உமாபதி சிவம் வாழ்க்கையில் நிகழ்ந்த அற்புத சம்பவம் (9533)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9533

Date uploaded in London – –  –26 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 25-4-2021 அன்று ஒளிபரப்பான உரை!

திருச்சிற்றம்பலம். அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.இன்று சித்திரை மாதம் ஹஸ்த நக்ஷத்திரம் கூடிய நன்னாள். சந்தான குரவர்களில் ஒருவரான உமாபதி சிவம் அவர்களின் குருபூஜை தினம் இன்று! அவரைப் போற்றி வணங்குவோம்.

ஹிந்து மதத்தின் சிறப்பியல்புகளில் ஒன்று அது யாரையும் பாவி என்று குறிப்பிடுவதில்லை. மாறாக அனைவரையும் அம்ருதஸ்ய புத்ரா: என்றே அழைக்கிறது. அது மட்டுமல்ல; மனிதர்களுக்கு மட்டுமல்ல மோக்ஷம். எந்த உயிரும் முக்தியைப் பெறலாம் என்று அறுதியிட்டு உறுதி கூறுகிறது அது. இதை மெய்ப்பித்துக் காட்டியவர் உமாபதி சிவாசாரியார்.

உமாபதி சிவம் தில்லை மூவாயிரவர் எனப்படும் மூவாயிரம் தீக்ஷிதர் குடும்பங்களுள் ஒன்றில் பிறந்தார். ஒருநாள் சோழ மஹாராஜன் அளித்த முத்துப் பல்லக்கில் அவர் சிதம்பரம் வீதியில் சென்று  கொண்டிருந்த போது

அவரது பல்லக்கை கண்ட பெரும் மகானான மறைஞான சம்பந்தர் தான் அமர்ந்திருந்த திண்ணையிலிருந்தவாறே, “ பார், பார், பகல் நேரத்தில் குருடன் ஒருவன் பலகைகளில் ஏறிச் செல்கின்றான் என்றார்.

பல்லக்கின் திரைகளை விலக்கிப் பார்த்த உமாபதி சிவாசாரியார் கண்களுக்கு மறைஞானசம்பந்தர் தோன்றவில்லை.சிதம்பரம் நடராஜரே தோன்றினார். உடனே பல்லக்கை விட்டுக் கீழே இறங்கிய உமாபதி சிவம் மறைஞானசம்பந்தரின் காலடிகளில் வீழ்ந்தார்,

மறைஞானசம்பந்தர் அந்த இடத்திலிருந்து ஓட்டமாக ஓட, உமாபதி சிவம் அவரைப் பின் தொடர்ந்து ஓடலானார். ஓடி ஓடி இருவரும் களைத்துப் போன நிலையில் நெசவாளர்ர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மறை ஞானசம்பந்தருக்கு கூழ் வார்த்தார். அதை அவர் சிவ பிரசாதம் சிவபிரசாதம் என்று சொல்லிக் கொண்டே அருந்த அவர் முழங்கை வழியே சிறிது கூழ் சொட்டு சொட்டாகக் கீழே சிந்த, அந்தத் துளிகளை குரு பிரசாதம், குரு பிரசாதம் என்று சொல்லிக் கொண்டே உமாபதி  அருந்தலானார். இந்தச் சம்பவத்தால்

 அவரை தீக்ஷிதர் சமூகத்திலிருந்து விலக்கி விட்டனர்.

சிதம்பரத்திற்கு கிழக்கே உள்ள கொற்றவன் குடி என்ற இடத்திற்குச் சென்று ஒரு மடத்தை அமைத்து அவர் சிவ பூஜையை மானசீகமாகச் செய்ய ஆரம்பித்தார்.

ஒரு நாள், ஆலயத்தில், உற்சவ நாளன்று கொடி ஏற்ற முயன்ற போது அதுகம்பத்தில் மேலே ஏறவே இல்லை. ‘உமாபதி சிவத்தை கொடி ஏற்றச் செய்க என்ற அசரீரி ஒலிக்கவே அனைவரும் அவரை அழைத்து கொடியை ஏற்றுமாறு வேண்டினர். உமாபதி சிவம் கொடிக்கம்பத்தின் முன் வந்து

ஒளிக்கு மிருளுக்கு மொன்றே யிட மொன்று மேலிடிலொன்

றொளிக்கு மெனினு மிருளடரா துள்ளுயிர்க் குயிராய்த்

தெளிக்கு மறிவு திகழ்ந்துள தேனுந் திரிமலத்தே

குளிக்கு முயிரருள் கூடும்படி கொடி கட்டினனே என்று பாடினார்.

உடனே கொடி மேலே ஏறியது அனைவரும் வியந்து அவரைப் போற்றிப் வணங்கினர். தொடர்ந்து அவர் இன்னும் மூன்று பாடல்களைப் பாடினார்.

இந்த நான்கு பாடல்களும் கொடிப்பாட்டு என்ற பெயரால் சிறப்புற இன்றளவும் அழைக்கப்படுகின்றன.

இன்னொரு முக்கியமான அற்புத சம்பவம் அவர் வாழ்க்கையில் நிகழ்ந்தது.

அந்த நாளில், தாழ்ந்த குலத்தில் உதித்த பெற்றான் சாம்பான் என்பவன் விறகு வெட்டி தனது வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருந்தான். அவன் சிறந்த சிறந்த சிவ பக்தன்.

அவன் திருமடைப்பள்ளிக்கு ஒரு விறகுக் கட்டும் உமாபதி சிவாசாரியருக்கு ஒரு விறகுக் கட்டும் தினமும் தவறாமல் கொடுத்து வந்தான்.

நடராஜப் பெருமான் தன் சிறந்த பக்தனுக்கு அருள் பாலிக்க அருள் கொண்டார்.

