400 வகை யாகங்கள்: காஞ்சி பரமாசார்யார் உரை

rudra baba

Sri Sathya Sai Baba in Ati Rudra Maha Yagna

By London Swaminathan லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண் — 890 தேதி 6 மார்ச் 2014

சென்னையில் 20-11-1932-ல் ‘ஹவிர் யக்ஞங்களும் ஸோம யக்ஞங்களும்’ என்ற தலைப்பில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய சுவாமிகள் (காஞ்சி பரமாசார்யார்) நிகழ்த்திய சொற்பொழிவின் சுருக்கம்:

விவாஹ காலத்தில் எந்த அக்கினியை சாக்ஷியாக வைத்துக் கொண்டு விவாஹம் பண்ணுகிறோமோ அதை வரன் வீட்டில் வைத்துக்கொண்டு அதில் ஔபாசனம் ஆரம்பித்துக்கொண்டு ஆயுள்பரியந்தம் அதை வைத்துக் காப்பாற்றிக் கொண்டு வர வேண்டும். வருஷத்தில் ஆறு கர்மாக்கள் ஔபாசனாக்கினியால் பண்ண வேண்டும்.

Homam in front of Sayeeshwara

ஒரு பிள்ளை பிறந்தபின் மயிர் நரைப்பதற்கு முன் அக்னிஹாத்திரம் செய்யவேண்டும். பிள்ளை பிறக்காவிட்டால் அக்னிஹாத்திரம் இல்லை.

ஸந்யாசிக்கு சாதுர்மாஸ்யம் என்று ஒன்று உண்டு. அது ஒரே இடத்திலிருந்து பண்ண வேண்டியது. கிருஹஸ்தனுக்கு அது ஒரு யாகம். அக்கினியாதனம், அக்னிஹாத்திரம், தரிசபூர்ணமாஸம், ஆக்ரஹாயணி, சாதுர்மாஸ்யம், பசுபந்தம், சௌத்ராமணி என்னும் ஏழும் ஹவிர் யக்ஞங்கள்.
வேறு சில சொற்பொழிவுகளில் அவர் கொடுக்கும் தகவல்களின் சுருக்கம்.
ஒவ்வொருவரும் 21 வகை யஜ்ஞங்களை செய்துவரவேண்டும். இவை பாக யஜ்ஞ, ஹவிர் யஜ்ஞ, சோம யஜ்ஞ என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பாக யஜ்ஞம் ஏழிலும், முதல் ஐந்து ஹவிர்யஜ்ஞங்களிலும் உயிர்ப்பலி கிடையாது. வாஜபேய யஜ்ஞம் முதல்தான் உயிர்ப்பலி உண்டு. பிராமணர்கள் செய்யக்கூடிய பெரிய யஜ்ஞமான வாஜபேய யஜ்ஞத்தில் 23 பிராணிகளும், க்ஷத்ரியர்கள் செய்யும் மிகப்பெரிய யாகமான அஸ்வமேதத்தில் நூறு பிராணிகளும் பலியிடப்பட்டன.
அதர்வ வேதம் யாகங்களை,

அமைதிக்கான சாந்திகம், பலத்துக்கான பௌஷ்திகம், எதிரிகளை நாசம் செய்வதற்காண ஆபிசாரிகம் என மூன்று வகையாகப் பிரித்துள்ளது.

இராமபிரானைத் தோற்கடிக்க இந்திரஜித், நிகும்பிலயாகம் (ஆபிசார வகை) செய்ய முயன்றான்.
‘’காமதேனு போன்று யாகங்கள், மனிதனுக்கு விரும்புவதைக் கொடுப்பவை என்றும் மனிதனைப் படைத்தபோதே பிரம்மா அவர்களுக்கு யாகங்களை அளித்ததையும் பகவத் கீதை ஸ்லோகம் மூலம் சுவாமிகள் விளக்குகிறார்.

