[அப்பர் என்னும் திரு நாவுக்கரசர் பாடிய தேவாரத்தில் நாம் ஏராளமான புதுப்புது தகவ ல்களை அறிகிறோம்.
அவர் ஒரு நாயன்மார் மட்டுமல்ல; வரலாற்றுப் பேரறிஞர்.
பாடலிபுத்திரம் வரை சென்று நாட்டை அறிந்தவர். கங்கை-காவிரி, கங்கை- கோதாவரி பற்றிப் பாடுகிறார்.
அவர் பாட்டில் வரும் பூகோள விஷயங்களை தனி ஆராய்ச்சிக் கட் டுரையில் தருகிறேன். — ?
கங்கை நதி வங்காளத்தில் நுழைந்தவுடன் ஆயிரம் கிளைகளாகப் பிரியும் அற்புத விஷயத்தை ‘ஆயிரம் மாமுக கங்கை’ என்ற வரிகளில் நமக்குச் செப்புவார்]
?-ம் திருமுறை, அப்பர் தேவாரம்
சிவனார் திருத்தலம் நூற்றுக்கும் மேலே உண்டு.
எந்த திருத்தலம் குறித்த பாடல் எண்ணில்
அப்பர் என்னும் திருநாவுக்கரசர் சுவாமிகள்
“ஆயிரம் மாமுக கங்கை”
என்று பாடி உள்ளார் என்பதய்த்
தெரிவித்து உதவுமாறு வேண்டுகின்றேன்.
நன்றி, வணக்கம்.
G.V.
Answer given by London Swaminathan
ஆயிர மாமுக கங்கை என்று அப்பர் தேவாரத்தில் எங்கு வருகிறது ?
அப்பர் சமண மதத்தை தழுவியிருந்த காலத்தில் பாடலி புத்திரத்துக்குச் சென்றிருக்கவேண்டும். ஏனெனில் அவர் வங்காளத்தில் ஆயிரம் கிளைகளாக பிரிந்து கங்கை நதி, வங்காள விரிகுடாவில் விழும் செய்தியோடு நாவலம் தீவு – ஜம்பூத்வீபம் , போகும் வழியிலுள்ள கோதாவரி முதலிய நதிகளையும் குறிப்பிடுகிறார்.
இதோ அப்பரின் ஆறாம் திருமுறையில் உள்ள கங்கை நதிக் குறிப்புகள்:–
திருப்பூவணம்
ஆறாம் திருமுறை , பாடல்
மயல் ஆகும் தன் அடியார்க்கு அருளும் தோன்றும் ;
மாசு இலாப் புன்சடை மேல் மதியம் தோன்றும்;
இயல்பு ஆக இடு பிச்சை ஏற்றல் தோன்றும் ;
இருங்கடல் நஞ்சு உண்டு இருண்ட கண்டம் தோன்றும் ;
கயல் பாய கடுங்கலுழிக் கங்கை நங்கை
ஆயிரம் ஆம் முகத்தினொடு வானில் -தோன்றும்
புயல் பாய்ச சட்டை விரித்த பொற்புத் தோன்றும்
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே
சேக்கிழார் அடிப்பொடி டாக்டர் டி .என் . ராமச்சந்திரன் இதை அருமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்
Appar Alias Tiru Navukkarasar mentioned the Ganges river that branches out into 1000 small streams before merging with the sea. He lived during the reign of Mahendra Pallava (630 CE)
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து 6-5-2021 அன்று சித்திரை மாத சதய நன்னாளில் அப்பர் குருபூஜை தினத்தன்று சிவஞான சிந்தனை வழிபாட்டு நிகழ்ச்சியில் ஆற்றிய உரை:-
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.
இன்று சித்திரை மாதம் சதய நக்ஷத்திர நன்னாள். இதுவே தான் அப்பர் பெருமானின் குரு பூஜை தினம். சைவ சமயம் தழைக்கச் செய்த அதிசய புருஷர்களுள் பெரும் நாவலராக 81 வயது வரை வாழ்ந்து அனைவருக்கும் நல்வழி காட்டிய சொல்லரசர் திருநாவுக்கரசர் ஆவார். திருஞானசம்பந்தர் வாழ்ந்த காலத்திலேயே வாழ்ந்து ஏராளமான அற்புதங்களைச் செய்த துறவிக்கரசு அவர்; பல்வேறு இன்னல்கள் வந்தாலும் கூட அவற்றையெல்லாம் சிவனருளால் சிதறச் செய்து கல்லோடு மிதந்த ஞானப் பெருந்தகை அவர். இன்னும் அவர் புகழை ஆர்கலியது கடந்தோன், சொல் வேந்தன், வாகீசர், தாண்டகச் சதுரர், மெய்ஞானம் பூத்தவன், தண்டமிழ் பாடினார் என்பன போன்ற 55க்கும் மேற்பட்ட புகழ் மொழிகளால் சிவபுண்ணியத் தெளிவு, பரமதி திமிர பானு, அம்பர்ப் புராணம், ஆதித்தபுரி புராணம், புலியூர்ப் புராணம், பழனித்தல புராணம், காசி ரகசியம், திருவிளையாடல் புராணம்,சிவ ரகசியம் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட நூல்கள் போற்றிப் புகழ்கின்றன.
அவர் வாழ்ந்த காலத்தில் சைவ சமயத்தைக் கடைப்பிடித்தோர் சற்று பயந்து வாழ வேண்டிய காலமாக இருந்தது. திருநீறைத் தரித்தவரைக் கண்டால் தோஷம்; சிவாய நம என்ற நாமத்தை உச்சரிப்பவரைக் கண்டால் தீட்டு என்று இப்படி சமணர்கள் வாழ்ந்ததோடு விபூதி பூசியவரைக் கண்டபோது ‘கண்டு முட்டு’ என்றும் சிவ நாமத்தை உச்சரிக்கக் கேட்டால் ‘கேட்டு முட்டு’ என்றும் கூறுவது வழக்கம்.
அப்படிப்பட்ட காலத்தில் அந்த சமணர்களோடு வாழ்க்கையின் முற்பகுதியைக் கழித்துப் பின்னால் சிவனருளால் அவன் தாள் வணங்கித் தானும் உய்ந்து மற்றவரையும் உய்ய வழி வகுத்தார் அவர்.