தனது இயல்பான தோற்றத்தில் ஒரு திரிசூலம், கோடாலி, மான் உள்ளிட்ட அனைத்துடனும் அவன் முன் தோன்றி “உனக்கு என்ன வேண்டும்? என்று சிவபிரான் கேட்க, “ஐயனே! எனக்கு முக்தியே வேண்டும். வேறு எதுவும் வேண்டாம் என்றான் சாம்பான்.

உடனே சிவ பிரான் ஒரு ஓலை நறுக்கில் ஒரு செய்யுளை எழுதினார் இப்படி:

“அடியார்க் கெளியன் சிற்றம்பலவன் கொற்றங்

குடியாற் கெழுதியகைச் சீட்டுப் – படியின்மிசைப்

பெற்றான் சாம்பானுக்குப் பேதமற தீக்கைசெய்து

முத்தி கொடுக்க முறை

அடியார்க்கெளியவனான சிற்றம்பலவன் கொற்றங்குடியார்க்கு எழுதிய ஓலை இது: பெற்றான் சாம்பானுக்கு உரிய முறையில் தீக்ஷை அளித்து அவன் முக்தி பெறச் செய்வதே முறையாகும். இது எனது ஆணை.

ஓலையை பெற்ற சாம்பான்  உமாபதி சிவாசாரியரின் காலில் வீழ்ந்து  சிவ பிரான் தந்த ஓலையைத் தந்தான். ஒலையைப் படித்த சிவம் பரவசமடைந்தார். ஒரு க்ஷணத்தில் சாம்பானுக்கு நயன தீக்ஷை அளித்தார். அவ்வளவு தான், முதிர்ந்த பக்குவ நிலையில் இருந்த சாம்பான் ஒளி உடலைப் பெற்று சிதாகாசத்தில் கலந்தான்.

செய்தி காட்டுத் தீ போல ஊர் எங்கும் பரவியது. இதை அறிந்த அரசன் பெரிதும் வியப்புற்றான். தானே நேராக கொற்றங்குடிக்கு விஜயம் செய்தான். சிவத்திடம், தனது முன்னால் இன்னும் யாரேனும் ஒருவருக்கு முக்தி அளிக்கப் பணித்தான்.

உமாபதி தன் பார்வையை நாலா பக்கமும் செலுத்தினார்.

அங்கு சிவம் தினசரி லிங்கத்திற்கு அபிஷேகம் செய்த போது அந்த நீர் வழிந்தோடி வந்து, அந்த நீர் மூலம் வளர்ந்த ஒரு முள்ளிச் செடி அவர் கண்களில் பட்டது. அது நல்ல பக்குவ நிலையில் இருப்பதை உணர்ந்த சிவம் அதன் மீது நயன தீக்ஷையத் தர அது உடனே ஒளி உருவமாகி சிதாகாசத்தில் கரைந்தது. அரசன் இதைப் பார்த்து பிரமித்தான். இது பற்றி நடராஜர் என்ன சொல்கிறார் என்பதை அவரிடமே கேட்டு விடுவோம் என்றான் அரசன்.

அனைவரும் நடராஜரிடம் சென்று பூஜை செய்து கற்பூர ஆரத்தியைக் காட்டினர். அங்கே நடராஜருக்கு இரு புறமும் சாம்பானும் முள்ளிச் செடியும் தோற்றமளிக்க அனைவரும் விக்கித்துப் போயினர். அரசன் உட்பட அனைவரும் சிவாசாரியரின் அடி பணிந்து வணங்கினர்.

இந்தச் சம்பவம் உலகிற்கு ஒரு பெரிய உண்மையை அளித்தது. கேவலம், மனிதப் பிறவி பெற்றவர்கள் மட்டுமே முக்திக்கான அருகதை பெற்றவர்கள் அல்லர்; புல்லும் பூடும் மிருகங்களும் கூட முக்தி பெற அருகதை பெற்றவர்கள் என்பதே அந்த உண்மை. கருடன் பூஜித்த தலம் பட்டீசுரம்; யானை திருவானைக்கா, குதிரை -திருக்குற்றாலம், புலி- பெரும்பற்றப் புலியூர் நரி- சிறுகுடி, ஆடு- திருவாடானை, நாய்- வீழிமிழலை, குரங்கு – தென்குரங்காடுதுறை அன்னம் – அம்பர், மயில் – மாயூரம் கிளி- கீரனூர் வண்டு- திரு வண்டுறை இப்படி மிருகங்களும் பறவைகளும் பூஜித்த தலங்கள் ஏராளம் ஏராளம் உண்டு. அவை முக்தி பெற்ற வரலாறுகளும் நிறைய உண்டு. ஆனால் மிகச் சிறப்பாக முள்ளுக்கும் முக்தி கொடுத்து அருளிய உமாபதி சிவாசாரியாரின் சிறப்பே சிறப்பு. அவரது குருபூஜை தினமான இன்று அவரைப் போற்றி வணங்குவோம்.

தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

திருச்சிற்றம்பலம்!

tags- உமாபதி சிவம் , வாழ்க்கை,  அற்புத சம்பவம்,

வாழ்க்கை என்பது கூட்டல், கழித்தல்,பெருக்கல், வகுத்தல்; ஞான மொழிகள் – 22 (Post.9258)


COMPILED BY KATTUKKUTY

Post No. 9258

Date uploaded in London – –     13 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஞான மொழிகள் – 22

                                                          Kattukutty

கல்வி – புது மொழிகள்

1.காப்பி அடிப்பவன் காணுமிடமெல்லாம் கண்காணிப்பாளர்!!!

2.படித்து முடிக்கற வரை பரீட்சை காத்திருக்குமா???

3.அளவுக்கு மிஞ்சி படித்தால், அனைத்தும் குழம்பும்.

4.பட்டம் என்றால் இனிப்பு, பரீட்சை என்றால் கசப்பு.

5.பார்த்தால் அப்பாவி, படித்தால் மேதாவி் !!!

6.காலமெல்லாம் சுற்றினாலும், தேர்வில் வென்றால் சரி்.

