மூன்று சூரியன்கள் தோன்றிய அதிசயம்!!

Compiled by London swaminathan

Article No.1857; Dated 11 May 2015.

Uploaded in London at 9-35

சமீபத்தில் மங்கோலியாவில் மூன்று சூரியன்கள் தோன்றியது சென்னை முதல் லண்டன் வரை எல்லா பத்திரிக்கைகளிலும் ஜனவரி (2015) மாதத்தில் வந்தன. இது ஒரு அதிசய நிகழ்வே. சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் காரைக்காலில் இப்படி மூன்று சூரியன்கள் தோன்றியது தினமணியில் செய்தியாக வந்தது. இதைவிட வியப்பான விஷயம் வராஹமிகிரர் என்பவர் சம்ஸ்கிருத கலைக் களஞ்சியமான பிருஹத் சம்ஹிதாவில் 1500 ஆண்டுகளுக்கு முன் இது பற்றி எழுதி வைத்ததாகும்!! அதற்கு முன் அரிஸ்டாடில் போன்ற கிரேக்க அறிஞர்கள் இது பற்றிப் பேசியிருந்தாலும் வராஹ மிகிரரே முதலில் இதைச் சொல்லி இருக்க வேண்டும். ஏனெனில் அவர், தனக்கு முந்திய 20-க்கும் மேலான அறிஞர்கள் பெயர்களைச் சொல்லி அவர்கள் சொன்ன விஷயங்களைச் “சுருக்கமாகச்” சொல்வதாக எழுதியுள்ளார்.

மூன்று சூரியன்கள் தோன்றுவது எப்படி என்பதைக் காண்பதற்கு முன்னால், இது பற்றி வராஹமிகிரர் சம்ஸிருதத்தில் எழுதியது என்ன என்பதைக் காண்போம்

பிருஹத் சம்ஹிதா, அத்தியாயம் 37 (ப்ரதி சூர்ய லக்ஷணம்)

1).போலி சூரியன்கள் தோன்றுவது நல்ல சகுனமே! அந்தந்த பருவத்துக்கு ஏற்ற வண்ணத்தில் தோன்றினால் நல்லது. மேலும் தூய வெண்மை அலது வைடூர்ய ரத்ன வர்ணத்தில் இருந்தால் நல்லது.

ப்ரதிசூர்யக: ப்ரசஸ்தோ திவசக்ருத்ருதுவர்ணசப்ரப: ஸ்நிக்த:

வைடூர்ய நிப: ஸ்வச்ச: சுக்லஸ்ச க்ஷேமசௌர்பிக்ஷ:

2).போலி சூரியன்கள் மஞ்சள் வர்ணத்தில் இருந்தால் வியாதிகள் மலியும்; சிவப்பு வர்ணத்தில் இருந்தால் ஆயுதப் போராட்டம் நிகழும். பல சூரியன்கள் வரிசையாகத் தோன்றுமானால் வியாதிகள், அரசர் படுகொலை, கொள்ளைக்காரர் தொல்லைகள் நிகழும்

பீதோ வ்யாதீம் ஜனயத்யசோகரூபஸ்ச சஸ்த்ரகோபாய

ப்ரதிசூர்யாணாம் மாலா தச்யுபயாதங்கன்ருப ஹந்த்ரீ

3).உண்மைச் சூரியனுக்கு வடக்கில் போலி சூரியன் தோன்றினால் மழையும் தெற்கில் இருந்தால் கடுங் காற்றும் தோன்றும். மேலே தோன்றினால் மன்னனுக்கு கேடு, கீழே தோன்றினால் மக்களுக்குக் கேடு. இரு பக்கங்களிலும் தோன்றினாலோ நீர் நிலைகளால் (ஆற்று வெள்ளம், கடல் சுனாமி அலை) கேடு வரும்.

திவஸக்ருத: ப்ரதிசூர்யோ ஜலக்ருதுதக்தக்ஷிணோ ஸ்திதோ அனிலக்ருத்

உபயஸ்த: சலிலபயம் ன்ருபமுபரி நிஹன்யத்யதோ ஜனஹா

இதற்கு மேல் அவர் காஸ்யபர், பராசரர் முதலியோர் இது பற்றி என்ன சொன்னார்கள் என்ற ஸ்லோகங்களையும் நமக்கு விட்டுச் சென்றுள்ளார்.

