புறநானூற்று முதல் பாட லில் அதிசயச் செய்திகள்! (Post No.4148)

Written by London Swaminathan

 

Date: 11 August 2017

 

Time uploaded in London- 7-25 am

 

Post No. 4148

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே-

 

புறநானூற்றின் முதல் பாட்டு கடவுள் வாழ்த்து. அதாவது தமிழர்களின் முதல் பாட்டே திராவிடப் பேய்களுக்கு செமை அடி கொடுக்கும் பாடல். பேய்கள் யார்? கடவுள் இல்லை என்று சொல்வோர் பேய்மகன்களாம். நான் சொல்லவில்லை; வள்ளுவர் சொல்கிறார்

 

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து

அலகையா வைக்கப்படும் — குறள் 850

 

“உயர்ந்தோர் பலரும் உண்டென்று சொல்லும் பொருளைத், தனது புல்லறிவால் இல்லை என்று மறுப்பவன் இப்பூமியில் காணப்படும்  பேய் என்றே கருதப்படுவான்”.

கடவுள் வாழ்த்து பற்றித் தொல்காப்பியத்திலும், திருக்குறளிலும் உள்ளது. ஆகவே கடவுளை நம்பாதவன் தமிழன் அல்ல; பேய்கள்!

கடவுளை நம்பாதவன் தமிழ் பற்றிப் பேசினால் தமிழ்த் தாய் பொறுத்துக் கொள்ளமாட்டாள்!

 

இன்னும் ஒரு அதிசயம். முதல் பாட்டிலேயே அந்தணர், வேதம் எல்லாம் புகழப்படுகிறது. இதுவும் திராவிடப் பண்பாடு தனிப்பட்டது என்று சொல்லுவோருக்கு செமை அடி கொடுக்கிறது.

இதைவிட அதிசயம் பாடலை எழுதியவர் பெயர் மஹாதேவன். சிவனுடைய பெயர். ஆகையால் இவர் பாடிய கடவுள் வாழ்த்துப் பாடல்கள் எல்லாம் சிவன் பற்றியது. புற நானூற்றுக் காலத்திலேயே, பல புலவர்கள் தங்கள் பெயர்களைத் தமிழ் படுத்தியுள்ளனர். காமாட்சி என்பதை காமக் கண்ணி என்றும் மஹாதேவன் என்பதை பெருந்தேவன் என்றும் கண்ணதாசன் என்பதை கண்ணந்தாயன் என்றும் விஷ்ணுதாசன் என்பதை  விண்ணந்தாயன் என்றும் தமிழ்படுத்தி இருக்கின்றனர்

இன்னும் ஒரு சுவையான செய்தி மக்களை    ஆரியர், திராவிடர் என்று வெள்ளைக்கரப் பாதிரியார்கள் பிரித்தது பயங்கரப் புளுகு என்று காட்டுகிறது. 2000 ஆண்டுகளாக மக்கள் முதலிய ஜீவன்களை 18 கணங்களாகப் பிரிப்பது இந்து மத நூல்களில் காணப்படுகிறது. அப்படியே மிஸ்டர் மஹாதேவனும் செப்பியுள்ளார்.

 

முதல் பாட்டிலேயே கங்கை, வேதம், பிராமணர், சம்ஸ்கிருதம்!

பிராமணர் பாடும் வேதம் பற்றிச் சொன்னதோடு கங்கை நதி பற்றியும் முதல் பாட்டிலேயே வந்து விடுகிறது. சிவனிடம் உள்ள வற்றாத நீரூற்று என்பதை உரைகாரர்கள் கங்கை என்றே பகர்வர்.

இதைவிடச் சுவையான செய்தி 18 கணங்கள் பற்றிய செய்தி; யார் அந்த 18 கணங்கள்?

தேவார, திவ்யப் பிரபந்த காலம் வரை, கம்ப ராமாயண காலம் வரை மக்களையும் அவருக்கு மேலானவர்களையும் 18 பிரிவுகளாகப் பிரித்தனர்:-தேவர், அசுரர், முனிவர், கின்னரர், கிம்புருடர், கருடர், இயக்கர், இராக்கதர், கந்தருவர், சித்தர், சாரணர், வித்தியாதரர், நாகர், பூதம், வேதாளம், தாரா கணம் (நட்சத்திரவாசிகள்) , வானுலக வாசிகள், போகபூமியர்.

