மரண பயத்திலிருந்து நீங்குவது எப்படி? ரமணர் பதில்! Post.9094))

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9094

Date uploaded in London – –1 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பகவான் ரமண மஹரிஷியின் அவதார தினம் : 30-12-1879

இந்த 2020ஆம் வருடம் (31-12-2020) 141வது ஜெயந்தி தினம்!

மரண பயத்திலிருந்து நீங்குவது எப்படி? ரமணர் பதில்!

ச.நாகராஜன்

பகவான் ரமணர் மிகப் பெரும் ஆன்மீக ரகசியங்களை மிகச் சுலபமாக எளிய உதாரணங்களோடு விளக்கி விடுவார்.

1937ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி

ஹிந்தி பேசும் கனவான் ஒருவர் ஆசிரமத்திற்கு வந்தார். மரண பயத்தை எப்படி வெல்லலாம் என்று ஒரு கேள்வியைக் கேட்டார்.

மஹரிஷி : மரணத்தை எண்ணும் முன்னர், நீ பிறந்தாயா என்பதை முதலில் கண்டு பிடி. பிறந்த ஒருவன் தான் இறக்க முடியும்! நீ தூக்கத்தில் செத்திருப்பவனுக்குச் சமானம். ஆக, மரணத்தைக் கண்டு என்ன பயம்?

பக்தர்: தூக்கத்தில் நாம் எப்படி இருக்கிறோம்?

மஹரிஷி:  இந்தக் கேள்வியை நீ தூங்கும் போது கேள். தூக்கத்தின் அனுபவத்தை நீ எழுந்த பின்னரே ஞாபகப்படுத்திக் கொள்கிறாய். அந்த நிலையை, ‘சந்தோஷமாக நான் தூங்கினேன்” என்று சொல்கிறாய்!

பக்தர் : எந்த கருவி மூலம் அந்த நிலையை நாம் அனுபவிக்கிறோம்?

மஹரிஷி :  மற்ற நிலைகளுக்கு பழக்கமான அந்தகரணத்திற்கு எதிரான அதை மாயாகரணம் என்று அழைக்கிறோம். ஒரே கருவி தான் வெவ்வேறு நிலைகளில் வெவ்வேறு விதமாக அழைக்கப்படுகிறது. தூக்கத்தின் ஆனந்தாத்மன் விழிப்பு நிலையில் விஞ்ஞானாத்மன் என்று கூறப்படுகிறது.

பக்தர்: தயவு செய்து மாயாகரணம் ஆனந்தத்தை அனுபவிக்கும் அனுபவத்தை ஒரு உதாரணம் மூலமாக விளக்குங்கள்.

மஹரிஷி : “நான் சந்தோஷமாகத் தூங்கினேன்” என்று எப்படி நீ சொல்கிறாய்? அனுபவமே உனது சந்தோஷத்தை நிரூபிக்கிறது. தூக்கத்தில் அந்த அனுபவம் இருந்தாலொழிய விழிப்பு நிலையில் அது ஞாபகத்திற்கு வராது.

பக்தர் : ஒப்புக் கொள்கிறேன். ஒரு உதாரணம் சொல்லுங்கள்.

மஹரிஷி : அதை எப்படி விளக்க முடியும்? நீரில் அமிழ்ந்த ஒரு பொருளை எடுக்க நீ தண்ணீரில் மூழ்கினால், தண்ணீரிலிருந்து வெளியே வந்த பின்னர் தான் அதைப் பற்றிப் பேச முடியும். நீரில் மூழ்கி இருக்கும் போது நீ அதைப் பற்றிச் சொல்வதில்லை.

பக்தர் : தூக்கத்தில் எனக்கு பயம் இல்லை; ஆனால் இப்போது இருக்கிறது.

மஹரிஷி : ஏனெனில் ‘த்வீதீயாத்வை பயம் பவதி’ –  பயம் எப்போதுமே இரண்டாவதாக இருக்கிறது. எதைக் கண்டு பயப்படுகிறாய்?

பக்தர் : உடல், புலன்கள், உலகம், ஈஸ்வரன், கர்த்தா, இன்பம் போன்றவை இருக்கும் காரணத்தால் தான்.

மஹரிஷி : அது பயத்தை உண்டு பண்ணுகிறது என்றால் அதை ஏன் நீ பார்க்கிறாய்?

பக்தர் :  ஏனென்றால் அதிலிருந்து தப்பிக்க முடியாது.

மஹரிஷி: ஆனால் அவற்றை நீ தான் பார்க்கிறாய். யாருக்கு பயம்? அவற்றிற்கா?

பக்தர் : இல்லை, எனக்குத் தான்!

மஹரிஷி : ஏனென்றால் நீ பார்க்கிறாய், அவற்றைக் கண்டு நீ பயப்படுகிறாய். அவற்றைப் பார்க்காதே. உனக்கு பயம் இருக்காது.

பக்தர் : விழிப்பு நிலையில், அப்போது நான் என்ன தான் செய்ய வேண்டும்?

மஹரிஷி : ஆத்மனாக இரு: பயத்தை உண்டு பண்ண இரண்டாது வஸ்து ஒன்று இருக்கவே இருக்காது!

பக்தர் : ஆஹா! இப்போது புரிகிறது. நான் எனது ஆதமனைப் பார்த்தால் ஆத்மா இல்லாத மற்றவை நீங்குகிறது. சந்தோஷம் இருக்கிறது. என்றாலும் மரண பயம் இருக்கவே செய்கிறது.

மஹரிஷி : பிறந்த ஒருவனே இறக்க வேண்டும். மரணம் உன்னைப் பயமுறுத்த நீ பிறந்திருக்கிறாயா என்பதைப் பார்.

தூக்கம் என்ற எளிய அன்றாட மனிதனின் பழக்கத்தை வைத்து மஹரிஷி பெரிய பெரிய உண்மைகளை இப்படி விளக்கியுள்ளார்.

1937ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி

ஆந்திராவிலிருந்து வந்த மூன்று பக்தர்கள் மஹரிஷியை நமஸ்கரித்தனர். அதில் ஒருவர் ஹட யோகம் செய்பவர்.