ஹிந்துக்கள் வான மண்டலத்தைக் கூர்ந்து கவனித்ததோடு நில்லாமல் அதை எழுதியும் வைத்தது அவர்களது விஞ்ஞான கண்ணோட்டத்துக்கு சான்றாகத் திகழ்கிறது.அவர் எழுதியது இன்றைய அறிவியல் அளவுக்கு இல்லாவிட்டாலும் அன்றே நாம் இதைக் கண்டு பிடித்து எழுதினோம் என்பது பெருமைக்குரியது. வானவியல் உண்மைகள் மாறிக்கொண்டே வருகின்றன. 25 ஆண்டுக்கு முந்தைய வானவியல் புத்தகங்கள் இங்கு லண்டனில் பழைய புத்தகக் கடைகளில்தான் பார்க்கலாம். 2000 ஆண்டுகளுக்கு முன் இந்துக்கள் இதை சம்ஸ்கிருதத்தில் எழுதியதற்கு அவர்களுக்கு ஒரு பெரிய கும்பிடு போட வேண்டும். மேலும் வராஹமிகிரர் பூகம்பம் பற்றியும் ஒரு தனி அத்தியாயம் எழுதுயுள்ளார். இவ்வாறு இன்றைய உலகை உலுக்கும் விஷயங்கள் பற்றி அன்றே தனித்தனி அத்தியாயங்கள் எழுதியது அதிசயமன்றோ!!! சம்ஸ்கிருதத்தைக் கற்றால் இது போன்ற பல்லாயிரக் கணக்கான உண்மைகளை உணரலாம்.

32496-sun-dogs02

மூன்று சூரியன்களுக்கு விஞ்ஞான விளக்கம்

இது மிக உயரத்தில் உள்ள மேகங்களில் இருக்கும் அறுகோண வடிவ பனிக்கட்டி ஸ்படிகங்களால் (ஹெக்சகனல் கிறிஸ்டல்ஸ்) தோன்றுகின்றன. பிரிஸம் எனப்படும் முக்கோண வடிவ கண்ணாடியின் வழியே ஒளி செல்லும் போது அது வானவில் நிறத்தில் ஏழாகப் பிரிகிறது. அது போலவே அறுகோண வடிவ ஸ்படிகம் வழியே செல்லுகையில் அது சரியாக 22 டிகிரி கோணதில் பிரிகிறது. இதை ஒலி விலகல் என்பர். இந்த அறுகோண ஐஸ் ஸ்படிகங்கள் மேகத்தில் பல இடங்களில் பரவலாகக் காணப்பட்டால் சூரியனைச் சுற்றி ஒரு வட்டம் தோன்றும். இதைத் தமிழில் சூரியனைச் சுற்றி கோட்டை கட்டி இருக்கிறது என்பர்.

இதற்கு மாறாக அந்த ஐஸ் ஸ்படிகங்கள் கீழே போய் செங்குத்துக் (வெர்டிகல்) கோடுகளாக நிற்குமானால், விலகும் ஒலியானது படுக்கை (ஹரிஸாண்டல்) வடிவத்தில் இருக்கும் அவை போலி சூரியன்களைத் தோற்றுவிக்கும்.

போலி சூரியன்கள் பல வண்ணங்களில் – ஆரஞ்சு, மஞ்சள், நீலம்—இருக்க முடியும். சூரியனுக்கு மிக அருகில் இருந்தால் சிவப்பாகவும், தள்ளிப் போக போக மஞ்சள், ஆரஞ்சு, நீலம் என்று மாறிக்கொண்டேயும் வரும்.

கிரேக்க அறிஞர் அரிஸ்டாடில் கி.மு.384, மீண்டும் கி.மு.322ல் தோன்றிய போலி சூரியன்களைக் குறித்துவைத்தார். அவருக்குபின் வந்தோர் இது பற்றி எழுதிவிட்டு இதனால் வரும் கேடுகள் என்ன என்ற நம்பிக்கைகளையும் எழுதினர்.

சம்ஸ்கிருத நூல்களில் மேலும் பல இடங்களிலும் போலி சூரியன்கள் பற்றிய குறிப்புகள் உள.

கோவில்கள் பற்றி அப்பர் தரும் அதிசயத் தகவல்

meeenakshi

Written by London Swaminathan

Research Article No.1765;  Dated 1April 2015.