7.இன்றைக்கு பேனா கேட்பவன், நாளை பேப்பர் கேட்பான்.

8. T.V பார்க்கும் மகிழ்ச்சி, கரண்ட் போனால் போச்சு!!!

9. பிள்ளைக்கழகு பெற்றோர் பணத்தை செலவழித்தல்

10. மாணவன் வருவான் பின்னே, சிகரட் புகை வரும் முன்னே!!!

XXXXXXXXX

பெண்கள் கையில் உங்களை பிடி கொடுத்து விட்டால்,

பின்பு அவளைப் பிடிப்பது கடினமாகி விடும்.

ஒரு சம்சாரியின் புலம்பல்

XXXXXXXXX

ஒரு பிரபல கணித பேரசிரியரின் கணிப்பு

மனித ஜாதியின் வாழ்க்கையை நான்கு விதமாக பிரிக்கலாம்.

கூட்டல், கழித்தல்,பெருக்கல், வகுத்தல்………

XXXXXXXXX

செய்திப் பத்திரிக்கைகள் நமக்கு உடனுக்குடனே இரு பேரிடிச்

செய்திகளை நமக்கு அறிவிக்கின்றன.

ஒன்று மரணச் செயதிகள் . இரண்டு திருமணச் செய்திகள்!!!

XXXXXX

இரசாயன மாணவனின் ஆராய்ச்சி முடிவுகள்

தண்ணீர் என்பது இருவகையான “ஜின்”களின் கலவை.

ஒன்று ஆக்ஸிஜின்- சுத்தமான “ஜின்”

மற்றொன்று ஹைட்ரஜின் – தண்ணீர் கலந்த “ஜின்”

XXXX

உங்களுடைய ஒரு நிமிட கோபத்தால் 60 செகண்டு

மகிழ்ச்சியை இழக்கிறீர்கள்.

மனைவியை விட நாய் மேலானது. அது தன்னுடைய

எஜமானனை நோக்கிக் குலைக்காது !!!

XXXXX

ஞாபகம் என்பது வண்ணாத்திப் பூச்சியைப் போல……

நாம் சப்தம் செய்யாமல் அதை பிடிக்கப் போனால் “விர்” என்று

ஆகாய விமானத்தைப் போல பறந்து போகும். பழைய நிகழ்ச்சிகளை

ஞாபகப் படுத்திக் கொள்வதும் அது போலத்தான்!!!

டீ குடிக்கும்போது நாக்கு சுட்டால் சர்பத் குடிக்கும் போது

ஊதித்தான் குடிக்க வேண்டியிருக்கிறது.

XXXXXX

யாருடைய அன்பு நமக்கு வேண்டுமோ, அவர்களிடம் நமது

அந்தரங்கங்களை சொல்லாமலிருப்பது நல்லது.

பொய் சொல்லி வாழலாமா என்பது அந்தக் காலம்

பொய் சொல்லாமல் வாழ முடியுமா என்கிறது இந்தக் காலம்!!!

கடவுள் ஆறு நாட்கள் உலகத்தை சிருஷ்டித்து விட்டு ஓய்வு

எடுத்துக் கொண்டார். பிறகு பெண்களைப் படைத்தார்.

அதற்கு பிறகு யாருக்குமே ஓய்வு இல்லாமல் போய் விட்டது !!!

XXXXX

ஒரு சராசரியான பெண், தனக்கு மூளையை விட அழகுதான்

இருக்க வேண்டும் என நினைப்பாள்.

ஏனெனில் ஒருசராசரி மனிதன் சிந்திப்பதைவிட, தன்கண்ணால்

காண்பதையே நம்புகிறான்.

XXXXX

நாளாக நாளாக கணவன்மார்களின் “வருமான” சக்தி,

தங்கள் மனைவிமார்களின் “விரும்பும்” சக்தியை சரிக் கட்டவே முடிவதில்லை.

XXXX

tags  ஞான மொழிகள் – 22, வாழ்க்கை, கூட்டல், கழித்தல்,

வெற்றிகரமான வாழ்க்கை அமைய ஒரு உத்தி! (Post No.7989)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7989

Date uploaded in London – – – 17 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

மாலைமலர் 10-5-2020 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

வெற்றிகரமான வாழ்க்கை அமைய ஒரு உத்தி!

ச.நாகராஜன்

புத்தரும் பட்டுக் கைக்குட்டையும்

ஒருமுறை புத்தர் வழக்கத்திற்கு மாறாக தன் கையில் மிக அழகிய பட்டுக் கைக்குட்டை ஒன்றை வைத்திருந்தார். இதைப் பார்த்த அவரது நூற்றுக் கணக்கான சிஷ்யர்கள் ஆச்சரியத்தோடு அந்த அழகிய கைக்குட்டையைப் பார்த்து  அவர் ஏன் இதை வைத்திருக்கிறார் என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

புத்தர் உபதேச அருளுரை நேரம் நெருங்கியது. அவர் அந்தப் பட்டுக் கைக்குட்டையைத் தன் கையில் வைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்.

பின்னர் பேச்சின் இடையே மெதுவாக அனைவரையும் நோக்கி, “நீங்கள் என் கையில் என்ன பார்க்கிறீர்கள்?” என்று கேட்டார்.

அனைவரும் ஒருமித்த குரலில் அழகிய பட்டுக் கைக்குட்டையைப் பார்க்கிறோம் என்றனர்.

பின்னர் புத்தர் அந்த கைக்குட்டையில் ஒரு முடிச்சைப் போட ஆரம்பித்தார். ஒவ்வொன்றாக ஐந்து முடிச்சுகளைப் போட்டார்.

பின்னர் அனைவரையும் நோக்கி, “இப்போது என்ன பார்க்கிறீர்கள்?” என்றார்.

