WRITTEN BY S NAGARAJAN Post No. 10,592 Date uploaded in London – – 24 JANUARY 2022
Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com
யோக வாசிஷ்டம் மோக்ஷம் அடைவது எப்படி? வஸிஷ்டர் கூறிய விதஹவ்யன் கதை!
ச.நாகராஜன் மோக்ஷம் அடைவது எப்படி? அது எங்கே இருக்கிறது? வஸிஷ்டர் தெளிவாக பதிலைத் தருகிறார்.
மோக்ஷம் என்பது சுவர்க்கத்திலும் இல்லை, பாதாளத்திலும் இல்லை அல்லது பூமியிலும் இல்லை. அது பிரக்ஞையைப் பொறுத்து அமைந்துள்ள ஒன்று. அது தான் ஆத்ம ஞானம்! மோக்ஷத்தை விரும்பும் ஒருவன் ஆசைகள் வசப்படுகிறான், எண்ணங்கள் வசப்படுகிறான், ஆகவே அவனுக்கு பந்தம் என்னும் தளை ஏற்படுகிறது.
ஆகவே வஸிஷ்டர் மிகத் தெளிவாகக் கூறுகிறார் -“ மோக்ஷம் அடைய வேண்டும் என்ற ஆசையைக் கூட விட்டு விடு” என்று!
வஸிஷ்டர் ராமருக்கு இது சம்பந்தமாக ஒரு கதையைச் சொல்ல ஆரம்பித்தார். விதஹவ்யன் என்ற ஒருவர் ஆத்ம ஞானம் பெற விரும்பினார். அதற்காக மலைகளுக்குச் சென்றார். மனம் மற்றும் உடல் சம்பந்தமான உபாதைகளிலிருந்து விடுபட இதுவே சரியான வழி என்று அவர் நினைத்தார். சாஸ்திரங்கள் கூறிய படி என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அந்தக் கர்மங்களை எல்லாம் ஒன்று விடாமல் செய்தார். ஆனால் அவருக்கு சாந்தி கிடைக்கவில்லை. அலைபாயும் மனம் அப்படியே தான் இருந்தது.
புலன்களை அடக்கினார். மனத்தை அடக்கினார். ஒருவாறாக கடைசியில் சமாதி நிலையில் இருக்க அவரால் முடிந்தது. சமாதி நிலையில் நெடுங்காலம் இருந்தார். இதனால் அவர் தனது உடல் இறுகிப் போய்விட்ட நிலையை அடைந்திருப்பதை உணர்ந்தார். அவரால் நகரக் கூட முடியவில்லை. தான் முயற்சி செய்து எப்படியாவது நகர வேண்டுமா அல்லது இப்படியே இதே நிலையில் தொடர்ந்திருக்க வேண்டுமா – அவருக்கு ஒரே குழப்பமாக இருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார். விதஹவ்யனைப் பார்த்த சூரிய பகவான் அவரது பிரச்சினை என்னவென்பதைப் புரிந்து கொண்டார்.
அவர் மீது பிரகாசமான தன் ஒளியைப் பாய்ச்சினார். அவரை அவரது பிரச்சினையிலிருந்து விடுவித்து அவரது உடலை அவர் நகர்த்துமாறு செய்தார். விதஹவ்யரால் இப்போது நகர முடிந்தது. நேராக மலையிலிருந்து இறங்கி மக்கள் அனைவரும் இருக்கும் இடத்திற்குச் சென்றார். இப்போது மைத்ரி என்னும் அனைவருடனுமான சம பாவ நட்புக் கொண்டு எல்லோருடனும் பழக முடிந்தது. அத்துடன் கருணை என்னும் அளப்பரிய இரக்கத்துடன் அனைவருடன் பழக முடிந்தது. அவர் விருப்பம், ஆசை, வெறுப்பு, சந்தோஷம், துக்கம் ஆகிய அனைத்து நிலைகளையும் கடந்தார்.
வஸிஷ்டர் இந்தக் கதையைக் கூறியதோடு இது சொல்லும் நீதியை விளக்கலானார். சிலர் கஞ்சா, அபினி போன்ற போதை மருந்துகளை உட்கொண்டு மனதை அடக்க முயல்வதை வஸிஷ்டர் வெகுவாகக் கண்டித்தார். இதன் மூலம் மனதை சாந்தி அடையச் செய்யவோ அல்லது அடக்கவோ முடியாது என்று தெள்ளத் தெளிவாக அவர் கூறினார். அத்துடன் சில சித்திகளை அடைந்தவுடன் அதை அனைவருக்கும் காட்டும் விருப்பத்தையும் அவர் கண்டித்தார். அந்த அதீத சக்திகளைக் காண்பிக்கக் கூடாது என்று அவர் அறிவுரை கூறினார். ஹத யோகம் மூலம் உடலைக் கட்டுக்குள் கொண்டு வரலாமே தவிர மனதை அடக்கவே முடியாது என்றும் அவர் கூறினார்.
உலகியல் என்பது உடலிலும் மனம் என்னும் கருவியிலும் இருக்கிறது என்று அவர் விளக்கினார். ஆகவே மோக்ஷம் பற்றி எண்ணும் ஒருவன் முதலில் எல்லா வாஸனைகளையும் – ஆசைகளையும் – வெல்ல வேண்டும் என்றார் அவர். இது வாஸனா க்ஷயம் எனப்படும். வாஸனா க்ஷயம் அடைந்தவுடன் மனோ நாசம் ஏற்படும். அலைபாயும் மனம் இருக்காது. ஆத்ம விசாரம் செய்யும் ஒருவனின் பாதையே சரியான பாதை என்பது வஸிஷ்டரின் முடிவு. இந்த விசாரத்தினால், வைராக்யத்துடன் தொடர்ந்து செய்யும் இந்தச் செய்கையால், ஒருவன் படிப்படியாக முன்னேறி மோக்ஷத்தை அடைய முடியும். எவன் ஒருவன் அமைதியான மனதுடன் இருக்கிறானோ, எவன் ஒருவன் எல்லா ஆசைகளையும் துறந்து விடுகிறானோ, அவன் ஏழையாக இருந்தாலும் சரி பணக்காரனாக இருந்தாலும் சரி, அவன் உயரிய அந்தஸ்தில் இருந்தாலும் சரி, தாழ்ந்த அந்தஸ்தில் இருந்தாலும் சரி, அவன் சந்தோஷத்தை அடைவான்.
ஆக இந்தக் கதை மூலம் ஆத்ம விசாரம் வலியுறுத்தப்படுகிறது.
இதையே பகவான் ரமண மஹரிஷி திருப்பித் திருப்பித் தன்னை அடைந்தவர்களுக்கெல்லாம் சொல்லி வந்தார். இதுவே மோக்ஷத்திற்கான ரகசியம். யோக வாசிஷ்டத்தில் வரும் 55 கதைகளில் 25வது கதையாக இது அமைகிறது. இது உபசாம பிரகரணத்தில் வரும் கடைசி கதையாக அமைகிறது.
tags — யோக வாசிஷ்டம், மோக்ஷம், வஸிஷ்டர், விதஹவ்யன், கதை,
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
யோக வாசிஷ்டக் கதைகள்!
அத்யாத்ம விசாரம் என்னும் அதி அற்புத ரகசியம்!
ச.நாகராஜன்
மனித வாழ்க்கையில் எழும் சந்தேகங்கள் பல. அவற்றில் ஒன்று – ஆத்மாவையும் உடலையும் பிரிப்பது எது? என்பதாகும்.
ராமருக்கும் இந்த சந்தேகம் எழவே வசிஷ்ட மஹரிஷி அதை நீக்கும் விதமாக ஒரு கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.
வசிஷ்டர் ராமரை ஆகாயத்துடன் தன்னை ஒப்பிட்டுப் பார்க்கச் சொன்னார். எல்லையற்ற விண்வெளி அது! பிரபஞ்சமோ அகண்டமானது!! அத்துடன் மட்டுமல்ல ராமரை ‘அத்விதீயா’ – அதாவது இரண்டற்ற ஒன்றே என்று நினைத்துப் பார்க்கச் சொன்னார். அப்போது சர்வத்ரம் – எங்கும் வியாபிக்கும் தன்மை கிடைக்கும் என்றார்.
