்கும் அழகை உணர இரு பாடல்களை மட்டும் இங்கு காண்போம்.

புவிக்குள் பாதமதை நினைபவர்க்கு எனத் தொடங்கும் திருப்புகழில் இறுதிப் பகுதி இது:-

சிவத்தின் சாமி, மயில்மிசை நடிக்கும் சாமி, எமதுளெ

சிறக்கும் சாமி, சொருபமி   தொளிகாணச்

செழிக்கும் சாமி, பிறவியை ஒழிக்கும் சாமி, பவமழை

தெறிக்கும் சாமி முனிவர்க ளிடமேவுந்

தவத்தின் சாமி, புரிபிழை பொறுக்கும் சாமி, குடிநிலை

தரிக்கும் சாமி, அசுரர்கள்     பொடியாகச்

சதைக்கும் சாமி, எமை பணி விதிக்கும் சாமி, சரவண

தகப்பன் சாமி என வரு                 பெருமாளே!

எப்படி? இனிய தமிழ். எளிய தமிழ். அரிய கருத்துக்கள்.

புரிபிழை பொறுத்து நம்மைக் காக்கும் முருகப் பிரானின் அருமைகளை சில வார்த்தைகளில் சொல்லி அருள்கிறார் அருணகிரிநாதர்.

murugan by akila k

வரோதயன்

மயில் விருத்தத்தில் பத்தாவது பாடலில் முருகப் பெருமானின் திருநாமங்கள் அருமையாக தொகுத்துக் கூறப்படுவதைக் காணலாம்.

நிராசத – ராஜஸ குணம் இல்லாதவர்

விராசத – ராஜஸ குணத்திற்கு மாறுபட்ட சத்வ குணம் உடையவர்

வரோதயன் – வர உதயன் – வரங்களுக்கு உறைவிடமானவர்

பராபரம் – மிக மேலான பரம் பொருள்

நிராகுலன் – நிர் ஆகுலன் – துன்பம் இல்லாதவர்

நிராமயன் – நிர் ஆமயன்  (ஆமயம் என்றால் நோய்) நோய் இல்லாதவர்

பிரான் – பிரியான் என்பதன் சுருக்கம் பிரான் ( உயிர்களை விட்டு ஒரு போதும் பிரியாதவர்)

நிலாதெழுதலாலலறமிலானெறி யிலான் —

அறமிலான், நெறியிலான் நிலாது எழுதலால் என மாற்றிப் பார்த்தால் வரும் அர்த்தம் – அறமில்லாதவர்களும் நெறியில்லாதவர்களும் முருகன் திருவடியில் நில்லாது விலகி விடுகிறார்கள்.

ஆக முருகனைத் தொழுவதற்கே ஒரு அடிப்படைத் தகுதி தேவையாக இருப்பதைக் காணலாம். முருக பக்தர்கள் அறநெறி தவறாது வாழ்பவர்கள், புண்ணியசாலிகள் என்பதை அறியலாம்.

நெறி நிலாவிய உலாச இதயன் – நன்னெறிகள் தம்மிடம் விளங்க மகிழ்வுடன் கூடிய உள்ளத்தைக் கொண்டவர்.

இப்படி அரும் பெயர்களைச் சுட்டிக் காட்டும் பாடல் இது தான்:-

நிராசத விராசத வரோதய பராபர

நிராகுல நிராமய பிரான்

இலாதெழு தலாலற மிலானெறி யிலானெறி

நிலாவிய உலாசவி தயன்

குராமலி விராவுமிழ் பராரை யமராநிழல்

குராநிழல் பராவு தணிகைக்

குலாசல சராசர மெலாமினி துலாவிய

குலாவிய கலாப மயிலாம்

புராரிகுமரா குருபரா வெனும் வரோதய

புராதன முராரி மருகன்

புலோசமசை சலாமிடு பலாசன வலாரிபுக

லாகுமயிலாயுதன் நெடுந்

தராதல கிராதர்கள் குலாதவபி ராமவல

சாதனன் விநோத சமரன்

தடாரி விகடாசுரன் குடாரித படாதிகழ்

ஷடாநநன் நடாவு மயிலே

அற்புதமான இந்தப் பாடலில் மயிலின் பெருமை தெரிகிறது.