பன்னிரு திருமுறைகளில் நான்கு, ஐந்து, ஆறு ஆகிய மூன்று திருமுறைகளில் அவர் பாடிய சில பதிகங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. திருமுறை கண்ட புராணத்தில் உமாபதி சிவாசாரியார் ‘கூற்றாயினவாறு’ என்பது தொடங்கி ‘புகலூர்ப் பதிகம்’ ஈறாக சுமார் 16000 பதிகங்களை நாவுக்கரசர் பாடி அருளியதாகக் குறிப்பிடுகிறார். சுந்தரமூர்த்தி நாயனார் ஏழ் எழுநூறு என்று கூறுவதால் 4900 பதிகங்கள் அவர் காலத்தில் கிடைத்திருந்ததை அறிகிறோம். இன்றோ நமக்கு கிடைத்துள்ளவை சுமார் 312 பதிகங்களே. 3066 பாடல்களே!
ஆனால் இவற்றைப் பாடிப் பரவினாலேயே போதும்- சிவனருள் சித்திக்கும்; தெய்வ நற்றமிழ் நம் உள்ளிருந்து ஊற்றெடுத்துப் பெருகும்.
ஏராளமான இனிய சொற்களை, அறுபதினாயிரத்திற்கும் மேற்பட்ட சொற்களை, நாவுக்கரசர் தனது பாடல்களிலே நமக்குத் தருகிறார். அந்தச் சொற்களில் பொதிந்திருக்கும் பொருளும், இன்பமும் வர்ணனைக்கு அப்பாற்பட்டிருக்கும். ஊன்றிப் படித்தாலேயே புரியும்!
ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் இங்கு பார்க்கலாம். நிலா என்ற சொல்லை மட்டும் எடுத்துக் கொண்டால் அதை அப்பர் சுவாமிகள் 34 இடங்களில் பயன்படுத்துகிறார்.
வெண்ணிலா, இள நிலா, தனி நிலா, பனி நிலா, ஒளி நிலா, முகிழ் நிலா, மணி நிலா, தெண் நிலா, மதி நிலா, நீள் நிலா, சில் நிலா என இப்படி பல நிலாக்களை அவர் நமக்குக் காண்பிக்கிறார். போழ் நிலா என்று ஒரு சொற்றொடர். அதாவது மறைந்து துண்டமாய்த் தோன்றும் சந்திரன் என்று இதற்குப் பொருள். இப்படி ஒவ்வொரு சொல்லாக எடுத்து அதன் சுவையைச் சொல்லப் போனால் தேனினும் இனிய சொல் என்று சொல்ல ஆரம்பித்து தேவர் தம் அமிர்தம் என்று சொல்லி முடித்து விடலாம்.
அவரது பாக்களில் உள்ள ஒரு சொல்லுக்குக் கூட நாம் ஆராய்ந்தே உரிய பொருளைக் காண முடியும். இதற்குத் தான் நாம் வல்லார் உதவியை – இதிலேயே ஊறித் திளைக்கும் சிவாசாரியர்களின் உதவியை, ஆதீனங்களின் உதவியை, அறிஞர்களின் உதவியை நாட வேண்டி வரும்.
உதாரணத்திற்கு ஒரு பாடலை இங்கு எடுத்துக் காட்ட் விழைகிறேன்.
திருநாவுக்கரசர் திருப்பாதிரிப்புலியூரில் அருளிய ஒரு பாடல் இது.
பாடல் இது தான்:
“வைத்த பொருள் நமக்கு ஆம் என்று சொல்லி மனத்து அடைத்துச்
சித்தம் ஒருக்கிச் சிவாய நம என்று இருக்கின் அல்லால்
மொய்த்த கதிர் மதி போல்வார் அவர் பாதிரிப்புலியூர்
அத்தன் அருள் பெறல் ஆமோ அறிவு இலாப் பேதை நெஞ்சே”
இங்கு சிவாய நம என்று சொல்ல வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி ஆணை இடுவதை அறியமுடிகிறது.
ஆனால் வைத்த பொருள் என்கிறாரே அது என்ன?
பொருள் என்ற வார்த்தையை எடுத்துக் கொண்டால் தமிழ் என்னும் பெருங்கடலில் மூழ்கி அர்த்தத்துடன் வெளியே வருவது என்பது சாதாரணமான ஒரு காரியம் அல்ல.
பொருள் என்ற சொல்லிற்கான பொருளை முதலில் பார்த்து விட்டுப் பின்னர் தான் வைத்த பொருள் என்றால் என்ன என்று பார்க்க வேண்டும், இல்லையா?
வள்ளுவரின் துணையை நாடுவோம் பொருளுக்கு என்ன பொருள் என்று அறிய! பொருள் என்றால் உண்மை அல்லது மெய்ப்பொருள். பொருள் என்றால் வினை. பொருள் என்றால் செய்தி. பொருள் என்றால் பயன். பொருள் என்றால் உறுதிக் குணம். பொருள் என்றால் சிறந்தது. பொருள் என்றால் சொற்பொருள் அல்லது உரை. பொருள் என்றால் பொருள் நூல் அதாவது economics. பொருள் என்றால் நூல் பொருள். பொருள் என்றால் உடைமை. பொருள் என்றால் பண்டம் அல்லது வஸ்து. பொருள் என்றால் செல்வம்.பொருள் என்றால் மதிப்பு. பொருளுக்கான இத்தனை பொருள்களையும் வள்ளுவர் தன் குறளில் ஏற்றி ஒன்றுடன் ஒன்றை இணைத்து அருமையாக ஒரு பொருள் மாலையைத் தொடுக்கிறார்.
அவரில் ஆழ்ந்து மூழ்கி,
இருள் சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள் சேர் புகழ்புரிந்தார் மாட்டு (குறள் 5) என்பதைப் படித்து இறைவனை அறிவதே பொருள் என அறிகிறோம்.
பிறப்பென்னும் பேதைமை நீஙகச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு (குறள் 358) என்றும் அவர் கூறுவதால் பிறவிப் பெருங்கடலை நீந்திக் கலக்க வல்லது செம்பொருள் என்பதை அறிகிறோம்.
