கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1359; தேதி அக்டோபர் 20, 2014.
எல்லோருக்கும் காதல் கடித நோட்டுப் புத்தகம் என்றால் ஏதோ சுவையான, ருசியான செய்தியாக இருக்கும் என்று தோன்றும். ஆனால் தினமணிப் பத்திரிக்கையில் ஏ.என்.சிவராமன் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் ‘’காதல் கடித நோட்டுப் புத்தகம்’’ — அதாவது லவ் லெட்டர் LOVE LETTER NOTE BOOK நோட்டுப் புத்தகம் என்றால், என் உள்பட எல்லா சப் எடிட்டர்களுக்கும் (SUB EDITORS) குலை பதறும்.
தமிழில் தினமணிப் (DINAMANI) பத்திரிக்கையை அறியாதோர் யாரும் இருக்க முடியாது. அதில் ஆசிரியராக இருந்த ஏ.என்.சிவராமன் (ஏ.என்.எஸ் A.N.S) என்ற பெயரும் பலருக்கும் நினைவிருக்கும். அரைகுறைப் பாமரன், கணக்கன் என்ற பல புனைப் பெயர்களில் பல கட்டுரைகளை எழுதி அவை நூலாக வெளிவந்து நன்றாக விற்பனையும் ஆனது.
நான் மதுரை தினமணியில் சீனியர் சப் எடிட்டராக (Senior Sub Editor) வேலை பார்த்தபோது, அவர் அடிக்கடி மதுரைக்கு வருவார். வேட்டி கட்டிக் கொண்டு, ஒரு கதர் ஜிப்பா அல்லது அதுவும் இல்லாமல் வெறும் மேல் துண்டுடன் காரில் அலுவலகத்துக்கு வந்து விடுவார்.— அன்று வெளியான தினமணிப் பத்திரிக்கையை ஒரு நோட்டம் விடுவார்.–உடனே “டேய் ராமா அல்லது ராமச்சந்திரா” (வேலைக்காரர்கள்) என்று கூவி, அந்த “லவ் லெட்டர்” நோட்டை இப்படி கொண்டுவா’’ என்பார்.
நாங்கள் ஆறு அல்லது ஏழு சப் எடிட்டர்கள் ஒருவரை ஒருவர் ஓரக் கண்ணால் பார்த்துக் கொள்வோம். உடனே எங்களுக்கு எல்லாம் ‘’டென்ஷன்’’ (Tension) ஏறி விடும். நாங்கள் மொழி பெயர்த்த செய்தியில் ஏதாவது தவறு இருக்கும் அல்லது அதை எழுதிய விஷயம் தெளிவில்லாமல் இரு பொருள்பட எழுதப்பட்டிருக்கும். இனி மேல் அப்படி செய்யக் கூடாது என்பதற்காக அந்த தவற்றைச் சுட்டிக்காட்டி ஒரு குறிப்பு எழுதுவார். அதோடு நிற்காமல் நாங்கள் இருக்கும் பகுதிக்கு வந்து “டேய், இதை யாரடா எழுதினீர்கள்?” — என்று ஏக வசனத்தில் கேட்பார். அந்த ‘’சிப்டில்’’ (SHIFT) உள்ள சப் எடிட்டர் என்றால் அவர் சப்தம் போடத் துவங்குவார். சொல்லியதையே பலவித கோணங்களில் சொல்லத் துவங்குவார்.
எங்கள் சப் எடீட்டர்களைத் தாண்டி ‘’ப்ரூப் ரீடர்’’ (PROOF READERS) ஒரு பத்துப் பேர் எதிரும் புதிருமாக உடகார்ந்திருப்பர். அதற்கு நேராக இந்தப் பக்கம் டெலிப்ரிண்டர் (TELE PRINTER) அறை இருக்கும். இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடிக்கு நடந்து போய்விட்டு மீண்டும் வந்து திட்டுவார். பிறகு இந்தப் பக்கம் போய்விட்டு வந்து திட்டுவார். இப்படி ஒரு மணி நேரம் நடக்கும்.
குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்ட சப் எடிட்டர் தவிர மற்ற எல்லோரும் குனிந்த தலை நிமிராமல் — கல்யாணப் பெண் போல அமர்ந்து — வேலை செய்வோம். இதற்குள் உள்ளே ‘’கம்பாசிட்டர் ரூம்’’ (COMPOSITORS ROOM) முதலிய அறைளுக்கும் செய்தி பரவிவிடும். அவர்கள் எல்லோரும் —நாங்கள் எழுதியதில் சந்தேகம் கேட்க வருவது போல— வந்து எங்களை வேடிக்கை பார்த்துவிட்டுப் போவர்.
மாலை ஐந்து மணிக்கு எல்லா சப்பெடிட்டர்களும், வழக்கமாக தனலெட்சுமி பவன் வரை நடந்து சென்று இட்லி தோசை காப்பி சாப்பிட்டு வருவோம். அப்போதுதான் எல்லோருக்கும் உயிர் வரும். சிரிப்பும் வந்துவிடும். குற்றவாளிக் கூண்டில் அன்று நின்ற சப் எடிட்டர் — ‘’இன்று நான் யார் முகத்தில் விழித்தேனோ?” —என்று அங்கலாய்ப்பார். நாங்கள் எல்லோரும் “கவலைப் படாதே இன்று உன் முறை, நாளை எங்கள் முறை” என்போம். அதே போல மறு நாள் வேறு ஒரு சப் எடிட்டர் சிக்கிவிடுவார்.