யாகங்கள் செய்வதன் மூன்று நோக்கங்களையும் சுவாமிகள் விளக்குகிறார்:1. எல்லா உயிரினங்களும் நலமுடன் வாழப் பிரார்த்திப்பது 2.இறந்தபின்னர் மேலுலகத்தில் சுகமாக வாழ 3. எல்லாவற்றையும் விட மேலாக, பிரதிபலன் எதிர்பார்க்காமல், உலக நலனுக்காக இதைச் செய்வது நமது கடமை என்று எண்ணிச் செய்வது.

யஜ்ஞங்கள் மூன்று தினுஸு, யஜ்ஞம் என்பது யாகம் வேதத்தில் யஜ்ஞாதிகள் சொல்லப்பட்டிருக்கின்றன. வேதத்தில் ஏறக்குறைய 400 வகை யாகங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

chennai_04
Ati Rudra in Chennai by Baba

ஒவ்வொரு பிராமணனும் செய்யவேண்டிய யஜ்ஞங்கள் 21. அவைகளில் பாக யஜ்ஞங்கள் ஏழு போக பாக்கி உள்ளவை 14. யாகங்களைப் பற்றிய விஷயங்கள் வேதங்களில் நிறைய சொல்லப்பட்டிருக்கின்றன.
ஸோம யாகங்கள் ஏழு. அக்னிஷ்டோமம் முதல் யாகம். அதைச் செய்தவர்கள் ஸோமயாஜி. கடைசியில் இருப்பது வாஜபேயம். அதைச் செய்தவர்கள் வாஜபேயர்கள். வட தேசத்தில் பாஜபே என்று அவர்களைச் சொல்லுவார்கள். வாஜபேயம் பண்ணினவர்களுக்கு அவப்ருத ஸ்நான காலத்தில் அரசர்கள் சுவேதச் சத்திரம் (வெண்குடை) பிடிக்க வேண்டும். திருவாங்கூர், மைசூர் இந்த ராஜ்யங்களில் அவர்களுக்கு சுவேதச் சத்திரம் கொடுக்கிறர்கள்.

ஸோம யாகம் பண்ணும்பொழுது ஸோமலதைச் சாற்றைப் பிழிந்து ஸோமபானம் செய்வார்கள். ஸோமலதையும் கிருஷ்ணாஜினமும்( மான் தோல்) இப்பொழுது மலையாளத்தில்தான் கிடைக்கின்றன. மற்ற இடங்களில் இல்லை. நம்பூதிரிகளில் பத்துக் குடும்பத்தில் ஒருவராவது ஸோம யாகம் பண்ணுகிறர்ர்கள். யஜ்ஞம், தானம், தபஸ், இவைகளைச் செய்வதினால் சித்த சுத்தி உண்டாகிறது என்று நம்முடைய ஸ்ரீ ஆச்சார்யர்கள் சொல்லியிருக்கிறர்கள்.

ஜோதிஷ்டோமம் ஜன்மாவில் ஒருதடவையாவது பண்ணவேண்டும்.

பரமாத்மாவை அறியப் பிரயத்தனப்படுகிறவர்கள் யஜ்ஞம், உபவாசம் முதலியவைகள் எல்லாவற்றையும் பரமேசுவரப் ப்ரீதியாகப் பண்ணவேண்டும்ம். பூர்வ ஜன்மத்தில் யாகங்கள் பண்ணினவன் இந்த ஜன்மத்தில் விவேகத்தைப் பெறுகிறான்.

(சுவாமிகளின் உரைச் சுருக்கத்தை மேலே கண்டீர்கள்)

27.02.05MahaRudra 009 (1)

Maha Rudar Yagna by several priests.

400 யாகப் பட்டியல் தயாரிப்போம்:

சுவாமிகள் 82 ஆண்டுகளுக்கு முன் நடத்திய உரையை மீண்டும் ஒரு முறை படித்தபோது 400 யாகங்களின் பட்டியல் கிடைக்குமா என்று தேடினேன். சுமார் 40 யாக, ஹோமங்கள் பட்டியலே கிடைத்தது. எதிர் கால ஆராய்சியாளருக்காவது நாம் அந்தப் பட்டியலை வைத்திருப்பது நல்லது.