அவர் நீண்ட ஒரு உரையாடலை நிகழ்த்துகிறார்.

அதில் அவர் கேட்ட ஒரு கேள்வி : தூக்கநிலை என்பது ஆனந்தத்தை அனுபவிப்பது என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதை திருப்பி எண்ணிப் பார்க்கும் போது மயிர்க்கூச்சல் எடுப்பதில்லை. ஆனால் சமாதி நிலையை எண்ணிப் பார்க்கும் போது மட்டும் அவை மயிர்கூச்சலில் மயிர்க்கால்களில் மயிர்கள் ஏன் நிற்கின்றன?

மஹரிஷி : சமாதி என்பது விழிப்பு நிலையில்  ஆனந்தத்தை அனுபவிக்கும் நிலையாகும். ஆனந்தம் அனைத்தையும் மீறுகிறது. அந்த அனுபவம் மிகத் தெளிவானது, ஆனால் தூக்கத்திலோ அது சற்று வித்தியாசமானது.

இப்படி தூக்கத்தை வைத்து மஹரிஷி பல்வேறு ரகசியங்களை விளக்குகிறார்.

இவற்றைத் தொகுத்துப் படித்தால் மரண பயம் பற்றி உண்மைகளை அறிந்து கொள்வோம்; திரும்பத் திரும்ப மஹரிஷியின் அருளுரைகளைப் படித்துக் கொண்டே இருந்தால் மரண பயம் நமக்கும் இல்லாமல் போகும்! பகவான் ரமணர் திருவடிகள் போற்றி!

****

அன்பர்கள் Talks With Sri Ramana Maharishi என்ற புத்தகத்தின் மூன்று தொகுதிகளைப் படித்தால் பல ரகசியங்களை உணரலாம். இவற்றை Sri Ramasramam, Thiruvannaamalai, South India விலிருந்து பெறலாம்.

tags-   மரண பயம்,ரமணர்

பெர்த் கண்ட்ரோலும் டெத் கண்ட்ரோலும்! ரமணரின் அறிவுரை! (Post No.7279)

Written by S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 30  NOVEMBER 2019

Time  in London – 7-41 am

Post No. 7279

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

ச.நாகராஜன்

வெளிநாட்டிலிருந்து ஒரு பத்திரிகையாளர் பகவான் ரமண மஹரிஷியைத் தரிசனம் செய்ய திருவண்ணாமலைக்கு வந்தார்.

அவரிடம் அவர், “பகவான்! நாங்கள் பெர்த் கண்ட்ரோலுக்காக (குடும்பக் கட்டுப்பாட்டிற்காக) ஒரு இயக்கம் ஆரம்பிக்கப் போகிறோம். பெர்த் கண்ட்ரோல் (Birth Control) பற்றித் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்? அதை எங்கள் பத்திரிகையில் வெளியிடுவோம்” என்றார்.

ரமணர் மௌனமாக இருந்தார்.

வந்த பத்திரிகையாளர் திருப்பித் திருப்பித் தான் கேட்ட கேள்வியையே கேட்டுக் கொண்டிருந்தார்.

உடனே பகவான், “அன்பரே! நீங்களும் நானும் ஏற்கனவே பிறந்து விட்டோம். அதை இந்த நிலையில் கட்டுப்படுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் நீங்களும் நானும் நிச்சயமாக ஒரு நாள் இறக்கப் போகிறோம். ஆகவே அது பற்றி நீங்கள் இன்னும் அதிகக் கவலைப்பட வேண்டாமா? தயவுசெய்து டெத் கண்ட்ரோல் (Death Control) பற்றிய உங்கள் கருத்துக்களை எனக்குச் சொல்லுங்கள்!”

வந்த பத்திரிகையாளர் நகர்ந்தார்.

என்ன ஒரு அற்புதமான உபதேச உரையை ரமண மஹரிஷி அருளினார் பாருங்கள்!

(இமய மலையில் வசிஷ்ட குகையில் வசித்து வந்த சாந்தானந்தா பூரி கூறிய சம்பவம் இது)

***

மேலை நாட்டு எழுத்தாளரான பால் பிரண்டன் கூறியுள்ள சம்பவம் இது:

“பக்தர்களும் ஆசிரமத்திற்கு வருகை புரிந்தோரும் ஹாலில் குழுமி இருந்த போது யாரோ ஒருவர் ஹாலுக்குள் நுழைந்து அந்த டவுனில் எல்லோரும் அறிந்த ஒரு பிரபலமான கிரிமினல் இறந்து விட்டார் என்ற செய்தியை அறிவித்தார். உடனே அவரைப் பற்றி அனைவரும் பேச ஆரம்பித்தனர். அவரது இயல்பு, அவர் செய்த குற்றங்கள், அவரது குணாதிசயத்தில் மிக மோசமான அம்சங்கள் என்பது போன்றவற்றைப் பற்றிப் பலரும் கூற ஆரம்பித்தனர்.

இந்தப் பேச்செல்லாம் முடிந்த பிறகு மஹரிஷி தனது முதல் தடவையாகத் தன் வாயைத் திறந்தார். அவர் கூறினார் :” அது சரி, அவர் எப்போதும் தன்னை சுத்தமாக வைத்துக் கொண்டிருந்தார். ஏனென்றால் அவர் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளிப்பது வழக்கம்.”

***

வேளச்சேரி ரங்க ஐயர் என்பவர் பகவான் ரமணரின் பள்ளிப்படிப்புக் காலத்தில் வகுப்புத் தோழராக இருந்தவர். அவர் தனது ஒரு அனுபவத்தை இப்படி விளக்கியுள்ளார்.

“ஒரு முறை நான் ஸ்காந்தஸ்ரமத்தில் பகவானை விட்டு சிறிது நேரம் வெளியில் சென்றேன். அவர் அப்போது உள்ளே தூங்கிக் கொண்டிருந்தார். நான் திருப்பி வந்த போது அவர் வெளியில் ஒரு படுக்கையில் அமர்ந்திருந்தார். அதைப் பற்றி ஒன்றும் நினைக்கவில்லை நான்.