பலரும், “அதே கைக்குட்டை தான் என்றாலும் கூட அது இப்போது வேறு மாதிரி இருக்கிறது ஏனெனில் அதில் முடிச்சுகள் இருக்கின்றன”,என்றனர்.

புத்தர் அவர்களை நோக்கிக் கூறினார்: “நீங்களும் என்னப் போல புத்தர் தான். இதைத் தான் நான் உங்களுக்கு உபதேசிக்க வந்துள்ளேன். ஆனால் எப்படி முடிச்சுகள் இருக்கும் போது பட்டுக் கைக்குட்டையை உள்ளபடி உங்களால் பார்க்க முடியவில்லையோ அதைப் போல நீங்களும் புத்தர் தான் என்பதைப் பார்க்க முடியவில்லை. நான் முடிச்சு இல்லாத பட்டுக் கைக்குட்டையாக இருக்கிறேன்.”

பின்னர் அவர் கைக்குட்டைகளின் இரு பக்கங்களையும் பிடித்து நன்றாக இழுக்க ஆரம்பித்து, “இப்போது முடிச்சுகள் அவிழ்ந்து விடுமா” என்று கேட்டார்.

அனைவரும், “அது எப்படி? இன்னும் இறுகும்” என்றனர்.

புத்தர் புன்சிரிப்புடன் கேட்டார் :”அப்படியானால் ஏன் உங்கள் முடிச்சுகளை இன்னும் போட்டு இறுக்குகிறீர்கள்? அவிழ்க்க வேண்டும் என்ற உங்கள் நோக்கம் நல்ல நோக்கமாக இருக்கும் போது அந்த நல்ல நோக்கத்துடன் செய்யும் செயலே அதற்கு எதிராக அல்லவா அமைகிறது?”

பின்னர் புத்தர், “ யாராவது இந்த முடிச்சுகளை அவிழ்க்க ஒரு வழியைச் சொல்ல முடியுமா?” என்று கேட்டார்.

ஒரு பிட்சு எழுந்தார். “உங்கள் அருகில் வர அனுமதித்தால் நான் முயன்று பார்க்கிறேன்” என்றார் அவர்.

“வாருங்கள்” என்றார் புத்தர்.

அருகே வந்த பிட்சு இது எப்படி போடப்பட்டிருக்கிறது என்பதை உற்றுப் பார்த்தால் அவிழ்ப்பது எப்படி என்பது தெரிந்து விடும் என்றார்.

“ஆஹா! சரியான விடை!! இது தான் நான் இன்று சொல்ல வந்தது. உங்கள் முடிச்சுக்களை எப்படிப் போட்டிருக்கிறீர்கள் என்பதை உங்களில் ஒவ்வொருவரும் தியானித்துச் சிந்தித்தால் அவிழ்ப்பது எப்படி என்பதை நீங்களே உணர்வீர்கள்.”

புத்தர் தன் உரையை முடித்துக் கொண்டார்.

வாழ்வின் ஒரு பெரும் ரகசியத்தை அறிந்து கொண்ட திருப்தியுடன் அவரது சீடர்கள் கலைந்தனர்.

மனம் என்னும் விசித்திரம்!

மனம் என்பது விசித்திரமானது. பெரும் ஆற்றலைக் கொண்டது. ஒவ்வொரு நாளும் ஒருவர் குறைந்தபட்சமாக சுமார் 50000 எண்ணங்களை எண்ணுகிறார். அதாவது மணிக்கு சுமார் 2083 எண்ணங்கள். இவற்றில் பெரும்பாலானவை தேவையற்றவை; எந்த நல்ல பயனையும் தருவன அல்ல. மனமானது ஒவ்வொரு வினாடியும் 126 தகவல்களை பகுத்து ஆராயும் வல்லமை படைத்தது.

ஆகவே நாம் நம்மை கவனித்து எதை எண்ணுகிறோம் என்பதைப் பார்க்க வேண்டும். மனம் தெளிந்த நிலையை அடைய வேண்டும்.

இதைத் தான் புத்தர் பிரான் மனம்தெளிநிலை என்றார். ஆங்கிலத்தில் இது Mindfulness என்று சொல்லப்படுகிறது. இதற்கான பயிற்சிகளும், செய்முறை திட்டங்களும் மேலை நாடுகளில் பரவலாக இன்று ஏற்பட்டு லட்சக்கணக்கானோர் இதைப் பயில்கின்றனர். (இதைக் கற்க அவர்கள் தரும் கட்டணமும் மலைக்க வைக்கும் ஒன்று!)

மனம் தெளிதரு நிலை என்றால் சுயக் கட்டுப்பாட்டுடன் ஒன்றை ஆர்வத்துடன் அணுகுதல்;  இது தான் மைண்ட்ஃபுல்னெஸ் – Mindfulness.

இந்தத் தெளிவான மனத்தைப் பெற என்ன செய்ய வேண்டும்?

“உன்னைக் கவனி” என்றார் புத்தர்.

ஒரு இடத்தில் அமர்ந்து சில நிமிடங்கள் நம்மை நாமே உற்றுக் கவனிக்க வேண்டும்.

என்னை கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன் என்று சொல்லிப் பயனில்லை. ஏனெனில் நமது எண்ணங்கள் நாம் அறியாமலேயே நம்மைச் சுற்றி வட்டமிடுகின்றன.

நிகழ்காலத்தில் வாழ்க!

ஒரு சிறிய கதை உண்டு.

பேப்பர் படிப்பதிலேயே பொழுதைப் போக்கும் கணவனிடம் ஒரு முக்கியமான அவசர செய்தியைச் சொல்ல வந்தாள் மனைவி.

அவன் கேட்பதாக இல்லை. பேப்பரிலேயே கவனம்.

“உங்கள் உடம்பில் ஒரு சிலந்தி ஓடுகிறது” என்று மெதுவாகச் சொன்னாள் அவள்.

ஊஹூம்! அவன் அசையவே இல்லை.