இதோ இதுவரை நான் சேகரித்த யாக, யக்ஜஞ, ஹோம பட்டியல்:
1.ஸ்ரீ மஹா கணபதி ஹோமம்: எந்தக் காரியத்தைத் தொடங்கும் முன்னரும் நாம் செய்ய வேண்டியது.

2.நவக்ரஹ ஹோமம்: புதிய கட்டிடம், வீடு கட்டிய போதும், மேலும் பல புதிய முயற்சிகள் செய்யும்போதும் ஒன்பது கிரகங்களின் தீய பார்வை படாமல் இருக்க செய்யும் ஹோமம்.

3.சுதர்ஸன ஹோமம்: இது எதிரிகளின் தொல்லையைப் போக்கும்.

கேரளத்தில் திருச்சூர் அருகில் நடத்தப்படும் அதிராத்ர யக்ஞம்: பாஞ்சால் என்னும் கிராமத்தில் 1975 முதல் அதிராத்ர யக்ஞம் நடத்தப்படுகிறது. அமெரிக்க கலிபோர்னியா பல்கலைக் கழக தத்துவ இயல் பேராசிரியர் ப்ரிட்ஸ் ஸ்டால் இதை அப்படியே படம்பிடித்து உலகிற்கு அளித்தார்.

puranapanda_srinivas._1_

100 இரவு யாகங்கள்

100 இரவுகள் நடத்தும் யக்ஞம்: திருநெல்வேலி மாவட்ட அரியநாயகிபுரம் ஆர்.அனந்தகிருஷ்ண சாஸ்திரி 1936 ல் எழுதிய மகாமேரு யாத்திரையில் ஒரு இரவு முதல் நூறு இரவு வரை நடத்தப்படும் (சதராத்ர்க் க்ரது) பற்றி சிரௌத சூத்திரங்களால் தெரிந்துகொள்ளலாம் என்று எழுதியுள்ளார்.
ராஜஸ்தான் பல்கலைக் கழக வரலாற்றுப் பேராசிரியர் விபா உபத்யாய எழுதிய கட்டுரையில் அந்த மாநிலத்தில்தான் யூப ஸ்தம்பங்கள் அதிகம் என்று சொல்லி கல்வெட்டுகளில் குறிப்பிட்ட யாகங்களின் பட்டியலை கொடுத்துள்ளார். இந்தக் கட்டுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பில் விரிவாகக் கொடுத்துள்ளேன்.

12 ஆண்டுகள் நீடிக்கும் யக்ஞம் பற்றிப் புராணங்கள் கூறுகின்றன. நைமிசாரண்யம் காட்டில் நடந்த ரிஷிகள் கூட்டத்தில்தான் புராணங்கள் இயற்றப்பட்டன.

அஸ்வமேதம்: அரசர்கள் செய்யும் மிகப்பெரிய யாகம் இது. இதில் நூறு வகை மிருகங்கள் பலியிடப்படும். ராஜாவின்யாகக் குதிரை எங்கெல்லாம் செல்கிறதோ அவை எல்லாம் ராஜவுக்குச் சொந்தம். அதை மறுப்பவர்கள் குதிரையைப் பிடித்து கட்டிப்போடலாம். பின்னர் பெரிய யுத்தம் நேரிடும். 200 வகையான பிராணிகள், பறவைகள், பூச்சிகள், தாவரங்கள் முதலியன தீயில் இடப்படும். இறுதியில் நாடு நாடாகச் சென்று திரும்பிய குதிரையும் பலியிடப்படும்.

