
Written by London Swaminathan
Post No.1019 ; Date 4th May 2014.
“ A woman should study even before reaching adolescence, and then, once married should continue her studies with her husband.” ( Sutra 2, Chapter 3, Kamasutra of Vatsyayana)
சிலப்பதிகாரத்திலும், கம்பன் பாடல்களிலும், லலிதா சஹஸ்ரநாமத்திலும், வாத்ஸ்யாயனரின் காமசூத்திரத்திலும் அறுபத்து நான்கு கலைகள் பற்றிப் படிக்கும்போது உடம்பில் புல்லரிக்கிறது! ‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு?’ என்று உலகமே எண்ணியிருந்த காலத்தில் 64 கலைகளைப் பட்டியலிட்டு ஒவ்வொரு பெண்ணும் அதைப் பயிலவேண்டும் என்று வடமொழியில் எழுதிய பெருமை வாத்ஸ்யாயனரையே சாரும்! பிற்காலத்தில் இது அரசர்கள், இளவரசர்கள், இளவரசிகள் ஆகியோர் அனைவருக்கும் பாட திட்டமானதை இலக்கியங்கள் வாயிலாக அறிகிறோம். அன்று வாத்ஸ்யாயனர் எழுதியதை இந்தியர்கள் பின்பற்றி இருந்தால் இன்று உலகின் தலைசிறந்த பொருளாதார நாடாக இந்தியா ஓங்கி வளர்ந்திருக்கும்.
காம சூத்திர நூலில் வாத்ஸ்யாயனர் எழுதியது, வெறும் காகித திட்டமா? அல்லது செயல்முறையில் பின்பற்றப்பட்டதா என்று ஒரு கேள்வி எழக்கூடும். ரிக் வேதத்தில் உள்ள இருபதுக்கும் மேலான பெண் கவிஞர்களையும் அதற்கு 1500 ஆண்டுகளுக்குப் பின்னர் சங்க இலக்கியத்தில் வந்த இருபதுக்கும் மேலான பெண் கவிஞர்களையும் பார்க்கையில் இது காகித திட்டம் அல்ல. உண்மையில் அறிவாளிகளை உருவாக்கிய திட்டம் என்றே உறுதியாகக் கூறலாம்.
![64ArtsinIndianCulture_thumb[13]](https://tamilandvedas.files.wordpress.com/2014/05/64artsinindianculture_thumb13.jpg?w=600&h=577)
சங்க கால இலக்கியத்தை ஒட்டி எழுந்த பிராக்ருத மொழி நூலான காதா சப்த சதியில் 15–க்கும் மேலான பெண்கள் காதல் கவிதைகளைப் புனைந்திருப்பதும் குறிப்பிடத் தக்கது. காரைக்கால் அம்மையார் பாடிய பாடலில் பிறந்து கல்வி பயின்ற நாள் முதலாக என்று பாடுவதில் இருந்து அவர் முறையாகக் கல்வி பயின்றது தெரியும்.
ரிக்வேத கவிதாராணி லோபாமுத்ராவும், தமிழ் மூதாட்டி அவ்வையாரும் ஒரே இடத்தில் உட்காராமல் விறுவிறுப்பான பொது வாழ்வில் ஈடுபட்டதை இலக்கியத்தில் படிக்கிறோம். திரவுபதியும், சீதையும் பேசிய வசனங்களைப் பார்க்கையில் பெண் என்பவள் வெறும் பேதை அல்ல என்பதையும் உணர்கிறோம்.
“ஆயகலைகள் அறுபத்து நான்கினையும்………………
லலிதா சஹஸ்நாமத்தில் 236–ஆவதாக வரும் நாமம் “சதுஷ் ஷஷ்டி கலாமயீ” என்ற நாமம் ஆகும். இதன் பொருள் அறுபத்து நான்கு கலைகளின் ரூபமாயிருப்பவள்.
கம்பன் ஒரு பாடலில் “ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என் அம்மை” – என்று சரஸ்வதியைப் பாடுகிறான். கம்ப ராமாயண பால காண்டத்தில் மட்டுமே ஐந்து இடங்களில் 64 கலைகளைக் குறிப்பிடுகிறான்.
மதுரையை கண்ணகி எரித்தபோது பற்றி எரிந்த மதுரை வீதிகளில் ஒன்றில்,
“எண் நான்கு இரட்டி இருங்கலை பயின்ற
பண் இயல் மடந்தையர் பயங்கெழு வீதி” — (அழற்படு காதை)
என்று கூறுவதில் இருந்து அந்தத் தெருவில் 8X4X2 = 64 கலைகளைப் பயின்ற இசை மாதர் வாழ்ந்ததை அறிகிறோம்.