 

நாகர், கருடர் என்று சொன்னவுடன் பாம்பு, கருடன் என்னும் பறவை என்று எண்ணி விடாதீர்கள். அந்தக் காலத்தில் ஒவ்வொரு சின்னத்தை வைத்துக் கொண்டவர்கள் தங்களை கரடி (ஜாம்பவான்) கழுகு (ஜடாயு), குரங்கு (வானர) என்று அழைத்துக் கொண்டனர். இப்பொழுதும் உலகம் முழுதும் பழங்குடி மக்களிடையே இவ்வழக்கம் உள்ளது. வேத காலத்தில் துவங்கிய வழக்கம் இது. இது பற்றி முன்னரே எனது ஆராய்ச்சிக் கட்டுரையில் வேத கால எடுத்துக் காட்டுகளைத் தந்துள்ளேன்.

இன்னும் ஒரு சுவையான விஷயம் 18 கணம் பற்றிய பழங்காலப் பாடலாகும்; இது அடியார்க்கு நல்லார் தரும் பாடல்:-

 

கின்னரர் கிம்புருடர் விச்சாதரர் கருடர்

பொன்னமர் பூதர் புகழியக்கர் – மன்னும் உரகர் சுரர் சாரணர்

முனிவர் மேலாம், பரகதியோர் சித்தர் பலர்; கந்தருவர்

தாரகைகள் காணப் பிசாசகணம் ஏந்து புகழ் மேய விராக்கதரோ

டாய்ந்ததிறர் போகா வியல்புடைய போகபுவியுருடனே ஆகாசவாசிகளாவர்

 

வெளி உலகவாசிகள் பற்றி புறநானூறு

 

புறநானூற்றில் பைலட் இல்லாத ஏரோப் பிளேன் (Pilotless Plane/ drone வலவன் ஏவா வான ஊர்தி- பாடல் 27) முதலிய பல அறிவியல் கூற்றுகள் இருப்பது பற்றி ஏற்கனவே விரிவாக எழுதிவிட்டேன். முதல் பாட்டில் வெளி உலகத்தில் அறிவுசார்ந்த உயிரினங்கள் உண்டு என்பதை உறுதிபடக்  கூறுகிறார் மிஸ்டர் மஹாதேவன். இவர் அந்தக் காலத்திலேயே மஹாபாரதத்தைத் தமிழில் பாடியதால் பாரதம் பாடிய பெருந்தேவானார் என்று அழைக்கப்படுகிறார். இவர் வானுலகவாசிகள் பற்றிச் சொல்லும் செய்தி சுவைமிக்கது; 18 கணங்களில் ஆகாசவாசிகள், நட்சத்திரங்கள் பற்றி வருகிறது. அர்ஜுனனை மாதரி என்பவன் வெளி உலகத்துக்கு அழைத்துச் சென்றபோது விண்வெளி ஓடத்திலிருந்து ஒளிமிகுந்த பொருள்களைக் கண்டு ஆச்சர்யத்தோடு வினவுகிறான்.

இவைகளைத்தான் பூமியில் உள்ளோர் நட்சத்திரங்கள் என்று சொல்லுவர் என்று மாதரி விளக்குகிறான். இது மஹாபாரதம் வனபர்வத்தில் உள்ள விஷயம்.

 

எகிப்தியர்களும் மன்னர்கள் இறந்தவுடன் நட்சத்திரத்தோடு கலந்துவிடுவதாக நம்பினர். நாமும் துருவன் அகஸ்தியர் ஏழு ரிஷிகள், அருந்ததி ஆகியோரை நட்சத்திரங்களாக வணங்குகிறோம். இந்துக்களின் வெளி உலக வாசிகள் பற்றிய நம்பிக்கைகள் குறித்து நான் எழுதிய கட்டுரைகளில் இதை விரிவாக விளக்கியுள்ளேன். ஆக புற நானூற்றின் முதல்பாட்டிலேயே கச்சேரி களை கட்டத் துவங்குகிறது.