புருஷமேதம்: நர பலி கொடுக்கும் யாகம். ஆனால் இது நடை பெற்றதாகத் தெரியவில்லை. ஜப்பானியர்கள் ஹராகிரி செய்துகொள்வது போல தமிழ் வீரர்கள் போருக்கு முன், கழுத்தை அறுத்து, தங்களைப் பலியிட்டுக் கொண்ட செய்திகள் தமிழ் இலக்கியம் முழுதும் இருப்பதையும், சிலைகள் தமிழ்நாடு முழுதும் இருப்பதையும் பற்றி ஏற்கனவே படங்களுடன் எழுதிவிட்டேன். மஹாபாரதத்திலும் இப்படி களபலி நிகழ்ச்சி இருப்பதையும் குறிப்பிட்டேன். இது போல புருஷமேதம் இருந்திருக்கலாம். ஆனால் அஸ்கோ பர்போலா போன்ற சம்ஸ்கிருத் அறிஞர்கள் இது அடையாள பூர்வமாக (அதாவது மனித பொம்மை செய்து) நடத்தப்பட்டதாகக் கூறுகின்றனர். பல்லாயிரக் கணக்கான குழந்தைகள் பலிகொடுக்கப்பட்ட கல்லறைகள் பஹ்ரைனில் உள்ளன. பல்லாயிரக் கணக்கான அடிமைகள் பலியிடப்பட்டதை எகிப்திய கல்லறைகளில் காண்கிறோம். பாரத நாட்டில் இப்படி எதுவும் நடக்கவில்லை.

ராஜசூயம்: சோழ மன்னன் பெருநற்கிள்ளீ நடத்திய ராஜசூய யக்ஞத்தில் சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் மூவரும் ஒரே மேடையில் அமர்ந்ததை பிராமணர்களின் முத்தீக்கு ஒப்பிட்டு அவ்வையார் பாடிய பாடல் புறநானூற்றில் (367) உள்ளது. தர்மன் செய்த ராஜசூய யாகம் பற்றி மஹாபாரதத்தில் மிக விரிவாக உள்ளது.

DSC_0081
At Sri Narayani Peedam

வாஜபேயம்: பாரதத்தின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி இந்த வாஜபேய குடும்பத்தில் பிறந்த பிராமணர். இந்த ஜாதியினர் செய்யக் கூடிய மிகப் பெரிய யாகம் இதுதான். இதில் 23 பிராணிகள் பலியிடப்படும்.

புத்ர காமேஷ்டி யாகம்: குழந்தைகள் இல்லாதவர்கள் செய்யும் யாகம். தசரதன் செய்த இந்த யாகம் குறித்து ராமாயணத்தில் விரிவாகப் பேசப்படுகிறது.

புறநானூற்றில் யாகம்

பூஞ்சாற்றுர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன் மீது ஆவூர் மூலங்கிழார் பாடிய ஆர்புதமான பாடலில் 21 வகை யாகம் பற்றிய அரிய தகவல்களைப் பாடுகிறார். உரைகாரர்கள் முக்கியத் தகவல்களைச் சேர்த்துள்ளனர்.

ஔபாசனம்: பிராமணர்கள் முதல் நான்கு வருணத்தவர்களும் திருமணம் ஆன பின்னர் செய்ய வேண்டிய தினசரி ஹோமம் இது. சந்யாசி ஆனால் இதைச் செய்ய வேண்டாம்.

சமிதாதானம்: தினமும் இரண்டு முறை பிரம்மச்சாரி மாணவர்கள் செய்யவேண்டிய ஹோமம்.

அக்னிஹோத்ரம்: தினமும் செய்யவேண்டியது. போபாலில் விஷவாயு வெளியேறி 3000 பேர் இறந்தபோது அக்னிஹோத்ரம் செய்த இரண்டு குடும்பத்தினர் மட்டும் விஷவாயு பாதிக்காமல் தப்பிய செய்தி பத்திரிகைகளில் வெளியானது.

