ரமண மஹரிஷி படம்
Post No.1759; Date 30th March 2015
This is written by my brother S Nagarajan for Jnana Alayam- Tamil Magazine: swami
ப்ரணவ தேஹம் பெற்ற மஹான்கள்!
ஞான ஆலயம் ஏப்ரல் 2015 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
நன்றி:ஞான ஆலயம்
மிகப் பெரும் அருளாளரான பகவான் ரமண மஹரிஷியைப் போற்றித் துதிக்கும் சிறப்புக் கட்டுரை! (ரமண மஹரிஷி அவதார தோற்றம்: 30-12-1879 சமாதி: 14-4-1950
ச.நாகராஜன்
Ramana Stamp– ரமணர் தபால் தலை
வள்ளலாரும் ரமணரும்
ஹிந்து மதத்தின் மகத்தான சிறப்புக்களில் ஒன்று, அது சுட்டிக் காட்டும் பேருண்மைகளை அனாயசமாக நிரூபிக்கும் மகான்கள் பாரதத்தின் பல இடங்களிலும் அவ்வப்பொழுது தோன்றிக் கொண்டே இருப்பது தான்! இவர்களுள் மிக பிரம்மாண்டமான நிலையை எய்தியதோடு தம்மை அப்படிப்பட்ட பெரும் நிலையை எய்தியவர்கள் என்று சிறிதும் காண்பிக்காமல் மிக எளிமையாக வாழ்ந்து அருளுரை பகர்ந்த இருவர் வள்ளலார் ராமலிங்க ஸ்வாமிகளும் பகவான் ரமண மஹரிஷியும் ஆவர்.இவர்கள் மிக சமீப காலத்திலேயே வாழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தகுந்த ஒரு விஷயம். ஆகவே இவர்களைப் பற்றிய ஏராளமான சம்பவங்களும் செய்திகளும் முழு விவரங்களுடன் தேதி வாரியாக அதிகாரபூர்வமாக நம்மிடையே உள்ளது.
வள்ளலார் உடலுடனேயே ஜோதி மயமாக ஆகி விட்டவர். ரமண மஹரிஷியோ தான் மறையும் அதே கணத்தின் போது தன் ஜோதி ஸ்வரூபத்திற்கு, வானில் பறந்து செல்லும் ஜோதியை சாட்சியாக காண்பித்துச் சென்றவர்.
முற்றும் துறந்த ஞானி ரமணர்
மூன்று தேகங்கள்!
வள்ளலார் மனித தேகத்தின் மூலமாகப் பெறக்கூடிய அரிய மூன்று நிலைகளைத் தன் பாடல்களில் தன் அனுபவத்தின் வாயிலாக வடித்துள்ளார். மிக மிகத் தூய்மையாக இருக்கும் நிலையில் ஒருவர் எய்துவது சுத்த தேகம். அதற்கு அடுத்த நிலை பிரணவ தேகம். இதற்கும் அடுத்த உயரிய நிலை ஞான தேகம்.இதை அவர் அடைந்துள்ளதற்கு அவர் சித்தி வளாகத்தில் உடலோடு தன் அறையில் புகுந்து பின் மறைந்த சம்பவமே சான்றாகும்.
ரமணரின் பிரணவ தேகம்
ரமண மஹரிஷியின் வாழ்வில் அவர் பிரணவ தேகத்துடன் இருந்ததை அவரது அணுக்கத் தொண்டர்களுள் ஒருவரான குஞ்சு சுவாமிகள் இப்படி விவரிக்கிறார்:-.
“பகவானுக்கு சில நேரங்களில் திடீரென மின்னலடித்தாற்போல தன் தேகம் மறைந்து அணுக்களாகச் சிதறிப் பரந்து, புகை போன்று ஒரு உருவெளித் தோற்றம் உண்டாகி அதன் பிறகு பனித்துகள் போன்று ஒன்று சேர்ந்து மறுபடியும் தெரியுமாம். இவ்வநுபவம் ஒரே நிலையில் இருக்கும் போதும், ஆகாரம் இல்லாமல் தேகம் ஒடுங்கி இருக்கும் போதும் உண்டாகுமாம். இவ்வாறு அணுக்களாக விரிந்து தேகமற்று பஞ்சபூதத்துடன் கலந்து விடும் நிலைக்கு “பிரணவ தேகம்” எனப் பெயராகும்.
ஒரு முறை பகவான் ரமணர் உபவாசமாக இருந்து பிரணவ தேஹி ஆகி விடலாம் என்ற எண்ணத்துடன் தனித்து ஒருநாள் காலையில் திருவண்ணா மலையில் உள்ள பச்சையம்மன் கோவில் பக்கம் காட்டிற்குள் புகுந்து செல்ல ஆரம்பித்தார். அச்சமயம் சிறு பையனாக இருந்து வேத பாடசாலையில் படித்து வந்த வாசுதேவ சாஸ்திரி ரமண மஹரிஷியைப் பார்த்து விட்டு ஓடி வந்து இப்படித் தனியாக வந்திருக்கிறீர்களே, வாருங்கள் விருபாக்ஷிக்குப் போகலாம் என அழைத்தார். அதற்கு அவர், ‘ நான் காட்டிற்குள் இரண்டு நாள் தங்கி விட்டு வருகிறேன், நீ போ” என்று பதில் கூறினார். இதைக் கேட்ட வாசுதேவன் அழ ஆரம்பித்தார். பகவான் அவரைச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்த சமயம் ஈசான்ய மடத்தின் அதிபதியான சாத்தப்ப சுவாமிகள் யதேச்சையாக அங்கு வர, பகவானைப் பார்த்து விட்டுத் தம்முடன் அவரை அழைத்துச் சென்றார். பகவானை நம்மிடம் பல காலம் இருக்கச் செய்யக் காரணமானவர் சாத்தப்ப சுவாமிகளே!
