WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,651
Date uploaded in London – – 12 FEBRUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கானகத்தில் புலியும் ஸ்வாமி விவேகானந்தரும்!
ச.நாகராஜன்
ஸ்வாமி விவேகானந்தரின் வாழ்க்கையில் அவரது பெருமிதமான, வளமோங்கிய, பக்கங்களை மட்டுமே உலகம் அறிந்து ஆனந்தப் படுகிறது.
அவர் சர்வ மத சபையில் உரையாற்றி உலகையே தன் பக்கம் ஈர்த்து வெற்றி கொண்ட பின் அவரை உலகம் நன்கு புரிந்து கொண்டது; பாராட்டியது.
முழு இந்தியாவும் அப்போது தான் விழித்துக் கொண்டு அவரை வணங்கத் தொடங்கியது.
வாழ்வில் ஏராளமான நாட்களை அவர் உண்ணாமல் மிகுந்த பசியுடன் களித்திருக்கிறார்.
இமயமலையின் உயரத்தில் ஏழ்மையில் வாழும் மக்களிடையே அவர்களே உண்ணுவதற்குப் போதுமான உணவு இல்லாத சமயத்தில் அவர்களை அணுகி உணவு கேட்பதை அவர் தவறாக நினைத்தார்.
இப்படி ஒரு வாழ்வும் எனக்குத் தேவை தானா என்று தன்னைத் தானே அவர் கேட்டுக் கொண்டார்.
பின்னால் ராமகிருஷ்ண மடம் பெரிதாக வளர்ந்த போது அவரைக் கண்டு தரிசித்து ஆசி பெற்றோர் ஏராளம்.
மன்மதநாத் கங்கூலி என்னும் ஸ்வாமிஜியின் சீடர் தன் நினைவலைகளை மிக நன்றாகப் பதிவு செய்துள்ளார்.
அதில் ஒரு பதிவு இது.
ஸ்வாமிஜி கூறியதை அவர் வார்த்தைகளிலேயே காண்போம்:
“பிறகு ஹிமாலயத்தில் ஒவ்வொரு வீடாகச் சென்று உணவுக்குப் பிச்சை கேட்பது எனது வழக்கமானது. மிகக் கடுமையான ஆன்மீக நெறிமுறைகளில் நான் எனது நேரத்தைச் செலவழித்தேன். எனக்குக் கிடைத்த உணவோ மிகவும் மோசமானதாக இருந்தது. பசிக்குப் போதுமானதாகவும் இல்லை.
ஒரு நாள் நான் என்னை பயனற்றவனாகக் கருதினேன். இந்த மலை வாழ் மக்கள் – அவர்களே மிகுந்த ஏழ்மையில் வாழ்பவர்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கும் குடும்பத்திற்குமே போதுமான உணவளிக்க வசதி இல்லாதவர்கள்.
இருந்தபோதிலும் எனக்கும் அதில் சிறிது வைத்திருந்து கொடுத்தார்கள். இப்படிப்பட்ட ஒரு வாழ்வு வாழ்ந்து என்ன பயன்?
நான் உணவுக்காக வெளியில் செல்வதை நிறுத்தி விட்டேன். இரண்டு நாட்கள் சாப்பிடாமலேயே கழிந்தன. எப்போதெல்லாம் தாகம் எடுக்கிறதோ அப்போதெல்லாம் ஒடையிலிருந்து என் கைகளைக் குவித்து அதையே ஒரு கோப்பை போல ஆக்கி, நீரை எடுத்துப் பருகிக் கொண்டிருந்தேன்.
பின்னர் அடர்ந்த காட்டிற்குள் நுழைந்தேன். அங்கு பாறையின் மீது அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தேன்.
என் கண்களைத் திறந்த போது என் எதிரே பெரிய வரிப்புலி ஒன்று என்னைப் பார்த்துக் கொண்டிருந்ததை உணர்ந்தேன். பளபளக்கும் கண்களால் அது என்னையே பார்த்துக் கொண்டிருந்தது.
“அப்பாடா! கடைசி கடைசியாக எனக்கு நிம்மதி கிடைக்கப் போகிறது, இந்த மிருகத்திற்கு இரை கிடைக்கப் போகிறது. இந்த மிருகத்திற்கு இந்த உடல் ஏதோ ஒரு விதத்தில் சேவை செய்தால் சரி தான், அது போதும்!” என்று நினைத்தேன்.
என் கண்களை மூடிக் கொண்டேன். அதன் வரவிற்காகக் காத்திருந்தேன்.
ஆனால் சில விநாடிகள் கழிந்தன; என் மீது அது பாயவில்லை.
ஆகவே என் கண்களைத் திறந்து பார்த்தேன். அது திரும்பிக் கானகத்தின் உள்ளே சென்று கொண்டிருந்தது.
அதற்காக வருத்தப்பட்டேன். ஆனால் பின்னர் புன்முறுவல் பூத்தேன்; ஏனெனில் எனக்குத் தெரியும், “என்னைக் காப்பாற்றியவர் எனது குருவே தான் என்று, அவர் தன் பணி முடியும் வரை என்னைக் காப்பார்”.
மன்மத நாத் கங்கூலியின் நினைவலைகள் வேதாந்த கேசரி இதழில் ஜனவரி மற்றும் ஏப்ரல் 1960 இதழ்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
அன்பர்கள் அனைவரும் அவரது முழுக் கட்டுரைகளைப் படித்தால் ஸ்வாமிஜியின் பெருமையை உணர்ந்து ஆனந்தமடைவது நிச்சயம்!
tags– புலி, ஸ்வாமி, விவேகானந்தர்,