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றும் அவர் கூறுகிறார் (குறள் எண் 423)
இப்படிப்பட்ட செம்பொருள், மெய்ப்பொருள் எது?
தமிழை உடலாகக் கொண்ட தமிழாகரன், தமிழ் ஞான சம்பந்தன் இப்போது நமக்கு உதவி செய்கிறார். நமச்சிவாய பதிகத்தில் எது மெய்ப்பொருள் என்பதை அவர் கூறி அருளுகிறார்.
காதல் ஆகி,கசிந்து, கண்ணீர் மல்கி,
ஓதுவார் தமை நன் நெறிக்கு உய்ப்பது;
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயவே
ஆக இப்போது மெய்ப்பொருள் ஆவது நமச்சிவாய நாமம் என்ற ரகசியம் நமக்குப் புலப்படுகிறது.
இதை அப்பர் சுவாமிகளும் உறுதிப் படுத்துகிறார்:
இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது ஜோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே (நான்காம் திருமுறை)
நமச்சிவாயவே ஞானமுங் கல்வியும்
நமச்சிவாயவே நானறி விச்சையும்
நமச்சிவாயவே நாநவின் றேத்துமே
நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே
சரி வைச்சபொருள் என்றால் என்ன?
திருப்பாதிரிப்புலியூரில் பாடிய பாடலைத் தவிர சிதம்பரத்தில் பாடிய பாடலிலும் அப்பர் பிரான் ‘வைச்ச பொருள்’ பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
வைச்ச பொருள் நமக்கு ஆகும் என்று எண்ணி நமச்சிவாய
அச்சம் ஒழிந்தேன் அணி தில்லை அம்பலத்து ஆடுகின்ற
பிச்சன் பிறப்பு இலி பேர் நந்தி உந்தியின் மேல் அசைத்த
கச்சின் அழகு கண்டால் பின்னைக் கண்கொண்டு காண்பது என்னே
இப்படி இரு முறை அவர் குறிக்கும் வச்ச பொருள் எது?
வள்ளுவரின் குறள் ஒன்று நமக்கு நினைவுக்கு வருகிறது. ‘ஒருவன் பெற்றான் பொருள் வைப்புழி’ என்கிறார் குறள் 226இல்! வைப்புழி என்றால் பிக்ஸட் டெபாஸிட். ஆக வைச்ச பொருள் என்பது நமச்சிவாய நாமத்தைச் சொல்லி டெபாஸிட் செய்வது தான்! அந்த ஃபிக்ஸட் டெபாஸிட் நமக்கு எப்போதும் ஆகும்; உதவிக்கு வரும்!
ஆக மெய்ப்பொருள் ஆகிய நமச்சிவாய என்னும் நாமத்தைச் சொல்லி அதை வைப்புழியாக, டெபாஸிட் செய்து வைப்பதைத் தான் அப்பர் பிரான் சொல்லியுள்ளார் என்பது தெளிவாகிறது.
வைத்த பொருள் நமச்சிவாய நாமம் தான்! ‘அது நமக்கு ஆகும்’ என்று அச்சம் ஒழிந்தார் அப்பர்.
மெய்ப்பொருளைக் கண்டு அதைச் சொல்லி அதைச் சேர்த்து பத்திரமாக வையுங்கள்; அது உமக்குப் பின்னால் இகத்திற்கும், பரத்திற்கும், ‘ஆகும்’ என்ற அற்புதக் கருத்தை அவர் இரு முறை வலியுறுத்தியுள்ளார்.
வள்ளுவப் பிரான் வழியில் மெய்ப்பொருள் காண விழைகையில் இந்த இரகசிய விஷயத்தை நாம் அடைகிறோம்; அறிகிறோம்.
ஆக வாழ்நாளில் முற்பகுதியில் சமணருடன் இருந்து தன் வாழ்வின் ஒரு பகுதியை வீணாக்கி விட்டதை எண்ணி அவர் ‘குறிக்கோளின்றிக் கெட்டேனே’ என்கிறார். தனது அனுபவத்தை நம்மிடம் முதலீடு செய்து நல்லக விளக்கு அது, நமச்சிவாய நாமம் அதை எந்திக் கொள்; பிறப்பு இறப்பு என்னும் இருவினையும் சேராது என்கிறார்.
இதை அடைவதற்கான வழிகளையும் அவர் தெளிவாகப் பலபடியாகக் கூறுகிறார்.
சங்க நிதி பதும நிதி இரண்டும் தந்து தரணியொடு வான் ஆளத் தருவரேனும்
மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம் மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லார் ஆகில்
அங்கம் எலாம் குறைந்து அழுகு தொழுநோயராய் ஆ உரித்துத் தின்று உழலும்
புலையரேனும்
கங்கை வார்சடைக் கரந்தார்க்கு அன்பர் ஆகில் அவர் கண்டீர் நான் வணங்கும் கடவுளாரே.
சொர்க்கம் பூமி இரண்டின் ஆட்சி, சங்க நிதி பத்ம நிதி இவற்றைத் தந்தால் ஒருவனுக்கு எப்படி இருக்கும்! ஆனால் அப்பர் தெளிவு பட, ‘நீ சிவபிரான் பக்தனா?’ என்கிறார். ‘இல்லை’ என்றால் ‘உன் நிதியும் வேண்டாம்; நீயும் வேண்டாம்’ என்கிறார்! ஆ உரித்து தின்று உழல்பவனாக இருப்பினும் நமச்சிவாய என்று சொல்லும் சிவ பக்தன் எனில் அவன் நாம் வணங்கும் கடவுள் என்கிறார். இதுவே அவர் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும், வழிகாட்டி அருளும் பாங்கு.
அவரது நெஞ்சத் துணிவையும் நமக்கு அவர் இந்த வழியில் ஊட்டுகிறார்.
கல்லிலே கட்டி அவரை கடலிலே பாய்ச்சிய போது அவர் கூறுகிறார்:
சொற்றுணை வேதியன் ஜோதி வானவன்,
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கை தொழக்
கற்றுணை பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சிவாயவே என்றார் அவர். கல் என்ன செய்யும்? கடல் தான் என்ன செய்யும், அவரை?!