பார்த்தாள் மனைவி. ஒரு அலறல் அலறினாள் – “உங்கள் உடம்பில் ஒரு சிலந்தி ஓடுகிறது.ஊ..ஊ”

அலறி அடித்துக் கொண்டு எழுந்தான் கணவன். எங்கே எங்கே என்று தன் சட்டையைத் தட்டி விட்டுக் கொண்டு பரபரத்தான். சிலந்தியைக் கண்டுபிடித்து தூக்கி எறிய முனைந்தான்.

இதில் முக்கியமான விஷயம் மனைவி முதலில் கூறிய போது அவன் காதுகளில் வார்த்தைகள் விழுந்தன. ஆனால் அவன் காதிருந்தும் ‘கேட்கவில்லை’. அவள் அலறியபோது அவன் கேட்டான், அதில் உள்ள பொருளைப் புரிந்து கொண்டான், உடனே செயல்பட ஆரம்பித்தான்.

இதே போலத்தான் பெரும்பாலானோர் பல விஷயங்கள் தங்களை நெருங்கி வரும் போது அவற்றைக் கவனிப்பதில்லை; செயலில் ஈடுபட முன்வருவதில்லை.

எப்போதும் விழிப்புடனும் கவனத்துடனும் நிகழ்காலத்தில் வாழ்வது தான் வெற்றியைத் தரும்.

நிகழ்காலம் என்பது அதாவது இந்தக் கணம் என்பது ஒன்று முதல் மூன்று விநாடிகள் மட்டுமே நீடிப்பதாகும்.

இதில் கவனம் வைப்பவன் தான் அசாதாரணமான மனிதன். வெற்றியைப் பெறுபவன்.

சாதாரண மனிதனுக்கும் வெற்றி பெறும் அசாதாரமான சாதனையாளருக்கும் இடையே இருக்கும் வார்த்தை “அசாதாரணமான” (மனிதன்) என்பது தான்.

இதை அடைய உதவுவதே மைண்ட்ஃபுல்நெஸ் உத்தி.

மைண்ட்ஃபுல்நெஸ் தரும் பயன்கள்!

மனதை ஒருமுகப்படுத்தி நிகழ்காலத்தில் வாழப் பழகுவதற்கு பயிற்சி தேவை.

ஒரு சிறிய பொருளை எடுத்துக் கொண்டு அதன் மீது கவனம் செலுத்தி இந்தப் பயிற்சியை ஆரம்பிக்கலாம்.

அல்லது தனது எண்ண ஓட்டங்களை கவனித்து அதன் விளைவுகளைச் சிந்திக்கலாம்.

மெதுவாக மூச்சை உள்ளிழுத்து பின்னர் மெதுவாக வெளிவிடுவது ஒரு நல்ல பயிற்சியாகும்.

இப்படிச் செய்வதால் ஏற்படும் பயன்கள் :

மனத்தளர்ச்சி நீங்கும்.

மன அழுத்தம் போகும்.

பிரச்சினைகளை இனம் காண முடியும்; அதற்கான தீர்வுகள் கிடைக்கும்.

நமது உணர்ச்சிகள் நம் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

கவனசக்தியும் ஒருமுனைப்படுத்துவதும் மெம்படும்.

மூளைத்திறன் கூடும்.

நோய்த் தடுப்பு சக்தி கூடும்.

உயர் இரத்த அழுத்தம் குறைந்து சீராகும்.

இதயத்துடிப்பும் சீராகும்.

மொத்த ஆரோக்கியமும் மேம்படும்.

சுற்றுப்புறம் பற்றிய விழிப்புணர்ச்சி கூடும்.

மிக்க அமைதியாக ஆனால் வெற்றிகரமான ஒருவராக ஆக முடியும்.

உன்னைக் கவனி!

உலக இயல்பின்படி ஆயிரக்கணக்கான செயல்கள் ஆங்காங்கு நடந்து கொண்டே தான் இருக்கும்.

அனாவசியமாக அடுத்தவரைக் கவனித்து நம் நேரத்தை வீணாக்குவதை விட்டு விட்டு நம்மை நாம் கவனித்தால், நமது செயல்பாட்டை வகுத்துக்கொண்டால் வெற்றி நிச்சயம்.

புத்தர் கூறிய கதை ஒன்று உண்டு.

ஒரு கழைக்கூத்தாடி ஒரு பெரிய உயரமான மூங்கில் கம்பை தன் தலையில் தூக்கி வைத்துக் கொள்வான். அதில் ஒரு சிறு பெண் மெதுவாக ஏறி மேலே சென்று நிற்பாள். பின்னர் மூங்கில் கம்பில் மேல் இருக்கும் பெண்ணுடன் அவன் மெதுவாக நடந்து செல்வான். பார்வையாளர்கள் பிரமித்துப் பாராட்டுவர்.

எந்த விதமான விபத்தும் நேர்ந்து விடக்கூடாதே என்று எண்ணிய அந்தக் கழைக்கூத்தாடி சிறு பெண்ணிடம் கூறினான்: “ பெண்ணே! இந்த வித்தையின் போது நீ என்னைக் கவனி. நான் உன்னைக் கவனிக்கிறேன். எந்த விபத்தும் ஏற்படாது”

அதற்கு அந்த புத்திசாலியான சிறு பெண் பதில் கூறினாள் இப்படி: “வேண்டாம், உங்களை நீங்கள் கவனித்துக் கொள்ளுங்கள். என்னை நான் கவனித்துக் கொள்கிறேன். விபத்தே வராது.”

இந்த கதையின் உண்மைப் பொருள் ஆழமானது. அவரவர் தம் அளவில் தன்னைக் கவனித்துக் கொண்டால் அனைத்தும் சரியாக அமையும்.

உங்களை நீங்கள் கவனித்துக் கொண்டால் – உங்கள் மனதையும் உடலையும் நீங்கள் நன்றாக இருக்குமாறு பார்த்துக்கொண்டால் – உலகத்தில் இருக்கும் மற்றவர்களிடம் அதிக தயையுடனும் அதிக புரிந்துகொள்ளுதலுடனும் பழகுபவராக ஆவீர்கள்.

