

Post No. 10,081
Date uploaded in London – 11 September 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
‘திக்குகள் எட்டும் சிதறி’ என்னும் பாரதியாரின் பாடல் ரிக் வேதத்தில் ‘மருத்’ MARUTS என்னும் காற்று தேவதைகளின் துதிகள் போல இருக்கின்றன. பாரதியார் காசியில் தங்கிய காலத்தில் வேதத்தில் புலமை பெற்றிருக்க வேண்டும். மருத் என்ற சொல்லில் இருந்து மாருதி ( வாயுதேவன் மகன் அனுமன் மாருதி என்ற சொல் வந்தது)
எடுத்துக் காட்டாக
எனக்கு வேண்டும் வரங்களை
இசைப்பேன் கேளாய் கணபதி!
மனத்திற் சலனமில்லாமல்,
மதியி லிருளே தோன்றாமல்,
நினைக்கும் பொழுது நின்மவுன
நிலைவந் திடநீ செயல்வேண்டும்
கனக்குஞ் செல்வம் நூறுவய
திவையுந் தர நீ கடவாயே.
என்று பாரதியார் பாடுகிறார் . நான்கு வேதங்களிலும் உள்ள காயத்ரீ மந்திரத்தில் எல்லோரும் அனுதினம் வேண்டுவது ‘மனதில் ஒளி உண்டாகுக; அதாவது ஞான ஒளி உண்டாகுக’ என்பதே. அதை இந்தப்பாட்டின் மூன்றாவது வரியில் காண்கிறோம். ‘கனக்கும் செல்வம், நூறு வயது’ என்ற வரிகள் ரிக் வேதத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் வருகிறது. பிராமணர்கள் தினமும் சொல்லும் ‘பஸ்யேம சரதஸ் சதம்’ என்ற யஜுர் வேத மந்திரத்திலும் வருகிறது
பாரதியாரே காயத்ரீ மந்திரத்தை பாஞ்சாலி சபதத்தில் அழகாக மொழிபெயர்த்துள்ளார்
எல்லா இந்துக்களுக்கும் ‘ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் சவிதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீமஹீ’ என்ற காயத்ரி மந்திரம் தெரியும். இதை அவர் அழகிய தமிழில்
“செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்—அவன்
எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக” —
என்று மொழி பெயர்த்தார். சம்ஸ்கிருதம் தெரியாதவர்களும் இந்தத் தமிழ் மந்திரத்தைச் சொன்னால் அறிவு தெளிவு பெறும். நினைத்ததெல்லாம் கைகூடும்.
பாரதியார் பாடல்களில் வேத உபநிஷத் வரிகள் அப்படியே மொழி பெயர்க்கப்பட்டதை முந்தைய கட்டுரைகளில் (கீழே இணைப்புகளைக் காண்க) கொடுத்தேன். இங்கு மருத் பற்றிய வரிகளை மட்டும் ஒப்பு நோக்குவோம்
அவரே ‘தமிழில் பழ மறையைப் பாடுவோம்’ என்றும் ‘வேதம் என்று வாழ்க என்று கொட்டு முரசே’ என்றும் பாடுவதாலும் பழைய மறையை மொழி பெயர்த்ததை சொல்லாமல் சொல்லுகிறார் .