mayil 1

“திரிபுரத்தை எரித்த சிவபெருமானுடைய குமரனே! குருமூர்த்தியே என்று புகழ்ந்த, வரங்களுக்கு இருப்பிடமானவனும், பழையோனும் ஆகிய திருமாலின் திருமருமகன், கிளி போன்ற இந்திராணி, வணங்குகின்ற இந்திரனுக்கு புகலிடமாகிய வேலாயுதக் கடவுள், நீண்ட, பூமியில் உள்ள, வேடர்கள், குலத்துக்கு சூரியனைப் போல மாப்பிள்ளையாய் வந்த அழகராம் வல்லமையைச் சாதித்தவன், விளையாட்டாகப் போர் புரிகின்றவர், கிரவுஞ்ச மலைக்குப் பகையாக இருப்பவர், தொந்தரவு தந்த அசுரனாகிய சூரனை (சூர்மாவை), வெட்டித் தள்ள கோடாரி போல இருந்தவர், மகிழ்ச்சியுற்று விளங்குகின்ற ஆறு திருமுகங்களை உடையவர், நடத்துகின்ற மயில் தான்  இராஜஸ குணம் இல்லாதவர், சத்வ குணத்தை உடையவர், வரங்களுக்கு இருப்பிடமானவர், மேலான பரம்பொருள், வருத்தம் இல்லாதவர், நோயற்றவர், உயிர்களை விட்டுப் பிரியாதவர், அறமில்லாதவனும் நெறியில்லாதவனும் தம்மிடத்தில் சாராது, விளங்குவதால், நன்னெறியில் விளங்குகின்ற, மகிழ்ச்சியுடன் கூடிய, உள்ளத்தை உடையவர், குராமரத்தில் நிறைந்து கலந்து வெளித் தோன்றும் பருத்த அடிப்பாகத்தில் (திருவிடைக்கழியில்) அமர்ந்து, ஒளி பொருந்திய குரா  மரங்களின் நிழல் மிகுந்துள்ள தணிகை என்கின்ற சிறந்த மலை முதலாக அசைவன, அசையாதனவாகிய எல்லாவற்றிலும் இனிது உலாவிய களித்த தோகை மயில் ஆகும்.”

இதுவே கிருபானந்தவாரியார் தரும் செய்யுளின் பொழிப்புரை. ஆறுமுகன் நடத்தும் மயில் உலகெலாம் உலாவி உவக்கும் பெருமையை உடையது.

சலாம் என்ற வார்த்தை பிரயோகமும் இந்த செய்யுளில் அமைந்திருப்பதைக் காணலாம்.

முருகனின் அழகை மயில் விருத்தம் மூலமாக அறியும் போது மனம் மிக மகிழ்கிறோம்.

இதே பிளாக்கில் லண்டன் சுவாமிநாதன் எழுதிய திருப்புகழ்ஆராய்ச்சிக் கட்டுரைகளையும்   படியுங்கள்:–

 

சலாம் முருகாசலாம் முருகா! அருணகிரிநாதரின் தனி வழி!! —வெளியிட்ட தேதி ஜூன் 25, 2014

அருணகிரிநாதருடன் 60 வினாடி பேட்டி – வெளியிட்ட தேதி ஜனவரி 16, 2012

சம்பந்தருக்கு அடிமை அருணகிரிநாதர்— வெளியிட்ட தேதி ஜனவரி 17, 2013

டாக்டர் முருகனும் ‘பேஷண்ட்’ அருணகிரிநாதரும் – வெளியிட்ட தேதிஜனவரி 15, 2013

தனிமையில் இனிமை –அருணகிரிநாதர் — வெளியிட்ட தேதி ஜனவரி 14, 2013

திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம் – வெளியிட்ட தேதி ஜனவரி22, 2013

நரகத்துக்குப் போவோர் பட்டியல் – வெளியிட்ட தேதி ஜனவரி 23, 2013

தமிழில் திட்டத் தெரியுமாவசைபாடுவது எப்படி? —வெளியிட்ட தேதிஜனவரி 21, 2013

((படங்கள் முக நூல் நண்பர்களனுப்பியவை;நன்றி உரித்தாகுக:சுவாமி))

***************

முருகனே ஞானசம்பந்தர் – அருணகிரிநாதர் அருளுரை!

murugan, fb

Post No 1937; Date: 17th June 2015

Compiled by S NAGARAJAN

Uploaded from London at 6-14 am

By ச.நாகராஜன்

திருப்புகழின் பலன்

“ஞானம் பெறலாம் நலம் பெறலாம் எந்நாளும்

வானம் அரசாள் வரம் பெறலாம் – மோனவீ

டேறலாம் யானைக் கிளையான் திருப்புகழைக்

கூறினார்க் காமேயிக் கூறு”

ஆனைமுகனுக்கு இளையவனின் திருப்புகழைக் கூறினால் ஞானம் பெறலாம், நலம் பெறலாம், வானம் அரசாள் வரம் பெறலாம், மோன வீடு பெறலாம் என்பது பெரியோர் கூற்று.

அரும் திருப்புகழை உலகிற்கு அளித்த அருணகிரிநாதரின் அருளுரைகள் அற்புதமானவை. வெவ்வேறு நுணுக்கங்களை விண்டு உரைப்பவை. மரண ப்ரமாதம் நமக்கில்லை என்ற துணிச்சலை பக்தர்களுக்கு அருள்பவை.