ஆதாம் (Adam) என்னும் ஆணின் இடது விலா எலும்பை ஒடித்துப் பெண்களைக் (Eve) கடவுள் உருவாக்கினான் என்ற பைபிள் கதை, சிவனின் இடது பாகத்தில் இருக்கும் உமை பற்றிய அர்த்த நாரீஸ்வரர் கதையிலிருந்து வந்தது என்பதையும் “பைபிளும் சம்ஸ்கிருதமும்” என்ற எனது ஆராய்ச்சிக் கட்டுரையில் விளக்கியுள்ளேன்

இதோ பாடலும் அதன் பொருளும்:

 

கண்ணி கார் நறுங் கொன்றை; காமர்

வண்ண மார்பின் தாரும் கொன்றை;

ஊர்தி வால் வெள்ளேறே; சிறந்த

சீர்கெழு கொடியும் அவ் ஏறு என்ப;

கறை மிடறு அணியலும் அணிந்தன்று; அக் கறை மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே;

பெண் உரு ஒரு திறன் ஆகின்று; அவ் உருத்

தன்னுள் அடக்கிக் கரக்கினும் சுரக்கும்;

பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப் பிறை

பதினென்கணனும் ஏத்தவும் படுமே —

எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய

நீர் அறவு அறியாக் கரகத்து,

தாழ்சடைப் பொலிந்த, அருந்தவத்தோற்கே

 

— முதல் பாடல், பாரதம் பாடிய பெருந்தேவனார்

 

வண்ணம், தவம், கணம் ஏமம் முதலிய பல சம்ஸ்கிருதச் சொற்கள் உள்ளன. கொடி வாஹனம் ஆகிய விஷயங்களும் சம்ஸ்கிருத நூல்களில் காணப்படும் கருத்துகளே.

 

பாடலின் பொருள்:-

சிவபெருமான் எல்லா உயிர்களுக்கும் காவலாய் உள்ளவன்; நீர் வற்றப் பெறாத கரகத்தை உடையவன்; தாழ்ந்த சடையுடையவன்; சிறந்த தவத்தோன். அவனது தலையில் அணியப் பெறுவதும் (கண்ணி) மார்பில் அணியப் படுவதும் (தார்=மாலை) கார்காலத்தில் பூக்கும் கொன்றைப் பூ. அவன் ஏறி வருவது வெள்ளை நிறக் காளை; அவனது கொடியில் உள்ளதும் அஃதே. அவனது கழுத்து விஷம் உண்டதால் கறுத்தது; அது களங்கமாகத் தோன்றினும் தேவர்களை உயிர்பிழைக்க வைத்ததால், வேதத்தைப் பயிலும் அந்தணர்களால் போற்றப்படுகிறது. அவனது உடலின் ஒரு பகுதி பெண் (அர்த்தநாரீஸ்வரர்);  அது அவனுள்ளே ஒடுங்கியும் இருக்கும்; பிறைச் சந்திரன் நெற்றிக்கு அழகூட்டும் அதை 18 கணத்தவரும் புகழ்வர்.

 

18 கணங்களும் சிவனை வணங்குவதாகக் கூறுவதால் அசுரர்களும், இராக்கதரும் இந்துக்களே—- அவர்களும் சிவனை வேண்டி வரம் பெற்றவர்களே என்பது வேத காலம் முதற்கொண்டு இருந்து வரும் கோட்பாடு. ஆனால் பகச் சொல்லி கேளிர் பிரிக்கும் வெள்ளைத் தோலினர்,  அவர்களை திராவிடர்கள் என்றும் பழங்குடி மக்கள் என்றும் முத்திரை குத்தியது ஜகஜ்ஜாலப் புரட்டு, பொய், பித்தலாட்டம் என்பதை அழகாகக் கூறுகிறார் மிஸ்டர் மஹாதேவன்

 

புறநானூற்றுக்கு நான் புது உரை எழுதி வருகிறேன்; மேலும் வரும்!

சில சொற்களுக்குப் பொருள்:

நீரறவறியாக் கரகம் = கங்கை; கண்ணி = தலையில் அணியும் மாலை; தார் = மார்பில் சூடும் மாலை, காமர் = அழகு

வாழ்க பாரதம் பாடிய பெருந்தேவனார்; வளர்க தமிழ்!

 

—–subam—-

 

 

 

இந்துக்களின் 18 பிரிவுகள் : பதினெண் கணங்கள்

Samudra manthan
சமுத்ர மந்தனம், பாங்காக், தாய்லாந்து

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1399; தேதி 9 நவம்பர், 2014.