Uploaded at London time 8-50 (GMT 7-50)

கரக்கோயில், இளங்கோயில், கொகுடிக் கோயில், மணிக்கோயில், ஞாழற்கோயில், ஆலக் கோயில், திருக்கோயில்

தமிழ்நாட்டில் 30,000-க்கும் மேற்பட்ட கோவில்கள் இருக்கின்றன. ஆயினும் மதுரை மீனாட்சி கோவில், ஸ்ரீரங்கம் ராஜகோபுரம், தஞ்சைப் பெரிய கோயில், திருவண்ணாமலைக் கோவில் கோபுரங்கள் எல்லாம் சுமார் 1000 ஆண்டு பழமையுடையவைதாம். அதற்கு முன் தமிழ் நாட்டில் கோவில்கள் இருந்தனவா? அவை எப்படி இருந்தன?

பிள்ளையார்பட்டி, மஹாபலிபுரம், திருப்பறங்குன்றம், நரசிங்கம் முதலிய ஊர்களில் மலைகளில் பாறைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட  கோயில்களும் ஐந்தாம் நூற்றாண்டு முதற்கொண்டு ஏற்பட்டவையே. அப்படியானால் அதற்கு முன் என்ன மாதிரி கோயில்கள் இருந்தன?

சிலப்பதிகாரம், புறநானூறு, பரிபாடல் முதலிய நூல்களில் என்ன என்ன கோவில்கள் இருந்தன என்று கடவுளரின் பெயர்கள் எல்லாம் உள்ளன. ஆயினும் கோவில்களின் தோற்றத்தை நாம் அறியோம். அப்பர் என்ற திருநாவுக்கரசர் தமிழிலும், வராஹமிகிரர் சம்ஸ்கிருதத்திலும் அரிய தகவல்களைக் கூறுகின்றனர். அப்பர் பாடிய தேவாரத்தில் கரக்கோயில், இளங்கோயில்,கொகுடிக் கோயில், மணிக்கோயில், ஞாழற்கோயில், ஆலக்கோயில், திருக்கோயில் என்று பலவகையான கோயில்களைக் குறிப்பிடுகிறார்.

இந்தத் தகவலை 1968 ஆம் ஆண்டு இரண்டாவது உலகத் தமிழ்நாட்டு மலரில் எழுதிய தொல் பொருட்துறை அறிஞர் டாக்டர் இரா.நாகசாமி தமிழில் கோயில் என்பதற்கு பழங்காலத்திலேயே பல சொற்கள் இருந்ததையும் பட்டியலிட்டுள்ளார்.

டாக்டர் இரா.நாகசாமி இன்னும் ஒரு அரிய பாட்டினையும் பிங்கலந்தை நிகண்டிலிருந்து 1968 ஆம் ஆண்டுக் கட்டுரையில் மேற்கோள் காட்டியுள்ளார்:–

கல்லும் உலோகமும் செங்கலும் மரமும்

மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும்

கந்த சருக்கரையும் மெழுகும் என்றயிவை

பத்தே சிற்பத் தொழிலுக்கு உறுப்பாகும் – பிங்கலந்தை 29

 

அதாவது தெய்வத் திரு உருவங்கள் செய்ய இந்த பத்து பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. கோவில்கள் மரம் செங்கற்களால் கட்டப்பட்டன. அவை எல்லாம் பருவமழை, வெயில் போன்ற காலநிலையாலும், முஸ்லீம் படை எடுப்புகளாலும் அழிந்து போயின. இன்றும் கூட கேரளம் முதலிய மாநிலங்களில் மரக் கோயில்கள் இருப்பதைக் காணலாம்.

gopura darsan

அப்பர் தேவாரம் ஆறாம் திருமுறை (6-71)

பெருக்கு ஆறு சடைக்கு அணிந்த பெருமான் சேரும்

பெருங்கோயில் எழுபதினோடு எட்டும், மற்றும்

கரக்கோயில், கடிபொழில் சூழ் ஞாழற்கோயில்,

கருப்பறியல் பொருப்பு அனைய கொகுடிக்கோயில்,

இருக்கு ஓதி மறையவர்கள் வழிபட்டு ஏத்தும்

இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில்,

திருக்கோயில் – சிவன் உறையும் கோயில் சூழ்ந்து,

தாழ்ந்து, இரைஞ்ச, தீவினைகள் தீரும் அன்றே.