இதற்கு ஏன் ‘’லவ் லெட்டர் நோட்டுப் புத்தகம்’’ என்று பெயர் வைத்ததையும் ஏ.என்.எஸ்.ஸே எங்களிடம் கூறியிருக்கிறார். அவர் போத்தன் ஜோசப் என்ற பிரபல பத்திரிக்கையாளரிடம் வேலை பார்த்தவர். அவர் இப்படித்தான் லவ் லெட்டர்— அதாவது தவறுகளைச் சுட்டிக் காட்டும் நோட்டு— எழுதுவாராம். இப்படிச் சில மாதங்கள் ஓடும். பின்னர் அவர் தலைமையகத்துக்கு (சென்னைக்கு) சென்றுவிடுவார். எங்கள் எல்லோருக்கும் உற்சாகம் கரை புரண்டோடும். “அட, பள்ளிக்கூட நாளில்தான் ஆசிரியருக்குப் பயந்தோம் என்றால் — எருமை மாடு வயதாகிக் கல்யாணமும் ஆகி குழந்தையையும் பெற்ற பின்னர் இவரிடம் திட்டு வேறா?” என்று சிரித்து மகிழ்வோம்.
ஆனால் அவர் பத்திரிகைத் துறையில் ‘’பழமும் தின்னு கொட்டையும் போட்டவர்’’. செய்தியின் ஆங்கில வடிவைப் பார்க்காமலேயே, ஆங்கிலத்தில் என்ன வந்திருக்கும்? அதை சப் எடிட்டர் எப்படி தவறுதலாகப் புரிந்து கொண்டார் என்பதை துல்லியமாக ஊகித்தறிவார்.
ஒரு சப் எடிட்டர் டேராடூன் (Dehradun) என்பதை டெஹ்ராடன் என்று எழுதிவிட்டார். ஏனெனில் ஆங்கிலத்தில் அப்படித்தான் ஸ்பெல்லிங் (Spelling) இருக்கும். இன்னொருவர், திமிங்கிலம் என்பதற்குப் பதிலாக வேல் மீன் என்று எழுதிவிட்டார். திமிங்கிலத்துக்கு ஆங்கிலத்தில் ‘’வேல்’’ (WHALE) என்று பெயர். ஆனால் அது மீன் வகைப் பிராணி அல்ல. இப்படி சின்னச் சின்ன விஷயங்களில் மாட்டிக் கொள்வோம்.
எங்கள் காலத்தில் எல்லா செய்திகளும் ஆங்கிலத்தில் வரும். தமிழில் மொழி பெயர்ப்பது, எடிட் (editing) செய்வது, பேஜ் போடுவது (Page Makeup) முதலியன எங்கள் பணிகள். இந்திராகாந்தி சுட்டுக் கொல்லப்பட்ட அன்று நான்தான் சீனியர். –உடனே அன்றைய தலைப்புச் செய்தி — ((ஆங்கிலத்தில் பேனர் Banner Item ஐட்டம் என்றும் நாங்கள் எட்டுக் காலம் Eight Column என்றும் சொல்லுவோம்)) – எழுதும் பணி என் தலையில் விழுந்தது. உலகையே உலுக்கும் செய்தி என் கையில் வந்தது எனக்கு மகிழ்ச்சிதான். ஆகையால் வளைத்து வளைத்து எழுதினேன். மறு நாளைக்கு ஒரே பாராட்டு!!
என்னுடைய சீனியரில் ஒருவர் என் காதருகே வந்து, “சாமிநாதா, மிகவும் அழகாக எழுதினாய், நேரடியாகப் பார்ப்பது போல நல்ல வருணனை — ஆனால்……………” என்று இழுத்தார். வயிற்றின் அடியில் இருந்ததெல்லாம் வாய்க்கு வந்துவிடுவது போல வயிற்றை ஒரு கலக்கு கலக்கியது. “ராஜீவ் காந்தி வலம் வந்து — பின்னர் இந்திரா காந்திஜி அமர் ரஹோ என்று விண்ணைப் பிளக்கும் கோஷத்துக்கிடையே சிதைக்கு ………………………………. என்று எழுதி இருக்கிறாய். சுடுகாட்டில் மட்டும் வலம் வர மாட்டார்கள் – இடம் வருவார்கள் என்றார். எனக்குத் தூக்கிவாரி போட்டது. ஏனெனில் ஆங்கிலத்தில் இடம் வலம் என்று வித்தியாசம் இல்லாமல் சொல் இருக்கும். இதற்கெல்லாம் அனுபவம் தேவை.
‘’முன்னப் பின்ன செத்தால்தானே சுடுகாடு தெரியும்’’ – என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அப்போதுதான் அந்தப் பழமொழியின் முழுத் தாக்கமும் எனக்குத் தெரிந்தது!!! நல்ல வேளையாக பெரிய ஆசிரியர் (ஏ.என்.எஸ்) சென்னையில் இருந்தார். நான் பிழைத்தேன்.
இதே வரிசையில் நான் எழுதிய முந்தைய கட்டுரைகளையும் காண்க:
1.என் அப்பாவிடம் கற்றது
2.என் அம்மாவிடம் கற்றது
3.கோயங்கா சாம்ராஜ்ய ரகசியங்கள்
Contact swami_48@yahoo.com
You must be logged in to post a comment.