
Written by S NAGARAJAN
Date: 25 July 2017
Time uploaded in London:- 6-57 am
Post No.4111
Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.
ராட்ஸசன் கஜினி
கொலைகாரன்,கொள்ளைக்காரன் கஜினி முகமதுவின் கொடூரச் செயல்கள்
ச.நாகராஜன்
தனது நீண்ட நெடும் வரலாற்றில் ஹிந்துஸ்தானம் பார்த்த கொடூரன்களில் கஜினி முகமது ஒரு பாப ராட்ஸசன்.
அவன் செய்த கொடுமைகளை எழுதக் கூடாது என்று செகுலரிஸம் பெயரால் சொல்வது நியாயமில்லை.
வரலாறு மறைக்கப்படக் கூடாது. ஒரு வேளை மறக்கப்பட்டாலும் கூட!
அந்தப் பாவி இஸ்லாமின் பெயரால் ஹிந்துஸ்தானத்தில் செயத அக்கிரமங்களை எழுதவே கை நடுங்கும்.
கி.பி 1002ஆம் ஆண்டு அவன் ஹிந்துஸ்தானத்தின் மீது முதல் முறையாகப் படையெடுத்த பின் திரும்பிக் கொண்டிருந்தான்.
அந்த முதலாவது படையெடுப்பில் அவனை எதிர்த்து வீரத்துடன் போரிட்டவன் லாகூரை ஆண்ட ராஜா ஜெயபால்.
அவனை வென்ற கஜினி முகமது 16 நெக்லெஸ்கள் உட்பட ஏராள செல்வத்தைக் கொள்ளையடித்தான். ஒர் நெக்லஸின் மதிப்பு மட்டும் 80000 ஸ்டர்லிங் பவுண்ட் மதிப்பு என்கிறார் The Muslim Epoh என்ற நூலை எழுதிய ஜே.டி.ரீஸ்.( J.D.Rees I.C.S -First published in 1894)
ஹிந்து மன்னனான ஜெயபால் கஜினி முகமது மற்றும் அவனது புதல்வனால் தோற்கடிக்கப்பட்டவுடன் இந்தத் தோல்விக்கான முழுப் பொறுப்பையும் தானே ஏற்றான்.
ஆனந்த் பால் என்ற தன் மகனிடம் அரசுப் பொறுப்பை ஒப்படைத்தான்.
பின்னர், ஒரு பெரிய சிதையைத் தயார் செய்து அதில் புகுந்து தனக்குத் தானே சிதைய்ல் தீ மூட்டிக் கொண்டு உயிர்த் தியாகம் செய்தான்.
அற்புதமான இந்த உயிர்த் தியாகம் பற்றி இதுவரை ஹிந்து மக்கள் அறிந்திருக்கின்றனரா என்பது கேள்விக் குறி.
ஹிந்து தியாகங்களையும் இந்த தேசத்தைத் தற்காத்துப் போரிட்ட வீரச் செம்மல்களையும் பற்றி பாடப் புத்தகங்களிலோ அல்லது இதர விதமாகவோ எழுத செகுலர் அரசு இடம் தரவில்லை.
ஜெயபாலின் சிதை பற்றிச் சொல்பவர் ஃபெரிஷ்டா (Ferishta) என்ற யாத்ரீகர். வரலாற்று ஆசிரியர்.
காளிகட்டைச் சேர்ந்த ஜமீந்தார்கள் கூட இதே போல தங்கள் தொண்டையைத் தாங்களே அறுத்துக் கொண்டு தங்கள் வாரிசுகளிடம் பொறுப்பை ஒப்படைத்தார்களாம். இதை பயணம் செய்த பயணிகள் எழுதி வைத்துள்ளார்கள்.

Sanskrit in Gazni Mohammed Coins!
இரண்டு வருடம் கழித்து பாடியாவைச் சேர்ந்த ராஜாவைக் குறி வைத்தான் கஜினி. அவனை மதமாற்றுவதே அவன் முக்கியக் குறிக்கோள்.
ஆனால் தீரமிக்க ராஜா மூன்று நாட்கள் இடைவிடாமல் போரிட்டான்.
நான்காம் நாள் இரண்டு படை வீரர்களும் செய் அல்லது செத்து மடி என்ற விரதத்துடன் ஒருவரை ஒருவர் எதிர் கொண்டனர்.
திடீரென்று மெக்காவை நோக்கி விழுந்து வணங்கிய கஜினி முகமது” முன்னேறுங்கள்; கடவுள் நம் பக்கம் இருக்கிறார்” என்று கூவினான்.
தீவிரமான தாக்குதலை எதிர் கொண்ட ஹிந்து ராஜா தன் கோட்டையை விட்டு வெளியேறி காட்டை அடைந்து தன் வாளால் தன்னை முடித்துக் கொண்டான்.
முதல் மற்றும் இரண்டாம் படையெடுப்பில் அடித்த கொள்ளையைப் பார்த்த கஜினிக்கு ஆச்சரியமாக இருந்தது.