வசிஷ்டரின் உபதேசப்படி, மோக்ஷம் என்பது சொர்க்கத்திலும் இல்லை பூமியிலும் இல்லை அல்லது வேறு எந்த உலகத்திலும் இல்லை. அது பிரக்ஞையைப் பொறுத்த ஒன்று தான்! அது ஆத்மஞானம் எனப்படும்.
மோக்ஷத்தை விரும்பும் ஒருவன் ஆசைகளினால் பீடிக்கப்பட்டு அலைவதால் அதை அடைய முடிவதில்லை. செயல்களில் ஒருவன் ஈடுபட்டுக் கொண்டே இருந்தாலும் கூட அவன் எண்ணத்தை அலைய விடக் கூடாது. ஆக எண்ணங்கள் கட்டுப்படுத்தப்பட்டால், செயலுக்கும் எண்ணத்திற்கும் (இரண்டாக) வேறாக உள்ள வித்தியாசம் போய் விடும்.
இதை விளக்க சுரகுவின் கதையைச் சொல்ல ஆரம்பித்தார் வசிஷ்டர். சுரகு ஆதிவாசிகளின் ராஜா. அவன் மிகுந்த வலிமை வாய்ந்த அரசனாக இருந்தான். நாட்டின் வளமோ அபாரமாக இருந்தது. அவனுக்கு ஒரு ஆச்சரியம் எழுந்தது – தனது ஆடம்பர வாழ்க்கைக்காக தான் எதற்காகத் தனது குடிமக்களை வருத்த வேண்டும் என்று. மற்றவர்களுக்கும் இதே எண்ணம் இருந்ததையும் அவன் உணர்ந்தான். ஆகவே தனது செல்வத்தை எல்லாம் குடிமக்கள் அனைவருக்கும் தர அவன் முடிவு செய்தான். அத்தோடு தவறு செய்தவர்களைத் தண்டிக்கும் போதும் அவன் மிகவும் வருத்தமடைந்தான். இப்படி அவனுக்குள்ளாக ஏராளமான முரண்பாடுகள் எழ ஆரம்பித்தன.
ஒரு சமயம் மஹரிஷி மாண்டவ்யர் அவனைப் பார்க்க வந்தார். சுரகு தனது எண்ணத்தில் உள்ள முரண்பாடுகளை அவரிடம் சொன்னான். அவரிடம் எப்படி தனது அனைத்து மக்களையும் – அவர்கள் உயர்ந்த அந்தஸ்தில் இருந்தாலும் சரி தாழ்ந்த அந்தஸ்தில் இருந்தாலும் சரி, சட்டத்தை மதிப்பவர்களாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி அனைவரையும் – சமமாக பாவிக்கும் தன்மையைத் தான் அடைய முடியும் என்று கேட்டான்.
சூரியன் எந்த வித பாரபட்சமும் இன்றி எப்படி அனைவருக்கும் ஒரே மாதிரியாக தன் ஒளியை நல்குகிறானோ அதே போலத் தன்னாலும் இருக்க முடியுமா என்று அவன் கேட்டான்.
உடனே மஹரிஷி அவனை நோக்கி அவனது உடலைப் பற்றியும் உடல் அங்கங்களைப் பற்றியும் அவனது செயல்களைப் பற்றியும் தீவிரமாக சிந்திக்குமாறு அறிவுறுத்தினார். அவனுக்கு மிகவும் பிடித்தவர்கள், அவன் வெறுப்பவர்கள் கொண்ட அவனது சுற்றம் உறவு நண்பர்கள் மற்றும் இதர அனைத்தையும் பற்றி அவனை சிந்தித்துப் பார்க்கச் சொன்னார்.
இப்படிப்பட்ட (அத்யாத்ம) விசாரமானது அவனுக்கு சமமாகப் பார்க்கும் தன்மையை அவனுக்கு அளிக்கும் என்று அவர் உபதேசித்தார். இதனால் எந்த வித சம்பவங்களாலும் பாதிக்கப்படாமல் அனைவரையும் சமமாகவும் பட்சபாதமின்றியும் சமமாகப் பார்த்து உணரும் தன்மையைப் பெறலாம் என்றார் அவர்.
இப்படி உபதேசித்த பின்னர் மஹரிஷி மாண்டவ்யர் அரசனிடமிருந்து விடை பெற்றுச் சென்று விட்டார். அரசன் சிந்திக்க ஆரம்பித்தான். தான் உடல் அல்ல என்பதையும் எதுவும் அவனுக்குச் சொந்தமானது இல்லை என்பதையும அவன் உணரத் தலைப்பட்டான். இறுதியில் ஆத்மாவிற்கும் பிரபஞ்சத்திற்கும் உள்ள இணக்கத்தை அவன் உணர்ந்தான். சூரியனைப் போலவே எந்த வித சம்பவங்களாலும் அவன் பாதிக்கப்படவில்லை. தனது கடமைகளை அனைவரிடமும் அவர்களின் செயல்களால் பாதிக்கப்படாமல் செய்ய ஆரம்பித்தான். அவன் ஒரு சமதர்ஷி – அனைவரையும் சமமாகப் பார்த்து பாவிக்கும் தன்மை கொண்டவனாக – ஆனான். இப்போது அவனால் அனைவரையும் சமமாகப் பார்க்க முடிந்தது.
கதையை முடித்த வசிஷ்டர் ராமரிடம், அத்யாத்ம விசாரத்தில் ஈடுபடும் ஒருவன் அனைத்து துக்கங்களிலிருந்தும் விடுபட்டு எப்போதும் சந்தோஷமாக இருப்பான் என்றார். வியவஹாரம் எனப்படும் அன்றாட வாழ்க்கைச் சம்பவங்களாலும் சூழ்நிலைகளாலும் அவன் பாதிக்கப்படுவதே இல்லை என்பதையும் கூறினார்.
ராமருக்கு அத்யாத்ம விசாரத்தின் அருமையும் அதன் ரகசியமும் இப்போது புரிந்தது.
யோக வாசிஷ்டம் விளக்கும் இந்த ரகசியம் நமக்கும் இப்போது புரியும் – அத்யாத்ம விசாரத்தில் ஈடுபட்டு அதன் அபாரமான பலனை நாமும் அடையலாம்.
யோக வாசிஷ்டத்தில் பேருண்மைகளை விளக்கும் அற்புதமான கதைகள் உள்ளன. அவற்றில் மிகச் சுவையானதும் அற்புதமானதும் ஆச்சரியத்தைத் தரக்கூடியதுமான ஒரு கதை லீலாவின் கதை.
உற்பத்தி பிரகரணத்தில் 15ஆம் அத்தியாயம் முதல் 60ஆம் அத்தியாயம் முடிய இந்தக் கதை சுவையாக விவரிக்கப்படுகிறது.
இங்கு சுருக்கத்தைக் காண்போம்:
பத்மா என்ற அரசன் தனது மனைவியான லீலா என்ற அரசியுடன் மிகுந்த சந்தோஷத்துடன் வாழ்ந்து வந்தான். லீலாவிற்கு ஒரு ஆசை பிறந்தது. தானும் தனது கணவரும் மரணமே அடையாமல் என்றும் ஒன்றாக சந்தோஷமாக இருந்து பூவுலகில் வாழ வேண்டும் என்பது தான் அந்த ஆசை. லீலா தனது நாட்டில் இருந்த அறிஞர்கள் அனைவரையும் வரவழைத்தாள்.எப்படி மரணமில்லாப் பெருவாழ்வை அடைந்து இந்தப் பூவுலகிலேயே இருக்கலாம், அதற்கு ஒரு வழியைச் சொல்லுங்கள் என்றாள் அவள். அறிஞர்கள் அனைவரும் திகைத்தனர். அனைவரும் ஒருமித்தமாக மரணம் அடையாமல் இருக்கவே முடியாது, மனிதனாய்ப் பிறந்தவனுக்கு மரணம் நிச்சயம் உண்டு என்றனர்.
லீலா அவர்கள் அனைவரையும் போகச் சொன்னாள். சரஸ்வதி தேவியை நோக்கிக் கடும் தவம் புரிய ஆரம்பித்தாள். அதே சமயம், கணவனுக்கான தனது பணிகளை அவன் சந்தேகப்படாமல், விடாமல் தொடர்ந்து செய்து வந்தாள். சரஸ்வதி தேவி அவளது தவத்திற்கு மெச்சி நேரில் அவள் முன் பிரசன்னமானாள்.
லீலாவை நோக்கி, “உனக்கு என்ன வேண்டும்” என்று கேட்டாள் சரஸ்வதி தேவி.