முருகனே சம்பந்தர்

அவரது முக்கிய உரைகளில் ஒன்று முருகனின் அவதாரமே ஞானசம்பந்தர் என்பது.

சமணர்களும் பௌத்தர்களும் நாடு கெடும் படி எல்லையற்ற துன்பங்களை சிவ, சக்தி, விநாயக, முருகனை வழிபடுவோருக்கு இழைத்து வந்த கால கட்டத்தில் அவற்றை ஒரு நொடியில் பொடிப் பொடியாக்கிய அவதாரமாக உதித்தவர் திருஞானசம்பந்தர்.

அருணகிரிநாதர், இதை.

புத்தர் அமணர்கள் மிகவே கெடவே

தெற்கு நரபதி திருநீறிடவே

புக்க அனல்வய மிக ஏடுயவே உமையாள் தன்

புத்ரனென இசை பகர் நூல் மறை நூல்

கற்ற தவமுனி பிரமாபுரம் வாழ்

பொற்ப கவுணியர் பெருமானுருவாய் வருவோனே

என்று அழகுறத் தெளிவு படுத்துகிறார். (நெய்த்த கரிகுழலறலோ எனத் தொடங்கும் பாடல்)

பிரமாபுரம் வாழ் ஞானசம்பந்தரின் உருவாய் வந்தவன் முருகனே’ அவனே புத்தர், சமணரை ஓட்டி தெற்கு தேச அரசன் திருநீறிடும்படி அனல் வாதத்தில் ஜெயித்தவன் என்பதை இப்படி அழகுறக் கூறும் போது சின்னஞ் சிறு வயதில் சம்பந்தர் எப்படி எண்ணாயிரம் சமணரை வெல்ல முடிந்தது என்ற ரகசியத்தை அறிய முடிகிறது! முருகன் அல்லவா புத்த சமணரை, வென்றது!

nalavar with siva

சம்பந்தர் எனும் முருகனன்றி வேறு தெய்வம் இல்லை

கந்தர் அந்தாதியில் 29ஆம் பாடலில்

திகழு மலங்கற் கழல்பணிவார் சொற்படி செய்யவோ

திகழு மலங்கற் பகவூர் செருத்தணி செப்பிவெண்பூ

திகழு மலங்கற் பருளுமென்னாவமண் சேனையுபா

திகழு மலங்கற் குரைத்தோனலதில்லை தெய்வங்களே

என்று பாடுகிறார்.

திருஞானசம்பந்தரின் ஒவ்வொரு பதிகத்தின் 11ஆம் பாட்டும் திருக்கடைக்காப்பு என அழைக்கப்படும். அப்பதிகத்தைப் பாடுவோர்க்கு என்ன பலன் கிடைக்கும் என்பது இறுதிப் பாடலில் மிகத் தெளிவாக, உறுதியாகச் சொல்லப்பட்டிருக்கும்.

“தேவாரத் திருப்பதிகங்களை ஓதி தான் அவதரித்த சீர்காழியையும், தான் காத்தளித்த அமராவதியையும், கல்யாண சுபுத்திரனாக தான் நிற்கும் திருத்தணியையும் துதித்து அணியும் திருநீறு மும்மலத்தைப் போக்கும்.

முழுப் பொருள் இதுவே என நம்பும் கற்புடமையையும் தரும் என்று நினைக்காத சமண கூட்டங்களை வருத்தம் தரும் கழுமரத்தில் ஏற்றி கலக்கம் அடைந்து அழியும் படி வாது புரிந்த சம்பந்தப் பெருமான் ஆகிய முருகனன்றி வேறு பிரத்யட்சமான தெய்வங்கள் கிடையாது” என்பதே பாடலின் பொருள்.

முருகனே சம்பந்தர் என்பதைத் தெளிவாக அருணகிரிநாதர் சுட்டிக் காட்டிய இடங்களில் இதுவும் ஒன்று.

ஆக தேவார திருப்பதிகங்களை ஓதும் படி அருணகிரிநாதர் அருளுரை பகர்கிறார். திருஞானசம்பந்தரே முருகன் என்பதால் அவரது பதிகங்கள் குமரக் கடவுளின் வாயிலிருந்து உதித்த நேர் சொற்கள் என்பதையும் தெளிவு படுத்துகிறார்.

திருப்புகழை ஊன்றிப் படிப்போர்க்குப் பல ரகசியங்கள் தெரியவரும். முக்கியமான ரகசியங்களுள் ஒன்று முருகனே சம்பந்தராக அவதரித்துப் பல அற்புதங்களை நிகழ்த்தினார் என்பதாகும்!

****************