Written by London Swaminathan
Date: 23 DECEMBER 2017
Time uploaded in London- 9-16 am
Post No. 4535
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks
எல்லோருக்கும் தெரிந்த பழமொழி- ஆயினும்
நாம் அளவோடு சாப்பிடுகிறோமா? இல்லை;
அளவோடு பேசுகிறோமா? இல்லை
அளவோடு செலவழிக்கிறோமா? இல்லை;
அளவோடு FACEBOOK முகநூல், TV டெலிவிஷன், WHATSUP வாட்ஸப்பில் இருக்கிறோமா? இல்லை
அந்தக் காலத்திலேயே அளவு பற்றி அழகாகச் சொன்னான் சாணக்கியன்! அளவுக்கு மிஞ்சினால் எதுவுமே ஆபத்துதான்.
அதிரூபேண வை ஸீதா ஹ்யதிகர்வேன ராவணஹ
அதிதானம் பலிர்தத்வா சர்வத்ர வர்ஜயேத்
–சாணக்ய நீதி, அத்தீயாயம் 3, ஸ்லோகம் 12
பொருள்
சீதைக்கு அதிக அழகினால் ஆபத்து நேரிட்டது;
ராவணனுக்கு அதிக கர்வத்தால் ஆபத்து நேரிட்டது;
பலிச் சக்ரவர்த்திக்கு அதிக கொடையால் ஆபத்து நேரிட்டது.
ஷேக்ஸ்பியரும் AS YOU LIKE IT ஆஸ் யூ லைக் இட் என்ற நாடகத்தில் அழகு பற்றி எச்சரிக்கிறான்:
ROSALIND
Alas, what danger will it be to us,
Maids as we are, to travel forth so far?
Beauty provoketh thieves sooner than gold.
அழகு என்பது தங்கத்தை விட விரைவில் திருடர்களைக் கவர்ந்திழுக்கக்கூடியது- ரோஸாலிண்ட்
இதனால்தான் பெரியோர்கள் சொன்னார்கள்: அளவோடு நில்.
வள்ளுவனும் சொல்கிறான்:
மயில் தோகை எவ்வளவு மென்மையானது? அதை, வண்டியில் ஏற்றினாலும் அதற்கும் ஒரு அளவு உண்டு. உச்ச கட்ட பாரத்துக்கும் மேலாக ஒரு மயில் தோகையை ஏற்றினாலும் வண்டியின் அச்சு முறிந்து விடுமாம்! என்ன அற்புதமான உண்மை!
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின் (குறள் 475)
பலிச் சக்ரவர்த்தி அதிக தானம் கொடுத்து அழிந்த கதையை நினைவிற்கொண்டு வள்ளுவனும் பாடுகிறான்:
உளவரை தூக்காத ஒப்புரவாண்மை
வளவரை வல்லைக் கெடும் (480)
பொருள்
ஒருவனிடம் உள்ள பொருளின் அளவைக் கணக்கிடாதபடி அவன் அதிக தானம் செய்தால்– உபகாரம் செய்தால்- அவனுடைய செல்வத்தின் அளவு விரைவில் தேய்ந்து போகும்;
( பலிச் சக்ரவர்த்தி நாட்டையும் மன்னர் பதவியையும் இழந்தான்)
இன்னும் ஒரு குறளில் மேலும் தெளிவாக உரைக்கிறார்:
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும் (குறள் 479)
பொருள்:
ஒருவனின் வருமானத்துக்கு ஏற்ப வாழாதவன் வாழ்க்கை , முதலில் பகட்டான காட்சியைத் தரும் பின்னர் ஒன்றுமில்லாமற் (புஸ்வாணம்) ஆகிவிடும்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷமாகும்!