ஆனால் ஆசிரமத்தின் உள்ளே சென்ற போது அவரை எப்படிப் பார்த்தவாறு வெளியில் சென்றேனோ அதே போல அவர் உள்ளேயே இருந்தார். இதைப் பற்றி பகவானிடம் நான் சொன்ன போது அவர் சிரித்தவாறே கூறினார் :” அதை அப்போதே ஏன் சொல்லவில்லை? அந்தத் திருடனை அப்போதே நான் பிடித்திருப்பேனே!”

“அசாதாரணமான நிகழ்வுகளுக்கெல்லாம் பகவானின் பதில் இப்படித்தான் இருக்கும்! இப்படிப்பட்ட நிகழ்வுகளை அவரிடம் சொன்னால் அவர் அதை ஒதுக்கி விடுவார் அல்லது அதை ஜோக்காக எடுத்துக் கொண்டு விடுவார்.  அற்புத நிகழ்வுகளில் தனது பக்தர்கள் இழுத்துச் செல்லப்பட்டு தங்கள் முக்கிய லக்ஷியமான ஆத்மனை அறிவது என்பதை விட்டுவிடக் கூடாதே என்பதால் தான் அவர் இப்படிச் செய்தார்.”

***

பகவான் ரமண மஹரிஷியின் வாழ்க்கையில் இது போன்ற அற்புத நிகழ்ச்சிகள் ஏராளம் உள்ளன. அதைப் படிப்பது ஒரு தெய்வீக அனுபவமாக இருக்கும்!

SUBHAM

இறந்தவர்களுக்குச் செய்யும் சடங்குகளால் பயன் உண்டா? (Post No.5449)

Written by S NAGARAJAN

Date: 20 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 7-24 AM (British Summer Time)

 

Post No. 5449

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

சேஷாத்ரி ஸ்வாமிகள் ப்ளாஞ்செட்டில் பேசுவாரா? ரமண மஹரிஷியின் பதில்!

 

ச.நாகராஜன்

 

திருவண்ணாமலையிலிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்த பகவான் ரமண மஹரிஷியை தரிசனம் செய்ய பல பக்தர்கள் அன்றாடம் வருவதுண்டு. இவர்கள் தங்கள் சந்தேகங்களையும் பகவானிடம் கேட்டு தெளிவடைவதுண்டு.

 

பலவிதமான மனிதர்கள்! பலவிதமான சந்தேகங்கள்.

இறப்பைப் பற்றி பல பக்தர்களும் அவரிடம் கேட்பதுண்டு. 1935ஆம் ஆண்டிலிருந்தே இப்படிப்பட்ட கேள்விகளும் பகவான் ரமண மஹரிஷியின் பதில்களும் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

இறப்பு என்பது கவலைப் படும் ஒரு விஷயம் அல்ல என்பதே அவர் அடிக்கடி கூறி வந்தது. இருந்தாலும் இவ்வுலகத்தை நிஜம் என்று நினைப்பவர்களுக்கு மறு உலகமும் நிஜம் தான் என்பது அவரது அருளுரை.

 

இதைக் கடந்த ஞான நிலையில் இருப்பவர்களுக்கு இவ்வுலகம் இல்லையெனில் மறு உலகம் ஏது?

 

18-11-1946 அன்று பக்தர் ஒருவர் மஹரிஷியிடம், “இறந்தவர்களுக்காக செய்யப்படும் வருடாந்திர சடங்குகள் முதலியவற்றால் அவர்களுக்கு ஏதேனும் பயன் உண்டா என்று வினவினார்.

இதற்கு மஹரிஷி, “உண்டு. அதெல்லாம் ஒருவனுடைய நம்பிக்கையைப் பொறுத்தது” என்று பதில் கூறி அருளினார்.

அந்த பக்தர் சென்ற பின் பகவானின் அணுக்க பக்தரான தேவராஜ முதலியார் பகவானை நோக்கி, “மூன்று வருடங்களுக்கு முன்பு வரை நான் இறந்தவர்களுக்கு வருடாந்திர சடங்குகள் செய்தலானது அவர்கள் மறுபிறவி எடுக்காத வரை அவர்களுக்கு நன்மை செய்யும் என்று நினைத்தேன்” என்றார்.

 

 

அவரை அப்போது இடைமறித்த பகவான், “அவர்கள் பலமுறை மறுபிறவிகள் எடுத்தாலும் நற்பலன் அவர்களுக்குக் கிடைக்கும். இவையனைத்தையும் கவனித்துக் கொள்ள ஒரு ஏற்பாடு இருக்கிறது. ஆனால் ஞான மார்க்கம் இதையெல்லாம் சொல்லவில்லை” என்று பதில் கூறி அருளினார்.

ஆக பகவான் கூறியதன் மூலம் இந்த அனைத்தையும் கவனித்துக் கொள்ள ‘ஒரு ஏற்பாடு’ இருக்கிறது என்ற ரகசியத்தை அனைவரும் அறிந்து கொண்டனர். இப்படிப்பட்ட “ஏற்பாடுகள்’ நமக்குத் தெரியவில்லை என்றாலும் அது உண்மை தான்.

ரமணர் போன்ற எல்லையற்ற பிரபஞ்ச ரகசியங்களை உணர்ந்தவர்கள் வாயிலாக இதைக் கேட்கும் போது நமக்குத் தெளிவு பிறக்கிறது.

 

 

கர்ம மார்க்கத்தை நம்புபவர்கள் அனைவரும் இந்தச் சடங்குகளைச் செய்வதன் மூலம் தங்களின் பிதிர்களுக்கு அளப்பரிய நன்மை செய்வது உண்மை என்பதையும் அதன் மூலம் அவர்களும் அநுகூலம் பெறுவதும் உண்மை என்பது விளங்குகிறது.

 

 

மேற்கொண்டு தேவராஜ முதலியார், “இந்த உலகத்தை நம்பினால் மறு உலகங்களையும் நம்ப வேண்டும் என்று பகவான் சொல்வதுண்டு” என்று கூறியபோது, அவர், “அது அப்படித்தான்” என்று பதில் அளித்தார்.

