எதையும் நம்பாதே! யாரையும் நம்பாதே!!

 

Marco Polo in Kiribati stamp.

(இந்தக் கட்டுரை ஆங்கிலத்திலும் கிடைக்கும். கட்டுரையை வேறு இடத்தில் பயன்படுத்துவோர், பிளாக் பெயரையோ, கட்டுரையாளர் லண்டன் சாமிநாதன் பெயரையோ வெளியிட வேண்டுகிறோம். தமிழுக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கும் மதிப்பு கொடுங்கள்.)

இல்லை என்றால் உண்டு?

  1. புத்தர் பற்றி மெகஸ்தனீஸ் சொல்லவில்லை. புத்தர் அப்போது பிரபலமாகவில்லையோ? அசோகர் அவரை பெரிய ‘ஆள்’ ஆக்கிவிட்டாரோ? மதுரை மீனாக்ஷி பற்றி எழுதிய மெகஸ்தனீஸ் (கி.மு.350), புத்தரை அறியாதது ஏனோ!! (மெகஸ்தனீஸ் எழுதிய புத்தகம் ‘இண்டிகா’ முழுதும் நமக்குக் கிடைக்கவில்லை)

 

  1. உப்பு பற்றி வேதம் சொல்லவில்லை. உப்பே இல்லாமல் சாப்பிட்டார்களோ? ஆனால் சர்க்கரையைக் கண்டுபிடித்தது அவர்கள் தானே! (எனது கட்டுரை The Sugarcane Mystery : Indus Valley and Ikshvahu Dynasty காண்க)

 

  1. சிவன் என்ற சொல் தொல்காப்பியம், சங்க இலக்கியப் பாடல்களில் இல்லை. தமிழர்களுக்கு ஏழாம் நூற்றாண்டு வரை ஏன் சிவன் என்ற சொல்லே தெரியவில்ல? அவர் தமிழ்க் கடவுளே இல்லையோ?

 

  1. விநாயகர் பற்றி, காளிதாசன், மாணிக்கவாசகர், சங்க இலக்கியத்தில் இல்லை. தமிழர்களுக்கு பிள்ளையார் இறக்குமதி தெய்வமோ? வடக்கேயிருந்து வந்தாரோ? சிறுத்தொண்டர் ,வாதாபிக்குப் போகும் முன் தமிழர்களுக்கு இப்படி ஒரு தெய்வம் இருப்பதே தெரியாதோ? சங்க இலக்கிய கடவுள் வாழ்த்துக்கள் எல்லாம் சிவ மயமாகவும் நாராயணமயமாகவும் இருப்பது ஏன்?

 

  1. மார்க்கோ போலோ சீனாவின் நெடுஞ் சுவர் பற்றி எழுதவில்லை. மார்க்கோ போலோ சினாவின் முக்கிய வழக்கமான தேநீர் அருந்துவது பற்றி ஏன் ஒன்றுமே சொல்லவில்லை? பீங்கான் தட்டுகள், கோப்பைகளுக்கு உலகப் பிரசித்தமான இடம் சீனா. அதை எப்படி அவர் சொல்லாமல் விட்டார்? மார்க்கோபோலோ சீனாவுக்கே போகாமல், ஜெனோவா சிறையில் கைதிகளிடம் கேட்ட கதைகளை எல்லாம் நன்றாக அளந்துவிடாரோ?

 

  1. சிந்து சமவெளியில் பசு மாடு முத்திரைகள் இல்லை, காளை மட்டுமே உள்ளது. ஏன்?—-இந்துக்களுக்கு பசு தெய்வம். வேதங்கள் பசுக்களைப் புகழ்கின்றன. சிந்து சமவெளி மக்களுக்கு பசு புனிதமானதோ?—- அவர்கள் வேத கால நாகரீகமோ? அதனால்தான் பசுக்களை மட்டும் முத்திரையில் குத்தவில்லையோ?

 

  1. ஆதி சங்கரரும் ராமானுஜரும் தமிழர்கள். ஆனால் தமிழில் எழுதாமல் வட மொழியில் மட்டுமே எழுதினர். அவர்களுக்குத் தமிழே தெரியாதோ?

 

  1. மாணிக்கவாசகரின் இயற்பெயர் யாருக்கும் தெரியாது. யாரும் சொல்லவில்லை. அவர் பெயர் இல்லாப் பூச்சியோ?

 

  1. கடவுள் மாமுனிவர் மாணிக்கவாசகர் பற்றி எழுதிய புத்தகத்தில் மாணிக்கவாசகர் பெயரைச் சொல்லவே யில்லை. அவ்வளவு குரு பக்தியோ? அல்லது ஞாபக மறதியா?