சிவனருளால், அவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம், ஏராளம். திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் அவர் நிகத்திய அற்புதங்களை ஒரே பாடலில் தனது திருக்களிற்றுப்படியாரில் கூறுகிறார்:
கொல்கரியின், நீற்றறையின், நஞ்சின், கொலைதவிர்தல்,
கல்லே மிதப்பாய்க் கடல் நீந்தல் – நல்ல
மருவார் மறைக்காட்டின் வாசல்திறப்பித்தல்
திருவாமூர் ஆளி செயல்.
கொல்கரியின் கொலை தவிர்தல் – திருவதிகைப் பதிகம்
நீற்றறையின் கொலை தவிர்தல் – மாசில் வீணையும் பதிகம்
நஞ்சின் கொலை தவிர்தல் – திருநனிபள்ளிப் பதிகம்
கல்மிதப்பின் கொலை தவிர்தல் – நமசிவாயத் திருப்பதிகம்
மறைக்கதவு திறப்பித்தல் – மறைக்காட்டுத் திருப்பதிகம் என இப்படி அற்புதங்களைச் சுட்டிக் காட்டும் திருப்பதிகங்களாக இவை ஆயின.
ஆட்சியாளருக்கே அவர் எச்சரிக்கை விடுக்கிறார்,துணிவுடன்
‘ஏழ் உலகும் விண்பால் திசை கெட்டு இரு சுடர் வீழினும் அஞ்சல் நெஞ்சே’ என்று நம்மையும் தைரியப்படுத்தும் அவர் அதற்கான காரணமாக, ‘திண்பால் நமக்கு ஒன்று கண்டோம் திருப்பாதிரிப்புலியூர்க் கடவுள் சுடரான் கழல் இணையே’ என்கிறார்.
சங்கரனுக்கே மீளா ஆளாய்த் தான் ஆனதைச் சொல்லும் அவர் நம்மையும் கூவி அழைத்து, தொண்டர் கூட்டத்தில் சேர வாரும் ஜெகத்தீரே என அழைக்கிறார்.
அவரது அன்பான அழைப்பை ஆணையாகவே பல தலங்களிலும் பட இடங்களிலும் அவர் கூறுகிறார்; வற்புறுத்துகிறார். ஏன், நம் மீது உள்ள அன்பினால், பரிவினால், பாசத்தினால்!
அவர் கூறிய அன்புரைகளில் அறிவுரைகளில் ஆணைகளில் ஒரு சிலவற்றை மட்டும் எடுத்துக்காட்டிற்காக இங்கு உங்கள் முன் வைக்கிறேன்.
திரு அங்க மாலையில் – தலையே நீ வணங்காய்! கண்காள் காண்மின் நெஞ்சே நீ நினையாய்!
இப்படி வாருங்கள், காணுங்கள், நினையுங்கள், வணங்குங்கள் என்ற அவரது அன்புரைகள், ஆணைகள் இது போல ஏராளம் அவரது பாடல்களில் பளிச்செனத் தென்படும்; அவற்றை ஏற்று உய்வோமாக.
இப்படிச் செய்வதால் ஏற்படும் பலன்கள் பற்றியும் பல நூறு பாடல்களில் அவர் கூறுகிறார். அவற்றையும் ஓதி உணர்வோமாக. சிவனடியார்க்கு சிவனைத் தொழுவதால் என்ன பயன்? ஒரே வரியில் கூறுவதென்றால அவர் வாக்காலேயே அதைக் கூறி விடலாம்.
“இன்பமே எந்நாளும் துன்பமில்லை”!
அப்பர் திருவடிகள் போற்றி!
இந்த வாய்ப்பினைக் கொடுத்த லண்டன் ஸ்ரீ கல்யா சிவாசாரியாருக்கு என் உளம் கலந்த நன்றியையைக் கூறி இங்கு குழுமியுள்ள கற்றறிந்த சிவனடியார்களுக்கு என் நமஸ்காரங்களைத் தெரிவித்து அமைகிறேன். நன்றி, வணக்கம்!
பிராமணன் ராவணன், ராவணன் பிராமணன்–கம்பர், அப்பர் செப்பல் (Post No.4393)
Written by London Swaminathan
Date: 13 NOVEMBER 2017
Time uploaded in London- 18-21
Post No. 4393
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
பூணூல் அணிந்த ராவணனை, “இரா+வண்ணன்= இருட்டு போலக் கருப்பு நிறத்தன்” என்று சொல்லி அவனுக்கு திராவிட முத்திரை குத்தும் அறிவிலிகள் உலகில் உண்டு! இப்படிப் பிரித்தாளும் சூட்சி உடையோர் தமிழ் நாட்டில் காலடி எடுத்து வைப்பர் என்று முன் உணர்வால் அறிந்து இராவணனுக்கு பிராமணன் என்று ‘அக்மார்க்’ முத்திரை வைத்துவிட்டனர் அப்பரும் கம்பரும். ஒருவர் சுமார் 1500 ஆண்டுகளுக்கும் மற்றொருவர் 1000 . ஆண்டுகளுக்கும் முன் வாழ்ந்தவர்.
அப்பர் நாலாம் திருமுறையில் ராவணன் பற்றிச் சொல்லுகையில் அவனுடைய பூணூலையும் சேர்த்துப் பாடுகிறார்.
அசுரர்கள் ராக்ஷசர்கள் தேவர்கள், நாகர்கள் முதலியோர் , ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்று நம் வேத, இதிஹாச புராணங்கள் பேசும்; ஆனால் வேற்றுமை பாராட்டி இந்துக்களைப் பிரிக்க விரும்பும் அரசியல்வாதிகளும், பிற மதத்தினரும் ஒரு சாராரை திராவிடர்கள் என்றும், பழங்குடி மக்கள் என்றும் சொல்லிப் பிரித்தாளுவர்.