அப்பர் குறிப்பிடும் பலவகைக் கோவில்கள் என்ன என்று கூட நமக்குத் தெரியாது. அவர் காலத்தில் சிவபெருமானுக்கு 78 பெரிய கோயில்களும் மற்ற பல வகைக் கோயில்களும் இருந்தது தெரிகிறது. தேவார மூவரும், மாணிக்கவாசகரும் 300-க்கும் மேலான புனிதத் தலங்களின் பெயர்களைச் சொல்லுகின்றனர். அப்பர் வாழ்ந்தது ஏழாம் நூற்றாண்டில். அவருக்கு 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வராஹமிஹிரர் எழுதிய பிருஹத் சம்ஹிதா என்னும் அற்புத சம்ஸ்கிருத என்சைக்ளோபீடியாவில் 20 வகைக் கோவில்களைக் குறிப்பிடுகிறார். வெறுமனே பெயர்களை மட்டும் சொல்லாமல் அவற்றின் நீள, அகலம், கருவறையின் (கர்ப்பக் கிருஹம்) அளவு ஆகியவற்றையும் குறிப்பிடுகிறார்.

ஒரு அத்தியாயம் முழுதும் கோவில் பற்றி எழுதிவிட்டு மிகவும் அடக்கத்துடன் கார்கர் என்பவர் விரிவாக எழுதிய விஷயத்தை தாம் சுருக்கமாகச் சொல்லியதாகக்  கூறுகிறார். இதிலிருந்து 2000 ஆண்டுகளுக்கு முன்னரே பலவகை வடிவங்களில், உயரங்களில் கோபுரங்களை எழுப்பும் மாபெரும் எஞ்சினீயர்கள் இமயம் முதல் குமரி வரை இருந்தது தெரிகிறது.

tv malai

வராகமிகிரர் எழுதிய பலவிஷயங்களில் ஒரு சில குறிப்புகளை மட்டும் பார்ப்போம்:-

“நிறைய தண்ணீர் பாயும் குளங்களுடனும் அழகான நந்தவனங்களுடனும் கோவில்களைக் கட்ட வேண்டும்.

ஒருவருக்கு புகழும் புண்ணியமும் கிட்ட வேண்டுமானால் கோயில் கட்ட வேண்டும்.

யாகம் செய்வோர், கிணறு வெட்டுவோர் ஆகியோருக்குக் கிடைக்கும் புகழ் கோவில் கட்டுவோருக்குக் கிடைக்கும்.

ஆற்றங்கரை,கடற்கரை, காடு, மலை, வனாந்தரம் ஆகிய இயற்கைச் சூழலில் கோவில் அமைவது மிகவும் விசேஷம்.

கோவில்கள் இருபது வகைப்படும். அவையாவன:–

மேரு, மந்தரா, கைலாச, விமானச் சந்த, நந்தன, சமுத்க, பத்ம, கருட, நந்திவர்த்தன, குஹராஜ, குஞ்சர, வ்ருஷ, ஹம்ச, சர்வதோபத்கர, கட, சிம்ஹ, வ்ருத்த, சதுஸ்கோண, ஷோடசரி, அஷ்டசரி.

மேரு என்னும் வகைக் கோவில் 12 நிலைக் கோபுரமும் அறுகோண வடிவமும் உடையவை. அகலம் 32 முழம்,  உயரம் 64 முழம்”.

இதுபோல 20 வகைக் கோவில்களுக்கும் நீள, அகல, உயரங்களைச் சொல்லிவிட்டு கர்ப்பக் கிரஹ அளவுகளையும் கொடுக்கிறார். பல்வகை கட்டிடக் கலை சொற்களையும் உபயோகிக்கிறார். இல்லாத ஒரு விஷயத்தை அவர் கற்பனை செய்து எழுதமுடியாது. இதை எல்லாம் கொண்டு பார்க்கையில் எந்த அளவுக்கு நமது கட்டிடக் கலைத்திறன் 1500 ஆண்டுஅளுக்கு முன் இருந்தது என்பது வெள்ளிடை மலையென விளங்கும்.

இதுவரை தமிழ்- சம்ஸ்கிருத மொழிகளில் கிடைக்கும் தகவல்களை யாரும் ஒப்பிட்டு ஆராய்ந்ததாகத் தெரியவில்லை. பாண்டியர்களில் மிகவும் பழையவனான பல்யாக சாலை முது குடுமிப் பெருவழுதி கோவிலை வலம் வரும் போதும், பிராமணர்கள் ஆசி வழங்கும் போதும் மட்டுமே அவன் குடையும் தலையும் தாழ்ந்து வணங்கும் என்று புலவர் பெருமக்கள் பாடியுள்ளனர் (புறம்-6). சிலப்பதிகாரத்தில் உள்ள கோவில்களின் பட்டியலை முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரையில் தந்துள்ளேன். எவரேனும் இரு மொழி இலக்கியங்களில் வரும் கோவில்கள ஒப்பிட்டு ஆராய்வது பலன் தரும்.