 

 

இதற்குச் சில நாட்களுக்கு முன்பு 26-10-1946 அன்று கோயமுத்தூரிலிருந்து  சிலர் திருவண்ணாமலை வந்திருந்தனர்.

இவர்கள் சேஷாத்ரி ஸ்வாமிகள் தங்களிடம் ப்ளாஞ்செட் மூலமாகப் பேசுவதாகக் கூறினர்.

 

ப்ளாஞ்செட் என்பது இறந்தவர்களுடன் பேசுவதற்கான ஒரு எளிய கருவி.

 

சேஷாத்ரி ஸ்வாமிகள் சமாதி அடைந்து விட்ட நிலையில் அதை பராமரித்து வந்தவர் திருவேங்கடம் பிள்ளை என்ற ஓய்வு பெற்ற போலீஸ்காரர். அவரிடம் சமாதியின் கோவிலைத் திறக்கச் சொல்லவே அவரும் திறந்தார். அவரிடம் பிளாஞ்செட்டைக் காண்பித்தனர் குழுவினர்.

 

 

திருவேங்கடம் பிள்ளை அவர்களை நோக்கி, “ ஒருநாள் சேஷாத்ரி ஸ்வாமிகள் க்ஷவரம் செய்த பின்னர் குருக்கள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டிருக்கும் போது என்ன சொன்னார், சொல்லுங்கள்” என்று கேட்டார். அவர்கள் ஏதோ பதிலளித்தனர். பின்னர் அவர் இன்னொரு கேள்வி கேட்க அதற்கும் பதில் வந்தது. வந்த இரண்டு பதில்களும் தவறு என்று கூறிய திருவேங்கடம் பிள்ளை மேற்கொண்டு ஒன்றும் கேட்கத் தேவையில்லை என்றும் சேஷாத்ரி ஸ்வாமிகள் அவர்கள் மூலம் பேசுவதாகத் தன்னால் நம்ப முடியாது என்றும் கூறி விட்டார். வந்த குழு குழப்பத்துடன் கலைந்தது.

 

இந்தக் குழுவினர் ரமாணாசிரமத்திலிருந்து தங்கள் நடவடிக்கைக்களை நடத்த விரும்பினர். ஆனால் ஆசிரமத்தின் அனுமதி கிடைக்கவில்லை.

 

ரமணரிடம், சேஷாத்ரி  ஸ்வாமிகள் அவர்கள் மூலமாகப் பேசுகிறார் என்று சொல்லப்பட்ட போது, அவர், “ நமக்கு அவரை நன்றாகத் தெரியும். நம்மிடமெல்லாம் நெருங்கிப் பழகியிருக்கிறார். அவர் நம்மிடம் வந்து பேசாதது வருந்தத் தக்கதே” என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.

மிக அரிய உயரிய நிலையிலிருந்த சேஷாத்ரி ஸ்வாமிகளின் பெருமையை உள்ளது உள்ளபடி பகவான் ரமணரே அறிவார்.

சேஷாத்ரி ஸ்வாமிகள் எல்லையற்ற பெருநிலையில் இருந்த ரமண மஹரிஷியின் முன் ஒரு நாள் சற்று நேரம் அமர்ந்திருந்தார்.

 

அவரது உயரிய நிலையை அவர் அளக்க முயன்றார் போலும்.

“அட! பிடி கொடுக்க மாட்டேன் என்கிறாரே” என்று கூறினார் சேஷாத்ரி ஸ்வாமிகள்.

 

அப்படிப்பட்ட உயர் நிலையை அடைந்தவர் மஹரிஷி.

அவரது சொற்கள் மூலம் ஏராளமான ஆன்மீக ரகசியங்களை பக்தர்கள் அறிவதுண்டு.

 

இறந்த பின்னர் செய்யும் சடங்குகள் பயனளிப்பவையே என்றும், பிளாஞ்செட் மூலம் சேஷாத்ரி ஸ்வாமிகள் பேசுவது பற்றிய உண்மை பற்றியும் அவர் அருளி இருப்பது பொருள் பொதிந்த ஒன்று!

***

ஆதாரம் : தேவராஜ முதலியார் எழுதிய நாட்குறிப்பு (Day by Day with Bhagawan by A. Devaraja mudaliyar)

ரமணரின் கருணை மழை! (Post No.5031)

Written by S NAGARAJAN

 

Date: 21 MAY 2018

 

Time uploaded in London –  6-33 AM   (British Summer Time)

 

Post No. 5031

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ரமண தரிசனம்

அனைவருக்கும் சமமான ரமணரின் கருணை மழை!

 

ச.நாகராஜன்

1

பகவான் ரமண மஹரிஷியிடம் பக்தர் ஒருவர் வந்தார்.

அவர் கேட்டார்: கடவுள் அனைவருக்கும் பொதுவானவர் தானே!

ரமணர் : ஆமாம்.

பக்தர் : அவரது கருணையும் அனைவருக்கும் பொதுவானது தானே!

ரமணர் : ஆமாம்

பக்தர் : அப்படியானால் அவர் எனக்கு மட்டும் ஏன் கருணை காட்ட மாட்டேன் என்கிறார்.எப்பொழுதும் துன்பம் தானே எனக்கு வருகிறது.

ரமணர் : நீ பாத்திரத்தைக் கவிழ்த்து வைத்திருக்கிறாயே. அதை நிமிர்த்தி வைத்தால் தானே கருணை மழை பொங்கித் ததும்பும்!

 

பக்தர் புரிந்து கொண்டார். இறைவன் அனைவருக்கும் சமமான கருணையைத் தான் பொழிகிறார். அதை ஏற்க நாம் தயாராக – பாத்திரத்தைத் திறந்து வைத்து – இருக்க வேண்டும்.

மனதைத் தூய்மையாக, ஏற்கக்கூடிய பக்குவ நிலையில் வைக்க வேண்டும்.

அத்துடன் பாத்திரம் சிறிய அளவா, அண்டாவா அல்லது மிகப் பெரியதா என்பதையும் நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.

