Written by London Swaminathan
Date: 30 September 2016
Time uploaded in London:10- 39 AM
Post No.3203
Pictures are taken from various sources; thanks.
Contact swami_48@yahoo.com
தொல்காப்பியர்— தமிழ்ப் பெண்கள் கடல் கடந்து வெளிநாடு செல்லக்கூடாது என்கிறார். மனுவோ, பிராமணர்கள் வெளிநாட்டிற்குச் செல்லாக் கூடாதென்கிறார்.
முந்நீர் வழக்கம் மகடூ உ வோடு இல்லை – 980
—-பொருளதிகாரம், அகத்திணையியல், தொல்காப்பியம்
கடல் வழிப்பயணம் செல்லும்போது பெண்டிரை அழைத்துச் செல்வதில்லை– 980
“காலில் பிரிவு, கலத்தில் பிரிவு இரண்டனுள் கலத்திற் பிரிவு தலை மகளுடன் இல்லை.
முந்நீர் = கடல், கலம் = கப்பல்
கப்பல் ஏறிக் கடல் பயணம் செய்ய மகளிர் உரிமை பெறார். எனவே தலைவன், தலைமகளை உடன் கொண்டு கால்களால் நடந்து செல்லும் பிரிவு மட்டுமே மகளிர்க்கு உண்டு.
முந்நீர் வழக்கம் = ஓதலும் தூதும் பொருளும் ஆகிய மூன்று நீர்மையால் செல்லும் செலவு என்பார் நச்சினார்க்கினியர் (ம்துரை பாரத்வாஜ கோத்ரப் பார்ப்பனன் உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியன்)
.
காளிதாசனும் மற்ற சம்ஸ்கிருதப் புலவர்களும் கூட இப்படித்தான் எழுதுகின்றனர். வியாபாரம், போர், அரசியல், தூது ஆகியவற்றுக்காக வெளி நாட்டிற்குச் சென்றவர்கள் திரும்பிவரும் வரை பெண்கள் சிகை அலங்காரம் செய்யக்கூடாதென்று எழுதி வைத்துள்ளனர். பிரிவு குறித்து ஏங்குவது பற்றியும் பருவ காலம் மாறுவதால் கணவன் வரும் அறிகுறிகள் தென்படுவதாகவும் எழுதி வைத்துள்ளனர்.
தொல்காப்பியர் மிகத் தெளிவாகவே சொல்லுகிறார்:–
பெண்கள் கடல் கடந்து போகக்கூடாது என்று.
சீதை போன்றவர்கள் ‘கடத்தப்பட்டதால்’, கடல் கடக்க வேண்டி இருந்தது. அதற்கும் கூட ஒரு வண்ணா ன் சொன்னான் என்பதற்காக தீப்புகுந்து தன் தூய்மையையும் நாணயத்தையும் நிரூபிக்க வேண்டி இருந்தது.
ஆண்கள் வெளி நாடு சென்றாலேயே கலாசாரச் சீரழிவுகள் ஏற்படுவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். பெண்களும் போய், அவர்களும் தன் பண்பாட்டை விட்டு விட்டால், இப்பொழுது அமெரிக்கா, பிரிட்டனில் பிறந்த குழந்தைகள் போல ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்று வாழ்க்கை நடத்துவர். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கோ “மம்மி, டாடி” –யயைத் தவிர அம்மா, அப்பா என்பதும் தெரியாது. அம்மா, அப்பாவின் பாசமும் பற்றும் புரியாது.
பிராமணர் மீது மனு விதித்த தடை மிகப் பொருத்தமானதே. தருமத்தை காக்கவேண்டிய அவனே தர்மத்தைப் பின்பற்ற முடியாத ஓரிடத்தில் சென்றால், வசித்தால் அமாவாசையும் கிடையாது பவுர்ணமியும் கிடையாது. தீபாவளி, பொங்கல் எல்லாம் காலண்டரில் மட்டுமே. அல்லது சங்கங்கள் நடத்தும் கலை நிகழ்ச்சிகளில் மட்டுமே.
ஆக தொல் காப்பியர் சொன்னது, மனு சொன்னது முதலியவற்றை அந்தக்காலத்தில் வைத்து அதன் பின்னணியில் பார்க்க வேண்டும்.
தொல்காப்பியர் பெண்களுக்கு வேண்டிய குணநலன்கள் பற்றிச் சொல்லுவதையும் கூட இன்று பெண்கள் ஏற்பார்களா என்பது ஐயப்பாடே!சந்தேகமே!
இதோ பெண்கள் பற்றி அவர் சொன்னது:–
கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்
மெல்லியற் பொறையும், நிறையும் வல்லிதின்
விருந்து புறந்தருதலும், சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்
முகம் புகல் முகைமையின் கிழவோற்கு உரைத்தல்
அகம் புகல் மரபின் வாயில்கட்கு உரிய – தொல்காப்பியம் 1098
பொருள்:-
உயிரினும் மேலாகக் கற்பு நெறியைப் போற்றலும், தலைவன் மீது மிகுந்த அன்பு காட்டுதலும், சான்றோர் கூறிய நல்லொழுக்கம் பேணலும், மென்மையான தன்மையுடைய சொற்களால் பிறர் கூறும் கடுஞ் சொற்களைப் பொறுத்தலும், ரகசியம் வெளிப்படாத வாறு மனதில் வைத்துக் கொள்ளலும், விருந்தினரை வரவேற்று உணவு படைத்தலும், சுற்றத்தாரைக் காத்தலும் — இவை போன்ற பிற பண்புகளும் தலைவியிடம் அமைந்துள்ள நல்ல குணங்களாம் . அவளுடைய செயல்களை முகம் மகிழ்ந்து கேட்கும் நிலையில் தலைவனிடம் உரைத்தல், மனைக்கண் பழகும் பாணர் , பாங்கர் போன்றோர் கூற்றுகளாக அமையும்.
எத்திணை மருங்கினும் மகடூஉ மடல்மேல்
பொற்புடை நெறிமை இன்மையான – 981
எந்த நிலத்திலும் பெண்கள் மடல் ஏறுதல் இல்லை அது சிறப்புடைய ஒழுக்கம் இல்லாததால்.
(ஆண்கள் மட்டும் பனை மர மடலால் செய்யப்பட்ட குதிரையில் ஏறி ஊரறிய, காதலை வெளிப்படுத் துவது தமிழரின் தனி வழக்கம்)
–subham–