Buddha in Pakistan stamp

10. அப்பர், சம்பந்தர், சுந்தரர் பற்றி, மாணிக்கவாசகர் ஒன்றுமே சொல்லவில்லை. ஒருவேளை அவர்களுக்கு முன்னால் வாழ்ந்திருந்தால் மூவரும் அவரைப் பற்றியாவது சொல்லி இருக்கலாமே! ஏன் சொல்லவில்லை?

 

11. தமிழர்கள் சிந்து நதி பற்றி, சங்க இலக்கியத்தில் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் கங்கை நதி பற்றி வியப்பான விஷயங்களைச் சொல்லி இருக்கிறார்கள். தமிழர்களுக்கு சிந்து சமவெளி நாகரீகம் பற்றி ஒன்றுமே தெரியாதோ? சிந்து என்ற ஒரு பகுதியையே அறியாத மக்களோ?

 

 

12. சிறுநீர் கழிப்பது, மலஜலம் கழிப்பது பற்றி ஒரு நாட்டின் இலக்கியம் ஒன்றும் பேசாது. அப்படியானால் அவர்கள் சிறு நீர், மலஜலம் கழிக்கும் வழக்கம் இல்லையோ?

 

13. உலக மகா இலக்கண வித்தகர் பாணினி சேர சோழர் பாண்டியர் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. தெற்கு திசை பற்றியும் ஒன்றும் சொல்லவில்லை. அவருக்கு தெற்கு திசையே தெரியாதோ! அல்லது தமிழ் நாகரீகம் அப்போது இல்லவே இல்லையோ?

 

14. காளிதாசனின் ஒரு நாடகத்தில் விதூஷகனும் (பிராமணன்), கபிலர் என்ற ‘புலன் அழுக்கற்ற அந்தணாளன்’ ஒரு சங்கப் பாடலிலும் மாமிச உணவின் ருசியைப் புகழ்கிறார்கள். இந்த ஐயர்கள் மாமிசம் சாப்பீட்டார்களோ?

 

15. டாக்டர் பட்டத்துக்காக தத்துப் பித்தென்று கண்டதையும் கடையதையும் எழுதும் இவர்களைக் கண்டு சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை. நான் எனது 40 ஆண்டுக்கால ஆராய்ச்சியில் சேகரித்த சில உதாரணங்களை மட்டும் மேலே கொடுத்துள்ளேன். இவை எல்லாம் பிஎச்.டி-வாலாக்களுக்கும் பட்டிமன்ற வாய்ச்சாளர்களுக்கும், திண்ணைப்பேச்சு சோம்பேறிகளுக்கும் மட்டுமே பயன்படும் வாதங்கள்—குதர்க்க வாதங்கள்/

 

16. சங்கத் தமிழ் பாடல்களில் மூன்றில் ஒரு பகுதி ஆண்கள் பரத்தையிடம் செல்வதைப் பற்றிப் பாடுவதை பல அறிஞர்கள் சுட்டிக்காட்டி இது புலவர்கள் மிகைப்படுத்திப் பாடுவது என்று கூறியுள்ளனர். தமிழர்கள் ஒழுக்க சீலர்கள், ஒருவனுக்கு ஒருத்தி என்ற உன்னத கொள்கையுடையோர் என்பதை உலகம் அறியும்.

 

Bull on Indus Seal

17. ஆனால் அதே தமிழர்கள் மற்ற சம்ஸ்கிருத நூல்களில் வரும் ஒரு செய்யுளை எடுத்துக் கொண்டு அபத்தமான கருத்துகளை அள்ளித் தெளிக்கும்போது வேதனையாக இருக்கிறது. மனு தர்ம சாத்திரம் பற்றி விஷம் கக்குவது இவர்களுக்கு வாடிக்கை. மனு தர்ம சாத்திரத்தை எல்லா தமிழ் கல்வெட்டுகளும் மன்னர்களும் ஏன் புகழ்ந்தார்கள்? அதில் உள்ள எல்லா விஷயங்களும் உண்மையில் பின்பற்றப்பட்டதா? அதில் எது இடைச் செருகல்? எது உண்மை? அது இந்தியாவில் எந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு எப்போது எழுதப்பட்டது? என்பதை எல்லாம் நோக்குவதில்லை.