இறைவனின் கருணை மழையைப் போலவே பகவான் ரமணரின் கருணை மழையும் அனைவருக்கும் பொதுவானது.

 

2

பகவானிடம் அருளாசி பெற பாரதத்தின் முதல் ராஷ்ட்ரபதி பாபு ராஜேந்திர பிரசாத் வந்தார். அருளாசி பெற்றார்.

ராஜாஜி வந்தார். மகாகவி பாரதியார் வந்தார். ஏராளமான துறவிகள், பேராசிரியர்கள் வந்தனர். ரமண தரிசனத்தால் பெரும் பேறு பெற்றனர்.

அனைவர் மீதும் அவரது கருணை மழை சமமாக இருந்தது.

உயர்தட்டில் இருந்தவர்களுக்குத் தான் அவரது கருணை என்பது இல்லை; ஏழையாக, சாமானியராக, எழுத்தறிவில்லாதவராக இருந்தாலும் கூட அவர்களுக்கும் அவர் பொது தான்; அவர்கள் மீதும் அவரது கருணை அளப்பரியதாக இருந்தது.

ஒரு சம்பவம்.

பூவன் என்ற ஆட்டிடையனின் ஆடு தொலைந்து விட்டது. ஒரே கவலை. மூன்று நாட்கள் தேடியும் கிடைக்கவில்லை. ஆடு கர்ப்பமாக வேறு இருந்தது. அவனுக்கு நம்பிக்கையே போய் விட்டது. காட்டு மிருகங்கள் அதை அடித்துத் தின்று விட்டதோ!

ஒரு நாள் ஆசிரமம் வழியே சென்று கொண்டிருந்த அவன் பகவானைப் பார்க்க, அவர் அவனை எப்படி இருக்கிறாய் என்று கேட்டார். பூவன் தனது ஆடு தொலைந்த விஷயத்தைச் சொன்னான். பகவான் வழக்கம் போலப் பேசாமல் இருந்தார். பிறகு அவனிடம் சில கற்களைத் தூக்கத் தனக்கு உதவுமாறு கேட்டார். அவனும் சந்தோஷமாக அந்த வேலையைச் செய்தான். அந்தப் பணி முடிந்ததும் பகவான், “இந்தப் பக்கமாகப் போ” என்று ஒரு வழியைச் சுட்டிக் காட்டினார். “அங்கு உன் ஆட்டை வழியில் காண்பாய்” என்றார் அவர். அதே மாதிரி தனது ஆட்டை இரண்டு குட்டிகளுடன் அவன் கண்டான்!

பூவன், “என்ன அற்புதமான பகவான் இவர்! அவரது வார்த்தைகளின் சக்தியைப் பாருங்கள். என்னப் போன்ற ஒரு ஏழையைக் கூட அவர் மறக்கமாட்டார். எனது பையன் மாணிக்கத்தைக் கூட அவர் அன்புடன் நினைவு வைத்துக் கேட்கிறார். பெரியவர்கள் எப்போதுமே அப்படித்தான்.  கோடையில் பசுக்களைப் பார்க்கும் சிறு பணியை அவருக்காகச் செய்வதில் எனக்கு சந்தோஷம்.” என்றான்.

 

முனகல வெங்கடராமையா தொகுத்திருக்கும் அற்புத நூலான

Talks with Sri Ramana Maharshi  என்ற நூலில் 16 டிசம்பர் 1936 தேதியிட்ட பதிவு இது: (ஆங்கில மூலத்தை அப்படியே கீழே காணலாம்.)

 

Poovan, a shepherd, says that he knows Sri Bhagavan since thirty

years ago, the days of Virupakshi cave. He used at times to supply

milk to the visitors in those days.

Some six years ago he had lost a sheep, for which he was searching

for three days. The sheep was pregnant and he had lost all hopes of

recovering her, because he thought that she had been set upon by

wild animals. He was one day passing by the Asramam, when Sri

Bhagavan saw him and enquired how he was. The man replied that

he was looking out for a lost sheep. Sri Bhagavan kept quiet, as is

usual with Him. Then He told the shepherd to help in lifting some

stones, which he did with great pleasure. After the work was finished,

Sri Bhagavan told him: “Go this way”, pointing the footpath towards

the town. “You will find the stray sheep on the way”. So he did and

found the lost sheep with two little lambs.

 

He now says, “What a Bhagavan is this! Look at the force of his

words! He is great! He never forgets even a poor man like me. He

remembers my son Manikkam also with kindness. Such are the great

ones! I am happy when I do any little work for Him, such as looking

to the cows when they are in heat.

 

3

இதே போல பகவானுக்கு பௌர்ணமி தோறும் க்ஷவரம் செய்ய வரும் நடேசனும் அவர் பால் அதீத பக்தி கொண்டவர். பகவானுக்கு நமஸ்காரம் செய்து விட்டுத் தான் அவர் தன் வேலையைத் தொடங்குவார். ஒரு நாள் மலையில் வழியில் பார்த்த பகவானை அவர் நமஸ்காரம் செய்ய, “இங்கு எதற்கு? என்றார்.

என்ன அற்புதமான குறிப்பு!

பௌர்ணமி தோறும் கோசாலையில் க்ஷவரம் செய்ய வரும் போது செய்யும் நமஸ்காரமே போதுமே என்று கருணையுடன் குறிப்பால் உணர்த்த அவர் கூறிய அன்புச் சொற்கள் அது.

இன்னொரு முறை நடேசன் அவசரமாக செல்ல வேண்டிய ஒரு தருணத்தில், அவன் போக வேண்டும்; ஆனால் சாப்பிட்டிருக்க மாட்டானே என்றார் பகவான்.

குறிப்பறிந்த தொண்டர் உடனடியாக சமையலறைக்குச் சென்று நடேசனுக்கு உணவு கொண்டு வந்தார்.

தழுதழுத்த குரலில் சொன்னார் நடேசன்: “பகவானுக்கு அனைவருமே சமம் தான். பொதுவாக அனைவரும் உண்ட பின்னரே நாங்கள் உண்பது வழக்கம். இன்று பாருங்கள், பகவானின் கருணையை! என்றார்.