எல்லாக் கதைகளிலும் சிவனிடமோ, பிரம்மாவிடமோ அசுரர்களும் வரம் வாங்கினர். அவர்களும் ஒரே கடவுளை வணங்கினர்; அந்தக் கடவுளரும் பாரபட்சமின்றி வரம் ஈந்தனர். ஆனால் உலக விதி, ‘அறம் வெல்லும், பாவம் தோற்கும்’ என்பதாகும். இதனால் வரம் பெற்றும் கூடத் தீயோர் வெல்ல முடியாது. ராவணனும் பல வரங்களைப் பெற்றும், செய்த தவற்றினால் உயிர் இழந்தான். ராவணன் பூணூல் பற்றி அப்பர் தரும் தகவல் இதோ:
மாலினா ணங்கையஞ்ச மதிலிலங் கைக்குமன்னன்
வேலினான் வெகுண்டெடுக்கக்காண்டலும் வேத நாவன்
நூலினானோக்கிநக்கு நொடிப்பதோ ரளவில்வீழக்
காலினாலூன்றியிட்டார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே
பொருள்:-
பெருமையுடைய உமா தேவியார் அஞ்சுமாறு, முப்புரிநூல் அணிந்த திரு மார்பினரும், வேதம் ஓதும் திரு நாவினை உடையவருமான இராவணன், கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க, ஈசன் ஒரு நொடிப்பொழுதில் அவ்வரக்கன் அஞ்சுமாறு திருப்பாத விரலால் அமுக்கியவர். அந்த ஈசன் உறையும் இடமே கழிப்பாலை என்னும் திருத்தலம்
வேத நாவர்- மறை ஓதும் நாவினை உடையோர்
நூலினான் – நூல்களை உணர்ந்தவன், பூணூல் அணிந்தவன்
இரண்டும் இராவணனைக் குறித்தன எனக் கொண்டு, சாம வேத கானம் பாடியவன், நூல்களை உணர்ந்தவன், பூணூல் அணிந்தவன் என்றுரைத்தல் பொருத்தம் உடைத்து என்று தருமபுர ஆதீனப் புலவரின் தேவார உரை கூறும்.
இதி வேதம் ஓதுதலையும், முப்புரி நூல் அணிவதையும் சிலர் சிவன் மீது ஏற்றிச் சொல்லுவர். அப்படிச் சொல்லும் வழக்கம் அரிது. அப்படிச் சொன்னாலும் அதை பிரம்மனுக்கே ஏற்றிச் சொல்லுவர்.
பூணூலும் வேத நாவும் ராவணனையே குறிக்கும் என்பதற்கு கம்ப ராமாயணம் துணை புரியும்; இதோ கம்பன் கூற்று:–
வையம் தந்த நான்முகன் மைந்தன் மகன் மைந்தன்
ஐயன் வேதம் ஆயிரம் வல்லோன் — என்று சுந்தர காண்ட நிந்தனைப் படலத்தில் ராவணனை வருணிக்கிறான் கம்பன்; இதன் பொருள்:-உலகைப் படைத்தவன் பிரம்மன்; அவன் மகன் புலஸ்தியன்; அவன் மகன் விசிரவசு; அவன் மகன் ராவணன்; ஆயிரம் கிளைகளை உடைய சாம வேதத்தில் வல்லவன்.
பிரம்மாவை வேதியன், பிராமணன் என்றே இலக்கியங்கள் போற்றும்
அக்க குமாரன் வதைப் படலத்தில் கம்பன் சொல்லுவான்:
அயன் மகன் மகன் மகன் அடியில் வீழ்ந்தனள்
மயன்மகள் வயிறு அலைத்து அலறி மாழ்கினாள் என்று. இதன் பொருளாவது– மயனுடைய மகளான மண்டோதரி தன் கணவனான ராவணனிடம் சென்று வயிற்றில் அடித்துக்கொண்டு அலறினாள்– சீதையை விட்டுவிடு என்று. ராவணனுக்குக் கம்பன் கொடுக்கும் அடை மொழி– பிரம்மனின் மகனான, புலஸ்தியன் மகனான, விசிரவசுவின் மகனான ராவணன் என்பதாகும்.
அதே சுந்தர காண்டத்தில் பிணிவீட்டு படலத்தில்,
“அந்தணன் உலகம் மூன்றும் ஆதியின் அறத்தின் ஆற்றல்
தந்தவன் அன்புக்கு ஆன்ற தவநெறி உணர்ந்த தக்கோய்” என்று சொல்லுவான்; உலகங்கள் மூன்றையும் ஆதிகாலத்தில் படைத்த அந்தணன் பிரம்மாவின் வழி வந்தவனே! என்று ராவணனை போற்றும் வரிகள் இவை. ஆக கம்பராமாயணம் முழுதும் ராவணன் ஒரு பிராமணன் என்று அடிக் கோடிட்டுக் கொண்டே செல்வான் கம்பன். இதன் காரணமாகவே தேவாரத்துக்கு உரை எழுதிய பெரியாரும் பூணுல் அணிந்ததையும் வேத பாராயணம் செய்ததையும் அப்பர் பாட்டில் ராவணனுக்கு உரித்தானதாகச் சொல்கி றார். நாம் அதை ஏற்பதில் தயக்கம் ஏதுமில்லை.
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
பல அடியார்கள் தங்களை நெருப்பு பற்றி எரியும் விறகில் அகப்பட்ட எறும்பு என்று உவமிக்கின்றனர். இது ஒரு அருமையான உவமை. எரியும் வீட்டில் நாம் சிக்கி விட்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்; நடு அறையில் மாட்டிக் கொண்டோம்; வாசல் பக்கம் போனாலும் தீ; கொல்லைப் புறம் சென்றாலும் தீ என்றால் நம் மனம் எப்படி இருக்கும்? இதைப் போலத் தவிக்கும் தவிப்புதான் இருதலைக் கொள்ளி எறும்பின் நிலை.