வாழ்க அப்பர், வராஹமிஹிரர்!! வளர்க கோவில் கலை!!

பாலைவனத்தில் தண்ணீர் கண்டுபிடிப்பது எப்படி?

ja,mbu fruits

Research Paper written by London swaminathan

Research Article No.1656; Dated 17th February 2015.

வராகமிகிரர் என்னும் மாமேதை 1500 ஆண்டுகளுக்கு முன் எழுதிய சம்ஸ்கிருத என்சைக்ளோபீடியா – பிருஹத் சம்ஹிதையில் – கூறிய அரிய பெரிய அபூர்வ விஷயங்களைக் கண்டோம். இன்று மேலும் சில விஷயங்களைத் தொட்டுக் காட்டுவேன்.

வறண்ட பூமிகளிலும் பாலைவனப் பிரதேசங்களிலும் வளரும் சில மரங்கள் முதலியவற்றைக் கொண்டு தண்ணீர் கண்டு பிடிக்கும் உத்தி / டெக்னிக் இது. வராஹமிகிரர் ஒரு விஞ்ஞானி. ஆகையால் மாய மந்திரம் – அண்டாகா கசும் அபூர்வ கா குசும் – என்று மம்போ ஜம்போ –வுக்குப் போகாமல் அறிவியல்பூர்வ முறையில் இதை அணுகியுள்ளார்.

சிலவகை மரங்கள் அதிக இலைகளுடன் காணப்படும். அவற்றின் செழுமை, மற்றும் பாம்புப் புற்றுகள், தவளை இவைகளைப் பார்த்து நிலத்துக்கு அடியில் தண்ணீர் இருக்கிறதா, எவ்வளவு ஆழத்தில் இருக்கிறது என்பதைச் சொல்கிறார்.

எப்படி எண் திசைக்கும் காவல் தெய்வங்கள் இருக்கிறதோ அதே போல எட்டு திசைகளில் பூமிக்கடியில் உள்ள தண்ணீருக்கு அந்தக் காலத்தில் பெயர்கள் இருந்தன என்பதையும் இவர்தம் நூல் செப்புகிறது.

Bassia latifolia_clip_image002

இலுப்பை வகைத் தாவரம்

உடம்பிற்குள் எப்படி ரத்த நாளங்கள் ஓடுகின்றனவோ அப்படி வானத்திலும் நிலத்துக்கு அடியிலும் நீரோட்டம் உண்டு என்றும் இவர் சொல்கிறார்.

எறும்பும், பாம்புப் புற்றுகளை உண்டாக்கும் கறையான் களும் காற்று மண்டலத்தில் உள்ள ஈரப் பதத்தின் மூலம் தண்ணீர் பெறும் என்பது விஞ்ஞானம் கண்ட உண்மை. அவைகள் ஈரப்பதம் இருக்கும் இடத்தில் புற்று உண்டாக்கும். ஈரப்பசை இல்லாவிடில் புற்று உதிர்ந்து விடும். இதை எல்லாம் அறிந்து மனு, சாரஸ்வதர் என்ற இரு அறிஞர்கள் நூல்களை எழுதியதாகவும் அதையே தான் பின்பற்றுவதாகவும் சொல்லுவார். அந்த நூல்கள் இன்று கிடைக்காவிடினும் உரைகாரர்கள் பல விஷயங் களை நமக்கு எடுத்துரைக்கின்றனர்.

1500 ஆண்டுகளுக்கு முன் இதை வராகமிகிரரும், அவருக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வேறு பலரும் எழுதி இருக்கிறார்கள் என்றால் அதற்கு நூற்றுக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் அவர்கள் இயற்கையை உன்னிப்பாகக் கவனித்திருந்தால்தான் இப்படி நூல் எழுத முடியும். மேலும் வேறு எந்த மொழியிலும் இது போல நூல்கள் இருந்ததாக யாம் அறியோம்.

