திருவாசக சுகம்
இறைவன் ஏமாந்தான்! சதுரன் யார்? மணிவாசகரின் ஹஹ்ஹா!
Written by S Nagarajan
Post No.2242
Date: 14 October 2015
Time uploaded in London: 7-47 AM
Thanks for the pictures.
Don’t use pictures. Don’t reblog it at least for a week.
ச.நாகராஜன்
தன் பெண் ஒருவனைக் காதலிப்பதை அறிந்த தாய் ஒருத்தி பதறிப் போனாள். தன் கணவருக்கு மட்டும் அது தெரிந்தால் ..?
ஆனால் பெண் அம்மாவிடம் தீர்க்கமாகப் பேசினாள். அந்தப் பையன் நல்லவன், சாமர்த்தியமானவன் என்றும் மணந்தால் அவனையே மணப்பேன் என்றும் உறுதிபடக் கூறியதோடு அப்பாவிடம் நல்ல விதமாக எடுத்துச் சொல்ல தூதும் அனுப்பினாள்.
விஷயத்தைக் கேட்ட தந்தை திகைத்துப் போனார். சரி, பையனை வந்து என்னை பார்க்கச் சொல் என்றார்.
பையனும் வந்து பவ்யமாக நின்றான்.
“காதலிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். படிக்கின்ற வயது. நல்ல காலேஜில் இடம் கிடைக்க வழி செய்ய வேண்டும். அங்கு கேட்கப்படும் நிறைய ஃபீஸைத் தர வேண்டும். இதற்கு என்ன செய்வதாக உத்தேசம்?”
பையன் பதில் சொன்னான்:”எல்லாம் கடவுள் பாத்துக்குவார்”
தந்தை தொடர்ந்தார்: படிப்பு முடிந்தவுடன் நல்ல கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்க வேண்டும்? எப்படிக் கிடைக்கும்?”
பையன் பதில் சொன்னான்:”எல்லாம் கடவுள் பாத்துக்குவார்”
“அது சரி, கல்யாண செலவு வேறு நிறைய ஆகும். பின்னர் குடும்பம் என்று வந்தால் குழந்தை குட்டி என்று வேறு செலவு இருக்கும். ஒரு வீடு, கார் எல்லாம் வாங்க வேண்டாமா? அதற்கு என்ன செய்யப் போகிறாய்?”
பையன் பதில் சொன்னான்:”எல்லாம் கடவுள் பாத்துக்குவார்”
பையனை அனுப்பி விட்டார் தந்தை. அதுவரை தள்ளி இருந்த தாய் நடந்தது என்ன என்று தெரிந்து கொள்ளூம் ஆவலுடன் ஓடி வந்தாள். “எப்படிங்க பையன்?”
என்றாள்.
“நிறைய கேள்வி கேட்டேன். நல்லாத் தான் பதில் சொல்றான். ஆனால் என்னைக் கடவுளா நினைக்கிறது தான் கொஞ்சம் ஓவரா இருக்கு!” என்றார் தந்தை!
*
படம்: சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்
எப்போதுமே வணிக பேரத்தில் சாமர்த்தியமாக ஈடுபட்டு ‘நரியைப் பரியாக்கிய புகழ்’ மணி வாசகர் இப்போது கடவுளிடமே தன் பேரத்தைக் காட்டி விட்டார்.
ஒன்று கொடுத்தார்; ஒன்றை வாங்கினார்.
“தந்தது உன் தன்னை, கொண்டது என் தன்னை!”
இப்போது அவருடைய சாமர்த்தியம் வெளிப்படுகிறது. இதில் திறமைசாலி யார்?
யார் கொலோ சதுரர்?
எனக்குக் கிடைத்ததோ Never ending Bliss – அந்தம் ஒன்றில்லா ஆனந்தம்!
உனக்கு என்ன கிடைத்தது, என்னிடம்?
நானோ பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன். எனக்கு செம்மையே ஆய சிவபதம் அல்லவா அளித்து விட்டாய்!
நம்மில் யார் சதுரன்? உன்னைப் பிடித்த பிடி விட மாட்டேன். சிக்கெனப் பிடித்து விட்டேன்!
கோயில் திருப்பதிகம் பாடலைப் பாருங்கள்:
தந்தது உன் தன்னை, கொண்டது என் தன்னை
சங்கரா ஆர் கொலோ சதுரர்?
அந்தம் ஒன்றில்லா ஆனந்தம் பெற்றேன்
யாது நீ பெற்றதொன்று என்பால்?!
சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்
திருப்பெருந்துறை சிவனே!
எந்தையே ஈசா! உடலிடம் கொண்டாய்
யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே!
*
தந்தையிடம் பேசிய பையனை எடுத்துக் கொள்வோம், யார் சதுரர்? தந்தையா, பையனா?
இங்கே மணிவாசகரா, சிவபிரானா!
இப்படிப்பட்ட நிகழ்வுகள், பேரங்கள்,(டீல்) எப்படி நடைபெறுகின்றன?
‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’ என்பது தான் பதில்!
எதற்கும் அவன் அருள் இருக்க வேண்டும். அப்போது தான் அவனுடைய நினைவை ஊட்டும் இந்தக் கட்டுரை கூட உங்கள் பார்வையில் படும்.
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!
சிவாய நம் என்றிருப்பார்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை!
–சுபம்–
You must be logged in to post a comment.