நடராஜன் கால் மாறி ஆடின கதை
மதுரையில் சிவபெருமான் ஆடிய 64 திருவிளையாடல்களில் ஒன்று கால் மாறி ஆடின படலம். கரிகால் சோழனின் அவைப் புலவன் மதுரைக்கு வந்து ராஜ சேகர பாண்டியனைச் சந்தித்தபோது கரிகால் சோழன் 64 கலைகளில் வல்லவன் என்றும் ராஜ சேகரனுக்கு நாட்டியம் ஆடத் தெரியாதது ஒரு குறை என்றும் இடித்துரைத்தான். சிவபெருமானுக்குப் போட்டியாக ஆடற்கலையைக் கற்கக் கூடாது என்று எண்ணியிருந்த ராஜசேகரன் அன்று முதல் நாட்டியத்தையும் கற்று 64 கலைகளிலும் வல்லவன் ஆனான் என்று திருவிளையாடல் புராணம் கூறும் (காண்க:– கால் மாறி ஆடினபடலம்). அதுமட்டுமல்ல.
ராஜசேகரன், சிவராத்திரி அன்று கோவிலுக்குச் சென்றபோது சிவன் ஒரே காலை ஊன்றி ஆடினால் கால் வலிக்காதா? என்று சொல்லி கண்ணீர் உகுத்தான்.. என்ன அதிசயம்! சிவன் இரு கால்களையும் மாற்றி மாற்றி ஆடினான். உலகம் முழுதும் ராஜசேகரன் பெருமை பரவட்டும் என்று எண்ணிய சிவன், நிரந்தரமாக இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கி காட்சி அளித்தான். இன்று வரை மதுரை நடராஜர் சிலை கால் மாறிய நிலையிலேயே நிற்கிறது. ஆக மதுரைக் கோவிலின் வரலாறே 64 கலைகளில் ஒன்றின் மீது அமைந்துள்ளது.

Look at the Jewelry in 2200 year old sculpture!
பெண் அறிஞர்கள்
2800 ஆண்டுகளுக்கு முன் விதேஹ மன்னன் ஜனகன் கூட்டிய ஆன்மீக மாநாட்டில் சாக்ரடீசுக்கும் முந்திய பேரறிஞன் யாக்ஞவல்கியனை கார்க்கி என்ற பெண் கேள்வி கேட்டு மடக்கியதை பிருஹத் ஆரண்யக உபநிஷத்தில் படிக்கிறோம். அவருடைய இரண்டு மனனைவிகளில் ஒருவரான மைத்ரேயி, “சுவர்க்கத்தின் கதவுகளைத் திறக்க பணம் உதவாதென்றால் எனக்கு சொத்தும் வேண்டாம், சுகமும் வேண்டாம்”- என்று கூறியதையும் அறிவோம். ஆக, பெண்களின் பேரறிவு என்பது திடீரென வானில் பிரகாசமாகத் தோன்றி மறையும் எரிகல் அல்ல, நிரந்தரமாகப் பட்டொளி வீசிப் பிரகாசிக்கும் நட்சத்திரங்கள் என்பதை 3000 ஆண்டு இந்திய இலக்கியங்கள் பறை சாற்றுகின்றன.

பில்லியன் டாலர் ‘பெர்Fயூம்’ பிஸினஸ்
வாத்ஸ்யாயனர் எழுதிய 64 கலைகளுக்கு யசோதரா எழுதிய உரையும் லலிதா சஹஸ்ரநாமத்துக்கு பாஸ்கர ராயர் எழுதிய உரையும் 64 கலைகள் பற்றி நிறைய விஷயங்களைத் தருகின்றன. இதில் உள்ள விஷயங்கள் வியத்தகு விஷயங்கள். ஒவ்வொரு பெண்ணும், இளவரசன் இளவரசியும் இசை, நடனம், ஓவியம், வீட்டு அலங்காரம், சிகை அலங்காரம், பூ வேலைப்பாடுகள், கடிதம் எழுதல், மொழிகள், ரகசியக் குறியீடுகள் கற்றல், பறவை வளர்த்தல், அவைகளைப் பேசப்பழக்குதல், வாசனைத் திரவியங்கள் செய்தல், மூலிகை சிகிச்சை தருதல், மசாஜ் செய்தல், சமைத்தல், சூதாடுதல், இந்திரஜால வித்தைகள் செய்தல் இப்படி எத்தனையோ கலைகளைப் பயின்றனர்.
சிலர் நினைக்கலாம் ஆண்களுக்கு எதற்கு இவ்வளவு கலைகள் என்று. பஞ்ச பாண்டவர்கள் அஞ்ஞாதவாசம் செய்த காலத்தில் ஒவ்வொரு கலையும் அவர்களுக்கு எப்படியெல்லாம் உதவியது என்பதைப் படித்திருக்கிறோம்.
64 கலைகளில் சில கலைகளை மட்டும் எடுத்துக்கொண்டு அதில் வரும் வருமானத்தைப் பார்ப்போம். ‘கந்தயுக்தி’– என்னும் கலை உடலில் பூசும் வாசனைத் திரவத்தைத் தயாரிப்பது எப்படி என்று சொல்லுகிறது. இன்று ‘பெர்ப்யூம்’ என்ற பெயரில் பெண்கள் பயன்படுத்துவதை இந்தியாதான் முதலில் ஏறுமதி செய்தது. கடவுளுக்கு செய்யப்படும் 16 உபசாரங்களில் (ஸோடசோபசாரம்) வாசனைப் பொருள் சார்த்துவது ஒரு உபசாரம்! இந்துக்களின் தினசரி வாழ்வே 64 கலைகள்தான்!!
1,74,720 சென்ட் வகைகள்!!!!
இந்தியாவில் ஒரு லட்சத்து எழுபத்து நாலாயிரத்து, எழு நூற்று இருபது வாசனைத் திரவியங்கள் இருந்ததாக வராஹமிகிரரின் பிருஹத் சம்ஹிதா கூறுகிறது. இந்த நூலும் நூலின் மீது எழுந்த உரைகளும் இதுபற்றி மிக விரிவாக எழுதி இருக்கின்றன (காண்க:– பிருஹத் சம்ஹிதா , அத்தியாயம் 77 மற்றும் அதன் பாஷ்யம்). இன்று இந்த வணிகம் கோடி கோடியாகப் பணம் குவிக்கும் தொழிலாக விளங்குகிறது. பிரான்ஸின் தலைநகரான பாரீஸ் இதில் முண்ணனியில் நிற்கிறது.