பாரதியாரின் மழை , புயற் காற்று பாடல்களில் ‘மருத்’ துதிகளின் தாக்கத்தைக் காணலாம்:-


திக்குகள் எட்டும் சிதறி-தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
பக்க மலைகள் உடைந்து-வெள்ளம்
பாயுது பாயுது பாயுது-தாம்தரிகிட
தக்கத் ததிங்கிடத்தோம்-அண்டம்
சாயுது சாயுது சாயுது-பேய்கொண்டு
தக்கை யடிக்குது காற்று-தக்கத்
தாம்தரிகிடத்தாம் தரிகிடத்தாம் தரிகிடத்தாம் தரிகிட
வெட்டி யடிக்குது மின்னல் கடல்
வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது
கொட்டி யிடிக்குது மேகம்-கூ
கூவென்று விண்னைக் குடையுது காற்று
சட்டச்சடசட சட்டச்சட டட்டா-என்று
தாளங் கொட்டிக் கனைக்குது வானம்
எட்டுத் திசையும் இடிய –மழை
எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா
அண்டம் குலுங்குது தம்பி-தலை
ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்
மிண்டிக் குதித்திடு கின்றான்-திசை
வெற்புக் குதிக்குது வானத்துத் தேவர்
செண்டு புடைத்திடு கின்றார்-என்ன
தெய்விகக் காட்சியைக் கண்முன்பு கண்டோம்
கண்டோம் கண்டோம் கண்டோம்-இந்தக்
காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்
Xxxx
ரிக் வேத மந்திரங்கள் இதோ:–
ரிஷி கௌதம ராஹுகணன் 1-85
1-85-1
பாறைகளைப் பொடிப்பொடியாக்குகிறான் மருத்
1-85-8
போர் வீரர்களைப் போலும், தீரர்களைப் போலும் போராடுகிறார்கள். எல்லாப் பிராணிகளும் மருத் தேவர்களைக் கண்டு அஞ்சுகின்றனர் .
1-85-10
மருத்துகள் தங்கள் பலத்தால் கிணறுகளை மேலே உயர்த்தினார்கள்; மலையைப் பிளந்தார்கள்;
1-85-11
கனலாகச் சென்ற மேகத்தை இங்கே செலுத்தினார்கள்; நீர் ஊற்றைப் பொழிந்தார்கள்
1-86-10
எங்கும் பரவிய இருளை அகற்றுங்கள்;
1-87-1
பகை அழிப்பவர்கள் ; மிகுந்த பலம் வாய்ந்தவர்கள்; பலவித சப்தம்/ தீம் தரிகிட தாளம் / உண்டாக்குவோர்;
1-87-2
பறவை போல மேகங்கள் எங்கும் செல்வது உங்களால்தான்.மேகத்தோடு மேகம் மோதி மழை கொட்டுகிறது.
1-87-3
கணவன் பிரிந்து சென்ற பின்னர் நடுங்கும் மனைவி போல பூமி நடுங்குகிறது.
1-87-6
மருத்துக்கள் சூரிய கிரணங்களுடன் சேர்ந்து மனிதர்களுக்கு நன்மை செய்ய மழையைக் கொட்டுகிறார்கள்
1-88-1
நீங்கள் முழங்கும் கீதங்கள் ! மின்னல் என்னும் ஈட்டி உடையோர்; பறக்கும் குதிரைகள் ; பறவைகள் போல பறந்து வந்து உணவு கொடுங்கள் / தானியம் விளையட்டும்
1-88-2
தேர் சக்கரத்தால் பூமியை அடிக்கிறார்கள்; தங்கம் போல பளபளக்கும் ஆயுதம்/ மின்னல் ஏந்தி வந்து பகைவர்களை/ வறட்சி கொல்லுங்கள்
1-88-3
உங்கள் உடல் உறுப்புகளில் ராஜ்யத்தை வெல்லும் ஆயுதங்கள் உண்டு
1-88-5
தங்கச் சக்கர தேரும் இரும்பு ஆயுதமும் கொண்டு பகையை வெல்லுகிறீர்கள்
XXX
அகஸ்தியர் பாடிய பாடல்களில் சில மந்திரங்களைக் காண்போம்
1-166-4
உங்கள் குதிரைகள் தங்கள் திறத்தால் உலகங்களை சுற்றுகின்றன, உங்கள் வருகையால் எல்லா உலகங்களும் மலைகளும் கலங்குகின்றன. போரில் ஈட்டியால் குத்தப்படுவது போல மழை பொழிந்து தள்ளுகிறீர்கள் .
1-166-10
உங்களுடைய ஆயுதங்களின் தாரைகள் கூர்மையாக இருக்கின்றன.