பகவான் இப்படிச் செல்ல முயலும் போதெல்லாம் அன்னை மீனாட்சி அவரைச் செல்ல அனுமதிக்கவில்லை. இதை பகவானே,”இங்கு இருக்கும்படி சொல்லி இம்சைப் படுத்தறா” என்று கூறி அருளி இருக்கிறார். கோடானு கோடிப் பேர்கள் கடைத்தேற அனுப்பப்பட்ட பகவானை அவ்வளவு சீக்கிரம் ப்ரணவ தேஹியாக மாற அன்னையின் ஆணை இல்லை என்பது ஜீவர்களின் மீதுள்ள மீனாட்சியின் எல்லையற்ற கருணைக்கு ஒரு உதாரணம்!
திருவண்ணாமலை கோவில் படம்
அண்ணாமலை அதிசயம்
அன்னை மீனாட்சி அவருக்குப் பல அற்புத காட்சிகளைக் காண்பித்ததில் சிலவற்றை அவரே மிக அரிதாக அன்பர்களிடம் கூறியிருக்கிறார். அவற்றுள் ஒன்று திருவண்ணாமலை பற்றிய அதிசயம்!
ஒரு நாள் சாக்கிர, சொப்பனம் இரண்டும் இல்லாத நிலையில் பகவான் விருபாக்ஷி குகையில் இருக்கும் போது, தாம் மலையில் உள்ள ஒரு குகையினுள் நுழைந்து சென்றார். அங்கே பர்ணசாலைகளும் ரமணீயமான தடாகங்களும், பூத்துக் குலுங்கும் மரம், செடி, கொடிகளுமாக அதி அற்புதத்துடன் விளங்கும் காட்சியைக் கண்டார். அது புதிய இடமாக இல்லாமல் தான் முன்பே பார்த்துப் பழகிய இடமாக அவருக்கு ஒரு காட்சி தோன்றிற்று. பின்னர் அடியண்ணாமலை கோவில் திருப்பணி நடந்து கொண்டிருக்கும் போது ஒரு நாள் திருப்பணி செய்து கொண்டிருந்தவர்கள் கோவிலின் கிழக்குப் பக்கத்திலிருந்து மலைக்குள் ஒரு சுரங்கம் செல்வதைக் கண்டு ஓடோடி வந்து பகவானிடம் அதைத் தெரிவித்தனர். மறுநாள் பகவான் கிரி பிரதக்ஷிணம் செய்யும் போது அச்சுரங்கம் இருக்கும் இடம் சென்று அதைப் பார்த்தார். அது தான் முன்னர் கண்ட காக்ஷியில் இருந்ததைப் போலவே இருப்பது கண்டு மனதிற்குள் வியந்தார்.வெளியில் யாரிடமும் சொல்லவில்லை. அதை எந்த வித சோதனையும் செய்யாமல் உடனே மூடச் சொன்னார். ஆனால் அதே காட்சியை அருணாசல மாகாத்மியம் விவரிப்பதைக் கண்டு அந்த சம்ஸ்கிருத ஸ்லோகத்தைத் தமிழில் மொழி பெயர்த்தார்.
நமது அறநூல்கள் உரைக்கும் அனைத்துமே வார்த்தைக்கு வார்த்தை உண்மை தான் என்பதை ரமண மஹரிஷி போன்ற பெரும் மகான்கள் சொல்லும் போது தான் அந்த உண்மையின் ஆழத்தை நம்மால் புரிந்து கொண்டு பிரமிக்க முடிகிறது.
குடையாளி – ஆன்மீகக் கொடையாளி !!
எந்த நிலை என்று சொல்ல முடியாத அரிய நிலை
பகவானின் ஆழத்தை அளக்க முயன்றவர்களுள் மாபெரும் மஹானான சேஷாத்திரி ஸ்வாமிகளும் ஒருவர். ஒரு நாள் அவர் பகவானின் முன்னிலையில் அபூர்வமாக வந்து நெடுநேரம் அமர்ந்திருந்தார். இருவரும் பேசவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்தவண்ணம் இருந்தனர்.
பின்னர் சேஷாத்திரி ஸ்வாமிகள் மலையிலிருந்து கீழே இறங்கி வந்து விட்டார்.
“ஹூம், இவர் எப்படிப்பட்ட சொரூபம் கொண்டவர் என்று பார்க்கலாம் என்று பார்த்தேன். விடவே இல்லையே!” என்று அவர் கூறி வியந்தார்.
மஹா பெரிய மஹானான சேஷாத்திரி ஸ்வாமிகளே வியக்கும் ஒரு பெரிய உயரிய நிலையைக் கொண்ட அருளாளர் நம்மிடையே வாழ்ந்து வந்தார்; இன்றும் அவரை நினைப்பவர்களுக்கு அருள் புரிந்து வருகிறார் என்பது நமது பாக்கியமே, அல்லவா!
***************
You must be logged in to post a comment.