WRITTEN by London Swaminathan
Date: 20 May 2018
Time uploaded in London – 9.46 am (British Summer Time)
Post No. 5028
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
சீதைக்கு ஒரு பிள்ளைதான்!! தாய்லாந்து ராமாயணம்-4
முதல் மூன்று பகுதிகளில் அனுமனுக்கு இரணடு மனைவிகள், ராவணனின் மகள்தான் சீதை, இலங்கையில் ஆட்சிக்கு எதிராகக் கலகம் , மயில் ராவணன் கதை முதலிய பல விநோதங்களைக் கண்டோம். இப்போது குசன் மட்டுமே சீதையின் மகன் என்ற கதையையும் சீதை வரைந்த ராவணனின் படம் குறித்தும் உள்ள சம்பவங்களை தாய்லாந்து ராமாயணமான ராமகீயனில் (RAMAKIEN) இருந்து காண்போம்.
வால்மீகி ராமாயணத்தின்படி ராமனுக்கு லவன், குசன் என்ற இரட்டையர் பிறந்தனர் என்பதை நாம் அறிவோம்
சீதை, கர்ப்பவதியாக இருந்தபோது ராமன் காட்டுக்கு அனுப்பினான். அங்கே அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்தப் பிள்ளை மீது வால்மீகி முனிவர் குஸ என்ற புனிதப் புல்லினால் புனித நீர் தெளித்ததால் அவனுக்குக் குஸன் என்று பெயரிட்டனர்.
குழந்தை பிறந்த செய்திக்குப் பின்னர், ராமன் புஸ்பக விமானத்தில் பறந்து வந்து ஜாத கர்மம் முதலிய சடங்குகளைச் செய்துவிட்டுப் புறப்பட்டும் போய்விட்டான். சீதையின் தந்தையான ஜனகன் முதலிய உறவினரும் வந்தனர்.
இவ்வாறு இருக்கையில் ஒரு நாள், சீதை காட்டில் பழங்களைச் சேகரிக்கச் சென்றாள். இயற்கை அழகைக் கண்டு ரஸித்தாள். வால்மீகி முனிவரிடம் ‘என் பிள்ளையைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டுப் போனாள்
ஒரு மரத்தில் ஒரு தாய்க் குரங்கு ஐந்து குட்டிகளுடன் தாவித்தாவி சென்று கொண்டிருந்தது. சீதைக்கு ஒரே கவலை. உடனே தாய்க் குரங்கைப் பார்த்து சொன்னாள்:
“ஏ, குரங்கே! பார்த்துத் தாவு; குட்டிகள கீழே விழுந்துவிடப் போகின்றன. ஜாக்கிரதை!”
இதைக் கேட்டவுடன் அந்தக் குரங்கும் அருகாமையில் இருந்த குரங்கும் பலமாகச் சிரித்தன. “ஏம்மா தாயே! உன் கைக் குழந்தையை ஒரு கிழட்டு முனிவன் பாதுகாப்பில் விட்டு வந்திருக்கிறாய்; அவரோ கண்ணை மூடிக்கொண்டு தியானத்தில் அமர்ந்து இருக்கிறார். ‘ஊருக்குத் தாண்டி உபதேசம் உனக்கு இல்லை என்ற கதையாக இருக்கிறதே!’ என்று சொல்லிச் சிரித்தன.
இதைக் கேட்டவுடன் சீதைக்கு ‘ஷாக்’ அடித்தது போல இருந்தது. வால்மீகி முனிவரின் ஆஸ்ரமத்த்க்கு ஓடினாள். அங்கு முனிவரும் இல்லை சிஷ்யர்களும் இல்லை; குழந்தை மட்டும் குடிலுக்குள் உறங்கிக் கொண்டு இருந்தது. சீதை, தனது குழந்தை குஸனுடன் காட்டுக்குள் வந்து இயற்கை அழகைக் கண்டு வியந்தாள்.
இதற்கிடையில் ஆஸ்ரமத்துக்குத் திரும்பிவந்த வால்மீகி குழந்தையைக் காணாது திகைத்தார்; பதை பதைதார். உடனே ஒரு கணமும் தாமதிக்காது ஒரு குழந்தையை மந்திர சக்தியால் உருவாக்கினார். சீதை திரும்பி வந்தவுடன், அவள் கையில் உணமைக் குழந்தை — அசல் குழந்தை —இருப்பதைப் பார்த்து தான் பதற்றத்தில் வேறு ஒரு குழந்தையை சிருஷ்டித்த கதைகளைச் சொன்னார்.
இரண்டாவது குழந்தையை சீதையின் கையில் கொடுத்து உன் மூத்த பிள்ளைக்கு விளையாட ஒரு ஆண் வேண்டுமல்லவா; ஆகையால் இவனையும் உன் மகனாக வைத்துக் கொள்; இவனை கம்பளி நூல் மூலம் உருவாக்கினதால் இவனுக்கு ‘லவன்’ என்று பெயர் என நுவன்றார்.
அதைச் செவிமடுத்த சீதைக்குப் பேரானந்தம்!