இரு வரங்கள் வேண்டும் என்றாள் லீலா.
“அவை என்ன, சொல்” என்றாள் சரஸ்வதி.
“ஒன்று, எனது கணவர் இறக்கும் போது அவரது ஜீவன் அரண்மனையிலேயே இருக்க வேண்டும். இரண்டாவது நான் விரும்பிய போதெல்லாம் சரஸ்வதி தேவியாகிய நீங்கள் எனக்கு முன்னால் நேரில் பிரசன்னமாக வேண்டும். இவை தாம் நான் வேண்டும் இரண்டு வரங்கள்” என்றாள் லீலா.
“தந்தோம் இரு வரங்களை, உனக்கு” என்று கூறிய தேவி மறைந்தாள்.
சில காலம் கழிந்தது. ஒரு நாள் மன்னன் பத்மா மரணமடைந்தான். மிகுந்த துயரத்தை அடைந்த லீலா சரஸ்வதி தேவியை நேரில் வருமாறு பிரார்த்தித்தாள். நேரில் பிரசன்னமான சரஸ்வதி, “பிணத்தை மலர்களினால் மூடு” என்று கூறியதோடு, பின்னால் அவன் திருப்பி வருவான் என்றாள்.
தேவி கூறியபடியே லீலா செய்தாள்.
சில நாட்கள் கழிந்தன. லீலாவிற்குத் துக்கம் தாளவில்லை. மீண்டும் சரஸ்வதியை அழைத்தாள். “என்னை என் கணவன் எங்கு இருக்கிறாரோ அங்கு அழைத்துச் செல்லுங்கள், அவர் இல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை” என்று கூறினாள்.
சரஸ்வதி அவளது உடலை விடுமாறு கூறி அவளை அவள் கணவரிடம் அழைத்துச் சென்றாள்.
இன்னொரு ராஜ சபையில் தனது கணவன் அமர்ந்திருப்பதை லீலா பார்த்தாள். இப்போது அவனுக்கு வயது பதினாறே ஆகி இருந்தது. அது மட்டுமல்ல, தனது அரச சபையில் இருந்த பலரும் கூட அங்கே அங்கம் வகிப்பதையும் அவள் பார்த்தாள். அவளுக்கு ஒரே ஆச்சரியம். இவர்கள் கூட இறந்து விட்டார்களோ என்று அவள் எண்ணினாள். அதை சரி பார்த்து விடலாமே என்று தோன்றியது அவளுக்கு.சரஸ்வதி தேவியிடம் வேண்டிக் கொள்ள அவர் அருளால் தனது அரண்மனைக்குத் திரும்பினாள். அங்கு அவளே ஆச்சரியப்படும்படி அவளது அனைத்து அரசவை உறுப்பினர்களும் இருந்தனர். அவளது கணவனின் உடலை எப்படி விட்டாளோ அப்படியே விட்டது விட்டபடி அது இருந்தது!
லீலாவிற்கு ஒரே ஆச்சரியம்! எப்படி அவளது குடிமக்கள் இங்கும் இருக்க முடிகிறது, இன்னொரு இடத்திலும் இருக்க முடிகிறது?!
இதில் எது உண்மை, எந்தக் காட்சி பொய்?
தேவியானவள் அவள் முன் தோன்றி இரண்டு அனுபவங்களுமே கனவினைப் போன்றவையே, இரண்டுமே மாயை தான் என்றாள்!
மேற்கொண்டு சரஸ்வதி வசிஷ்டர் என்ற ஒரு பிராமணரின் கதையைக் கூறினாள்.
மிக்க ஏழையான வசிஷ்டர் ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வந்தார். ஒரு நாள் அரசன் ஒருவன் வேட்டையாடச் சென்று கொண்டிருப்பதை அவர் பார்த்தார். இப்படி வலிமை வாய்ந்த அரசனாக அல்லவோ பிறக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். அடுத்த பிறவியில் அவர் பராக்ரமம் பொருந்திய ஒரு அரசனாகப் பிறந்தார். வசிஷ்டரின் மனைவியும் தொடர்ந்து இறக்கவே, அவள் அரசனின் மனைவியாக ஆனாள். சரஸ்வதி இந்தச் சம்பவம் ஒரு வாரத்திற்கு முன்னர் தான் நடந்தது என்று விளக்கினாள். அது மட்டுமல்ல, வசிஷ்டர் என்ற அந்த பிராமணரே பத்மா என்ற அரசன் என்றும் அவள் தான் வசிஷ்டரின் மனைவி என்றும் கூறினாள்.
லீலாவிற்கு ஒரே திகைப்பு, பிரமிப்பு! இது எப்படி சாத்தியம் என்று அவளுக்குத் தோன்றியது. அவள் தன் கணவர் பத்மாவுடன் பல ஆண்டுகள் அல்லவா வாழ்ந்து வந்தாள்! ஒரு வாரத்திற்கு முன்னர் மட்டுமே இறந்து போன இவர்கள் எப்படி பற்பல ஆண்டுகள் வாழ்ந்தது போலத் தோற்றமளிக்கின்றனர்? அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. சரஸ்வதியை அவள் திகைப்புடன் பார்க்க, தேவியோ, “ காலமும் வெளியும் மனக் கற்பனைகளே” என்று விளக்கினாள். ஒருவன் எதைக் கற்பனை செய்கிறானோ அதுவாகவே அவன் ஆகிறான். ஒருவன் கனவு காணும் போது வெகு தூரத்தில் அவன் இருப்பதைக் காண்கிறான். அங்கு நெடுங்காலம் வசிப்பது போலவும் அவன் காண்கிறான். ஆனால் விழித்துக் கொண்டவுடன் தனது பழைய இடத்தில் அதே காலத்தில் இருப்பதைக் காண்கிறான். கனவில் தான் கண்ட நெடுங்காலமானது கனவு கண்ட சில நிமிடங்களில் ஏற்பட்டதே தான் என்பதையும் தெரிந்து கொள்கிறான்.
லீலா இந்த விஷயத்தை இன்னும் சரி பார்த்து விடலாம் என நினைத்து சரஸ்வதி தேவியை அந்த கிராமத்திற்கு அழைத்துச் செல்லுமாறு வேண்டினாள். அங்கு வசிஷ்டரின் மகன்கள் வசிஷ்டர் இறந்து விட்டதை நினைத்து இன்னும் துக்கம் அனுஷ்டிப்பதைக் கண்டாள்.
ஆக இப்படியாக சரஸ்வதி, லீலாவிற்கு மூன்று கணவர்கள் இருப்பது மெய்யே என உணர்த்துகிறாள். வசிஷ்டர் என்ற ஏழை, பத்மா என்ற வயதான அரசன், புதிய அரசை ஆளும் இளமையான அரசன்! ஆக தேவி லீலாவை நோக்கி அவளது இந்த மூன்று கணவர்களில் யாரிடம் அவளை அழைத்துச் செல்ல வேண்டும் என்று கேட்கிறாள். லீலா தனக்கு நிறைய பிறப்புகள் இருப்பதையும் நிறைய கணவர்கள் இருப்பதையும் இப்போது உணர்ந்து விட்டதாக தேவியிடம் கூறுகிறாள்.
தேவியிடம் தன்னைத் தனது மூன்றாவது கணவனான இளைஞனான அரசனிடம் அழைத்துச் செல்லுமாறு லீலா வேண்டுகிறாள். அங்கேயோ அந்த அரசின் மீது எதிரிகள் ஒரு பெரும் படையெடுப்பைத் தொடுத்துள்ளனர். ஆகவே இளைய அரசன் தனது மந்திரிகளுடன் அந்தப் படையெடுப்பை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி ஆலோசித்துக் கொண்டிருக்கிறான். மந்திராலோசனை முடிந்த பின்னர் அரசன் தூங்கச் செல்கிறான். அப்போது தேவி அவனை எழுப்புகிறாள். தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட அரசன் தனது இரு புதிய விருந்தாளிகளைப் பார்த்து ஆனந்தம் அடைகிறான். பின்னர் தேவி தூங்கிக் கொண்டிருந்த அமைச்சரை எழுப்பி அவருடைய அரசன் பெயர் என்ன என்பதைத் தெரிவிக்குமாறு கேட்க அவர் அரசனின் பெயர் விதுரதா என்றும் அவர் இக்ஷ்வாகு வம்சத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறுகிறார்.