ராம கிருஷ்ண பரமஹம்சரிடம் சென்று இறைவன் இருக்கிறானா? என்று கேட்ட விவேகாநந்தரிடம் ‘இருக்கிறானே. உனக்கும் காட்டுகிறேன்’ என்று சொன்னவுடன் அதை விவேகாநந்தர் நம்பவில்லை; ஏன் எனில் அதற்கு முன்னர் பல போலி சாமியார்களைக் கண்டவர் அவர். ‘எங்கே காட்டுங்கள் பார்க்க்கலாம்’ என்று சொன்ன உடனே, விவேகாநந்தர் தலையில் அவர் கை வைத்தவுடன் அவர் மூச்சுத் திணறிப் போகிறார். எங்கும் கடவுள்; கை, கால் வைக்க இடமில்லை. அதாவது தண்ணீரில் மூழ்கி உயிருக்குப் போராடுபவன் நிலைமை. ராம கிருஷ்ண பரமஹம்சர் பின்னே சொல்கிறார்: ” தண்ணீரில் மூழ்கிவிட்ட ஒருவன், மேலே வந்து மூச்சு விட எவ்வளவு தவிப்பானோ அவ்வளவு தவிப்பு இருப்பவனே இறைவனைக் காண முடியும் என்று.
அப்பர், மாணிக்க வாசகர் எல்லாம் இப்படிப்பட்ட நிலையில் இருந்து , இறைவனையும் கண்டதால் தேவாரமும் திருவாசமும் பாடி, காலத்தால் அழிக்க முடியாத இடம் பெற்றனர். ஆயினும் நம்மைப் போன்றோருக்காக இப்படி ‘இருதலைக் கொள்ளி எறும்பு போல’ தவிப்பதாகப் பாடிச் சென்றனர். இதோ அப்பர் பெருமானின் அருட் புலம்பல்:–
உள்குவா ருள்ளத்தானை யுணர்வெனும் பெருமையானை
உள்கினே நானுங்கண்பா நுருகினே நூறியூறி
எள்கினே நெந்தைபெம்மா நிருதலை மின்னுகின்ற
கொள்ளிமே லெறும்பெனுள்ள மெங்கனங் கூடுமாறே
–நாலாம் திருமுறை
பொருள்
தன்னை நினைப்பவர்களின் உள்ளத்தில் நின்று அவர்களுடைய உணர்வாக நிற்பவன் இறைவன்.
அவரை நான் உள்கி, உருகி, ஊறி நின்று, அரியவராகக் கொள்ளாது எளியவனாகக் கருதினேன். இரு பக்கமும் நெருப்பு மின்னி எரிய , இடைப்பட்ட எறும்பு போல, என் உள்ளமானது பரிதவிக்கின்றது. ஈசனுடைய திருவடிப் பேற்றை அடைய வேண்டும் என்று உள்ளம் அலை பாய்கின்றது.
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
இறைவனின் புகழ்பாடுவோர் எல்லோரும் ஒரே விஷயத்தை அழகு தமிழில்- பழகு தமிழில் – சொல்லுகின்றனர். சிலர் நெற்றியில் மூன்று படுக்கைக் கோடுகளை (விபூதி) வரைகின்றனர்; மற்றும் சிலர் நெற்றியில் நெடுக்கைக் கோடு (நாமம்) வரைகின்றனர். எல்லாம் பூமியிலிருந்து கிடைப்பனவே; வேஷம் வேறானாலும் சொல்ல வந்த விஷயம் ஒன்றே; இதை அப்பர் என்னும் திருநாவுக்கரசர் பாடிய தேவாரப் பதிகங்களுடன் ஆழ்வார்கள் பாடிய திவ்வியப் பிரபந்த பாசுரங்களை ஒப்பிடுகையில் அறியலாம்.
இதோ ஓரிரு படல்கள் மட்டும்!
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு ஞானத் தமிழ் புரிந்த நான்— பூதத்தாழ்வார்
அறிவைக் கொடுக்கும் தமிழ் நூலை இயற்றிய நான் , அன்பு அகலாகவும்,ஆர்வம் நெய்யாகவும் இனிய மனத்தைத் திரியாகவும், மெய்யுணர்வு மயமான உள்ளுயிர் கிளர்ந்தெரியும் விளக்கை நாராயணனுக்கு ஏற்றினேன்
வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காக — செய்ய சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலைஇடராழி நீங்குகவே என்று — பொய்கையாழ்வார்
பொருள்:-
இந்த உலகமே ஒரு அகல்; அதைச் சூழ்ந்த கடலே அதிலுள்ள நெய்;செங்கதிரே/சூரிய ஒளியே தீச்சுடர் என்று ஒளி பொருந்திய திருமாலின் (ஆழியானின்) திருவடிகளுக்கு இடர்கள் நீங்க, நான் பாமாலை சூட்டினேன்
இடர் ஆழி= துயரக் கடல்
ஆழ்வார் பாடல்களை அப்பர் பாடலுடன் ஒப்பிடுங்கள்; அழகு புரியும்.
உடம்பெனும் மனையகத்து உள்ளமே தகளியாக
மடம்படு முணர்நெய்யட்டி யுயிரெனுந் திரிமயக்கி
இடம்படு ஞானத்தீயா லெரிகொள விருந்து நோக்கில்
கடம்பமர் காளை தாதை கழலடி காணலாமே
–நாலாந் திருமுறை
பொருள்-
உடம்பு என்னும் வீட்டில் உள்ளத்தை அகல் சட்டியாக்கி, அதில் உணர்வு என்னும் நெய்யை ஊற்றி, உயிரையே திரியாக வைத்து, ஞானத்தீயை ஏற்றினேன். கடம்ப மலர் மாலையை அணிந்த முருகனின் தந்தையான சிவனைக் காண்பதற்கான வழி இது.
உடலான வீட்டில், சிவமான பொருள் இருப்பது, மடமான இருளால் தெரிந்திலது; விளக்கேறிப் பார்த்துணர்தல் வேண்டும். உள்ளமான அகலுள் பசுஞானமான நெய் சேர்த்து, உயிரான திரியிட்டுச் சிவஞானமான தீயால் எரிதலைக்கொள்ள, அச்சிவஞானப் பிரகாசத்திலிருந்து நோக்கினால், சிவமான பொருளைக் காணலாம்.