உலகில் முக்கியமான அதிக தூரம் எவ்வளவு?

நன்றாக வாழ்வது எப்படி என்பதைக் கற்றுக் கொடுக்கும் மாஸ்டரிடம் அதைத் தெரிந்து கொள்ளப் பலர் சென்றனர்.

அவர் கேட்டார் உலகில் மிக அதிகமான ஆனால் அதே சமயம் மிக முக்கியமான தூரம் எவ்வளவு என்றார்.

ஒருவர் தன் வீடு இருக்கும் ஒரு மைல் தூரத்தைச் சொன்னார். இன்னொருவர் 3500 மைல் தள்ளி இருக்கும் அயல் நாட்டு நகரின் பெயரைச் சொன்னார். மற்ற சிலரோ நியூயார்க், லண்டன் ஆகிய நகர்கள் இருக்கும் தூரங்களைக் கூறினர். ஒருவர் உலகைச் சுற்றி வரும் 25000 மைல் தூரம் தான் அதிகம் என்றார்.

மாஸ்டர் இறுதியில்  கூறினார் :” மிக முக்கியமான, அதிக தூரம் சுமார் 12 அங்குலம் தான்! இதயத்திற்கும் ஒருவனது தலைக்கும் இடையே உள்ள தூரம் தான் அது. ஒருவனுக்கு அபாரமான அறிவு இருக்கலாம். ஆனால் அந்த அறிவு பலருக்கும் பயன்படி அதைப் பயன்படுத்தி இதயபூர்வமாக வாழ வேண்டும். இல்லையேல் அதற்குப் பயன் இல்லை. ஆக, இந்த தூரத்தை இணைத்து உங்கள் வழியை அமைத்துக் கொள்ளுங்கள்!”

உள்ள முதிர்ச்சியுடனும் அன்புடனும் வாழ அந்தந்த கணத்தில் வாழ வைக்கும் மைண்ட்ஃபுல்னெஸ் மிக அவசியம்.

ஒரு சில நிமிடங்கள் அன்றாடம் நம்மை நாமே கவனித்து முன்னேறினால் போதும். வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்ந்தவர்களாக ஆவோம்.

இதைச் செய்ய பணம் தேவையில்லை. அந்தஸ்து, இனம், மதம், நாடு, வயது, ஆண், பெண் என்ற பால் வேறுபாடு எதுவும் தேவையில்லை.

எங்கும், எப்பொழுதும், யார் வேண்டுமானாலும் இந்தப் பயிற்சியைச் செய்யலாம்.

மூச்சை ஆழ்ந்து உள்ளிழுத்துப் பின்னர் மெதுவாக வெளியிட்டு நம்மை நாமே கவனிக்க ஆரம்பிப்போமா?

வாழ்க வளமுடன்!

tags — கைக்குட்டை, புத்தர், வெற்றிகரமான, வாழ்க்கை

***

சந்தோஷம் தரும் வாழ்க்கை அமைப்போம், வாரீர்! (Post No.7005)

WRITTEN BY S NAGARAJAN

swami_48@yahoo.com


 Date: 23 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 13-21

Post No. 7005


Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

பாக்யா 1-9-19 இதழில் அறிவியல் துளிகள் பகுதியில் வெளியாகியுள்ள ஒன்பதாம் ஆண்டு பதினைந்தாம் கட்டுரை – அத்தியாயம் 431

சந்தோஷம் தரும் வாழ்க்கை அமைப்போம், வாரீர்!

 ச.நாகராஜன்

ஜப்பானியப் பெண்மணியான மாரி காண்டோ சந்தோஷம் அடைவதற்கான வழிமுறையைக் காண்பித்துப் புகழ் பெற்ற நிலையில், இன்னொரு பெண்மணி பழக்கவழக்கத்தை நல்ல விதமாக மாற்றினால் சந்தோஷம் அடையலாம் என்கிறார்.

சந்தோஷமான வாழ்க்கையை அமைத்துக் கொள்வது நம் கையில் தான் இருக்கிறது, வாரீர், அது சுலபமானதும் கூட என்கிறார் அமெரிக்கப் பெண்மணியான க்ரெட்சென் ரூபின் (Gretchen Rubin)

இவரது பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகி விட்டன; முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவரது முக்கியமான புகழ்பெற்ற இரு புத்தகங்கள் : The Four Tendencies, Better Than Before ஆகியவை.

க்ரெட்சென் மிஸௌரியில் உள்ள கான்ஸாஸ் நகரில் 1965ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் தேதி பிறந்தார். இளமையிலிருந்தே ஒருவரின் பழக்கவழக்கங்கள் அவர் வாழ்க்கையில் எவ்வளவு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை ஆராய ஆரம்பித்தார். சட்டம் படித்து பிரபல நீதிபதி ஒருவரிடம் வேலை பார்த்த அவர் பழக்க வழக்கங்களைப் பற்றிய தனது கண்டுபிடிப்புகளை புத்தக வடிவில் தந்ததோடு அதற்கான கருத்தரங்கம், பயிற்சி உள்ளிட்டவற்றை நடத்த ஆரம்பித்தார். மக்கள் ஆவலுடன் அவர் சொல்வதைக் கேட்டுத் தங்களுக்கு உதவாத பழக்கங்களை உதறி விட்டுத் தங்களை மாற்றிக் கொள்ள ஆரம்பித்தனர்.

மனிதனின் அன்றாட வாழ்க்கை 40 விழுக்காடு பழக்கத்தின் அடிப்படையிலேயே அமைகிறது என்கிறார் க்ரெட்சென்.

