Post No. 10,198
Date uploaded in London – 11 OCTOBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
புராணத்துளிகள் மூன்றாம் பாகம்-அத்தியாயம் 13 கட்டுரை எண் 10004 வெளியான தேதி
22-8-2021
புராணத்துளிகள் : மூன்றாம் பாகம் – அத்தியாயம் 14
(46 முதல் – 50 முடிய)
ச.நாகராஜன்
46. ஆலயம் கட்டுவதனால் ஏற்படும் பலன்கள்!
அக்னி தேவதை கூறுகிறது:
நான் இப்போது வாசுதேவர் மற்றும் இதர தேவதைகளுக்கு ஆலயம் அமைப்பதன் பலன்களைக் கூறுகிறேன்.
கடவுளரின் கோவில்களை அமைக்க ஒருவர் ஆசை கொண்டால் அவருக்கு ஆயிரம் பிறவிகளில் அவர் செய்த பாவம் போய்விடும். யாருக்கு ஆலயம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் உதிக்கிறதோ அவர்களுக்கு நூறு பிறவிகளில் செய்த பாவம் நீங்கி விடும். ஸ்ரீ கிருஷ்ணருக்கு கோவில் அமைப்பதை அங்கீகரிக்கும் ஒருவரும் அவரது பாவங்களிலிருந்து விடுபடுவதோடு அச்சுத (விஷ்ணு) லோகத்திற்குச் செல்வார். ஹரிக்கு கோவில் ஒன்றை அமைக்கும் ஒருவர் அவரது ஒரு லட்சம் மூதாதையருக்கு சென்ற காலத்திலும் எதிர்காலத்திலும் விஷ்ணு லோகத்தை அளிக்கிறார். விஷ்ணுவிற்குக் கோவில் கட்டும் ஒருவர் அவரது மூதாதையரின் ஆவிகள் விஷ்ணு லோகத்தில் தங்கள் பாவங்கள் அனைத்தும் நீங்கப் பெற்று மிகவும் கௌரவிக்கப்பட்டவர்களாய் அங்கேயே இருக்கின்றனர். தேவதைக்கு கோவில் அமைக்கப்படும் போது அப்படி அமைப்பவருக்கு பிராமணரைக் கொன்ற பாவம் உள்ளிட்ட அனைத்தும் போய் விடும்.
அக்னி புராணம் அத்தியாயம் 38- ஸ்லோகம் 1 முதல் 5 முடிய
47. நவநிதிகள் யாவை?
பத்ம, மஹாபத்ம, மகர, கச்சப, குமுத, நந்த, பத்ம, சங்க, பத்மினி ஆகிய இவையே நவ நிதிகளாகும்
அக்னி புராணம் அத்தியாயம் 41 – ஸ்லோகம் 14
48 விபூதி தாரண மஹிமை
நாராயணர் கூறுகிறார்:
ஒரு நாளாவது ஒருவன் பஸ்மம் (திருநீறு/விபூதி) தரிப்பானாயின் அவனுக்குண்டாகும் புண்ணிய பலத்தைச் சொல்கிறேன், கேட்பாயாக:- என்னவெனில் அவன் மஹாபாதகங்களைச் செய்திருப்பின் அவைகளும் வேறு பாதகங்களும் நசித்துப் போகும். இது சத்தியம்! சத்தியம்! சந்தேகமில்லை.
முக்தி என்னும் ஸ்திரீயை வசீகரம் செய்து கொள்ள வேண்டியவனுக்கு சிவலிங்கம், ருத்திராக்ஷம், பஞ்சாக்ஷரம், பஸ்மம் என்னும் இவைகள் ஔஷதங்களாம். பஸ்மோத்தூளனமுள்ளவன் மூர்க்கன் ஆனாலும் பண்டிதன் ஆனாலும் அவன் எவ்விடத்தில் புசிக்கின்றானோ அவ்விடத்தில் ரிஷபக் கொடியை உடைய பரமேஸ்வரன் தேவி ஆகியோரோடு புசிக்கிறான்
தேவி பாகவதம்,பதினொன்றாம் ஸ்கந்தம் அத்தியாம் 13
49. கிருஷ்ணர் தருமருக்கு சிவபூஜை பற்றிக் கூறியது!
பசியுடன் வந்த துர்வாஸ முனிவரை கிருஷ்ணரின் அருளால் திருப்திப் படுத்தி அனுப்புகிறார் தர்மர்.
துர்வாஸ முனிவர் திருப்தியுடன் தர்மரை விட்டு அகன்றவுடன் தருமர் கிருஷ்ணனின் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார்.
“கிருஷ்ணா, உன் அனுக்ரஹம் மட்டும் இல்லாதிருந்தால் என் நிலைமை மோசமாகப் போயிருக்கும். துர்வாஸரிடம் சாபம் பெறுவதைக் காட்டிலும் அவர் வருவதற்குள் உயிரை விட்டிருப்பேன்” என்றார்.
உடனே கிருஷ்ணன், “ தருமா! சிவபெருமானுடைய அனுக்ரஹம் தான் காரணம். துவாரகையில் இருக்கும் போது உபமன்யு முனிவர் எனக்குச் சிவ பூஜையை உபதேசித்தார்.வடுக கிரியில் ஏழு மாதம் தீக்ஷை பெற்று சிவபூஜை செய்து தியானித்தேன். சிவனும் எனக்கு தரிசனம் தந்து சத்ருக்களை வெல்லும் சக்தியை அளித்தார். நீங்களும் சிவபூஜை செய்யுங்கள். அவர் அனுக்ரஹத்தால் உங்களுக்கு வரும் துன்பங்கள் பனி போல நீங்கும். எனக்கு அருள் புரிந்ததன் காரணமாக சிவபிரான் அங்கே வில்வேஸ்வரர் என்ற பெயரில் எழுந்தருளியிருக்கிறார்” என்றார்
- சிவ புராணம் அர்ஜுனன் பாசுபதாஸ்திரம் பெறும் அத்தியாயம்
50. ஆதிசைவர் தோற்றம்!
சைவர்கள் ஏழு வகையானவர்கள் ஆவர்.
- அநாதி சைவர் 2) ஆதி சைவர் 3) மஹான சைவர் 4) அநு சைவர் 5) அவாந்தர சைவர் 6) பிரவர சைவர் 7) அந்ய சைவர்.
இவர்களில் அநாதி சைவர் சிவபிரானே.
ஆதி சைவர் எனப்படுவோர் சிவபிரானின் ஊர்த்வ முகத்திலிருந்து தோன்றியவர்கள் ஆவர்.
கௌசிகர், காசியபர், பரத்வாஜர், அத்திரி, கௌதமர் ஆகிய ஐந்து முனிவரும் சதாசிவனின் பஞ்ச முகங்களால் தீக்ஷை செய்யப்பட்டவர்களாம். அவர்கள் குலத்தில் பிறந்தவர்களே ஆதி சைவர்கள் ஆவர்.
***
புராணத் துளிகள் மூன்றாம் பாகம் முற்றிற்று.
INDEX
ஆலயம் கட்டுவதனால் ஏற்படும் பலன்கள், நவநிதிகள், விபூதி தாரண மஹிமை, கிருஷ்ணர் கூறிய சிவ பூஜை மஹிமை, ஆதிசைவர் மஹிமை.
tags- ஆலயம் கட்டுதல், பலன்கள், நவநிதிகள், விபூதி , ஆதிசைவர் , மஹிமை.