கடம்பமர் காளை தாதை= கடம்ப மலர் மாலையை விரும்பும் முருகப் பிரானின் தந்தை
திருமங்கை ஆழ்வார்
ஓடினேன் ஓடிச்சென்று உருவங் காண்டலும் நாடினேன் நாடிற்று நமச்சிவாயமே—என்பார் அப்பர் எனும் திருநாவுக்கரசர்
வாடினேன், வாடி வருந்தினேன் மனத்தால்; பெருந்துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன்; கூடி இளையவர் தம்மொடு அவர் தரும் கலவியே கருதி
ஓடினேன்; ஓடி உய்வது ஒரு பொருளால் உணர்வு எனும் பெரும்பதம் திரிந்து
நாடினேன்; நாடி நான் கண்டுகொண்டேந் நாராயணா என்னும் நாமம்
என்பார் திருமங்கை ஆழ்வார். இப்படி ஒப்பிட்டுக்கொண்டே போகலாம்.
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
தேவாரத்தைப் பக்தியோடு படிப்பது ஒருவிதம்; ஓதுவாரின் இனிய குரலில் கோவில் பிரகாரங்களில் கேட்டு ரசிப்பது மற்றொரு விதம்; இலக்கிய நயத்துக்காக , இயற்கைக் கட்சிகளுக்காக, தமிழர் வரலாற்றுக்காக படிப்பது மற்றொரு ரகம். இதில் மூன்றாவது ரகத்தைச் சேர்ந்தவன் நான். அந்தக் காலத்தில் தர்மபுர ஆதீனம் வெளியிட்ட ஆராய்ச்சிப் பதிப்பு முதல் இந்தக் காலத்தில் வர்த்தமானன் பதிப்பகம் வெளியிட்ட அத்தனை பதிப்புக ளையும் புரட்டிப் புரட்டிப் பார்க்கும்போது புதுப் புது கருத்துகள் கிடைக்கும்; எனக்கு மட்டுமா? எல்லோருக்கும்தான்!
அது மட்டுமா? போகிறபோக்கில் மாணிக்கவாசகர், தனக்கு முன் வாழ்ந்தவர், மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் தருமி என்ற பிராமணனுக்கு சிவபெருமான் கவிதை எழுதிக் கொடுத்தது, மாமன்னன் மஹேந்திர பல்லவன் தன்னைக் கொடுமைப் படுத்தியது — எனப் பல வரலாற்றுக் காட்சிகளையும் நம் முன் அப்பர் படைக்கிறார். படிக்கப் படிக்கத் தெவிட்டாதது தேவாரம், திவ்யப் பிரபந்தம், திருமந்திரம், திருவாசகம்; எந்தக் கோணத்தில் இருந்து ஆராய்ந்தாலும் இன்ப மழை பொழியும்; அமிர்த தாரை வழியும்; பருகுவார் பருகலாம்.
பார்வதியைக் கண்டு பாம்பு பயந்ததாம்; பாம்பைக் கண்டு பார்வதி பயந்தாளாம்; இதை எல்லாம் வேடிக்கை பார்த்த சிவன் முடியில் உள்ள பிறைச் சந்திரன் ஏங்கியதாம்; இத்தனையையும் தன் தலையில் தாங்கிய சிவபெருமானுக்கு ஒரே சிரிப்பாம்! ஆனால் வாய் விட்டு கெக்கென்று சிரித்தால் காட்சி மறை ந்துவிடக் கூடுமல்லவா?ஆகையால் புன்முறுவல் பூத்தாராம் அகில புவனங்களையும் தன் ஆட்டத்தினால் (நட ராஜ)அசைவிக்கும் எம்பெருமான்!
இது அப்பர் கண்ட காட்சி; சிவ பெருமானை தினமும் பாடும் அப்பர், சொன்ன விஷயத்தையே திரும்பத் திரும்பச் சொன்னால் நமக்கு எல்லாம் ‘போர்’ (BORE) அடிக்கும் அல்லவா? ஆகையால் அவரும் அழகாக கற்பனை செய்கிறார்.
நிறையக் கொடுத்தால் திகட்டிவிடும்!
இதோ அப்பர் தேவாரத்தின் நான்காம் திருமுறையில் இருந்து இரண்டே பாடல்கள்:–
கிடந்தபாம்பு அருகுகண்டுஅரிவை பேதுறக்
கிடந்தபாம்பு அவளையோர் மயிலென்று ஐயுறக்
கிடந்தநீர்ச் சடைமிசைப் பிறையும் ஏங்கவே
கிடந்துதான் நகுதலைக் கெடில வாணரே
-திருவதிகை வீரட்டானப் பதிகம், நாலாம் திருமுறை
பொருள் சிவன் திருமுடியில் தவழும் பாம்பானது, சிவபெருமானின் இடப்பாகத்தில் வீற்றிருக்கும் உமா தேவியாரைக் (பார்வதி) கண்டு அஞ்சுகின்றது; ஏனெனில் அவள் மயில் போல இருக்கிறாள். உமாதேவியோ பாம்பைக் கண்டு பயப்படுகிறாள்; ‘பாம்பு என்றால் படையும் நடுங்கும்’ என்பது தமிழ்ப் பழமொழி அல்லவா? இதைப் பார்க்கும் சிவன் முடியிலுள்ள பிறை ஏங்குகின்றதாம்; கிரஹண காலத்தில் நிலவை விழுங்குவது பாம்பு அல்லவா? இதை எல்லாம் வேடிக்கைப் பார்க்கும் சிவனோ மென்முறுவல் பூக்கிறார்.
சிறுவர்களிடம் அச்சம் உண்டாக்க நாம் சில பொம்மைகளைப் போட்டுவிட்டு அவர்கள் பயப்படும்போது, கண்டு ரசிக்கிறோம் அல்லவா? அது போல சிவனும் சில விஷமங்களைச் செய்கிறார். ஆனால் குழந்தைகளைப் பயமுறுத்திய தாய் பின்னர் எப்படி குழந்தைகளை அனைத்து பயப்படாதே அவை வெறும் பொம்மை என்று ஆறுதல் சொல்லுவது போல ‘பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து அருளும் சிவன் எல்லோரையும் காப்பான்.