வெளிநாட்டுக்காரர்கள் தங்கள் ஆட்சியை நிலைநாட்டவும் மதத்தைப் பரப்பவும் இந்தியாவுக்குள் நுழைந்தனர் —– பைபிளிலும் குரானிலும் செய்ய பயப்படும் ஆராய்ச்சிகளை, துணிந்து இந்துமத நூல்களில் மட்டும் செய்தனர் —– “இளிச்சவாயனைக் கண்டால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்” என்ற பழமொழிக்கு இணங்க இந்துக்கள் என்னும் இளிச்சவாயன்களைக் கண்டனர். ரிக்வேதம் பற்றியும், சிவலிங்கம் பற்றியும் கைக்கு வந்த படியும் வாய்க்கு வந்தபடியும் எழுதித் தள்ளினர். “ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி: என்ற பழமொழியும், இந்துக்கள் விஷயத்தில் உண்மை ஆயிற்று—– அவர்கள் குனியக் குனியக் குட்டு வாங்கினார்கள். “இந்தியர்கள் எல்லாம் ஓரினம் அல்ல; அவர்கள் ஆரியர்கள், திராவிடர்கள், கிராடர்கள், முண்டாக்கள் என்னும் நான்கு பிரிவினர்” — என்று சொல்லி வெள்ளைக் காரர்கள், கதைத்தனர்; நகைத்தனர்.

பட்டத்துக்காகவும் பதவிக்காகவும் நம்மூர் அறிஞர்கள் “ஆமாம்சாமி” போட்டனர். இன்னும் சிலர், பிராமணர்களின் மேலாதிக்கததையும் அடாவடித்தனத்தையும் பொறுக்கமாட்டாமல் வெள்ளைக்கரன் சொன்னது உண்மையே என்று எண்ணி கட்சி துவக்கினர். இப்போது தூசிப் புயல் அடங்கி புதிய சிந்தனை மலர்ந்து வருகிறது.

“அட, வெள்ளைக்காரன் சொன்னது இருக்கட்டும். வெள்ளைகாரன் காட்டுமிராண்டியாகத் திரிந்த நாட்களுக்கு முன்னரே நம்மூர் தமிழ் ,வடமொழி இலக்கியங்கள், நாகரீகத்துடன் எழுதப்பட்டு விட்டனவே, அவை என்ன சொல்கின்றன?” என்று பார்ப்போம் என்று பார்க்கத் துவங்கிவிட்டனர்.

அரக்கர்கள், அசுரர்கள், இயக்கர்கள், தைத்யர், தானவர் அனைவரும் வானவர் புதல்வர். எல்லோரும் ரிஷி முனிவர்கள் வழி வந்தவர்கள் என்று நம் இலக்கியங்கள் பகர்வதைக் கண்டு கண் திறந்தனர்— விழிப்புற்றனர்.

பகச் சொல்லி கேளிர் பிரிக்கும் பாங்குடைய வெளி நாட்டுக்கார அறிஞர்கள் சொன்னதெல்லாம் பொய் என்று நகச் சொல்லத் துவங்கிவிட்டனர்.
devasura

ஆரியனுக்கு கூரிய, வீரிய, நேரிய, பாரிய, சீரிய மூக்கு, திராவிடனுக்கு போண்டா மூக்கு என்று வெள்ளைக்காரன் எழுதியதெல்லாம் இப்பொழுது குப்பைத் தொட்டியில் விழுந்து வருகின்றன. விழித் தெழுந்த தமிழன் கேட்கிறான்:–

விஷ்ணு என்பவன் கறுப்பன்
வியாசன் என்பவன் கறுப்பன்
இராமன் என்பவன் கறுப்பன்
கிருஷ்ணன் என்பவன் கறுப்பன்
அகத்தியன் என்பவன் கறுப்பன்
தீர்க்கதமஸ் என்பவன் கறுப்பன்
காளி என்பவள் கறுப்பாயீ
திரவுபதி என்பவள் கறுப்பாயீ
எல்லாம் ஒரே கறுப்பு மயம்!!

எங்கள் ஊர் திராவிடக் கழக சட்டைகளில் கூட இவ்வளவு கறுப்பு கண்டதில்லை. இந்துக்கள் என்றாலே கறுப்பண சாமி மதம் என்று சொல்லிவிடலாம் போல இருக்கிறதே என்று திருப்பித் தாக்கத் துவங்கி விட்டனர். போண்டா மூக்கு அகத்தியனுடன் படுக்க வரமட்டேன் என்று லோபாமுத்திரை போட்ட கண்டிஷன் ( நிபந்தனை ) எல்லோருக்கும் தெரியும். மஹா அசிங்கமான உடலுடைய கறுப்பு வியாசனைக் கண்ட பெண்களுக்கு பிறந்த அங்கஹீன திருதராஷ்ட்ரன், பாண்டு கதையும் நம்க்குத் தெரியும். அகத்தியனும், வியாசனும் அவ்வளவு கறுப்பு, அவ்வளவு அவலட்சணம். ஆனால் நாம் வணங்கும் கடவுளர் – மாமுனிவர்கள் அவர்களே!