உடனே தேவி அரசனின் தலை மேல் கையை வைத்து அவனது இறந்த காலத்தைப் பார்க்குமாறு சொல்கிறாள். அரசன் எப்படி ஒரு வாரத்திற்கு முன்னர் தான், தான் கிராமத்தில் இறந்து விட்டதையும், அதற்கு ஒரு நாள் முன்னதாகத் தான் பற்பல ஆண்டுகள் வாழ்ந்து வந்த பத்மா என்ற அரசனாக இருந்து இறந்து போனதையும் இப்போது பல காலமாக விதுரதா என்ற பெயரில் தான் வாழ்ந்து வருவதையும் பார்த்து வியப்பின் உச்சிக்கே செல்கிறான். சரஸ்வதி இந்த மூன்றுமே மாயை என்று கூறி ஒரு போதும் அவன் இறக்கவும் இல்லை, பிறக்கவும் இல்லை என்று உணர்த்துகிறாள். உண்மையில் அவன் சுத்த விஞ்ஞானம் அதாவது சுத்தமான பிரக்ஞை என்றும் கூறுகிறாள்.
இளைஞனான அரசன் தேவியிடம் புதிய ராணியையும் புதிய அமைச்சரையும் தனது பழைய அரசுக்குக் கூட்டிச் செல்ல தனக்கு அனுமதி அளிக்குமாறு கேட்கிறான். தேவி, அதற்கு அவன் போரில் இறக்க வேண்டும் என்றும் பின்னர் தனது புது மனைவியுடனும் புது அமைச்சருடனும் அவனது பழைய உடல் கிடக்கும் இடத்திற்கு அப்படிச் செல்லலாம் என்றும் கூறுகிறாள்.
அதன்படியே அரசன் போருக்குச் சென்று அங்கே கொல்லப்படுகிறான். பிறகு தேவி அவனையும் அவனது ஒரே மாதிரியாக இருக்கும் இரு மனைவிகளையும் அதாவது பழைய லீலா, புதிய லீலா ஆகிய இருவரையும் கூட்டிச் செல்கிறாள். அங்கு உடலாகக் கிடந்திருக்கும் பழைய மன்னன் பத்மாவை உயிர்ப்பிக்கிறாள்.
இந்தக் கதை இப்படி விரிவாகச் சொல்லப்படுகிறது. பெரிய உண்மை என்னவெனில் சங்கல்பம், ஆசை, எண்ணங்கள், காலம் வெளி ஆகியவற்றின் ஒப்புமைத் தோற்றம் ஆகியவை இந்தக் கதை மூலம் நன்கு விளக்கப்படுகிறது. நாம் காணும் உலகத்திற்குள் இன்னும் பல நுண்ணிய உலகங்கள் இருக்கின்றன என்பதையும் இந்தக் கதை புலப்படுத்துகிறது. ‘புருஷா சேதனா மாத்ரம்’ – அதாவது புருஷன் என்பவன் வெறும் சேதனா தான் – ஆன்மா என்பது பிரக்ஞையே என்ற உண்மையை உணர வேண்டும். விதுரதா என்ற மன்னனின் உடல் பத்மா என்ற மன்னனின் உடலாக இருப்பது ஏன் என்றால் அதற்கான காரணம் உள்ளூர அவனிடம் இருக்கும் ஆசையே தான் – வாஸனையே அதன் காரணம் என்று இந்தக் கதை விவரிக்கிறது.
இந்தக் கதையை நன்கு ஆழ ஊன்றி சிந்திப்பதன் மூலம் பல பேருண்மைகளை அறிந்து கொள்ள முடியும்!
இதில் உள்ள உண்மைகளை ஹ்யூ எவரெட் (Hugh Everett)என்ற நாஸா விஞ்ஞானி சமீப காலத்தில் கூறிய போது உலகமே வியந்தது. யுனிவர்ஸ் (Univierse) என்பது ஒன்று மட்டுமல்ல, பல பிரபஞ்சங்கள் உள்ளன, (Multiverse) என்றார் அவர். இந்தக் கொள்கையை அறிவியல் உலகம் இப்போது தீவிரமாக ஆதரித்து மேலும் ஆராய்ந்து வருகிறது. இன்னொரு செய்தி, இந்த பல் பிரபஞ்சங்கள் ஒன்றிற்கு மேல் ஒன்றாக ஒரு மிலிமீட்டர் தூரத்தில் தான் இருக்கிறதாம்!
யோக வாசிஷ்ட உண்மைகளும் நவீன அறிவியல் உண்மைகளும் ஒன்றே என்பதை அறியும் போது வியப்பாக இருக்கிறது இல்லையா?!
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
யோக வாசிஷ்டம் கூறும் வேதாளத்தின் கதை!
யோக வாசிஷ்டத்தில் வரும் கதை இது. இந்த வேதாளத்தின் கதை மூலம் மஹரிஷி வசிஷ்டர் ராமருக்கு பூரண ஞானம் அடைந்த ஒருவருக்கு, யாரும் எந்த விதத் தீங்கையும் இழைக்க முடியாது என்பதை உறுதிப் படுத்துகிறார்.
கதை இது தான்:தென் திசையில், அதி பயங்கரமான உருவத்துடன் ஒரு
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U WANT THE ARTICLE IN WORD FORMAT, PLEASE CONTACT US
PICTURES ARE FROM KALKSHETRA POST; THANKS
யோகவாசிஷ்டம் கூறும் மனம் பற்றிய கதை!
ச.நாகராஜன்
மஹரிஷி வால்மீகி இயற்றி அருளியுள்ள யோகவாசிஷ்டத்தில் மனம் பற்றிய ஒரு அருமையான கதை வருகிறது.
அது இது தான்:-
அடர்ந்த காட்டில் ஒரு மனிதன் வசித்து வந்தான். தன் முதுகில் தானே இரும்புத் தடிகளைக் கொண்டு அடித்துக் கொண்டான் அவன். வலி தாங்கவில்லை. ஆவென்று அலறிக் கொண்டே வேக வேகமாக ஓடி ஒரு கிணற்றில் விழுந்தான்.பின்னர் சிறிது நேரம் கழித்து ஒருவாறாக எழுந்த அவன் மீண்டும் முள் நிறைந்த அடர்ந்த காட்டுப் பகுதிக்குள்
யோக வாசிஷ்டம் சம்ஸ்கிருதத்தில் அமைந்துள்ள ஒரு அற்புதமான நூல். இதில் 64000 வரிகள் உள்ளன அதாவது 32000 செய்யுள்கள் உள்ளன. மனம் மற்றும் எண்ண சக்தி ஆகியவற்றைப் பற்றி மிக அழகாக தகுந்த கதைகளுடன் சுவை படக் கூறும் நூல் யோக வாசிஷ்டம். வாழ்வியல் ரகசியங்களைத் தெரிந்து கொண்டு உயரிய நிலையை அடையத் துடிப்பவர்கள் நாட வேண்டிய ஒரே நூல் யோக வாசிஷ்டமே!
Don’t Reblog it for at least a week; don’t use pictures.
Article written by S NAGARAJAN
Date: 19th September 2015
Post No: 2171
Time uploaded in London :– 17-49
(Thanks for the pictures)
ச.நாகராஜன்
நம்பிக்கைதரும்ஹிந்துநூல்கள்
உலகினருக்கு வாழ்க்கையில் நம்பிக்கை தருவதற்கு ஹிந்து நூல்களைப் போல வேறெந்த நூல்களும் இல்லை.
உன்னை நீயே உயர்த்திக் கொள்ளலாம் என்பதே அவற்றின் சாரம்.
கர்மத்தால் கட்டுண்டவன் தான் நீ என்று சொல்லும் போதே நல்ல கர்மங்களைச் செய்து உன்னை உயர்த்திக் கொள் என்று அது ஓங்கிச் சொல்கிறது.
விதி உன்னை விடாது என்று சொல்லும் போதே அந்த விதியை உருவாக்குபவன் நீயே என்று அடித்துச் சொல்கிறது.
பல ஜன்மங்களில் முன்னேற வாய்ப்புண்டு; உடனடியாக முன்னேற்றத்தை நோக்கி முதல் அடியை நீ வை; நான் உன்னை நூறு அடிகள் முன்னேற்றுவேன் என்ற ஆறுதலான அவதாரங்களின் வாக்கியத்தை அது நம் முன் வைக்கிறது.