மனிதர்கள் ஒருவர் போல இன்னொருவர் இல்லை; ஆக இவர்கள் தங்களை மாற்றிக் கொண்டு சந்தோஷமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டுமென்றால் முதலில் தாங்கள் எந்த வகையைச் சேர்ந்தவ்ர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மனிதர்களை நான்கு வகையாகப் பிரிக்கிறார் க்ரெட்சென்.

  1. UPHOLDER (திட்டமிட்டு உயர்பவர்)

இந்த வகை மனிதர்களுக்கு தாங்கள் என்ன செய்யப்போகிறோம் எப்போது செய்யப் போகிறோம் என்ற திட்டம் மிகவும் முக்கியம். காலை முதல் இரவு வரை, திங்கள் முதல் ஞாயிறு வரை என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய திடமான திட்டம் கொண்ட இவர்களுக்குச் சற்று தூண்டுதல் தேவை.

தங்களது உள்ளார்ந்த விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமென்றால் இவர்கள் எப்படியாவது உந்தப் பட வேண்டும். தங்களின் செயல்பாடுகளை இவர்கள் அவ்வப்பொழுது மதிப்பீடு செய்து கொண்டே இருப்பார்கள். இவர்கள் வெற்றி பெற ஒரு சிறந்த உத்தி இவர்கள் இன்னொருவருடன் கூட்டு சேர்வது தான். அடிக்கடி கூட்டாளியால் உந்தப்பட உந்தப்பட இவர்கள் முன்னேறலாம். தங்கள் வாழ்க்கை சிறப்பதைக் கண்டு ஆனந்தம் அடையலாம்.

  • QUESTIONER (கேள்வி கேட்பவர்)

எதையும் கேள்வி கேட்டுத் தெளிந்து கொண்ட பின்னரே செயலைச் செய்ய முற்படும் இவர்களுக்கு எதிலும் தெளிவு தேவை. எதைச் செய்ய வேண்டும், எதற்காகச் செய்ய வேண்டும் – இது தெரியாவிட்டால் இவர்கள் ஒன்றையும் செய்ய மாட்டார்கள். இவர்களுக்கான சரியான உத்தி மேற்பார்வையிடல் (Monitoring) தான்! தனக்குத் தானே கூட இவர்கள் அவ்வப்பொழுது தங்களைச் சரி பார்த்துக் கொண்டால் இவர்களுக்கு அமைவது சந்தோஷமான வாழ்க்கையே. எதிலிருந்தும் தப்பிக்கும் வழியைப் பார்ப்பது இவர்கள் பழக்கம்; அதைக் கண்காணித்து அலசி ஆராய்ந்தால் போதும் இவர்கள் தங்களது கெட்ட பழக்க வழக்கங்களை விட்டுவிட்டு  வெற்றி பெறலாம்.

உடல் பயிற்சி செய்வது அவசியம் தான், எனக்கும் அது பிடிக்கும்; ஆனால் வெளியில் ஒரே குளிராக இருக்கிறதே – இது தான் இவர்களின் தப்பிக்க முயலும் வழி. இதை உன்னிப்பாகப் பார்த்துத் தவிர்த்தால் இவர்கள் வெற்றி நிச்சயம்.

  • OBLIGER (சொன்னால் கேட்பவர்)

இந்த வகை மனிதர்கள் கணக்குக் காட்டும் பொறுப்புடமை என்ற பழக்கத்தை மேற்கொண்டால் அவர்களின் வாழ்க்கை மாறும். கெட்ட பழக்கத்திலிருந்து மீண்டு வர கடமை பற்றிய பொறுப்புணர்வு தேவை. எந்த காரியத்தை எப்போது முடிக்க வேண்டும், அதற்கு உதவுபவர் யார், மருத்துவரா, பயிற்சியாளரா, அல்லது நண்பர்களா, (ஏன் குழந்தைகளாகக் கூட இருக்கலாம்) – அவர்களை இனம் கண்டு இவர்கள் முன்னேறலாம். தங்களுக்காக இல்லாதது போலவும் மற்றவர்களுக்காக செய்வது போலவும் இவர்கள் சொல்வார்கள் – குழந்தை பிறக்கட்டும் பார், சிகரட் பிடிப்பதை நிறுத்தி விடுவேன்! -இது இவர்களின் போக்கு.

 இவர்களுக்கு கண்காணிப்பும் மேற்பார்வையும் தேவை. இவர்களைச் சுற்றி யார் இருக்கிறார்கள் என்பதை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். நல்ல நட்பு, நல்ல சுற்றத்தார் என்ற வட்டத்தை அமைத்துக் கொண்டால் போதும் வெற்றிகரமான சந்தோஷ வாழ்க்கை இவர்களுக்கு அமைவது நிச்சயம். இவர்களுக்கு ஊக்குவிக்க அவ்வப்பொழுது ஒரு பாராட்டு விருந்து தேவை.

  • REBEL (புரட்சியாளர்)

எதிலும் புரட்சியை விரும்பும் இவர்களின் முதல் ஆசை தன்னை அனைவரும் மதிக்க வேண்டும் என்பது தான். எதிலும் தெளிவு தேவை என்பதால் எதற்காக, ஏன் என்ற கேள்விகளுக்கு இவர்கள் விடை கண்டால் போதும், செயல் பட ஆரம்பிப்பார்கள். எதையாவது செய்யச் சொன்னால் அதற்கு உடனே மறுப்பு தெரிவிக்கும் சுபாவத்தை இயல்பாகவே கொண்டிருக்கும் இவர்களுக்கு, திட்டமிடல், கணக்குக் காட்டல் உள்ளிட்ட எதுவும் வேலைக்கு ஆகாது. எதையும் வித்தியாசமாகச் செய்ய விரும்பும் இவர்களுக்கு காரண காரியத்துடன் எதையும் விளக்கினால்   தங்கள் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டு இவர்கள் வெற்றி பெறுவார்கள்.