எந்த வித பேதமுமின்றி பொழிவதே இறைவனின் கருணை.

அந்த அவதாரமாக வந்த பகவானுக்கும் அதே கருணை இருப்பது இயல்பு தானே!

***

பகவான் ரமணரின் வாழ்வில் நகைச்சுவை! (Post No.3830)

Written by S NAGARAJAN

 

Date:19 April 2017

 

Time uploaded in London:-  5-49 am

 

 

Post No.3830

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

பகவான் ரமணரின் வாழ்வில் நகைச்சுவை!

ச.நாகராஜன்

 

பகவான் ரமண மஹரிஷியின் வாழ்க்கை வரலாற்றையும் உபதேசங்களையும் படிக்கும் பக்தர்கள் பொதுவாகவே அவர் தீவிர சிந்தனையிலும் இறை உணர்விலும் இருப்பதை உணர்வர். ஆனால் உலகியல் வாழ்க்கைக்கு ஏற்ப அவர் நகைச்சுவை உணர்வுடன் இருந்து பக்தர்களின் பதிலை ஏற்றுக் கொண்டதைச் சுட்டிக் காட்டும் நிகழ்ச்சிகள் ஏராளம் உண்டு.

 

 

இதை எடுத்துக் காட்டும் விதத்தில் பகவானின் அணுக்க பக்தரான குஞ்சு சுவாமிகள் பல சம்பவங்களைக் கூறியதுண்டு.அவற்றில் சில:

 

 

பகவானுடன் கிரி வலம் வரும் பக்தர்கள் பொதுவாக தெய்வீகப் பாடல்களையும் ஸ்தோத்திரங்களையும் பாடிக் கொண்டே செல்வது வழக்கம். ஆனால் ஒரு பையன் மட்டும் மௌனமாக பகவானுடன் வருவது வழக்கமாக இருந்தது. ஒரு நாள் அனைவரும் ஆளுக்கு ஒரு பாடலைப் பாடி முடித்த போது பகவான் அந்தப் பையனைப் பார்த்து, “எல்லோரும் பாடி விட்டார்களே! நீ ஒன்றைப் பாடக் கூடாதா?” என்றார். அதற்கு உடனே அந்தப் பையன், “ஜீவன் முக்தர்கள் எங்காவது பாடுவார்களா?” என்றான்.

 

இதைக் கேட்ட பகவான் விழுந்து விழுந்து சிரித்தார்.

 

சத் தரிசன பாஷ்யம் என்ற நூலை எழுதிய கபாலி சாஸ்திரியார் பகவானின் அணுக்க பக்தர். வேத ரகசியங்களை நூல்களாக எழுதியவர். பின்னாளில் இவர் அரவிந்த ஆசிரமத்திலும் தங்கி இருந்தவ்ர். அவருக்கு திருமணத்தில் அவ்வளவாக நாட்டம் இல்லை. ஆனால் அவர் வீட்டிலோ அவரை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வைக்க முயன்றனர். ஒரு நாள் அவர் பகவானிடம் வந்து, “ நான் நாளை ஆசிரமத்தை ஏற்றுக் கொள்ள முடிவு செய்திக்குருக்கிறேன்: என்றார்.

 

ஆசிரமத்தை ஏற்றுக் கொள்வது என்றால் பொதுவாக சந்யாச் ஆசிரமத்தை ஏற்றுக் கொள்வதாகத் தான் அர்த்தம்,.

பகவான் ஆச்சரியத்துடன், “அப்படியா! கபாலி! அதற்கு வீட்டில் அனுமதி வாங்கியாகி விட்டதா?” என்று கேட்டார்.

அதற்கு அவர், “நான் இரண்டாவது ஆசிரமத்தைச் சொன்னேன். பிரமசர்யத்திலிருந்து கிரஹஸ்தாசிரமம் போக முடிவு செய்து விட்டேன்” என்றார்.

 

பகவான் இதைக் கேட்டுச் சிரித்தார்.

 

முதலியார் பாட்டி என்று அழைக்கப்பட்ட மூதாட்டி பகவானுக்கு அன்டன் தான் சமைத்த உணவைக் கொண்டு வந்து தருவது வழக்கம். பகவான் அதிகமாகச் சாப்பிடாமல் மிகவும் குறைந்த அளவே சாப்பிடுவதாக அவர் எண்ணி வருத்தப்பட்டார். அதனால் சாதத்தை அமுக்கி அமுக்கி சிறிய உருண்டையாக ஆக்கி அதை பகவானுக்குப் படைத்தார். இந்த ட் ரிக்கைக் கண்ட பகவான் பாட்டியைப் பற்றி, “பாட்டியின் ட் ரிக் எனக்குத் தெரியாதா என்ன, அமுக்கி அமுக்கி நிறைய சாதத்தை இப்படிச் செய்கிறாள்” என்று கையால் சாதத்தை உருண்டையாக் அமுக்கிக் காட்டினார்.

 

 

இதற்கு பாட்டியிடமிருந்து உடனே பதில் வந்தது ரமணரின் பாணியிலேயே!

 

பகவான் கையால் அமுக்கி காட்டிய சைகையை அப்படியே திருபபிச் செய்து, “எது அதிகம், எது குறைச்சல்? எது பெரிது, எது சிறிது? எல்லாம் நம் பாவனையில் தான் இருக்கிறது.” என்றார் பாட்டி.

 

 

தன் கூறும் சொற்களாலேயே தன்னை பாட்டி மடக்குவதைக் கண்ட ரமணர் சந்தோஷத்துடன், “ பார், பார்! நான் சொன்னதையே எனக்குத் திருப்பிச் சொல்கிறாள்” என்று கூறினார்

 

இது போன்ற ஏராளமான சம்பவங்கள் பகவானின் வாழ்வில் அவ்வப்பொழுது இடம் பெறுவது உண்டு. பகவானும் இவற்றை வெகுவாக ரசிப்பார். நகைச்சுவை உணர்வுடன் அவர் பக்தர்களின் சொற்களையும் செய்கைகளையும் ஏற்றுக் கொள்வார்.