புருஷசூக்த ஹோமம் என்பது ரிக்வேதத்தில் உள்ள புருஷசூகத மந்திரத்தைச் சொல்லி செய்வது.
ம்ருத்யுஞ்சய ஹோமம்: ஸ்ரீ ருத்ரத்தில் ஆயுளை வளர்க்கவும் மரண பயத்தைப் போக்கவும் வரும் மந்திரம் ஓம் திரயம்பகம்….. என்ன்னும் மந்திரம் ஆகும். இதைச் சொல்லி செய்யும் ஹோமம் இது.
காயத்ரி ஹோமம்: காயத்ரி மந்திரத்துடனும், பகவத் கீதா ஹோமம் கீதை ஸ்லோகங்களுடனும் செய்யப்படும்.

yagam1

Picture of Sri Narayani Amma at Narayana Peedam (See Largest Golden Temple in the World posted here)

பாபா செய்த மகத்தான யக்ஞம்

ருத்ரம் என்பது சிவனைப் போற்றும் யஜூர்வேதப் பாடலாகும். இதைப் பலமுறை உச்சரித்து ருத்ர யாகம் செய்வார்கள். நமது காலத்தில் சென்னையிலும் புட்டபர்த்தியிலும் ஸ்ரீ சத்ய சாய் பாபா இதைப் பெரிய அளவில் நடத்தி உலகையே வியப்பில் ஆழ்த்தினார்:–

ருத்ர ஏகாதசி: 11 புரோகிதர்கள் 11 முறை ருத்ரத்தைப் பாராயணம் செய்து 121 தடவை ஹோமம் செய்வது
மஹாருத்ரம்: ருத்ரத்தை 1331 (11X11X11) தடவைப் பாடி யாகம் செய்வது
அதிருத்ரம்: ருத்ரத்தை 14641 (11X 11X11X11) தடவைப் பாடி யாகம் செய்வது.

தமிழ்க் கலைகளஞ்சிய தகவல்

நூறு ஆண்டுகளுக்கு முன் ஆ. சிங்காரவேலு முதலியார் தொகுத்த அபிதான சிந்தாமணி என்ற என்சைக்ளோபீடியா தரும் தகவல் பின்வருமாறு:–

யாகங்கள்: இவை பிரமம், தெய்வம், பூத, பிதுர், மானுஷம் என்பன. இவற்றுள் வேதம் ஓதல் பிரம யாகம். ஓமம் வளர்த்தல் தெய்வ யாகம். பலியீதல் பூத யாகம். தர்ப்பணம் செய்தல் பிதுர் யாகம். இரப்போர்க்களித்தல் மனுஷயாகம். இவை வேதங்களிலும் புராணங்களிலும் கூறிய அக்னி காரியங்களாம். இவற்றின் குண்ட மண்டல மந்திராதி கிரியைகள் ஆங்காங்கு வழக்கங்குறைந்து சிதைந்தும் பிறழ்ந்தும் கிடத்தலின் அவைகளின் கிரியைகளையும் குண்ட மண்டல வேதிகைகலையும் எழுதாது பெயர் மாத்திரம் எழுதுகிறேன்.

(1).அக்னிஷ்டோமம் (2)அத்யனிஷ்டோமம் (3) உக்தீயம் (4) சோடசீ (5) வாசபேயம் (6) அதிராத்ரம் (7) அப்தோரியாமம் (8)அக்னியாதேயம் (9) அக்னிஹோத்ரம் (10) தரிச பூர்ணமாசம் (11) சாதுர்மாஸ்யம் (12) நிருட பசுபந்தம் (13) ஆக்கிரயணம் (14) சௌத்திராமணி (15) அஷ்டகை (16) பார்வணம் (17) சிராத்தம் (18) சிராவணி (19) அக்ரசாயணி (20) சைத்திரி (21) ஆச்வயுசீ (22) விசுவசித் (23) ஆதானம் (24) நாசிகேதசயனம் (25) காடகசயனம் (26) ஆருண கேதுக சயனம் (27) கருடசயனம் (28) பௌண்டரீகம் (29) சத்திரயாசம் (30) சாவித்ரசயனம்