இவ்வளவு செல்வமா?
தனது மூன்றாம் படையெடுப்புக்கு ஒரு வருடம் கழித்து ஆசையுடன் ஆயத்தமானான்.
ஆனந்த் பாலுடன் போரிட்ட அபுல் ஃபட்டா லோடி ஆனந்த் பால் தோற்கவே, கஜினியிடம் சமாதானம் பேசினான். சமாதானம் உடனே ஏற்கப்பட்டது. ஏனெனில் காஸ்கர் அரசன் கோரஸ்ஸானின் தலை நகரான ஹெராத் என்ற நகரின் மீது படையெடுத்தான்.
மிகுந்த தந்திரசாலியான கஜினி இந்த அவசர நிலையில் தனது வெற்றிகளை எல்லாம் ஒரு இந்திய பிரதிநிதியிடம் ஒப்படைத்தான்.
அவனது முதல் வேலை ஹிந்துக்கள் அனைவரையும் மதமாற்றம் செய்ய வேண்டும், முகமதியர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது தான்.
தன் தேச மக்களுக்கு எதிராகத் தானே துரோகம் இழைக்க வேண்டிய நிலை அவனுக்கு ஏற்பட்டது.
1006இல் கஜினி நோக்கிச் சென்ற முகமது, பல்க் என்ற இடம் அருகே நடந்த பெரும் போரில் எலிக் கான் என்பவனை எதிர்த்தான்.
போரைப் பற்றி எழுதிய வரலாற்று ஆசிரியர்கள் குதிரைகளின் ஓலமும் வீரர்களின் கைகலப்பு சத்தமும் வானை எட்டியது என்று எழுதியுள்ளனர்.
1008இல் லாகூர் மன்னனான ஆனந்த் பாலை ஒரேயடியாக அழிப்பது என்று கஜினி முகமது கங்கணம் பூண்டான்.
ஆனந்த் பாலோ முகமதியர்களை நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அனைத்து ஹிந்து மன்னர்களின் உதவியையும் நாடினான். அனைவரும் உடன் பட்டனர்.

Ghazni in modern Afghanistan
வரலாறு காணாத அளவில் மிக பிரம்மாண்டமான ஹிந்து சேனை ஒன்று உருவானது.
இந்த சேனையின் பிரம்மாண்டம் எவ்வளவு பெரியது என்றால் பெஷாவர் அருகே அது கஜினி முகமதை நாற்பது நாட்கள் எதிர் கொண்டு போரிட்டது.
ஆனால் தந்திரக்காரனான முகமது மன்னனின் யானையைத் துரத்திக் கொண்டே செல்லவே ஹிந்து வீரர்கள் தலைவன் இல்லாத நிலையில் கலங்கி அசந்து நின்றனர்.இந்தத் தருணத்தைப் பயன்படுத்திக் கொண்ட முகமதுவின் சேனை ஹிந்து வீரர்களை கொன்று குவித்தது.
இருபதினாயிரம் பேர் போர்க்களத்திலிருந்து ஓடினர்.
அடுத்து, அமிர்த்ஸருக்கு வடகிழக்கில் இருந்த இமயமலை அடிவார நகரான நாகர்கோட்டின் மீது கஜினி முகமது பார்வையைச் செலுத்தினான்.
அங்கிருந்து தங்கம், விலை மதிப்புள்ள ரத்தினக்கற்கள், வெள்ளி உள்ளிட்ட ஏராளமான செல்வத்தைக் கொள்ளையடித்தான்.
அந்தக் கால மதிப்பின் படி இது 313,333 ஸ்டர்லிங் பவுண்ட் மதிப்புடையதாகும்.
கஜினிக்குத் திரும்பிய முகமது தனது நகருக்கு வெளியே ஒரு பெரிய மைதானத்தைத் தேர்ந்தெடுத்தான்.
அங்கு தான் கொள்ளையடித்த அனைத்தையும் கண்காட்சியாக வைத்தான்.
தன் சேனையில் இருந்த படைப்பிரிவு தலைவர்களுக்கு பரிசுகளையும் வீர விருதுகளையும் அளித்தான்.
மக்களுக்கோ ஒரே விருந்து!
1011இல் டெல்லிக்கு மேற்குப் பக்கம் 30 மைல் தொலைவில் இருந்த தாணேஸ்வரத்தை நோக்கித் தனது ஆறாம் படையெடுப்பை எடுத்தான்.
புனிதமான யமுனை நதியோ அருகில் இருந்தது. மன்னன் ஆனந்த் பால் தனது சகோதரனை அனுப்பினான்.
தாணேஸ்வரத்தை விட்டு விடுவதாயிருந்தால் அந்தப் படையெடுப்பில் கொள்ளை அடிக்கும் கொள்ளைக்காரனான கஜினி முகமது வழக்கமாக எதிர் பார்க்கும் கொள்ளையைத் தந்து விடுவதாக சொல்லி அனுப்பினான்.