பிறப்பு ஒன்றே ஒன்று தான் என்றால் ஏன் மனிதனுக்கு மனிதன் வாய்ப்புகளில் ஏன் இந்த வேறுபாடு? அது போகட்டும் பிறந்து ஒரு நாளில் இறக்கும் ஒரு குழந்தைக்கும் நூறு ஆண்டுகள் வாழ்ந்து பல நல்ல, கெட்ட காரியங்களைச் செய்பவனுக்கும் எப்படி சமமான தீர்ப்பு வழங்கப்பட முடியும்? ஒரே ஒரு நாள் வாழ்ந்த குழந்தை தீர்ப்பு வழங்கும் நாளுக்காக எல்லையற்ற காலம் வரை ஏன் காத்திருக்க வேண்டும்!
இறைவனின் நீதி இது என்பதை ஏற்பதில் மனம் சலிப்படைகிறது.
‘சே, போ’, மனம் போன படி நடப்பேன்; நடப்பது நடக்கட்டும் என்பது வாழ்க்கை முறையாகிறது.
மேலை நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் இது தான்!
ராமரின்சந்தேகங்கள் (636 பாக்களில்)
ராமர் வசிஷ்டரிடம் வருகிறார். நியாயமாக ஒரு மனிதனுக்கு என்னவெல்லாம் சந்தேகம் ஏற்பட முடியுமோ அந்த சந்தேகங்களை அறிவியல் யுகமான நமது இன்றைய நாளுக்கும் பொருந்தும்படி கேட்கிறார்.
அவரது கேள்விகள் 19 அத்தியாயங்களில் 636 ஸ்லோகங்களில் இடம் பெறுகிறது – யோக வாசிஷ்டம் நூலில்.
அற்புதமான இந்த நூல் மனிதனுக்குக் காலத்தை வென்ற இரகசியத்தைக் கூறும் நூல். வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதைச் சரியானபடி கூறும் அருமையான நூல் இது. 32000 ஸ்லோகங்கள் உள்ள யோக வாசிஷ்டம் இப்போது நாம் படிக்கும்படியான அளவுக்குச் சுருக்கமாக எந்தக் கருத்தையும் விடாமல் சுருக்கப்பட்டுள்ளது.
நூலின் நடை எளிமையானது. சம்ஸ்கிருதம் படித்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் எளிய நடை; காம்பீர்யமான வார்த்தைகள்.
முயற்சியா, விதியாஎதுவெற்றியைத்தரும்?
உதாரணத்திற்கு மனித முயற்சி, விதி பற்றிய சில ஸ்லோகங்களின் அர்த்தத்தைத் தமிழில் இங்கு பார்ப்போம்.
பௌருஷமஹிமா (மனிதமுயற்சியின்மஹிமை)
பௌருஷேன சர்வமாஸாத்யதே (முயற்சியினால் அனைத்தும் கிடைக்கும்).
எதையும் எப்போது வேண்டுமானாலும் அடைய மனித முயற்சியே தேவை. போதுமான முயற்சி செய்த பின்னர் ஒருவன் அடைய விரும்புவதை அடைகிறான்.
கர்மா, தைவம் (விதி) என்று இரண்டைச் சொல்கிறார்களே!
கர்மம் என்பது ஒருவனின் முந்தைய செயல்களைக் குறிப்பதே ஆகும்! ஆனால் ஒருவனின் தற்போதைய முயற்சி முன்னால் செய்ததை மீறிச் செயல்படும்.
தைவம் அதாவது விதி என்பது, அறியாதவர்களுடைய மனக் கற்பனையே. பார்க்க முடியாத ஒன்று அது. விதி என்பதே இல்லை!
தைவம்நவித்யதே I (தைவம் – விதி என்று ஒன்று இல்லை)
தைவமஸத்ஸதா I (விதி என்பது இல்லாத ஒன்று)
தைவம்நகிஞ்சித்குருதேகேவலம்கல்பனேத்ருஷி I (விதி ஒன்றையும் செய்வதில்லை. கற்பனையே அதைச் செய்கிறது)
ஒரு விவசாயி தனது நிலத்தில் கஷ்டப்பட்டு பல மாதங்கள் உழைக்கிறான். அறுவடைக் காலம் நெருங்குகிறது. ஆனால் அறுவடை நாளுக்கு முதல் நாள் அடைமழை பெய்கிறது. பயிர்கள் நாசமாகின்றன.
இது விதியா? இதன் காரணம் விதி தானா?
இல்லை; உழைப்பு, மழை என்பதில் மழை உழைப்பை விட வலியதாக இருக்கிறது என்பதே இதன் அர்த்தம்.
நாம் செய்யும் அனைத்துமே ஏன் வெற்றி பெறுவதில்லை?
பதிலை ராமருக்கு வசிஷ்டர் கூறுகிறார்:” இது ஏன் என்றால் வெற்றி என்பது உழைப்பை மட்டும் கொண்டு வருவதில்லை. காலம், வெளி, செல்வம் (Time, Space and Wealth) போன்ற காரணங்களும் இணைந்தே வெற்றியைத் தருகின்றன.
பலன் எப்போதும் எது வலிமையானதோ அதைக் கொண்டு அமைகிறது!
காலம் வேறு இருக்கிறது. சில சமயம் உடனடி பலன் கிடைக்கிறது; சில சமயம் சில காலம் கழித்துக் கிடைக்கிறது. ஆனால் பலன் விளையும் என்பதில் சந்தேகமில்லை.
உடனடியாக நடந்ததற்கும் தாமதமாக ஆனதற்கும், முட்டாள்களே விதியே காரணம் என்கின்றனர்.
கர்மத்தின் ஆதிக்கத்தை எடுத்துக் கொள்வோம். (ஓ, ராமா!)
கர்மம் இரு வகைப்படும்; ஒன்று ப்ரக்தனா (பழையது); மற்றொன்று இஹிகா (தற்போது நடப்பில் உள்ளது)
தற்போதைய கர்மம் பழையதை வெல்லும் ஆற்றல் கொண்டது. இரண்டும் இரண்டு செம்மறி ஆடுகளைப் போலச் சண்டையிடும்; வலியது வெல்லும்! ஆகவே தற்போது வலுவுள்ளவனாக ஆவதே நமது நோக்கமாக இருக்க வேண்டும்.
கடந்த காலம் நிச்சயமாக தற்போதுள்ள நிகழ்காலத்தை விட வலுவுள்ளதாக இருக்க முடியாது. நேற்று சாப்பிட்டதால் வயிற்றில் ஏற்பட்ட அஜீர்ணத்தை இன்று மருந்து சாப்பிட்டுக் குணப்படுத்துவதில்லையா?
ஏழ்மையாக இருந்தாலும் சரி, பல இன்னல்கள், தடைகள் இருந்தாலும் சரி, எவன் ஒருவன் அவற்றையும் மீறித் தன் முயற்சி மூலம் அவற்றை வெல்கிறானோ அவனே பாராட்டத் தகுந்தவன்!
வசிஷ்டரின் இந்த உபதேசம் நலிந்தோர்க்கு நம்பிக்கை ஊட்டும் ஒன்றல்லவா!
மூன்றாம் உலக நாடுகள் என்று அங்குள்ளோர் தாழ்ந்து இருக்க வேண்டுமென்பதில்லையே! உலகம் முழுவதற்குமான ஒரு நூல்; ஒவ்வொரு மனிதனுக்குமான ஒரு நூல் – யோக வாசிஷ்டம்!
கடந்த காலத்தை மீறி நிகழ்காலத்தில் வலிமையுடன் பாடுபடு என்பதே வசிஷ்டரின் உபதேசம்.
எளிய சம்ஸ்கிருத பதங்கள்; படிப்பதற்கே ஆனந்தம்! முயற்சி, தெய்வம் ஆகிய இவை, இதர பல விஷயங்களுடன் எப்படிப் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது என்பதையும் சேர்ந்து அறிய வேண்டும்.
ஆகவே, யோக வாசிஷ்டம் முழுவதுமாகப் பயில்வோம்; காலத்தை வென்ற உயர் இரகசியத்தை அறிவோம்!