இனி பிடிவாதமாக நம்மை ஆட்டிப் படைக்கும் கெட்ட பழக்கங்களிலிருந்து எப்படி விடுபடுவது என்பதையும் நன்கு ஆராய்ந்து 21 உத்திகளை க்ரெட்சென் நமக்கு வழங்குகிறார்.

நான்கு வகை மனிதர்களில் நாம் எந்த வகை என்பதை நமக்கு நாமே கேட்டுத் தெரிந்து கொண்டால் இந்த உத்திகளில் நாம் முன்னேறுவதற்கான வழிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

சந்தோஷமான வாழ்க்கைக்கு அடிப்படையானவை நல்ல பழக்க வழக்கங்களே.

அவற்றைக் கைக்கொள்வதற்கான உத்திகளில் முக்கியமான சில:

  • முதலில் நான்கு வகை மனிதர்களில் நீங்கள் எந்த வகை என்பதைக் கண்டுபிடியுங்கள்.
  • எது உங்களுக்கு உதவும் வழி என்பதை நிர்ணயித்துக் கொள்ளுங்கள் (அடுத்தவருக்கு உதவும் ஒரு வழி உங்களுக்கு உதவ வேண்டும் என்பதில்லை)
  • பழக்க வழக்கங்களை அன்றாடம் மேற்பார்வையிடுங்கள்
  • நல்ல பழக்கங்களுக்கான அஸ்திவாரம் அமையுங்கள்
  • அதற்கான திட்டத்தை வகுத்துக் கொள்ளுங்கள் (‘புரட்சியாளர்களுக்கு இது உதவாது)
  • கணக்குக் காட்டும் பொறுப்பை – கடமைப் பொறுப்பை கடைப்பிடியுங்கள் (‘சொன்னால் கேட்பவருக்கு இது சந்தோஷமாக இருக்கும்)
  • பழக்கவழக்க மாற்றத்தை மேற்கொள்ளும் முதல் வாய்ப்பைப் பாருங்கள்; அதைப் பயன்படுத்துங்கள். தொடர்ந்து வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்தத் தவறாதீர்கள்
  • தப்பிக்க வழியைக் கண்டுபிடிக்கும் மனப்பான்மை பற்றி கவனத்தோடு இருங்கள்
  •  உங்கள் கவனத்தைச் சிதற விடுபவை எவை என்பதைக் கண்டு பிடித்து அவற்றின் மீது கவனமாக இருங்கள்
  • மாறிய வாழ்க்கை முறை சந்தோஷத்தைத் தருவதாக இருப்பின் உடனடியாக உங்களுக்கு நீங்களே ஒரு பாராட்டு விருந்தை அளித்துக் கொள்ள மறவாதீர்கள். தொடர்ந்து முன்னேறுங்கள்
  • உங்களுக்கு உதவும் கூட்டாளியுடன் சேருங்கள்
  • எதிலும் தெளிவாக இருங்கள்
  • உங்களின் தனி அடையாளத்தை உறுதிப் படுத்துங்கள்

தேவையற்ற பழக்கங்களை அகற்ற ஒரு தினசரி டயரி கூட ஏற்படுத்திக் கொண்டு நமது முன்னேற்றத்தைப் பதிவு செய்து வரலாம்.

ஆயிரக்கணக்கானவர்கள் உலகெங்கும் இந்த உத்திகளால் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் போது நம்மால் முடியாதா என்ன?

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

ஆடிஸம் (Autism) என்னும் தன் பித்த நோயால் பாதிக்கப்பட்டு மீண்டவர் பிரபல அறிவியல் பெண்மணியான டெம்பிள் க்ராண்டின் (Temple Grandin). 1947, ஆகஸ்ட் 29ஆம் தேதி பிறந்த இவருக்கு வயது 72. சிறு குழந்தைகளில் சில குழந்தைகள், தங்கள் கற்பனை உலகில் வாழ்ந்து தன் பித்த நோயினால் மன இறுக்கத்தைக் கொள்வதைக் கண்டு கொண்ட இவர் அதைப் போக்க தன் 17ஆம் வயதிலேயே ஹக் மெஷின் (Hug Machine) எனும் அழுத்தம் கொடுத்து அணைக்கும் ஒரு சாதனத்தைக் கண்டுபிடித்தார்.

ஒரு நாள் மாட்டுத் தொழுவத்தில் மாடுகளுக்கு ஊசி போடும் போது அவைகளை இப்படி அழுத்தம் கொடுத்து அணைத்து அவைகளின் இறுக்கத்தைப் போக்கும் வழிமுறையைக் கண்டார். ஏன், அதை மனிதர்களுக்கும் பயன்படுத்தக் கூடாது என்று நினைத்த டெம்பிள் தனது புது சாதனத்தைக் கண்டு பிடித்தார். இன்று ஆடிஸம் நோயினால் பாதிக்கப்படுவோருக்கு இந்த சாதனம் பெரிதும் பயன்படுகிறது. இவரைப் பற்றிய Temple Grandin என்ற திரைப்படம் புகழ் பெற்ற ஒன்று. 2010இல் டைம் பத்திரிகை உலகின் சிந்தனைப் போக்கை மாற்ற வல்ல நூறு பேரில் இவரையும் ஒருவராகத் தேர்ந்தெடுத்தது. விலங்கியலில் மிகவும் புகழ் பெற்ற இவரின் இன்றைய சொத்து மதிப்பு 10 லட்சம் டாலர்கள்! ‘Calling All Minds’ என்ற இவரது புத்தகம் மிகவும் புகழ் பெற்ற ஒன்று. ஆடிஸம் நோயினால் பாதிக்கப்பட்டோரைச் சுற்றி இருப்பவர்கள் படும் மன வேதனை சொல்லி மாளாத ஒன்று. அவர்களுக்கு ஆடிஸம் நோயைப் போக்க என்ன செய்ய வேண்டும் என்பதைக் கற்பித்த இவர் உலகின் தலை சிறந்த மனிதாபிமானியாகக் கருதப்படுகிறார்.

****