N.B. I have given more information in the English version of this article. I am not translating everything to keep it short: swami

Contact swami_48@yahoo.com

கரிகால் சோழனின் பருந்து வடிவ யாக குண்டம்

சங்கத் தமிழ் நூல்கள் சங்க கால மன்னர்கள் செய்த பல அபூர்வ யாகங்கள் குறித்து பல அதிசயமான செய்திகளைத் தெரிவிக்கின்றன. ஒரு யாகம் முடிந்தவுடன் ஒரு பார்ப்பனரும் அவர் மனைவியும் மாயமாக மறைந்துவிட்டார்கள். இதைப் பாடிய புலவரின் பெயர் பாலைக் கவுதமனார். அவர் வேண்டுகோளின் பேரில் சேர மன்னன் 10 யாகங்களைச் செய்து முடித்தவுடன் இந்த அதிசயம் நடந்தது.(காண்க: செல்வக் கடுங் கோ வாழியாதனைப் பாலைகவுதமனார் பாடிய மூன்றாம் பத்து– பதிற்றுப் பத்து)

வேளிர் என்னும் குறுநில மன்னர்கள் தாங்கள் யாகத் தீயிலிருந்து உதித்ததாகக் கூறுகின்றனர். பஞ்ச பாண்டவர் மனைவியான திரவுபதி இப்படி யாகத்தீயில் உருவானவர். பல ராஜஸ்தானியர்கள் ,குஜராத்திகள், பஞ்சாபியர் ஆகீயோரும் இப்படிக் கூறுவது வியப்பான ஒற்றுமையாகும். கபிலரும் கூட இதே செய்தியைக் கூறுகிறார் (புறம் 201).

கரிகால் சோழன் வேத நெறி தவறாது ஆண்டவன். 2000 ஆண்டுகளுக்கு முன் ஆண்ட இவன் சோழ மன்னர்களில் மிகவும் புகழ்பெற்றவன். இவன் பருந்து வடிவ யாக குண்டம் அமைத்து அதில் யூபம் (கம்பம்) நட்டான் என்று புறநானூற்றுப் புலவர் பாடுகிறார்.

தூவியற் கொள்கை துகளறு மகளிரொடு

பருதி உருவிற் பல்படைப் புரிசை

எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்

வேத வேள்வி தொழில் முடித்த தூஉம்

புறம் 224 (கருங் குழலாதனார்)

 

கரிகாலனின் எல்லா மனைவியரும் அப்போது உடன் இருந்தனர். மனைவி உடன் இல்லாமல் வேள்வி செய்ய முடியாது. அவர்களை வேள்விக் கிழத்தியர் என்றே தமிழ் நூல்கள் கூறும்.

1008 அல்லது 10008 செங்கற்களை சுத்தி செய்து மந்திரம் கூறி ஒவ்வொரு செங்கல்லாக அடுக்குவர். சமீபத்தில் கேரளத்தில் கழுகு வடிவ யாக குண்டம் அமைத்து பெரிய யாகம் செய்தனர். கலிபோர்னியா பலகலைக் கழக ஆசிரியரகள், அறிவியல் வல்லுனர்கள் புடைசூழ இந்த யாகம் நிறைவேறியது.

தமிழ் மன்னர்கள் வேத நெறியை தங்கள் வாழ்வியல் நெறியாகக் கொண்டனர். காஞ்சி மகா சுவாமிகளும் தனது உரையில் வேதம், யாகம், பிராமணர்கள் ஆகியவற்றுக்கு சங்க காலத்தில் வழங்கும் தமிழ் சொற்களைப் பார்க்கையில் இந்தப் பண்பாடு எவ்வளவு காலத்துக்கு முன் எவ்வளவு ஆழ வேரூன்றியிருக்க வேண்டும் என்கிறார்.

வெளி நாட்டுக் காமாலைக் கண்ணர்கள் பொய்யான ஆரிய திராவிட வாதத்தை அவர்களுடைய மதத்தைப் புகுத்த நம் முன் வைத்ததால் நாம் மதி மயங்கிக் குழம்பிவிட்டோம்.