2_vilvam_tree

வில்வ மரம் பற்றியும் வராகமிகிரர் சொல்கிறார்

சுமார் 125 ஸ்லோகங்களில் இவர் தரும் தகவல்களை தாவரவியல் துறையினரும், நீரியல் துறையினரும் ஆராய்ந்து கிராம மக்களுக்குச் சொல்லிக்கொடுத்தால் தண்ணீர் பிரச்சனையை சமாளிக்காலாம். மேலும் இதில் செலவு என்பது கிணறு வெட்ட மட்டுமே ஆகும். பூமிக்கடியிலுள்ள தண்ணீரைக் கண்டுபிடிக்க பணமோ கருவிகளோ தேவை இல்லை.

125 பாடல்கள், அதற்கான உரைகள் முழுதையும் எழுதினால் அது புத்தக உருப் பெறும் என்பதால் ஒரு சில எடுத்துக் காட்டுகளைக் காட்டுவேன்.

தண்ணீர் இல்லாத இடத்தில் ஒரு நாவல் (ஜம்பூ) மரத்தைக் கண்டால் சுமார் 15 அடி ஆழத்தில், கிழக்கு திசையில் ஐந்து அடி தூரத்தில் தண்ணீர் இருக்கும். அதன் அருகில் எறும்புப் புற்று (பாம்புப் புற்று) இருந்தால் தென் திசையில் 15 அடி ஆழ்ழத்தில் இனிய சுவை உடைய நீர் இருக்கும்.

இவ்வாறு நிறைய மரங்கள் பெயர்களைச் சொல்லி அவர் நீர் இருக்கும் திசை,ஆழம் எல்லாம் சொல்லுகிறார்.

மரத்தின் பழங்கள், இலைகள் முதலியன அசாதரண வடிவத்தில் இருந்தாலும் நிலத்தடி நீர் இருக்கும் என்கிறார்.

kadamba

கடம்ப மரம்

ஒலி மூலம் நிலத்தடி நீர் கண்டுபிடித்தல்!

சப்தம் மூலம் பூமிக்கடியிலுள்ள தண்ணீரைக் கண்டுபிடிக்க வும் வழி சொல்லுகிறார்!! பூமியைக் காலால் தட்டும்போது நல்ல, உரத்த ஒலி வருமானால் சுமார் 27 அடி ஆழத்தில் தண்ணீர் இருக்கும். கண்டங்கத்தரிச் செடி முள் இல்லாமல் வளர்ந்தால் அதுவும் நிலத்தடி நீரின் அறிகுறி என்றும் பகருவார் வராகமிகிரர்.

அவர் நிறைய மரங்கள், புல், செடி, கொடி வகைகளைச் சொல்லுவதாலும், பழைய கால நீட்டல் அளவை சொற்களைப் பிரயோகிப்பதாலும் செயல் முறையில் பரிசோதித்து நிறை குறைகளை அறிய வேண்டும்.

இது பயனுள்ள ஒரு துறை என்பதால், ஆர்வத்துடன் ஆராய வேண்டிய அத்தியாயம் இது. வெளிநாடுகளில் இன்ன தாவரங்கள் இருந்தால் பூமிக்கடியில் இன்ன இன்ன உலோகங்கள் கிடைக்கும் என்னும் தாவர இயல் துறை நன்கு வளர்ந்திருக்கிறது. பழங்கால நூல்களில் உள்ள ரகசியங்களை நாம் கற்றோமானால் செலவு இல்லாமல் கனிமச் சுரங்கங்களைக் கண்டு பிடிக்கலாம்.

kantankattari

கண்டங்கத்தரி

நம்முடைய முன்னோர்கள் இயற்கையை உன்னிப்பாகக் கவனித்து அதன் ரகசியங்களை எழுதிவைத்துள்ளனர். சூரியன் சந்திரன் ஆகியவற்றின் போக்கைக் கண்டுபிடித்து கிரஹணம் முதலியவற்றைச் சொன்னவர்கள் எறும்பையும் தவளையையும் கண்டு பல சாத்திரங்களைச் செய்துள் ளனர்! இதை எண்ணி எண்ணி வியப்பதைவிட செயல் முறையில் பயன்படுத்த வேண்டும்.

எனது ஆங்கிலக்கட்டுரையில் கூடுதல் தாவரங்களின் பெயர்களைக் கொடுத்து இருக்கிறேன். முழு விவரம் வேண்டுவோர் பிருஹத் சம்ஹிதா, அத்தியாயம் 54-ஐக் காண்க.