இதில் பக்தர்களுக்கும் ஆனந்தம்; பகவானுக்கும் ஆனந்தம்!

***

பாபாவின் வாழ்வும் ரமணரின் வாக்கும்

sathya-sai-baba-laughingramana-maharshi

November 23rd is Sri Sathya Sai Baba’s Birth Day
(Post No 718 dated 21st November 2013)

பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபாவின் வாழ்வும் பகவான் ரமணரின் வாக்கும் புகட்டும் அற்புத உண்மைகள்!
ச.நாகராஜன்

என் செயல்களைக் கூர்ந்து கவனியுங்கள்

“எனது வாழ்க்கையே என் செய்தி” (MY LIFE IS MY MESSAGE) என்று ஒரு முறை பக்தர்களுக்கு அருளுரையாக வழங்கிய ஸ்ரீ சத்ய சாயிபாபா தன் செயல்களைக் கூர்ந்து கவனிக்குமாறும் அதன்படியே நடக்குமாறும் தெளிவாக எடுத்துரைத்தார்.

இறைவனே மானிட உருவமாக அவதாரம் எடுத்துள்ளபோது அது தரும் செய்தி மகத்தான செய்தியாக அல்லவா அமைகிறது. தனது ஜீவிதத்தில் ஒவ்வொரு கணத்தையும் மனித குலப் படிப்பினைக்காக அர்ப்பணித்த அவதாரத்தின் முக்கிய செய்திகளில் ஒன்று தியாகம்!
‘சர்வ சங்க பரித்யாகினே நம:’ என்று அவரது அஷ்டோத்தரத்தில் நாம் அன்றாடம் கூறும் போது கோடானு கோடி பணத்தையும் அவர் நிர்மாணித்த அனைத்தையும் க்ஷண நேரத்தில் துறந்து ஏக வெளியுடன் இரண்டறக் கலந்த ஸ்வாமியின் பெரும் தியாகத்தை நினைத்து நம் மெய் சிலிர்க்கிறது.

சூப்பர் ஸ்பெஷாலிடி ஆஸ்பத்திரி

அவர் வாழ்வில் ஏட்டின் ஒரு பக்கம் இதோ:
1979ஆம் ஆண்டு லெப்டினண்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெற்று இரண்டு லட்சம் இந்தியப் படைவீர்ர்களுக்குத் தலைமை தாங்கும் பெரும் பொறுப்பைப் பெற்ற எம்.எல்.கிப்பர், பாபாவின் அணுக்கத் தொண்டர். 1991ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த நிகழ்ச்சியை அவர் ‘த்ரூ தார்மிக் டைலம்மாஸ்’ என்ற தனது கட்டுரையில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

சூபர் ஸ்பெஷாலிடி (Super Speciality Hospital) ஆஸ்பத்திரியின் கட்டுமான வேலைகள் இரவு பகலாக இடைவிடாது வெகு மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஆஸ்பத்திரிக்குத் தேவையான மெஷின்களும் உபகரணங்களும் உலகெங்கிலும் இருந்து “பறந்து” வந்து கொண்டிருந்தன. ஆஸ்பத்திரி தரை பாலிஷ் செய்யப்பட்டு மெருகேற்றப்பட்டுக் கொண்டிருந்தது. குறித்த காலத்தில் திறப்பு விழா நடைபெற வேண்டும் என்ற பரபரப்பு பிரசாந்தி நிலையத்தில் ஆரம்பித்து உலகெங்கும் பரவி இருந்தது.

இந்த பிரம்மாண்டமான ஆஸ்பத்திரி உலக அதிசயமாக ஐந்தே மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டது.இன்னும் பத்து நாட்களே இருந்தன திறப்பு விழாவிற்கு. அன்று காலை ஸ்வாமி இன்டர்வியூ அறையிலிருந்து வெளியே வந்து நேராக பல்கலைக்கழக மாணவர்களிடம் போனார். அவர் கையில் ஒரு கடிதம் இருந்தது. மாணவர்களிடம் அதைக் காட்டி ஸ்வாமி, இந்திய ஜனாதிபதி திரு ஆர்.வெங்கடராமன் ஐந்து மாதங்களில் இந்த ஆஸ்பத்திரி கட்டி முடித்திருப்பது ஒரு அற்புதம் என்று எழுதி இருப்பதாகக் கூறினார். இதுவே அரசினால் கட்டப்பட்டிருந்தால் ஐந்து வருடம் ஆகி இருக்கும். இதைச் சொல்லி விட்டு தனது இன்டர்வியூ அறைக்கு ஸ்வாமி மீண்டும் திரும்பினார்.

satya_sai_baba

செல்லும் வழியில் இருந்த கிப்பர், ஸ்வாமியிடம், “ மானேஜ்மெண்ட் மாணவர்களுக்கு ஐந்து மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட ஆஸ்பத்திரி அருமையான ஒரு கேஸ் ஸ்டடியாக அமையும்” என்று குறிப்பிட்டார். இதைக் கேட்டவாறே நடந்த ஸ்வாமி திரும்பினார். அவரைப் பார்த்தார். ஒரு சில வினாடிகள் கழிந்தன.பிறகு மேலே வானத்தில் அவர் கண்கள் பதிந்தன. ”இல்லை, எந்த மானேஜ்மெண்டிற்கும் வேண்டாம்” என்றவர் ஒரு ஸ்லோகத்தை உச்சரித்தார்.

“ந கர்மணா, ந ப்ரஜயா, தனேன
த்யாகேனைகே அம்ருதத்வமான்சு”

(கர்மத்தினால் அல்ல, ப்ரஜைகளால் அல்ல, பணத்தினால் அல்ல, தியாகத்தினால் மட்டுமே அம்ருதத்வம் அடையப்பட முடியும்)
இதைச் சொல்லி விட்டு மெல்ல அவர் நடக்கலானார்.

