வில்லிப்புத்தூராரின் மடக்கணி பாடல்! – 2 (Post No.5472)

Written by S NAGARAJAN

Date: 26 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 6-22 AM (British Summer Time)

 

Post No. 5472

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

வில்லிபாரதம்

வில்லிப்புத்தூராரின் மடக்கணி பாடல் – 1 என்னும் கட்டுரை ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. (கட்டுரை எண் 5394 – பதிவு தேதி 5-9-2018)

 

வில்லிப்புத்தூராரின் மடக்கணி பாடல்! – 2

 

ச.நாகராஜன்

 

 

   வீர சோழியம், தண்டியலங்காரம் ஆகிய நூல்களில் சொல்லணியில் முதலாவதாக இடம் பெறும் அணி  மடக்கணி.

 

ஒரே சொல்லே வெவ்வேறு பொருளில் ஒரு பாடலில் வருவது மடக்கணியாகும்.

 

  வில்லிப்புத்தூரார் மகாபாரதத்தில் பல்வேறு இடங்களில் இந்த அணியைச் சிறப்பாக இடம் பெறச் செய்து கவிதா ரஸிகர்களை மனம் மகிழச் செய்கிறார்.

 

மடக்கணி இடம் பெறும் ஒரு பாடல் சபா பருவத்தில் சூது போர்ச் சருக்கத்தில் இடம் பெறுகிறது. பாடல் எண் 64.

அது வருமாறு:-

 

 

மூத்த தாதைதன் னோலையு மிளையவன் மொழியுமொத் தமை நோக்கி,

வார்த்தை வேறுமற்  றொன்றையு முரைத்திலன் மனுநெறி வழுவாதோன்,

சேத்த நாகவெங் கொடியவன் கொடியவன் சிந்தையின் நிலைதோன்றக்,

கோத்த கோவைநன் றாயினுந் தகுவதோ குருகுலத் தனக்கென்றான்.

 

 

பாடலின் பொருள் :- மனு நெறி வழுவாதோன் – மனு தர்மம் சிறிதும் வழுவாத தர்மபுத்திரன்

மூத்த தாதை தன் ஓலையும் இளையவன் மொழியும் ஒத்துமை நோக்கி – பெரிய தந்தையான திருதராஷ்டிரன் அனுப்பிய பத்திரிகையும் சிறிய தந்தையான விதுரன் சொன்ன வார்த்தையும் ஒத்திருப்பதைக் கண்டு

வார்த்தை வேறு மற்று ஒன்றையும் உரைத்திலன் – நியாயத்துக்கு மாறான வேறொரு வார்த்தையையும் சொல்லாதவனாகி,

சேத்த நாக வெம் கொடியவன் – கோபத்தினால் கண் சிவந்த சர்ப்பத்தின் வடிவம் பொறித்த பயங்கரமான கொடியை உடையவனாகிய துரியோதனன்

கொடியவன் சிந்தையின் நிலை  தோன்ற – மிகக்  கொடிய மனத்தின் இயல்பு விளங்கும் வகையில் தனது சிந்தைக்கு ஏற்றபடி

 

கோத்த – தொடர்ச்சியாக ஆலோசித்த

கோவை – ஆலோசனைத் தொடர்

நன்று ஆயினும் – அவனுக்கு நல்லதாக இருப்பினும்

குருகுலம் தனக்குத் தருவதோ என்றான் – குருகுலத்தின் பெருமைக்குத் தகுமோ என்றான்.

வஞ்சனையாக சூதாட வருமாறு அழைக்கின்றான் துரியோதனன். அது துரியோதனனுக்கு நலம் பயக்கும். ஆனால் குடிப்பெருமைக்கு இழுக்கல்லவா ஏற்படுத்தும் என்பது தருமனின் கூற்று.

 

 

இப்பாடலில் நாக வெங்கொடியவன், கொடியவன் என்ற வரியில் கொடியவன் என்ற சொல் இரு பொருள்களில் வருவதால் இது மடக்கணியாகும்.

 

சீற்றமுடைய பாம்பின் கொடியைக் கொண்டவன், உண்மையில் இயல்பாலும் மனத்தாலும் கொடியவன் அல்லவா?

 

Picture posted by Lalgudi Veda

இந்தப் பாடலில் இன்னொரு சிறப்பும் உள்ளது. கருத்துடையடைகொளியணி என்ற சிறப்பான ஒரு அணியும் இந்தப் பாடலில் உள்ளது.

 

இந்தச் செய்யுளில் தருமன் மனு நெறி வழுவாதோன் என குறிப்பிடப் படுகிறான். அதாவது எந்த நிலையிலும் தகுதி இல்லாத சொற்களை சொல்லாது தக்க மொழியையே பேசுபவன் தர்மன். ஆனால் அதற்கு நேர்மாறாக – நாக வெம் கொடியவன் – விஷப் பாம்பை கொடியிலே கொண்டு உள்ளத்திலும் தீக்குணங்களைக் கொண்டவன் துரியோதனன். எப்போதும் நல்லோர்க்குத் தீமை விளைவிப்பவன். தீயதையே சொல்வான்; தீயதையே செய்வான்.