குறிப்பு: யோக வாசிஷ்டம் பயில விரும்புவோ அருமையான கீழே குறிப்பிடப்படுள்ள இந்த இரு நூல்களை வாங்கலாம்:
Quintessence of Yogavasishtha by C.S. Gupta, Satsanga Seva Samithi Gandhi Bazar, Bangalore -4 (174 பக்கங்கள்)
The Vision and the way of Vasistha by Samvid (2461 ஸ்லோகங்களை சம்ஸ்கிருத மூலத்திலும் ஆங்கிலத்திலும் தரும் இந்த நூலைப் புகழ்வதற்கு வார்த்தைகளே இல்லை; 583 பக்கங்கள்; வாழ்நாள் முழுவதும் பக்கத்திலேயே வைத்திருந்து படிக்க வேண்டிய நூல்)
எழுதியவர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:– 1079; தேதி:- 2 June 2014.
This article was already posted in English.
வால்மீகி முனிவர் எழுதிய யோகவாசிஷ்டம் என்னும் வடமொழி நூல் ஒரு அற்புதமான நூல். இதில் 32,000 ஸ்லோகங்கள் உள்ளன. மஹாபாரதம், கதா சரித் சாகரம் (கதை கடல்) என்னும் இரண்டு நூல்களுக்கு அடுத்தபடியாக “நீண்ட நூல் வரிசை”யில் இடம் பிடிக்கிறது இந்த அரிய, பெரிய புத்தகம். இதில் வரும் கதைதான் சுடாலாவின் கதை.
மாளவ தேச இளவரசன் சிகித்வஜன், அதாவது மயில்கொடியோன். சௌராஷ்டிர தேச இளவரசி சுடாலா. பேரழகி. அழகிற்கு மேல் அறிவு. பழங்கால உலகின் ‘‘அறிஞி’’ கார்க்கிக்கு நிகர்.
சுடாலாவுக்கும், சித்வஜனுக்கும் கொட்டு மேளம்–கல்யாணம்! இளம் தம்பதி அரசாங்க தம்பதிகள் அல்லவா? போகாத இடமில்லை, சுற்றாத ஊர் இல்லை. வாழ்க்கையின் எல்லா இன்பங்களையும் அனுபவித்துத் தீர்த்து விடுகின்றனர். வயதான மாளவ தேச மன்னன் முழு அதிகாரத்தையும் சிகித்வஜனிடம் ஒப்படைத்து விட்டு வனத்துக்குச் சென்று (வானப் ப்ரஸ்தம்) விடுகிறான்.
பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பார்கள். இந்த தம்பதிகளுக்கும் வாழ்க்கை புளித்து விடுகிறது. புதுமைகளைச் சாதிக்க உள்ளம் துடிக்கிறது. அறிவாளி சுடலா ஆன்மீகக் கடலில் நீந்தத் துவங்குகிறாள். ஆனந்தம், பேரானந்தம்!! நாளடைவில் முகம் ஒளிவிடத் துவங்குகிறது. கணவனுக்கு ஒரே ஆச்சரியம். “அன்பே உன் முகத்தில் புத்தொளியைக் காண்கிறேன். என்ன காரணம்? ஏதேனும் புதிய பவுடர், வாசனைப் பொடி, வாசனைப் பூச்சு, வண்ணத் திரவம் பயன் படுத்துகிறாயா?” என்று கேட்கிறான். அவள் “நாதா! நான் கண்ணாடியில் பார்க்கையில் புதுமை எதையும் காணவில்லை. ஆனால் என் உள்ளத்தில் உண்மை ஓளி வீசுகிறது. புதிய ஆனந்தம் மலர்ந்துள்ளது” என்கிறாள். பின்னர் அதற்கான காரணங்களை ஆன்மீக பரிபாஷையில் விளக்குகிறாள். அவனுக்கு அது அதிகம் விளங்கவில்லை. அவளுக்கு மனதில் ஒருகுறை! புதிய ‘’மேக் அப் (வாசனைப் பொடி) போடுகிறாயா’’ என்று கணவர் கேட்டுவிட்டாரே! என்று.
கணவனும் ஆன்மீகப் பாதையில் செல்ல முயல்கிறான். நாட்டை நன்றாக ஆட்சி செய்யும் மன்னனுக்கு மனதை ஆளத் தெரியவில்லை. இகலோக வாசனைகள் அவனை இழுத்துப் புரட்டி அடிக்கின்றன. ஆன்மீகத்தில் வளர முடியவில்லை. ஒரு நாள் மனைவியிடம், “நான் காட்டுக்குப் போகிறேன் அங்குதான் நல்ல தவம் செய்ய முடியும்” என்கிறான். அவளோ “நாட்டில் அடைய முடியாததைக் காட்டில் அடைவது எப்படி?” என்கிறாள். மறு நாள் காலையில் பாதி படுக்கை காலியாக இருக்கிறது! கணவன் இரவோடிரவாக கானகம் ஏகிவிட்டான்.
நாடாளும் பொறுப்பு முழுதும் பெண்ணரசியின் தலையில் விழுகிறது. நாட்டை நன்றாக ஆளுகிறாள். ஒரு நாள் கானகம் சென்று “சுக்கான் ஒடிந்த கப்பலைப் போல” காட்டில் திரியும் கணவன் முன், ஒரு (ஆண்) துறவி போல மாற்றுருவில் காட்சி தருகிறாள். அவளுடைய யோக சக்தியால் அவள் நினத்த உரு எடுக்க முடியும்!
“என் பெயர் கும்பா (ஆணின் பெயர்). நான் ஒரு துறவி. உன் மனக் கஷ்டம் எனக்குத் தெரியும். நீ மன அமைதி பெற நான் வழி சொல்லித் தருகிறேன். வெளியில் காணப் படும் வசதிகளை மட்டும் துறப்பது மன அமைதி நல்காது. பற்றற்ற மன நிலை வேண்டும்”– என்றெல்லாம் உபதேசம் செய்தவுடன் சிகித்வஜன் ஆழ்ந்த தியானத்தில் இறங்கி விடுகிறான்.
கும்பன் (சுடாலா) ஏதோ சாக்குப் போக்குச் சொல்லி நாட்டின் தலை நகருக்குப் போய் அரசுப் பணிகளைக் கவனிக்கிறாள். சின்னாட்களுக்குப் பின் காட்டிற்கு வந்தபோது சிகித்வஜன் கற்பாறை போல் அமர்ந்து சமாதி நிலையில் இருக்கிறான். கும்பன் திரும்பிச் சென்று மீண்டும் வந்தபோதும் இதே நிலை! யோக சக்தியால் சிங்க நாதம் ( சிம்ம கர்ஜனை) செய்தும் பலனில்லை. பின்னர் தன் யோக சக்தியால் சிகித்வஜனுடைய மனதில் வேற்றுருவில் நுழைந்து சமாதியைக் கலைக்கிறாள்.
முதல் சோதனை
கணவனைச் சோதிக்க எண்ணி பல சோதனைகளை முன்வைக்கிறாள். ஒரு நாள் வெளியே போய்விட்டுக் கும்பன் (சுடாலா), முகத்தைச் சோகமயமாக வைத்துக் கொண்டு திரும்புகிறான். உடனே சிகித்வஜன், “துறவியாரே, உங்கள் முகம் வாட்டம் அடைந்திருக்கிறதே; காரணம் என்னவோ? என்று கேட்கிறான். கும்பனோ இந்திரலோகத்துக்குப் போய்விட்டு வரும் வழியில் துர்வாச முனிவர் பற்றி தமாஷ் (ஜோக்) செய்ததாகவும் அவர் தான் இரவு நேரம் முழுதும் பெண்ணுருவுக்கு மாறி விடுவேன் என்று சாபம் கொடுத்துவிட்டதாகவும் கூறுகிறான்.
இதைக் கேட்ட சிகித்வஜன், அதனால் என்ன? நீங்கள் இரவில் பெண் ஆனால் தனியாக ஒரு புறத்தில் ஒதுங்கி இருந்துவிட்டுப் போங்களேன் என்று சொல்லிவிடுகிறான். இரவும் வந்தது. கும்பன் ஒரு மறைவிடத்தில் நின்றுகொண்டு தனது உடலில் ஏற்படும் மாற்றங்களை எல்லாம் மிகவும் அங்கம் அங்கமாக வருணிக்கிறான். பின்னர் தான் வெளியே வரப் போவதாக எச்சரித்துவிட்டு பேரழகி போலத் தோன்றுகிறான். இனி தன் பெயர் மதனிகா என்றும் சொல்லிக் கொள்கிறான். மெல்ல மெல்ல நெருங்கிவந்து அவன் தோள் மீது கைகளை வைத்து நானும் நீயும் கணவன் மனைவி போல வாழ்வோம் என்றவுடன் சிகித்வஜனும் உடன்படுகிறான். ஆனால் அவன் மன நிலை துறவி நிலையீல் இருக்கிறது. உடல் மட்டும் பற்று இல்லாமல் மதனிகா இழுத்த இழுப்புக்கு எல்லாம் செல்கிறது. மதனிகாவுக்கு (கும்பன்=சுடாலா) மிகவும் சந்தோஷம், தனது கணவன் முதல் சோதனையில் வெற்றி பெற்றுவிட்டான் என்று.