18 குடி மக்களை துவாரகையில் இருந்து அழைத்து வந்து தமிழுக்கு இலக்கணம் செய்தவன் அகத்தியன் ((தொல்காப்பியம், புறம் 201 நச்சி. உரை , புறம். கடவுள் வாழ்த்து காண்க)). “ தமிழ் எனும் அளப்பரும் சலதி தந்தவன்” – என்று கம்பனால் புகழப்பட்டான். தென் கிழக்காசிய நாடுகள் அனைத்துக்கும் தமிழனைக் கடல் கடந்து அழைத்துச் சென்றவன் அகத்தியன். வியாசரோ உலக மகா சாதனை செய்தார். கங்கு கரை காண முடியாத வேதங்களைப் பகுத்தார். பல லட்சம் பாக்களைக் கொண்ட புராணங்களைத் தொகுத்தார். உலகிலேயே மிக நீண்ட மதப் புத்தகமான மஹாபரதத்தை எழுதிச் சலித்தார்; ஒரு சவாலும் விட்டார். இதில் இல்லாத பொருள் உலகில் இல்லை என்றார். இன்று வரை அது முற்றிலும் உண்மை.

churning3

இந்து மஹா ஜனங்களோவெனில் விழித்தெழுந்து நேற்று கூட அமெரிக்க பெண்மணி வெண்டி டோனேகர் எழுதிய அவதூறு புத்தகததை பெங்குவின் நிறுவனத்தினரை வாபஸ் வாங்க வைத்துவீட்டனர். இந்துக்கள் விழித்தெழுந்ததைக் கண்ட பெங்குவின் புத்தக நிறுவனம் இப்பொழுது நடு நடுங்குகிறது. இவர்களும் மாற்று மதத்தினர் போல பொங்கி எழுந்து நமது உடைமைகளைத் தீக்கிரையாக்கிவிடுவர் என்று அஞ்சி நடுங்குகின்றனர்.

மஹாமாயா என்பவள் மகமாயீ
காத்யாயனி என்பவள் காத்தாயீ
மூகாம்பிகை என்பவள் மூக்காயீ
ராகா தேவி என்பவள் ராக்காயீ

அடப் பாவி மகனே!! எங்களிடம் பொய் சொல்லி இவை எல்லாம் திராவிட தெய்வம்,தமிழர்களின் கிராமீய தெய்வங்கள், வெள்ளைத்தோல் ஆரியன் வணங்குவதெலாம் வேறு தெய்வம் என்று சொன்னாயே என்று “அது”களைக் கேள்வி கேட்கத் துவங்கி விட்டனர் இந்துக்கள்.

வேத நூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்
பாதமும் பொறுப்பளோ பாரத தேவி!!

மாட்சி தீர் மிலேச்சர் மனப்படி ஆளும்
ஆட்சியில் அடங்குவோன் ஆரியன் அல்லன்

என்ற பாரதி வாக்குப்படி இந்துக்களும் சீறி எழத் துவங்கிவிட்டனர்.

வெள்ளைத் தோல் வெளி நாட்டினன் வந்து ஆரிய—திராவிட விஷ விதை தூவுவதற்கு முன், புற நானூற்றில் (கடவுள் வாழ்த்து மற்றும் புறம் 201), இன்ன பிற சங்க இலக்கிய நூல்கள் ஆகியவற்றிலும் ராமாயண மஹா பாரத நூல்களிலும் என்னதான் சொல்லி இருக்கிறது என்று பார்த்தால் அங்கு ஆரிய திராவிட என்னும் சொற்கள் இனத் துவேஷ பொருளில் எங்கேயுமே காணோம்.
பாரதி என்னும் தூய தமிழ்ப் புலவன் – சொற்தேரின் சாரதி —தனது பாடல்களில் நூற்றுக் கணக்கான இடங்களில் “ஆரிய” என்ற சொல்லை எந்த நற்பொருளில் பயன் படுத்தினானோ அதே பொருளில்தான் புற நானூற்றுப் பதிற்றுபத்துப் புலவர்களும் பயன்படுத்தினர் எனக் கண்டு மகிழ்ந்தனர் தமிழர்கள்.
நம்முடைய இதிஹாச, புராண செந்தமிழ் பைந்தமிழ் இலக்கியங்கள் எல்லாம் செப்புவது யாதெனின், லோகவாசிகள் 18 கணத்தினர்.