1-167-10
மருத்துக்களே ! அருகிலோ தொலைவிலோ உங்களை விட எவனும் பலத்தின் எல்லையை அடையவில்லை; நீங்கள் தீரத்திலும், திண்மையிலும் உயர்ந்து, பகைவர்களைக் கடல் போல வெல்கிறீர்கள்
1-168- 4
பிரகாசிக்கும் கண்கள் உள்ள மருத்துக்கள் (மின்னல், இடி) திறமான மலைகளையும் ஆட்டினார்கள்
1-168-5
மின்னல் ஆயுதம் உடைய மருத்துக்களே !தாடை களின் நடுவில் நாக்கு இருக்கிறது. உங்களை யார் அப்படி நாக்கு போல ஆட் டுகிறான்?
XXXX
வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட-வெறும்….. என்று துவங்கும் ஊழிக் கூத்து பாடலிலும் சில வரிகள் அப்படியே மருத் தேவர்களைப் பற்றியதே. ரிக் வேதத்தில் இந்திரன் பற்றிய பாடல்களிலும் இதைக் காணலாம்
XXXX
பர்ஜன்ய என்ற மழைக் கடவுள் பாடல்களிலும் மழையின் ,
காற்றின் கோர தாண்டவத்தைப் படிக்கலாம்.
XXXX

34. ஊழிக் கூத்து
வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட-வெறும்
வெளியி லிரத்தக் களியொடு பூதம் பாட-பாட்டின்
அடிபடு பொருளின் அடிபடு மொலியிற் கூடக்-களித்
தாடுங் காளீ!சாமுண் டீ!கங் காளீ!
அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.
ஐந்துறு பூதம் சிந்திப் போயொன் றாகப்-பின்னர்
அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப் போக-அங்கே
முந்துறும் ஒளியிற் சிந்தை நழுவும் வேகத்-தோடே
முடியா நடனம் புரிவாய் அடுதீ சொரிவாய்!
அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.
பாழாம் வெளியும் பதறிப் போய்மெய் குலையச்-சலனம்
பயிலும் சக்திக் குலமும் வழிகள் கலைய-அங்கே
ஊழாம் பேய்தான்”ஓஹோ ஹோ”வென் றலைய;-வெறித்
துறுமித் திரிவாய்,செருவெங் கூத்தே புரிவாய்!
அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.
சத்திப் பேய்தான் தலையொடு தலைகள் முட்டிச்-சட்டச்
சடசட சட்டெனுடைபடு தாளங்கொட்டி-அங்கே
எத்திக் கினிலும் நின்விழி யனல் போய் எட்டித்-தானே
எரியுங் கோலங் கண்டே சாகும் காலம்.
அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.
காலத் தொடுநிர் மூலம் படுமூ வுலகும்-அங்கே
கடவுள் மோனத் தொளியே தனியா யிலகும்-சிவன்
கோலங் கண்டுன் கனல்செய் சினமும் விலகும்-கையைக்
கொஞ்சித் தொடுவாய் ஆனந்தக்கூத் திடுவாய்!
அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.
தமிழில் பழ மறையைப் பாடுவோம்: பாரதியார்
https://tamilandvedas.com › தமிழ…
11 Dec 2014 — “செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்—அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக” — (காயத்ரி மந்திரம்)
Tagged with ஆதித்ய – Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › ஆ…
29 May 2016 — ‘செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் — அவன் … (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). Contact : swami_48@yahoo.com.
கண்ணதாசன் பாடல்களில் ரிக்வேத வரிகள் ! (Post No …
https://tamilandvedas.com › கண்…
7 Aug 2021 — tamilandvedas.com, swamiindology.blogspot.com. உலகிலேயே பழமையான சமய நூல் ரிக்வேதம் … ‘செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத்

—SUBHAM—-
tags – பாரதி, ரிக் வேத, வரிகள், ‘திக்குகள் எட்டும் , ‘மருத்’ ,MARUTS ,காற்று, வெடிபடு மண்டத் திடிபல