WRITTEN BY S NAGARAJAN
Date: 12 October 2018
Time uploaded in London – 6-59 AM (British Summer Time)
Post No. 5530
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
வேத நிலாவின் பவனி!
ச.நாகராஜன்
வேத நிலாவின் பவனி – தம்பீ
வீறுபெற் றெழுந்ததைக் கவனி – ஓதும்
நாத ஒலியின் சக்தி – நமக்கு
நல்கிடும் பரசிவ முக்தி
நாயென வாழ்ந்தது போதும் – இதோ
ஞாலத் தலைமையென ஓதும் – இன்னும்
பேயென வாழ்க்கை புரிவையோ – அன்றி
பீடுடை அரியென நடப்பையோ
இந்திரன் அக்கினி வளியுடன் – மீண்டும்
அனைவரு மெழுந்தனர் உயிருடன் – ஆஹா
மந்திர வித்தைகள் பாரடா – அதன்
மகிமைகள் ஓர்ந்து தேரடா
பட்ட மரம் தளிர்க் குதடா – பருந்துமே
பாம்பை அணைக் குதடா- ஆஹா!
சுட்டவை உயிரோ டாடுதடா – இங்கு
சுடர்ப்பொறி சுழித்துப் பாடுதடா
சொல்லவும் குளிருது இதயம் -இங்கு
சுதந்திர ஞானம் உதயம் – தம்பீ
மெல்லெனத் தென்றல் வீசுது – எனது
மேனியும் சிலிர்த்து ஆடுது
பாரத நாடிது உயர்ந்தது – அந்தப்
பார்த்தனின் வீரம் மீண்டது – சொல்லினி
பாரதி ஆரிய வாணி – அவளே
பாரினை ஆளும் ராணி!
***
களி, துயர் ஒன்றெனக் கருதுவோம்!
ச.நாகராஜன்
சிலமலர் வாடி உதிரும்
சிலமலர் தெய்வம் சேரும்
நிலவுல கிதனில் நேர்ந்த
நிலையெலாம் எண்ணி மாய்ந்தால்
கலங்கி நா மழிவோ மன்றோ!
கவலையை விரட்டி ஒழித்தே
உலகியல் களிதுயர் இரண்டும்
ஒன்றெனக் கருதி வாழ்வோம்!
***
வேற்றுமையில் ஒற்றுமை
ச.நாகராஜன்
வேற்றுமையில் ஒற்றுமை
விளங்குகின்ற நாடு
நேற்றுமின்றும் நாளையும்
நிலைத்திருக்கும் நாடு . . பாரத நாடு
ஹிந்து முஸ்லீம் சீக்கியர்
புத்தர் ஜைனர் கிறிஸ்தவர்
எந்த மதத்தோர் ஆயிலென்?
இணைந்திருக்கும் நாடு … பாரத நாடு
தமிழ் தெலுங்கு வங்கம்
சிந்தி மராட்டி ஹிந்தி
அமிழ் தினைப் போல் மொழிகள்
அனைத்தும் இங்கே ஒன்றாம் .. பாரத நாடு
உடுத்திடும் உடைகள் வேறு
உண்டிடும் உணவுகள் நூறு
அடுத்திடும் சடங்குகள் பலவாம்
ஆயினும் உணர்வோ ஒன்றாம் … பாரத நாடு
இதுவே பூமியில் சொர்க்கம்
இதுவே அமைதியின் நிலையம்
இதுபோல் ஏதொரு நாடு
இணையிலா இன்ப வீடு … பாரத நாடு
***