கல்யாண மந்திரங்களில் சப்தபதி என்னும் ஏழடி நடக்கும் மந்திரம் முக்கியமான மந்திரமாகும். மணப் பெண்ணும் மண மகனும் கையைப் பிடித்துக் கொண்டு தீயை வலம் வருவார்கள். இந்த மந்திரங்களின் அர்த்தம் தமிழ் திரைப் பட காதல் பாடல்களை எல்லாம் மிஞ்சிவிடும். கண்ணகியும் கோவலனும் தீயை வலம் வந்து ஐயர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டதை சிலப்பதிகாரம் பத்திரிக்கை நிருபர் தோற்றுப் போகும் அளவுக்கு அழகாக வருணிக்கிறது.

ஏழடிகள் ஒருவருடன் நடந்து சென்றால் பந்தமும் பாசமும் உறுதி பெற்றுவிடும் என்று ரிக்வேதம் சொல்லுகிறது. கரிகாலன் தன்னைப் பார்க்க வந்தவர்களை வழி அனுப்புகையில் வேத நெறிப்படி ஏழு அடிகள் கூடவே நடந்து சென்று வழி அனுப்புவானாம்.

 

பால்புரை புரவி நால்குடன் பூட்டிக்

காலின் ஏழடிப் பின் சென்று கோலின்

தாறு களைந்து ஏறு என்று ஏற்றி வீறு பெறு

–பொருநர் ஆற்றுப்படை வரிகள் 165-167

 

மதுரைக் காஞ்சி எழுதிய மாங்குடிக் கிழார் இன்னும் ஒரு அதிசிய விஷயத்தைச் சொல்லுகிறார். மற்ற எல்லா நாட்டு மன்னர்களும் சேவல் கூவும் சத்தத்தைக் கேட்டு எழுந்திருப்பான். அனால் மதுரைப் பாண்டிய மன்னனோவெனில் ஐயர்கள் முழங்கும் வேத ஒலியைக் கேட்டு எழுந்திருப்பான் என்று.

சிறுபாண் ஆற்றுப் படை எழுதிய புலவர் இன்னும் ஒரு வியப்பான விஷயத்தைச் சொல்லுகிறார். பிராமணர்கள், பாணர்கள் போன்றோர் நல்லியக்கோடன் அரண்மனையில் 24 மணி நேரமும் அனுமதியின்றி உள்ளே போகலாம் என்கிறார்.

 

பொருனர்க் காயினும் புலவர்க் காயினும்

அருமறை நாவின் அந்தணர்க்காயினும்

அடையா வாயில் (சிறு பாண்—வரிகள் 203-206)

 

பாண்டிய மன்னர்களில் மிகவும் பழைய மன்னர்களில் ஒருவன் முதுகுடுமிப் பெருவழுதி. அவனுக்கு அடைமொழியே பல் யாக சாலை முது குடுமிப் பெரு வழுதி என்பதாகும். நாடு முழுதும் யாகத் தூண்கள் இருக்குமாம் (புறம் 6,15). அவன் தலை தாழ்வது இரண்டே முறைதானாம். ஒன்று சிவன் கோவிலில், இரண்டு நாலு வேதம் படித்த அந்தணர் முன்பு (புறம் 6).

அவ்வையாருக்கு ஒரே மகிழ்ச்சி. ஏன் தெரியுமா? உலகில் 1500 ஆண்டுகளுக்குக் குடுமி பிடிச் சண்டை போட்ட ஒரே இனம் தமிழ் இனம் தான். உள் சண்டையினாலேயே அழிந்த ஒரே இனம் என்ற பெருமை உடைத்து. அப்பேற்பட்ட மூன்று தமிழ் மன்னர்களும் ஒரே மேடையில் வீற்றிருந்ததைப் பார்தவுடன் அவ்வைப் பாட்டிப் பூரித்துப் போய்விட்டார். எப்போது தெரியுமா? சோழ மன்னன் பெரு நற் கிள்ளி ராஜசூய யாகம் செய்தபோது –ஆகாயத்திலுள்ள நட்சத்திரங்களை விட நீங்கள் நிறைய நாட்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று பாடினார் (புறம் 367)

அப்போது பெருநற் கிள்ளியுடன் சேரமான் மாரி வெண்கோவும் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியும் ஒருங்கே இருந்தனர்.