 

ஆக இந்த இரண்டு கருத்துக்களையும் இந்தச் செய்யுள் கொண்டிருப்பதால் இது கருத்துடையடைகொளியணி எனப்படும் அணியைக் கொண்டுள்ளது.

வில்லிப்புத்தூரார் இடத்திற்கு ஏற்றபடி சொற்களையும் அணிகளையும் கையாளும் திறன் கொண்டவர் என்பதற்கு இந்தப் பாடலும் ஒரு சான்று.

***

குறிப்பு : பாடலின் உரை வை.மு. கோபாலகிருஷ்ணமாசாரியர் இயற்றியதைப் பின்பற்றியதாகும்.

தமிழில் அலங்காரம் என்ற கட்டுரையில் 25 வது அணியாக இடம் பெறுவது கருத்துடையடைகொளணி. இந்தக் கட்டுரை எண் 5455. வெளியான தேதி 22-9-2018

***

 

வில்லிபுத்தூராரை பாரதம் பாடச் செய்த ஆட்கொண்டான்! (Post No.5101)

Written by S NAGARAJAN

 

Date: 12 JUNE 2018

 

Time uploaded in London –  6-18 am  (British Summer Time)

 

Post No. 5101

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

வில்லிபுத்தூராரை பாரதம் பாடச் செய்த ஆட்கொண்டான்!

 

.நாகராஜன்

 

மஹாபாரதத்தை அழகுறத் தமிழில் பாடியவர் வில்லிப்புத்தூரார்.

இவரை பாரதம் பாடச் செய்தவர் ஆட்கொண்டான்.

இவர் வக்கபாகையில் (சோழநாடு) வசித்தவர் என்று சொல்லப்பட்டாலும் கூட இவரது மரபு கொங்கு மரபே என்று சொல்ல வேண்டும்.

பாரதத்திலேயே கொங்கர்பிரான் ஆட்கொண்டான் என்று வருகிறது.

ஆகவே இவரது முன்னோர்கள் சோழ மன்னனின் அழைப்பின் பேரில் அங்கு சென்று காணி நிலம் பெற்று சோழனது சேனாதிபதியாக வக்க பாகையில் தங்கி இருந்திருக்க வேண்டும். வில்லிப்புத்தூராரை பாரதம் பாடச் செய்த ஆட்கொண்டான் கொங்கு மண்டலத்தைச் சார்ந்தவரே என்று கொங்கு மண்டலச்  சதகம் தனது 32ஆம் பாடலில் எடுத்துரைக்கிறது.

பாடல் இது தான்:

துன்னு மறைப்பொரு ளெல்லாம் பொதிந்து சுவை முதிர்ந்து

பன்னும் புகழ்பெறைந் தாம்வேத மென்னும் பாரதத்தைத்

தென்னன் மொழியிற் சொலச்செய்து கன்னடர்ச் செற்றதமிழ்

மன்னன் வலியனாட் கொண்டான் முனோர் கொங்குமண்டலமே

  • கொங்கு மண்டலச் சதகம் பாடல் 32

 

பாடலின் பொருள் : வேதப் பொருள்கள் உள்ளமைந்தமையால்

ஐந்தாம் வேதம் என்று போற்றப்படும் பாரதக் கதையைத் தமிழில் வில்லிப்புத்தூராரைக் கொண்டு பாடச் செய்த ஆட்கொண்டானது முன்னோரும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்களே!

 

சோழியர் எங்கு வசித்தாலும் அவரைச் சோழியர்கள் என்றே அழைப்பர்; தொண்டைமண்டலத்தார் எந்த மண்டலத்தில் வசித்தாலும் அவரைத் தொண்டை மண்டலத்தார் என்றே அழைப்பர். அது போல ஆட்கொண்டான் வக்க பாகையில் வசித்தாலும் அவர் கொங்கர் ஆதலால் கொங்கர் எங்கு வசித்தாலும் கொங்கர் என்று சொல்லப்படுதல் போல கொங்கர் என்றே அழைக்கப்படுகிறார்.