இரண்டாம் சோதனை
பகல் நேரத்தில் எல்லாம் கும்பனாகவும் இரவு நேரத்தில் எல்லாம் மதனிகாவாகவும் காட்சி தரும் சுடாலா ஒரு மாய இந்திரனை தோன்றும் படி செய்கிறாள். அவன் சிகித்வஜனிடம் சென்று, “நாட்களை எல்லாம் இப்படி வீண் அடிக்கிறீர்களே! நீங்களோ தவத்தில் உயர் நிலையை எய்துவிட்டீர்கள். இந்திர லோக இன்பங்களை அனுபவிக்க என்னுடன் வாருங்களேன்” என்கிறான். அதற்கு சிகித்வஜனோ இன்பம் என்பது நம்முள் இருக்கும் போது வெளியே தேடுவது அறிவுடைமை ஆகாது” என்று கூறுகிறான். மாய இந்திரன் திடீர் என்று மறைந்து விடுகிறான். கும்பனுக்கு ( சுடாலா) ஏக மகிழ்ச்சி. தன் கணவன் இரண்டாம் சோதனையிலும் வெற்றி பெற்றுவிட்டான் என்று.
முதல் சோதனை காமம் தொடர்பான சோதனை; இரண்டாம் சோதனை மோஹம் தொடர்பான சோதனை. இதில் வெற்றி பெற்ற கணவனுக்கு க்ரோதம் (கோபம்) தொடர்பான சோதனையைத் தர சுடாலா திட்டம் தீட்டுகிறாள்.
மூன்றாவது சோதனை
ஒரு நாள் மாலை நேரத்தில், தனது யோக சக்தியால், அழகிய ஆண்மகனை உருவாக்குகிறாள். மதனிகா உருவில் அவனைக் கட்டித் தழுவி இன்பம் துய்க்கிறாள். வெளியில் இருந்து வந்த சிகித்வஜன் இதைப் பார்த்தும் மனம் சஞ்சலப்படவில்லை; கோபப்படவும் இல்லை. மதனிகா மெதுவாக அந்த ஆண்மகனை அனுப்பிவிட்டு சிகித்வஜனிடம் மன்னிப்பு கேட்கிறாள். தன்னை மீண்டும் மதனிகா என்னும் மனைவியாகக் கருத வேண்டும் என்றும் இனிமேல் தப்பு செய்ய மாட்டேன் என்றும் கெஞ்சுகிறாள்.
சிகித்வஜன், ‘’அதனால் என்ன, நீ உணர்ச்சிக்கு அடிமையாகி இதைச் செய்துவிட்டாய். அது உன் முடிவு;– எனக்குத் தொடர்பேதும் இல்லை.கணவந்மனைவி உறவு இனி தேவை இல்லை. இனி நீ இரவு நேரத்தில் மதனிகாவாகவும், பகல் நேரத்தில் கும்பனாகவும் என்னுடன் ‘’நண்பன்’’ என்ற முறையில் தங்கி இருக்கலாம் என்கிறான். கொஞ்சமும் கோபம் அடையவில்லை. மதனிகாவுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. மூன்றாவது சோதனையிலும் கணவன் வெற்றி பெற்று விட்டான் என்று!
உடனே தனது சுயரூபத்தில் சுடாலாவாகத் தோன்றுகிறாள். சிகித்வஜனுக்கு ஒரு பக்கம் குழப்பம், மறு பக்கம் வியப்பு. தானே மதனிகாவாவும், கும்பனாகவும் தோன்றி அவனைச் சோதித்ததாகவும் அவன் இப்போது மிக உயர்ந்த ஜீவன் முக்தன் ( நடமாடும் தெய்வம்) நிலை அடைந்து விட்டதாகவும் சொல்கிறாள். தன்னை மீண்டும் பணிவுடைய சுடாலா என்னும் மனைவியாக ஏற்க வேண்டும் என்றும் மன்றாடுகிறாள். சிகித்வஜன், “வா , நானும் நீயும், துறவி ஆவோம்” என்று சொல்கிறான். ஆனால் சுடாலாவோ, நீங்கள் ராஜாவாக ஆளவேண்டும். மக்களுக்கு இப்போதுதான் சேவை செய்ய முடியும் என்கிறாள். உடனே இரண்டாவது பட்டாபிஷேகம் தடபுடலாக ஏற்பாடாகிறது. அவர்கள் இருவரும் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு இனிதே ஆட்சி புரிகின்றனர் என்று யோக வாசிஷ்டம் கூறுகிறது.
(வடமொழியில் 10,000 ஆண்டுகள், 60,000 ஆண்டுகள், 60,000 மனைவியர் என்று சொல்வதெல்லாம் மரபுச் சொற்றொடர்கள். அதன் உண்மைப் பொருள் “நீண்ட நெடுங்காலம்” என்பதே!)
ஆன்மீக நாட்டம் உடைய ஒவ்வொரு மனிதனின் மனத்திலும் தோன்றும் விடை காண முடியாத கேள்விகள் ஏராளம். இந்தப் பிறவியின் மகத்துவம் என்ன, ஏன் இப்படி ஒரு வாழ்க்கை தனக்கு அமைந்தது, விதியா,முயற்சியா எது மேலோங்கும், இறப்புக்குப் பின்னர் எங்கே போகப் போகிறோம், மறு ஜென்மம் உண்டா, புண்யம் எது,பாவம் எது, எப்படி வாழ்ந்தால் ஆன்ம ஞானம் கிடைக்கும் இத்யாதி கேள்விகள் ஏராளம். விடை தான் தெரியவில்லை. இந்தக் குறையை நீக்க வல்ல ஒரு அற்புதமான நூல் ‘’யோக வாசிஷ்டம்’’. ஒவ்வொரு மர்மமான கேள்விக்கும் ஆணித்தரமாக நேரடியாக பதிலைத் தருவதில் இதற்கு நிகரான இன்னொரு நூல் இல்லை என்றே சொல்லலாம்.
அதனால் தானோ என்னவோ உயரிய ஞானம் உடைய அறிஞர்கள் பலரும் இதில் உள்ள கருத்துக்களைப் பிரதிபலித்துத் தங்கள் நூல்களில் கருத்துக்களை எழுதியுள்ளனர்.ஜேம்ஸ் ஆலன், அன்னி பெஸன்ட், பெர்க்ஸன், பால் ப்ரண்டன், அலெக்ஸாண்டர் கானான்,சர் ஜேம்ஸ் ஜீன்ஸ்,வில்லியம் ஜேம்ஸ், சி.இ.எம்.ஜோட், ஆலிவர் லாட்ஜ், ஷோப்பன்ஹோவர், டபிள்யூ.ஆர்.இஞ்ஜே உள்ளிட்ட நூற்றுக்கணக்கான அறிஞர்கள் யோக வாசிஷ்ட கருத்துக்களை வார்த்தைக்கு வார்த்தை நேரடியாக அப்படியே தெரிவித்துள்ளனர்.
விதி என்பது இல்லவே இல்லை!
தைவம் நாம ந கிஞ்சன் (விதி என்று ஒன்றும் இல்லை- 2-5-18)
தைவம் ந வித்யதே (விதி என்பது இல்லவே இல்லை- 2-8-13)
மூடை: ப்ரகல்பிதம் தைவம் (மூடர்களால் உருவாக்கப்பட்ட தே விதி – 2-8-16) என்று இப்படி அடித்துச் சொல்லும் யோக வாசிஷ்டம் மனிதனின் செயல்களே அவனுக்குப் பின் விளைவுகளை ஏற்படுத்துகிறது. அதுவே விதி என்று சொல்லப்படுகிறது என்று விளக்குகிறது.