அற்புதமான பிரம்மாண்டமான ஒரு பெரும் காரியத்தைச் செய்து விட்டு அதைப் பற்றிச் சிறிதும் பெருமைப்படக்கூடாது என்பதோடு கர்மத்தையும் அதனால் வந்த பெருமையையும் கூட தியாகம் செய் என்ற தைத்திரீய உபநிஷத்தின் மந்திரத்தை உபதேசமாக தக்கதொரு தருணத்தில் அவர் அருளியது அனைவரையும் பிரமிக்க வைத்தது; நெகிழ வைத்தது. மனித குலத்திற்கு அவர் வாழ்க்கை தந்த செய்தி இதுவே!

201106_sai_baba

அவரது மறைவுக்குப் பின்னர் தனி அறையில் கட்டுக் கூடப் பிரிக்கப் படாமல் கிடந்த பெரும் பணக் கட்டுகள் கீதையில் கண்ணபிரான் கூறிய “பற்றில்லாத செயலை”ப் பறை சாற்றின!

ஆத்ம பிரதக்ஷிணமே உண்மை பிரதக்ஷிணம்

இதே போல பகவான் ரமணரும் தான் அடைந்த பெரும் ஞான நிலையைக் காட்டாது காண்போர்க்கும் பழகுவோருக்கும் எளியனாக இருந்தார். பெரும் ரகசியங்களை அனாயாசமாக போகிற போக்கில் சொல்லிச் சென்று விடுவார். பக்குவிகள் பக்கென்று அந்த உபதேசத்தைப் பற்றிக் கொள்வர். அவர் கூறியஒரே ஒரு பெரும் ரகசியத்தைப் பார்க்கலாம்:

1946ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி (இதற்கு நான்கு ஆண்டுகள் கழித்து ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி இரவு 8.47க்கு வானில் ஜோதியாக ஐக்கியமானார் பகவான் என்பது நினைவு கூறத் தகுந்தது)
காலை எட்டு மணிக்கு அணுக்க பக்தை நாகம்மா, பகவான் அமர்ந்திருந்த ஹாலை இரண்டு முறை சுற்றி விட்டு பின் சந்நிதிக்கு வந்து பகவானுக்கு நமஸ்காரம் செய்தார். “ ஓ! நீ கூட சுற்ற ஆரம்பிச்சாச்சா. ஒருவர் சுற்றி விட்டால் எல்லோரும் அப்படிச் சுற்றுவது தான் முறையான செயல் என்று நினைத்துச் சுற்ற ஆரம்பிப்பார்கள்” என்ற பகவான் பெரும் ரகசியத்தை சில சொற்களாலேயே விளக்கி விட்டார்.

“உண்மையான பிரதக்ஷிணம் எது தெரியுமா? ஆன்மாவைச் சுற்றுவது தான். ஆத்ம பிரதக்ஷிணம் தான் உண்மையான பிரதக்ஷிணம். நாம் ஆன்மா. நமக்குள் எண்ணற்ற கோளங்கள் சுழல்கின்றன என்று உணர வேண்டும். ரிபு கீதையில் உள்ள பாடல் இதை வர்ணிக்கிறது.

பூரண ஆனந்த ஆன்மா அகம் என்று எண்ணல்
புகழ் புஷ்பாஞ்சலி ஆகும் அனந்த கோடி
காரியமாம் பிரமாண்டம் என்னிடத்தே
கற்பிதமாய் சுழலும் எனும் தியானம் தானே
நேரதுவாய் வலம் வரலாம் என்றுமென்னை
நிகிலருமே வந்திப்பார் நானெப்போதும்
யாரையுமே வந்திக்கேன் என்னும் தியானம்
ஆன்ம மகாலிங்கத்தின் வணங்கலாமே

standing ramana

(இதன் பொருள் : பூரண ஆனந்தமான ஆன்மாவே நான் என்று எண்ணுவது அனந்த கோடி புகழ் அஞ்சலிக்கும் புஷ்பாஞ்சலிக்கும் நிகராகும். என்னுள் அண்டங்கள் அனைத்தும் கற்பிதமாய்ச் சுழல்கின்றன என்னும் எண்ணமே உண்மையான வலம் வருதல் ஆகும். அகிலமும் தன்னை வணங்குமென்றும் தான் யாரையும் எப்போதும் வணங்கேனென்றும் உணருபவன் மகாலிங்கமான ஆன்மாவை வணங்குகிறான்).

பிரம்மாண்டத்தில் உள்ள அனைத்தும் சூக்ஷ்மாண்டத்தில் உண்டு அதாவது அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு என்ற அற்புதமான பேருண்மையை அந்தக் கணத்தில் அங்கு குழுமி இருந்த அனைவரும் உணர்ந்து கொண்டனர்.

யோகவாசிஷ்டத்தில் ஒவ்வொரு அணுவுக்குள்ளும் ஏராளமான உலகங்கள் இருக்கின்றன என்று உபதேசிக்கப்படுகிறது, விஞ்ஞானம் இதுவரை கண்டுபிடிக்காத மெய்ஞான உண்மையை பகவான் ரமணர் எளிதாக விளக்கி விட்டார். இப்படி அவர் விளக்கிய ரகசியங்கள் பற்பல!

மகான்களும் அவதாரங்களும் தங்கள் வாழ்வு நிகழ்ச்சிகள் மூலமாகவும் வாக்கின் மூலமாகவும் பேருண்மைகளை விளக்குவர் என்பதற்கு நம் காலத்தில் வாழ்ந்த பகவான் பாபாவும் பகவான் ரமணருமே சிறந்த எடுத்துக்காட்டுகள் ஏப்ரல் மாதம் மஹா சமாதி அடைந்த இருவரையும் போற்றி வணங்கி அவர்கள் காட்டிய வழியில் நடப்போம்!

(பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் மஹா சமாதி தினம் ஏப்ரல் மாதம் 24ஆம் தேதியும் பகவான் ரமணரின் மஹா சமாதி தினம் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதியும் வந்ததை ஒட்டி ஞான ஆலயம் ஆன்மீக
மாத பத்திரிக்கை ஏப்ரல் 2013 இதழில் வெளியான கட்டுரை. Written by Santanam Nagarajan)

November 23rd is Baba’s Birth Day. contact swami_48@yahoo.com

****************