ஆட்கொண்டான் என்னும் உபகாரி கொங்கன் என்பதை வில்லிப்புத்தூராரின் மகனான வரந்தருவார் பாரதச் சிறப்புப் பாயிரத்தில் இப்படிக் கூறுகிறார்:-

 

 

எங்குமிவ னிசைபரப்பி வருநாளில் யாமுரைத்த விந்த நாட்டிற்

கொங்கர்குல வரபதியாட் கொண்டானென் றொருவண்மைக் குரிசி றோன்றி

வெங்கலியின் மூழ்காமற் கருநடப்போர் வெள்ளத்து விழாம னான்காஞ்

சங்கமென முச்சங்கத் தண்டமிழ்நூல் கலங்காமற் றலைகண் டானே

 

ஆற்றியவிச் செல்வத்தா லளகையைவேன் றிருங்கவினா லமர ருரை

மாற்றியபொற் றடமதில்சூழ் வக்கபா கையினறத்தின் வடிவம் போலத்

தோற்றியவக் கொங்கர்பிரான் சூழ்தமிழா னாட்கொண்டான் சுற்றத் தோடு

போற்றியவிப் புவிமுழுதுந் தன்றிருப்பேர்  மொழிகொண்டே புரந்தா னம்மா

 

ஆட்கொண்டானைப் பற்றி இரட்டையர் பாடிய பாடல் ஒன்றும் உண்டு:

சாணர்க்கு முன்னிற்கு மாட்கொண்ட நாயகன் தமிழ்க்கொங்கர் கோன்

பாணுற்ற வரிவண்டு சேர்வக்கை நகராதி பக்கத்திலே

யூணுக்கு வாரா திருப்பாவி ருப்பாகி யுயர்வானிலே

வீணுக்கு நின்னாக மெலிகின்ற தெவ்வாறு வேண்டிங்களே.

 

 

ஆக தமிழில் பாரதம் உருவாகக் காரணம் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஆட்கொண்டான் என்னும் உபகாரி என்பது இச்சதகத்தால் விளங்குகிறது.

***

கருணைக்கு அருணகிரி!

Written by London swaminathan

Date: 21 April 2015; Post No: 1817

Uploaded in London at 17-47

உரையாசிரியர்களில் வல்லவரான நச்சினார்க்கினியரை “உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்” என்றும் தொல்காப்பியம் யாத்த தொல்காப்பியனை “ஒல்காப்புகழ் தொல்காப்பியன்” என்றும் சங்கத் தமிழில் மிக அதிகப் பாடல்களை இயற்றிய பிராமணப் புலவன் கபிலனை “புலன் அழுக்கற்ற (ஜிதேந்திரியன்) அந்தணாளன்”, “வாய்மொழிக் (சத்தியவான்) கபிலன்” என்றும் பாராட்டுவர். நம்மாழ்வாரை “வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்” என்றும் அடை மொழி கொடுத்து பாராட்டிப் போற்றுவர். இதில் ஒவ்வொன்றிற்கும் ஒர் காரணம் உண்டு. இதே போல திருப்புகழ் பாடி சந்தக் கவிகளால் பெயர் பெற்ற அருணகிரிநாதருக்கு ஒரு சிறப்புப் பட்டம் உண்டு. “கருணைக்கு அருணகிரி” என்று அவரை பக்தர் உலகமும் தமிழ் உலகமும் போற்றும்.

“கருணைக்கு அருணகிரி” என்று அவரைப் போற்ற பல காரணங்கள் உண்டு. கந்தனின் கருணையால் அவருக்கு மறு ஜன்மம் கிடைத்தது. கந்தனின் கருணை மழையில் நாம் எல்லோரும் நனைய நமக்கு 1300-க்கும் மேலான திருப்புகழ்களைக் கொடுத்தார். இதையெல்லாம் விட தமிழ்ப் புலவர்களை எல்லாம் தமது அகந்தையால் படாதபாடு படுத்திய வில்லிப்புத்தூராரைத் தண்டிக்க வாய்ப்புக் கிடைத்தும் அவர் மீது கருணை காட்டினார்.

அது என்ன கதை?

வில்லிபுத்தூரார் தன்னை மிஞ்சிய தமிழ் அறிவு யாருக்கும் இல்லை என்றார். அப்படி யாராவது தனக்கும் மிஞ்சிய அறிவு படைத்ததாகச் சொன்னால் கவிதைப் போட்டிக்கு வரவேண்டும் என்றும் சவால் விட்டார். அந்தப் போட்டியில் தோற்போரின் காதைக் துறட்டு வைத்து அறுத்தும் விடுவார். பல போலி புலவர்களை நடுநடுங்க வைத்தார். ஒவ்வொரு ஊராகச் சென்று புலவர் என்று பெயர் சொல்லிய எல்லோரையும் வாதுக்கு அழைத்தார்; வம்புக்கும் இழுத்தார்.