ஆனால் கோவில் சிலைகளை உடைப்பதையே நோக்கமாகக் கொண்ட கஜினி முகமது அந்த கோரிக்கையை நிராகரித்தான்.
கோவில்கள் இடிக்கப்பட்டன. சிலைகள் உடைக்கப்பட்டன.
இரண்டு லட்சம் பேரை அடிமைகளாகப் பிடித்துக் கொண்டு ஊர் திரும்பினான்.
இதனால் ஒவ்வொரு முகமதிய வீரனுக்கும் ஏராளமான அடிமைகள் கிடைத்தனர்.
தனது ஏழாம் படையெடுப்பில் அந்தப் பாவி எதிர் கொண்டது ஆனந்த் பாலை அடுத்து அரியணை ஏறிய இரண்டாம் ஜெய்பாலை! காஷ்மீரில் இருந்த அனைவரையும் முஸ்லீம்களாக மாறக் கட்டாயப் படுத்தினான்.
மாற மறுத்த ஹிந்துக்களைக் கொன்று குவித்தான்.
அவனது எட்டாம் படையெடுப்பும் காஷ்மீரின் மீது தான்.
தன்னை எதிர்த்த படைத்தலைவர்களைத் தண்டிப்பதே இந்தப் படையெடுப்பின் நோக்கமாக அவன் கொண்டிருந்தான்.
கங்கைக் கரையில் அமைந்திருந்த கனௌஜ் நகரின் மீது அவன் பார்வை விழுந்தது.
அந்த அழகிய நகரம் செல்வச் செழிப்பிற்கு பெயர் பெற்றது. உலக அளவில் அது ஒரு உன்னதமான நகரம்.
ஒரே ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் அங்கிருந்த வெற்றிலைபாக்கு கடைகள் மட்டும் 30000 என்ற எண்ணிக்கையைத் தொட்டதாம்.
அந்த நாட்களில் உலகின் எந்த நாட்டிலும் இந்த எண்ணிக்கையில் வெற்றிலை பாக்கு கடைகள் இல்லை என்றால் இதர கடைகளைப் பற்றியும் கனௌஜின் செல்வச் செழிப்பையும் யாரும் எளிதாக ஊகித்துக் கொள்ளலாம்.
கஜினியின் படையில் ஒரு லட்சம் குதிரைகள் இருந்தன. 20000 போர் வீரர்கள் இருந்தனர்.
ஆனால் ராஜாவோ எதிர்ப்பே தெரிவிக்காமல் தோல்வியை ஒப்புக் கொண்டான்.
மதுராவில் அடித்த கொள்ளை சொல்லத்தரமன்று. அனைத்துக் கோவில்களும் இடிக்கப்பட்டன. சிலைகள் உடைக்கப்பட்டன.
தப்பியது மதுரா கோவில் மட்டுமே. ஏன்? அது அவ்வளவு வலுவாக உறுதியாகக் கட்டப்பட்டிருந்தது.
அதை கஜினி முகமதாலும் கூட இடிக்க முடியவில்லை.
மஹாபன் ராஜா கஜினி தன் மக்களை கொன்று குவிக்கும் கோரத்தைப் பார்த்து கண்ணீர் விட்டான்.
தன் மனைவி மக்களுடன் நதியினுள் சென்றான்.
இதே போல ரஜபுதன ராஜாவும் தங்கள் மனைவி மகன்களுடன் தீயை எரியூட்டி அதில் விழுந்து உயிர் துறந்தனர்.
தோல்வியை ஏற்க அவர்கள் மனம் ஒப்பவில்லை.
இப்போது கஜினி அடித்த கொள்ளையின் மதிப்பு அந்தக் கால பண மதிப்பீட்டில் 416000 ஸ்டர்லிங் பவுண்டாகும்!!
5300 அடிமைகள், 350 யானைகள் , இது தவிர சிலைகளின் கண்களில் இருந்த விலையே மதிக்க முடியாத மாணிக்கக் கற்கள், முத்துக்கள் பதித்த நெக்லேஸ்கள், நீலக்கற்கள் ஆகியவையும் கொள்ளையில் அடக்கம்.
இந்தக் கொள்ளையால் மகிழ்ச்சி அடைந்த கஜினி ஊருக்குத் திரும்பியவுடன் அங்கு சலவைக் கற்களால் ஒரு பெரிய மசூதியைக் கட்டினான். அதில் இருந்த கம்பளங்களில் விதவிதமான நவரத்தினக் கற்களை இழைத்தான்.
அவன் செய்த கொள்ளையையும் கொலையையும் நினைத்தாலே நெஞ்சம் நடுங்கும்.
அந்த பாப ராட்ஸசன் செய்த இன்னும் பல கொடுமைகளை இன்னொரு கட்டுரையில் காணலாம்
– அடுத்த கட்டுரையுடன் முடியும்.