ஆ.சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி (தமிழ் கலைக் களஞ்சியம்) தரும் பட்டியல்:

அமரர்
சித்தர்
அசுரர்
தைத்தியர்
கருடர்
கின்னரர்
நிருதர்
கிம்புருடர்
கந்தர்வர்
இயக்கர் (யக்ஷர்)
விஞ்ஞையர் (வித்யாதரர்)
பூதர்
பைசாசர்
அந்தரர்
முனிவர்
உரகர்
ஆகாயவாசியர்
போகபூமியர் — (பிங்கலம்)

இந்த பிங்கலந்தை நிகண்டு கூறும் செய்தி பல பொருள் உடைத்து. சிலர் பூலோக வாசிகள்; சிலர் மேல் லோக வாசிகள். சிலர் காற்றில் சஞ்சரிப்போர். அவர்களை திரிகூட ராசப்ப கவிராயர், திருவண்ணாமலை சேஷாத்ரி சுவாமிகள் போன்றோர் வானில் கண்டு அழகுபட தெள்ளு தமிழில் அள்ளித் தெளித்திருக்கின்றனர்.

Assurbanipal_op_jacht
அஸீரிய மன்னன் அசுர பானிபால்

வானரங்கள் கனி கொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழி எறிந்து வானவரை அழைப்பர்
கமன சித்தர் வந்து வந்து காய சித்தி விளைப்பார்
தேன் அருவி திரை எழும்பி வானின் வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக் காலும் தேர்க் காலும் வழுகும்
கூனல் இளம் பிறை முடித்த வேணி அலங்காரர்
குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே

சித்தர்கள் ஆகாய மார்க்கமாக வந்து அருள் புரிவர். இதுபோல பல விஷயங்கள் 18 கணங்களில் உள.
18 கணங்களையும் பொதுவான குழுக்களாகவும் பிரிப்பர்:
1.அமரர், சித்தர், கிம்புருடர், கந்தர்வர், விஞ்ஞையர் (வித்யாதரர்), ஆகாயவாசியர், போகபூமியர் , முனிவர், கின்னரர்
2.இயக்கர் (யக்ஷர்), நாகர்( உரகர்), கருடர்
3.அசுரர், தைத்தியர், பூதர், பசாசர், நிருதர் (ராக்ஷசர்)
இந்தப் பட்டியல் சில மாறுதல்களுடன் ஏனைய நூல்களில் இடம்பெறும்.

எனது முந்தைய கட்டுரைகளில் மேல் விவரம் காண்க.
எனது முந்தைய கட்டுரைகள்:
அரக்கர்கள்,அசுரர்கள் யார்? (நவம்பர் 7, 2014)
அசுரர்கள், அரக்கர்கள் அகராதி (அக்டோபர் 23, 2014)
திராவிடர்கள் யார்?
அகத்தியரை நியூசிலாந்து மக்கள் வணங்குவது ஏன்?

இந்தியாவில் இருந்து அசீரீயா, பாரசீகம் (ஈரான்) முதலிய நாடுகளுக்குச் சென்ற வேத கால இந்துக்களில் ஒரு பிரிவினர் தங்களை அசுரர் என்று அழைத்துக் கொண்டனர். ரிக்வேதத்தில் இந்திரன், அக்னி, வருணன் என்போர் அசுரன் என்று போற்றப்படுகின்றனர். பிற்காலத்தில் பாரசீகம் சென்ற கோஷ்டியால் இப்பெயர் பொலிவிழந்தது. அவர்கள் வருணன் போன்ற வேத கால தெய்வங்களை அசுரன் என்று போற்றினர். சௌராஸ்ட்ரத்தில் (குஜராத்) இருந்து சென்ற சௌரஷ்ட்ரர் (ஜொராஷ்ட்ரர்) என்ற பெயரில் ஒரு மதமும் துவங்கினர். அஸீரிய மன்னர்கள் அசுர என்ற பெயரை தங்கள் பட்டங்களில் சேர்த்துக் கொண்டனர்.

–சுபம்–