பூ வியாபாரத்தை எடுத்துக் கொண்டால் தமிழர்கள்தான் இதை ஆதிகாலம் முதல் செய்து வந்ததை சங்க இலக்கியத்தில் இருந்து அறிகிறோம். ஆனால் இன்று உலகில் ஹாலந்து முதலிய நாடுகள்தான் பூ ஏற்றுமதியில் முன்னனியில் நின்று கோடி கோடியாகக் குவிக்கின்றன. முடி அலங்காரம் உலகில் ஒரு பெரிய பிஸினஸ். இதிலும் நாம் முதலிடத்தில் இல்லை. உண்மையில் வாத்ஸ்யாயனர் எழுதிய எல்லாக் கலைகளையும் நாம் முறையாகப் பயின்று, மற்றவர்களையும் பயிற்றுவித்து நிறைய சம்பாதித்து இருக்கலாம். கோட்டை விட்டுவிட்டோம்.
சென்றதை எண்ணி வருந்துவதை விட இன்று சீனா என்ன செய்கிறது என்று பார்த்தால் நம்க்கு உத்வேகம் பிறக்கும். அமெரிக்கா முழுதும் ஒரு டாலர் கடைகளையும், பிரிட்டன் முழுதும் ஒரு பவுண்ட் கடைகளையும் திறந்து வியாபாரத்தில் சக்கைப் போடு போடுகிறது. அந்தக் கடைகளில் எதை எடுத்தாலும் ஒரு டாலர் அல்லது ஒரு பவுண்ட்தான்! ஊசி நூல் முதல் இந்துமத கடவுளர் படங்கள் வரை எல்லாம் சீனாவில் இருந்து வருகிறது!

Ajanta Painting
64 கலைகள் நமக்கு உணர்த்தும் மிகப் பெரிய உண்மை என்னவென்றால் மனித இனத்திற்கு நாகரீகத்தைக் கற்பித்ததே இந்தியர்கள்தான். நாகரீகம் என்பது இந்தியாவில் உதித்து உலகம் எங்கும் பரவியது. இதற்கு ஆதாரம் என்ன? உலகில் உணவு, உறைவிடம், உடை ஆகிய மூன்று அடிப்படைத் தேவைகள் பூர்த்தியானால்தான் இசையும் நடனமும் இலக்கியங்களும் மலரும். நமது நாட்டில் 3000 ஆண்டுகளுக்கு முன் இவை மலர்ந்ததோடு இன்றுவரை நீடிக்கவும் செய்கின்றன.வேதத்தில் நாட்டியம் பற்றி உள்ளது, சிந்து சமவெளி சிலைகளில் பரத நாட்டியம் இருக்கிறது. இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?
மற்ற எகிப்து, கிரேக்கம், மத்திய கிழக்கு நாட்டு நாகரீகங்கள் வாழ்ந்து முடிந்து கல்லறைக்குப் போய்விட்டன. அவர்கள் எல்லோரும் எழுதிப் படிப்பதற்கு முன்னால் நாம் ஏராளமான நூல்களை எழுதிக் குவித்தோம் அத்தனையும் சிந்தனைத் தேன். புத்தரும் ,மஹாவீரரும், ஏசுவும், சொராஸ்ட்ரரும் , கன்பூசியஸும் தோன்றும் முன்னர் நாம் 108 உபநிஷதங்களுக்கு மேல் எழுதிக் குவித்தோம். நாம் எழுதாத பொருள் இல்லை என்னும் அளவுக்கு எல்லாவற்றையும் எழுதினோம். அவைகளில் முதலில் நின்றது ஒன்றே நம் நாகரீக முன்னேற்றத்திற்குச் சான்று.

Sigiriya paintings from Sri Lanka
Contact swami_48@yahoo.com
You must be logged in to post a comment.