நீடித்திருக்கும் வியாதிக்கு இப்போது மருந்து சாப்பிட்டால் எப்படிஅது தீருமோ அதே போல முந்தைய கருமங்களின் தீய விளைவுகளை இப்போதைய நல்ல கர்மங்களால் மாற்ற முடியும் என்று விளக்கி மனித குலத்திற்கே பெரும் ஆறுதல் செய்தியை அது தருகிறது!
மனமே எல்லாம் என்று கூறி அதைச் செம்மைப் படுத்தி நல்ல எண்ணங்கள் மூலம் உயரிய நிலையை அடைய முடியும் என்பது
யோக வாசிஷ்டம் தரும் அற்புத செய்தி!
பிறப்பு,இறப்பு,கர்ம பலன்கள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களை விளக்கும் இந்த நூல் எப்படிப்பட்ட வழிகளின் மூலம் அருமையான ஆன்ம ஞானத்தை அடைந்து உலகியல் துன்பங்களிலிருந்து விடுதலை பெறலாம் என்ற ரகசியத்தையும் சுலபமாக விளக்குகிறது.
அதிசய வழிகள் நான்கு
இதற்கான அதிசய வழிகள் நான்கு!
சந்தோஷ: சாதுசங்கஸ்ச விசாரோத்ய சமஸ்ததா I
ஏத ஏவ பவாப்யோத்யாவுபாயாஸ்தரணே ந்ருகாம II (2-16-18)
சந்தோஷம் (எப்போதும் திருப்தி), நல்லோர் இணக்கம் (சாதுக்களுடன் சேர்தல்),விசாரம், அமைதி –இவையே மனிதருக்கு உலகம் என்னும் சாகரத்தைக் கடக்கும் வழிகளாகும். இதை எளிதாக நான்கு ‘ஸ’காரங்களாக ஸந்தோஷம், ஸத் சங்கம், ஸத் விசாரம், ஸமஸ்தம் என்று நினைவில் கொ:ள்ளலாம்.
சந்தோஷம்
விஷயங்களில் ஆசையில்லாது, சந்தோஷமாக (திருப்தியுடன் ) இருக்கும் ஒருவனுக்கு பெரும் சக்திகள் (வளங்களும் கூட) ஒரு அரசனிடம் இருக்கும் ஏவலாள்கள் போலக் காத்துக் கிடக்கும் என்பதை உறுதியாக யோக வாசிஷ்டம் தெரிவிக்கிறது. எவ்வளவு அரிய செய்தி இது!
நல்லோர் இணக்கம்
மனதில் இருக்கும் இருளை சாதுக்கள் அகற்றுவர்.சூரிய ஒளி போன்ற ஞானத்தைத் தருவர். தர்மங்கள் செய்வதாலும்,புனிதத்தல யாத்திரை மேற்கொள்வதாலும் விரதங்களாலும் மதச் சடங்குகள் மற்றும் யாகங்களாலும் என்ன பயன், ஒருவன் சாதுக்களுடன் சேர்ந்து இருக்கும் போது!
விசாரம்
நான் யார்? (கோஹம்)உலகில் பிறப்பு என்ற தோஷம் எப்படி வந்து சேர்ந்தது?( கதமயம் தோஷ: சம்ஸாராக்ய உபகத: 2-14-50) இப்படி தர்க்கரீதியாக விசாரம் செய்வதே விசாரம்!
சமஸ்தம்
அனைத்து உயிர்களிடமும் நட்பாக இருந்தால் உயரிய ஆன்மா தன்னைத்தானே சுத்தப்படுத்துகிறது (ஸ்வயம் ஏவ ப்ரஸீததி)
ஆக இந்த நான்கு வழிகளில் எந்த ஒரு வழியை மேற்கொண்டாலும் இறை சக்தி அருளைப் பாலித்து பெரும் வளங்களைத் தந்து முக்தியை நல்கும் என யோக வாசிஷ்டம் அறுதியிட்டு உறுதி கூறுகிறது.
ராமர் வசிஷ்டரிடம் கேள்விகள் கேட்க பிரம்ம ரிஷி வசிஷ்டர் பதில்களைத் தீர்க்கமாக அளிக்கிறார். அதுவே ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்ட யோக வாசிஷ்ட நூலாக அமைகிறது.இன்று நமக்குக் கிடைத்திருக்கும் ஸ்லோகங்கள் 32000 தான்!
அதி சுலப வழி விசாரமே
மேலே கூறிய நான்கு வழிகளில் மிக சுலபமான வழியாக ரமண மஹரிஷி கூறுவது, ‘நான் யார் என்று இடைவிடாது உன்னேக் கேள்வி கேள்! அனைத்து மர்மங்களும் தானே பிடிபடும்’ என்பதே!
எப்போதும் திருப்தி, நிஜமான உயரிய பண்புகள் உள்ள சாதுக்களை நாடுதல், அனைத்து உயிர்களிடமும் சமத்துவம் என்பதெல்லாம் பலருக்கும் கடைப்பிடிக்க சற்று சிரமமான வழிகள். ஆனால் எங்கிருந்தாலும் எந்த நேரத்திலும் சற்றும் செலவின்றி ஆண், பெண் யாரானாலும் அந்தஸ்து பேதமின்றி நாடு,இனம்,மொழி தாண்டி சுலபமாக செய்யக்கூடியது விசாரமே!
அதனால் தான் அவர், ஆன்ம வித்தை உரை என்ற அற்புதமான பாடலில் பல்லவி, அனுபல்லவி ஐந்தே ஐந்து சரணங்களில்
“ஐயே!அதி சுலபம் – ஆன்மவித்தை
ஐயே! அதி சுலபம் “ என்று கூறி விளக்குகிறார்.
பொருள் பொதிந்த அடுக்குமொழித் தமிழ்க் கவிதை வரிகளைப் இந்தப் பாடலில் படித்தால் மஹரிஷி ஒரு மஹாகவியும் கூட என்பதை உணர்ந்து விடலாம்!
சரணங்களின் கடைசி வரிகளைப் பார்ப்போம்:-
பொய் உருவான அகங்காரத்தை நான் யார் என்ற இடைவிடாத கேள்வி மூலம் ஒழித்து விட்டால்,
“சுயமான்மா விளங்குமே;இருள் அடங்குமே;இடர் ஒடுங்குமே; இன்பம் பொங்குமே” என்றும்,
மாம்சமான சரீரத்தை நான் என்று எண்ணாமல் நான் யார்? இடம் எது என்று விசாரிப்பதால்,
“இதய குகையுள் தானாய்த் திகழும் ஆன்ம ஞானமே; இதுவே மோனமே; ஏக வானமே” என்றும்
உண்மை சொரூபத்தை உணர்ந்து விட்டால் பின் அறிவதற்கு என்ன இருக்கிறது? “தன்னைத் தன்னில்” உணர்ந்து விட்டல்,
“தன்னுள் மின்னும் ஆன்ம பிரகாசமே; அருள் விலாசமே,அக விநாசமே; இன்பவிகாசமே” என்றும் ,
அண்ணாமலையானைக் காண அவன் அனுக்ரஹம் வேண்டும்,
“உள் நாடு உளத்து ஒளிரும் அண்ணாமலை என் ஆன்மா காணுமே; அருளும் வேணுமே: அன்பு பூணுமே: இன்பு தோணுமே”
என்றும் அற்புதமான சிறிய ஐந்து வரிப் பாடல்கள் ஐந்தின் மூலம் விளக்குகிறார்.
யோக வாசிஷ்டம் கூறும் அதிசய வழிகள் நான்கில் அதிசுலபமான ‘நான் யார்’ என்ற விசார வழியை அனுபூதியாக உணர்ந்தவர் மஹரிஷி ரமண மகான்! அனைவரையும் உய்விக்க எண்ணும் அருளுடன், “ஐயே! அதி சுலபம் ஆன்ம வித்தை” என்று அவர் கூறும் போது யோக வாசிஷ்டத்தின் உண்மைக் கூற்றையும், அதை மெய்ப்பிக்கும் மஹரிஷியின் மாண்பையும் எண்ணி எண்ணி நம் மெய் சிலிர்க்கும்!
அவருடன் இணைந்து அதி சுலபம் ஆன்ம வித்தை என்று பாடியவாறே நான் யார் என்ற விசார மார்க்கத்தை மேற்கொண்டு சம்சார சாகரத்தைக் கடந்து விடலாம்! அப்போது … ..
You must be logged in to post a comment.