 

18. ஒரு புத்தமத ‘அறிஞர்’, யாகத்தில் கொல்லப்பட்ட பசுக்களின் ரத்தம் ஆறாக ஓடியது பற்றி கதை அளந்து இருக்கிறார். அவருக்கு இதே வரிகள் (ரத்த ஆறு) சங்கத் தமிழ் இலக்கியத்திலும் கலிங்கத்துப் பரணியிலும் இருப்பது தெரியாது!! புலவர்கள் மிகைப்படுத்தி சொல்லும் விஷயங்களை அப்படியே எடுத்துக் கொள்வோரின் ‘அறிவு’ அபாரமானதுதான்!!!

 

19. வெளிநாட்டு அறிஞர்’கள் சில இடங்களில் மட்டும் இடைச் செருகல் என்று கதை அளப்பார்கள். மனு போன்ற நூல்களில் இடைச் செருகல் பற்றி பேச மாட்டார்கள். ஒரு நூலின் காலத்தைக் குறைத்து மதிப்பிட வேண்டும் என்றால் கடைசியாக வந்த பாடலை மட்டும் காட்டுவார்கள். இதெல்லாம் அவர்களுக்கு கைவந்த கலை! இந்திய எண்களையே அராபிய எண்கள் என்று பெயர் சூட்டி நம்மை மட்டம் தட்டியவர்கள்தானே.

 

 

20. இந்தியாவில் உள்ள எல்லா நல்ல விஷயங்களும் பாபிலோனியா, கிரேக்க, எகிப்திய இறக்குமதிகள்!! எல்லா கெட்ட விஷயங்களும் ஆரிய, திராவிட கண்டுபிடிப்புகள்! என்பது அவர்கள் கணிப்பு!

 

21. ஆரியர்கள் மத்திய ஆசியாவில் இருந்தும் திராவிடர்கள் மத்திய தரைக் கடல் பகுதியில் இருந்தும் வந்தவர்கள், ஆரிய சிவனும் திராவிட சிவனும் வேறு வேறு, சிவலிங்கம், யோனி என்பதெல்லாம் மனிதனின் ஜனன உறுப்புகள், சிந்து சமவெளி எழுத்து திராவிட எழுத்து, வேதகால மக்கள் மாடு மேய்த்த நாடோடிகள், பெண்களுக்கு எதிரானவர் மனு, இந்துக்கள் கணவர்கள் இறந்தால் மனைவியை உயிருடன் எரித்துவிடுவார்கள், சிந்து சமவெளி மக்கள்தான் ஜாதியைக் கண்டுபிடித்தவர்கள், பிராமணர்கள் கி.மு 1000-ல் தெற்கே குடியேறியவர்கள்—–இப்படி ஏராளமான ஆதாரமற்ற ,இன்று வரை நிரூபிக்க முடியாத,  பல “கண்டுபிடிப்புகளை” வெளிநாட்டார் புத்தகத்தில் காணலாம்.

Salt pan in Kutch, Gujarat

இதிலிருந்து நாம் அறிய வேண்டிய பாடம்:

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு (குறள்)

எதையும் யாரையும் நம்பாதீர்கள்.ஒருவர் ஒரு விஷயத்தைச் சொல்லாததால் அது இல்லாமல் போகாது. மற்ற விஷயங்களையும் கருத்தில் கொண்டு ஆராய வேண்டும்.

 

எதையும் முழுக்கப் படிக்காமல் கேள்வி கேட்காதே. யாரோ ஒருவர் எழுதிய ‘ஆய்வுக் கட்டுரையைப்’ படித்துவிட்டு நம்பிவிடாதே. மஹா பாரதம், ராமாயணம், புராணங்களை முழுக்கப் படிக்காமல் வாதம் செய்யாதே. சம்ஸ்கிருதமும் தமிழும் சொல்வதை முழுவதும் படித்த பின்னரே அரை வேக்காட்டு நிலையில் இருந்து ஒருவர் முழு வேக்காட்டு நிலைக்குப் போக முடியும். வெளிநாட்டுக் கருத்துக்களை விட, உள்நாட்டு அறிஞர்களுக்கு அதிக மதிப்புக் கொடு. பழைய விஷயங்களில் முன்னோர்கள் சொன்னதை நம்பு என்பதே நாம் கற்க வேண்டிய பாடம்.

 

இது தொடர்பான முந்தைய கட்டுரைகள்

1/ The Sugarcane Mystery: Indus Valley and the Ikshvaku Dynasty

2/ Biggest Brain wash in The World

3/ How Old Is Indian civilisation?

4..தமிழ் இனத்தின் வயது என்ன?

5..தமிழன் காதுல பூ

N.B.Pictures are taken from other sites.