இதே போல இந்தியாவிலுள்ள ஆனந்த ராமாயணத்திலும் சில சிறிய மாற்றங்களுடன் கதை உளது. ஆகவே ஆனந்த ராமாயணம்தான் தென் கிழக்காசிய நாடுகளுக்குச் சென்றது என்றும் சிலர் கதைப்பர்.
கதா ஸரித் சாகரம் என்ற நூலிலும் இக்கதை உளது ஆனால் அது முதல் பிள்ளை லவன் என்றும் இரண்டாம் பிள்ளைதான் குசன் என்றும் சொல்லும். வடக்கத்தியர்கள் குசன் லவன் என்று சொல்லுவர். நாமோ லவ குசன் என்போம்.
இலக்குவனால் மூக்கு அறுபட்டுப் போன சூர்ப்பநகைக்கு ஒரு மகள் உண்டாம் ; அவள் பெயர் அதுல். அவளே மாறு வேடத்தில் ராமபிரான் அரணமனையில் வேலைக்கு அமர்ந்தாள் அவள்தான கூனி எனப்படும் மந்தரை. சீதையை பழிவாங்கத் திட்டம் தீட்டினாள். அது ராமனைப் பாதிக்கும் என்று திட்டம் போட்டாள்; அதன்படி ராமன் வரக்கூடிய தருணம் பார்த்து சீதையிடம் ஒரு படம் வரைச் சொன்னாள்:
“அம்மா, அம்மா எனக்கு ராவணன் என்னும் ராக்ஷஸன் எப்படி இருப்பான் என்று பார்க்க ஆசையம்மா! PLEASE ப்ளீஸ், படம் வரைந்து காட்டுங்களேன்” என்றாள். அவளும் வேடிக்கைக்குதானே இந்தக் கூனி கேட்கிறாள் என்று எண்ணி அவளைக் குஷிப்படுத்த படமும் வரைந்தாள் அந்த தருணத்தில் அண்ணலும் வந்தர்; படத்தைப் பார்த்து ஆத்திரமும் அடைந்தார். மாறு வேடக் கூனி அதுலும் (ADUL) நன்றாக சீதையை மாட்டிவிட்டாள்.
கோபம் கொண்ட ராமன், இலக்குவனை அழைத்து, இந்தப் பெண்ணைக் காட்டுக்கு அழைத்துச் சென்று கொன்று விடு என்று காதோடு காதாக சொன்னான்.
அவன் அண்ணன் சொல்லைத் தட்ட முடியாமல் காட்டுக்கு அழைத்து வந்தான். ஆனால் கொல்வதற்கு மனம் வரவில்லை. அவளுக்கு வால்மீகி ஆஸ்ரமம் இருக்கும் இடத்தைக் காட்டிவிட்டு, ஒரு மானைக் கொன்று அதன் இதயத்தை எடுத்து ராமனிடம் காட்டி, இதோ பார் சீதையின் இருதயம் என்று காட்டினான். இதற்கு நீண்டகாலத்துக்குப் பின்னரே சீதை உயிருடன் இருந்தது ராமனுக்குத் தெரியவந்தது.
இதே கதை மலைஜாதி மக்களிடம் உண்டு; ராமாயணம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்ததால் 3000 வகை ந் ராமாயணங்களாவது இருக்கும் ; நான் லண்டனில் வாரம் தோறும் பிரிட்டிஷ் லைப்ரரிக்குப் போகையில் புதுப் புது ராமாயணமோ. அல்லது சம்பவங்களோ பார்க்கிறேன். ஜைன ராமாயணம், புத்த ராமாயணம், புற நானூற்றில் ராமாயணம், ஆழ்வார் பாடல்களில் ராமாயணம் என்று ஏராளமாக உள்ளன.
பண்டல்கண்டு பகுதி மலை ஜாதி மக்களிடையேயும் நாட்டுப் புறப் பாடல்களில் இந்த ராமாயணக் கதை இடம்பெறுகிறது.
சீதையை எல்லாப் பெண்களும் சேர்ந்து கிண்டல் செய்து, ‘உன்னை சிறை வைத்த ராக்ஷசன் எப்படி இருந்தான்?’ என்று கேட்கவே அவள் சாணத்தால் ராவணனின் படத்தை வரைந்ததாகாவும் , பாதி வரைகையில் ராமன் வந்து அதைப் பார்த்து கோபம் அடைந்து அவளைக் காட்டிற்கு அனுப்பியதாகவும் அந்த நாட்டுப் புறப்பாடலில் வரும். மலைஜாதி மக்களிடையே கூட ராமாயணம் இப்படிப் பரவி இருக்குமானல் அது பல்லாயிரக் கணக்கான ஆண்டு பழமை உடையது என்பதும் தெள்ளிதின் விளங்கும். உலகம் முழுதும் பரவிய பழங்கால காவியங்களில் ராமாயணம் முதலிடத்தைப் பெறுகிறது.
காலத்தால் அழியாத காவியம் ராமாயணம்– மனித குலத்தின் எல்லா நற்குணங்களையும் கதா பாத்திரங்களில் பிரதிபலிக்கும் சீரிய காவியம் ராமாயணம்.
வாழ்க ராமாயணம் ! வளர்க ராமன் புகழ்!!
–சுபம்–