


Post No. 8514
Date uploaded in London – 15 August 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தமிழ்ப் பழமொழி அகராதியில் ஓர் பழமொழி இருக்கிறது . அதில் ‘ஹம்ச பாதம்’ , ‘அன்னப் பறவையின் கால்’ , என்று வரும்:-
ஆரம்பிக்கிறதற்கு பின்னே ஹம்ச பாதமா ?
ஆரம்பித்தவுடனே ஹம்சபாதமா? என்றும் சொல்லலாம். அதாவது உடனே தவறு செய்வது அல்லது எதையோ எழுத அல்லது சொல்ல மறந்துபோனதைக் குறிக்கும் பழமொழி இது.
‘ஹம்சபாதம்’ என்றால் என்ன ?
எழுதும்போது விட்டவற்றை , மேல் எழுதுவதற்கு , வரியின் கீழ் இடும் குறி ‘ஹம்சபாதம்’ .
ஹம்சம் எனப்படும் அன்னப் பறவையின் கால்களைப் போல இந்தக் குறி இருக்கும்.

நம்மில் பலரும் கடிதம் எழுதும்போதோ கட்டுரை எழுதும்போது இப்படி ஹம்ச பாதக் குறியீடு போட்டிருப்போம். அதாவது சிந்திக்கும் வேகம் அதிகம்; எழுதும் வேகம் குறைவு. அதனால் இந்தப் பிழை வருகிறது. இரண்டு வேகமும் சரி சமமாக இருப்பதே நல்லது.
இதே போல சிலர் பேசும்போதும் வேகமாகப் பேசுவதால் சொல்லோ எழுத்தோ அடிபட்டு காயப்படுகிறது. அதுவும் பிழையே. ஊடகங்களில் செய்தி வாசிப்போர் , சிலர், பிழை ஏற்பட்டால், நிறுத்திவிட்டு பிழையைத் திருத்திக் கொள்வர். மற்றும் சிலர் பிழையே விடாதது போல, அடுத்த வாக்கியத்திற்குச் செல்வர்.
ஆர் எஸ் எஸ் (R S S ) இயக்கத்தின் தலைவராக இருந்த மாதவ சதாசிவ கோல்வால்கர் (குருஜி ) கடிதம் எழுதும் பொழுது, அடித்தல் திருத்தலே இராதாம் . மதுரையில் இருந்த புகழ் பெற்ற வழக்கறிஞரும் ஆர் எஸ் எஸ் இயக்கப் பிரமுகருமான ஆ .தக்ஷிணா மூர்த்தி (அண்ணாஜி) இதை எங்களிடம் சொல்லுவார்.அவருக்கு குருஜியிடமிருந்து கடிதம் வந்த பெருமையைச் சொல்லுவதை விட, நாமும் அது போன்ற விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்ற அறிவுரையே பிரதானம்.
என்னிடம் லண்டன் பல்கலைக் கழகத்தில் சுமார் 20 ஆண்டுகளில் 350 முதல் 400 பேர் வரை தமிழ் படித்திருப்பார்கள் . இது தவிர ‘பிரைவேட் கிளாஸ்’.
நான் அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் தமிழ் கற்பிக்கப் பயன்படுத்திய புஸ்தகத்தை இங்கும் பயன்படுத்தினேன். அது கௌசல்யா ஹார்ட் (TAMIL FOR BEGINNERS by KAUSALYA HART) எழுதிய புஸ்தகம். முதல் பகுதியில் 45-க்கும் மேலான பாடங்கள் இருக்கும். இரண்டாவது பகுதியில் ஒவ்வொரு பாடத்திலும் பின்பற்றப்பட்ட இலக்கண (GRAMMAR) விஷயங்கள் இருக்கும் . மாணவர்கள் வகுப்புக்கு வரும் முன்பு பாடத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டு வரவேண்டும். அதை நான் பாடம் நடத்துகையில் , அவர்கள் திருத்தி எழுதிக் கொள்வர். பயிற்சிகளை பாடம் முடித்த பின்னர் தொடர்வோம். அதை மறு வகுப்புக்கு (Next Class) வருகையில் சமர்ப்பிப்பர். நான் அதைத் திருத்திக் கொடுப்பேன்.


சுமார் 400 மாணவ, மாணவியரில் யாரும் 4, 5 கிளாஸுக்குப் பின்னர் சுணக்கம் காட்டுவர்.15 பாடம் முடித்த நிலையில் அவர்கள் 7 , 8 பாடம்தான் முடித்திருப்பர் . ஆனால் யாஸ்மின் (Yasmeen) என்ற ஒரு பெண் மட்டும் அத்தனை பாடங்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வாரம் தோறும் சமர்ப்பித்தார். அச்சுப் போன்ற எழுத்து!. ஹம்சபாதமே கிடையாது!! சில எழுத்துப் பிழைகள் மட்டும் இருக்கும்.
அச்சுப் போன்ற (BEAUTIFUL HAND WRITING) கையெழுத்துக்காக நான் ‘கூகிள்’ செய்தபோது தமிழில் பாரதியார் பாடலைத் தப்பும் தவறுமாக எழுதி இருந்த படமே வந்தது. அதைப் பார்த்தபோதும், ஹம்சபாதம் பற்றிப் படித்தபோதும் யாஸ்மின் என்ற உண்மை மாணவியின் நினைவு வந்தது. அவர் எழுதிய பாடங்களை நான் யுனிவர்சிட்டியில் போட்டோகாப்பி எடுத்து வைத்திருந்தேன். சில பகுதிகளை இங்கே இணைத்துளேன்.

***
நான் கட்டுரையில் விட்ட எழுத்துப் பிழைகளைப் பார்த்த — பார்த்துச் சகிக்காத — ஒரு பெண்மணி எனக்கு பேஸ்புக் (Facebook) கிலேயே ஒரு ‘அடி’ கொடுத்துவிட்டார்; வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஒரு ‘காமெண்ட்’ (COMMENT) எழுதியிருந்தார் —
“மிஸ்டர் சுவாமிநாதன், உங்கள் கட்டுரைகளை எனக்கு முன்கூட்டி அனுப்பினால் ‘ப்ரூப் ரீடிங்’ செய்து தருவேனே!’ – என்று.
எனக்குப் புரிந்தது. பல பிழைகள் ‘கூகிள்’ செய்யும் பிழைகள்; நாம் ஒன்று அடித்தால் அதில் வேறொன்று வருகிறது!!! பொறுமையாக தவறுகளைத் திருத்த வேண்டும் என்பது உண்மைதான் !
வாழ்க யாஸ்மின் ! வளர்க்க தமிழ் எழுத்துக் கலை!