ஒவ்வொரு மன்னனும் என்ன யாகம் செய்தான் என்பதை தொல்பொருட்துறை அறிஞரும் வரலாற்று நிபுணருமான டாக்டர் நாகசாமி அவர்கள் கல்வெட்டு இலக்கியச் சான்றுகளுடன் யாவரும் கேளிர் என்னும் அவரது நூலில் பட்டியல் இட்டிருக்கிறார். ஒவ்வொரு மன்னரின் கோத்திரம் என்ன என்பதையும் செப்பேட்டுச் சான்றுகளுடன் எழுதி இருக்கிறார். சிம்மவர்மன் என்ற பல்லவ மன்னன் பத்து அஸ்வமேத யாகங்களைச் செய்ததாக சிவன் வாயில் கல்வெட்டு கூறுகிறது.

 

புதிய விஷயம்: அஸ்வமேத பாண்டியன்

குப்தர்கள் அஸ்வமேத யாகம் செய்தவுடன் குதிரைப் படத்துடன் தங்க நாணயங்களை வெளியிட்டார்கள். அப்படி தமிழ் மன்னர்களின் தங்க நாணயம் கிடைக்க வில்லை. ஆனால் ஒரு பாண்டிய மன்னனின் செப்பு நாணயம் குதிரைப் படத்துடன் கிடைத்துள்ளது. இது முதுகுடுமிப் பெருவழுதியாக இருக்கலாம். ஏனெனில் கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த உலகின் மாபெரும் கவிஞர்களில் ஒருவரான காளிதாசன் அவனது ரகுவம்ச காவியத்தில் பாண்டிய மன்னர்கள் அவப்ருத ஸ்நானத்தால் நனைந்ததாக எழுதி இருக்கிறார். அவரது காலத்தில் வாழ்ந்த முதுகுடுமிப் பெருவழுதியையே இது குறிக்கிறது. யாகம் செய்யும்போது குளிப்பதை அவப்ருத ஸ்நானம் என்று அழைப்பர். காளிதாசனின் காலம் கி.மு முதல் நூற்றாண்டு என்பதற்கு சங்கத் தமிழில் 200க்கும் மேலான சான்றுகள் இருக்கின்றன. (இதை எனது காளிதாசனின் காலம் என்ற கட்டுரையில் காண்க).

‘பொய்யா நாவிற் புகழ்’ உடைய கபிலர் தரும் இன்னொரு வியப்பான தகவல் (புறம்122): மலையமான் திருமுடிக்காரியின் நாட்டை யாரும் வெல்லவும் முடியாது, படை எடுக்கவும் முடியாதாம். ஏனேனில் நாடு முழுதையும் அவன் ஏற்கனவே அந்தணர்க்கு தானமாகக் கொடுத்துவிட்டானாம்!

 

கடல் கொளப்படா அது, உடலுநர் ஊக்கார்,

கழல் புனை திருந்து அடிக் காரி! நின் நாடே;

அழல் புறந்தரூஉம் அந்தணரதுவே;( புறம் 122—கபிலர்)

 

வேதங்களை ஏற்றுப் போற்றும் தமிழ் இலக்கியங்கள் என்ற நூலில் திரு கே சி இலக்குமிநாராயணன் , ஒரு கலைக் களஞ்சியம் கொள்ளும் அளவுக்கு தகவல்கள் தந்துள்ளார் என்பதையும் இங்கே குறிப்பது பொருத்தமாக இருக்கும்.

***********************