அருணகிரி புகழ் அறிந்து அவர் வாழ்ந்த திருவண்ணாமலைக்கும் வந்தார். திருப்புகழையும் குறை சொன்னார். இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டி, அந்தப் பகுதி மன்னன் பிரபுடதேவன் ஒரு போட்டிக்கு ஏற்பாடு செய்தான். அருணகிரியும், வில்லிப் புத்தூராரும் அதற்கு இசைவு தெரிவித்தனர். எப்போதும் நிபந்தனை போடும் வில்லிக்கு வில்லனாக வந்த அருணகிரியும் ஒரு நிபந்தனை விதித்தார். தன் கையிலும் ஒரு துறட்டியைக் கொடுக்க வேண்டும் என்றும் வில்லி தோற்றால் அவர் காது அறுபடும் என்றும் எச்சரித்தார்.

அருணகிரி பாடும் ஒவ்வொரு செய்யுளுக்கும் பொருள் சொல்ல வில்லி ஒப்புக் கொண்டார். முருகன் அருள் பெற்ற அருணகிரி, கந்தர் அந்தாதி என்னும் அற்புதப் பாட்டை எட்டுக்கட்டி ஒவ்வொரு செய்யுளாகச் சொல்லச் சொல்ல போட்டி நீண்டு கொண்டே போனது. ஐம்பத்து நான்கு பாடல்கள் வரை பாடி முடித்த அருணகிரி, ஒரே எழுத்துக்களான கவிதையை எடுத்து வீசினார். இது பொருளற்ற பிதற்றல் என்றும் அப்படிப் பொருள் இருந்தால் அதற்கு அருணகிரியே பொருள் சொல்லட்டும் என்றும் வில்லிப்புத்தூரார் கூறினார்.

அபோது அருணகிரி, ‘குமரா’ என்று பெயர் சொல்லி அழைக்க ஒரு பாலகன் அவர் முன்னே வந்தான். அதாவது முருகனே பையன் போல வந்தான். அவனே அக்கவிதைக்கும் பொருள் சொல்லவே வில்லி தனது தோல்வியை ஒப்புக் கொண்டார். ஆயினும் அவரது காதை அறுக்காமல் விட்டு விட்டு அவரிடம் இருந்த துறட்டியையும் வாங்கிக் கொண்டு நீங்களும் நல்ல கவி இயற்றிப் புகழ் பெறலாமே என்று அறிவுரையும் ஆசியும் வழங்கினார்.

இதற்குப் பின்னரே வில்லிப்புத்தூரார் மஹாபாரதத்தை தமிழ் வடிவில் தந்து பெயர் பெற்றார். இன்று வரை வில்லி பாரதம் அவர்தம் புகழைப் பரப்புகிறது. அகந்தை அழிந்து அறிவுக் கண் திறக்க உதவிய அருணகிரியை உலகம், “கருணைக்கு அருணகிரி” என்று வாழ்த்தியது.

அவர் பாடிய, வில்லியைத் திணறடித்த, பாடல்:

திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே

இதன் பொருள்:

திதத்த ததித்த என்னும் தாள வாக்கியங்களை, தன்னுடைய நடனத்தின் மூலம் நிலைபடுத்துகின்ற, உன்னுடைய தந்தையாகிய (தாதை) பரமசிவனும், மறை கிழவோனாகிய (தாத) பிரம்மனும், புள்ளிகள் உடைய படம் விளங்கும், பாம்பாகிய (தத்தி) ஆதிசேசனின், முதுகாகிய இடத்தையும், இருந்த இடத்திலேயே நிலைபெற்று, அலை வீசுகின்ற, சமுத்திரமாகிய (அத்தி) திருப்பாற்கடலையும் (தன்னுடைய வாசத் தலமாகக் கொண்டு), ஆயர்பாடியில் (ததி) தயிர், மிகவும் இனிப்பாக இருக்கிறதே (தித்தித்ததே) என்று சொல்லிக்கோண்டு, அதை மிகவும் வாங்கி உண்ட (திருமால்), போற்றித் (துதித்து) வணங்குகின்ற, பேரின்ப சொரூபியாகிய, மூலப்பொருளே (ஆதி), தந்தங்களை (தத்தத்து) உடைய, யானையாகிய ஐராவதத்தால் (அத்தி) வளர்க்கப்பட்ட, கிளி (தத்தை) போன்ற தேவயானையின்,தாசனே, பல தீமைகள் (திதே துதை) நிறைந்ததும், ரத்தம் மாமிசம் முதலிய சப்த தாதுக்களால் நிரப்பப்பட்டதும், மரணம் பிறப்பு இவைகளோடு கூடியதும், பல ஆபத்துக்கள் நிறைந்ததும் (ஆகிய) எலும்பை மூடி இருக்கும் தோல்பை (இந்த உடம்பு), அக்னியினால் (தீ), தகிக்கப்படும், அந்த (திதி) அந்திம நாளில், உன்னை இவ்வளவு நாட்களாக துதித்து (துதி தீ) வந்த என்னுடைய புத்தி, உன்னிடம் ஐக்கியமாகி விட (தொத்ததே) வேண்டும்.