அப்பர் இதை ஒரு சிறிய நகைச் சுவை தோன்ற அமைத்து இருக்கிறார். இது போல சங்க இலக்கியப் பாடல்களிலும் நகைச் சுவை உண்டு. உண்மையான நவாப் பழங்களை (நாகப் பழம்) வண்டு என்று பயப்படும் குரங்குகளையும், வண்டுகளை நாகப்பழம் என்று நினைத்து வாயருகே கொண்டுபோகும் குரன்குகள், திடீரென்று அஞ்சி அவைகளை விட்டெறிவதையும் தமிழ்ப் பாடல்களில் கண்டு ரசிக்கலாம்.
இதோ இன்னும் ஒரு தேவரப் பாடலிலும் அப்பர் இதே கருத்தைச் சிறிது மாற்றிப் பாடுகிறார்:-
சிவபெருமான் திருமுடியில் தரித்திருக்கும் நாகத்தைக் கண்டு, கங்கையானவள் அஞ்சுகிறாள்; அந்த நங்கையை மயில் என்று கருதி நாகப் பாம்பு அஞ்சுகின்றது! சிவபெருமான் போர்த்தி இருக்கும் யானையின் தோல் கருப்பு நிறத்தில் மேகம் போலக் காட்சி தருகிறது. அதில் பிறைச்சந்திரன் பளிச்சென்று மின்னியவுடன் பாம்பு அதை இடி மின்னல் என்று நினைத்து அஞ்சுகின்றது (‘இடி கேட்ட நாகம் போல’ என்பது தமிழ்ப் பழமொழி) இத்தன்மையுடன் விளங்கும் பெருமானே ஆரூரில் வீற்று இருக்கிறான்.
மயில்- பாம்பு பகைமை, இடி- பாம்பு பகைமை, மனிதன்-பாம்பு பகைமை ஆகியவற்றைக் கொண்டு நயம்படப் பாடியிருக்கிறார் அப்பர் என்னும் திருநாவுக்கரச நாயனார்.
Pictures are taken from various sources such as google, Facebook friends, newspapers and Wikipedia for non-commercial use; thanks.
கரும்பு பிடிக்குமா? இரும்பு பிடிக்குமா?அப்பர் கேள்வி
கரும்பு பிடித்தவர் காயப்பட்டாரங்கொர் கோடலியால்
இரும்பு பிடித்தவரின் புறப்பட்டாரிவர்கணிற்க
அரும்பவிழ் தண்பொழில் சூழணி யாரூமர்ந்தபெம்மான்
விரும்பு மனத்தினை யாதென்று நானுன்னை வேண்டுவதே
–நாலாம் திருமுறை- தேவாரம், அப்பர்
மூவர் அருளிய தேவாரத்தைப் பல கோணங்களில் படிக்கலாம்.
சம்பந்தர் தன்னைப் பாடினார்
அப்பர் என்னைப் பாடினார்
சுந்தரர் பெண்ணைப் பாடினார்
என்று சிவன் சொல்லுவதாக சிலர் சொல்லுவர்; இது ஒரு கோணம்
தேவாரத்தில் வரும் இயற்கை வருணனை, சிவ பெருமானின் லீலைகள் வருணனை, திருத்தலங்களின் சிறப்பு, அவர்கள் செய்த அதிசயங்கள பற்றிய பாடல்கள், வரலாற்று உண்மைகள், சம்பவங்கள், திருநீறு முதலிய சின்னங்களின் மகிமை, தமிழ் மொழி அழகு, எதுகை, மோனை, பழமொழிகள், அக்காலத் திருவிழாக்கள் — என்று நாம் விரும்பும் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
நான் படித்தவரை, அதிசய நிகழ்ச்சிகளுக்கு சம்பந்தர் தேவாரமும் வரலாற்று நிகழ்ச்சிகளுக்கு அப்பர் தேவாரமும் மிக உதவும் என்று கண்டேன்.
சங்கம் பற்றியும், தருமி பற்றியும் அப்பர் பாடியதால், 1400 ஆண்டுகளுக்கு முன்னர்– சங்க காலத்தில் தமிழ்நாட்டில் நடந்த ஒரு புகழ்பெற்ற காட்சி நம் கண்களுக்கு முன்னே வருகிறது (திருவிளையாடல் சினிமாவிலும் காணலாம்)
நரியைப் பரியாக்கிய சம்பவத்தை அப்பர் என்னும் திருநாவுக்கரசர் சொன்னதால், மாணிக்க வாசகப் பெருமான் , அப்பருக்கும் சம்பந்தருக்கும் சற்று முன்னர் வாழ்ந்தவர் என்பதையும் அறிகிறோம்.
‘மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம், வைகலும் எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை ‘ — என்று சம்பந்தர் பாடியதைப் படிக்கையில் தற்காலத்தில் ராஜாஜி எழுதி எம்.எஸ். பாடிய “குறையொன்றுமில்லை, கோவிந்தா” என்ற பாடல் நினைவுக்கு வரும்.
சுருங்கச் சொன்னால் ரிக் வேதம், யஜூர் வேதம் போல எங்கே பார்க்கினும் பாஸிட்டிவ் எண்ணங்கள்! வீட்டில் ஒலித்தால் துன்பங்கள் யாவும் கரைந்துபோகும்.
ஒரு பாடலில் அப்பர் பெருமான கரும்பு பிடித்தவனுக்கும் இரும்பு பிடித்தவனுக்கும் என்ன நேர்ந்தது என்று பாடி, “ஏ, சிவ பெருமானே உனக்கு கரும்பு பிடிக்காதா? இரும்புதான் பிடிக்குமா?” என்று வியக்கிறார்.
சிவ பெருமானைப் பாடுகையிலும் கூட அரைத்த மாவையே அரைக்காமல் பல உண்மைச் சம்பவங்களைச் சொல்லி விடுகதை போடுகிறார் திருநாவுக்கரசர்! நாவுக்கு அரசன் அல்லவா?
Pictures are taken from different sources; thanks.
contact: swami_48@yahoo.com
பிறப்பு-இறப்பு என்னும் பெருங்கடலில் இருந்து தப்பிக்க என்ன வழி என்று அப்பரும், மாணிக்க வாசகரும் சொல்லும் வழிகள் இலக்கிய நயம் படைத்த பாடல்கள் ஆகும். முதலில் மாணிக்க வாசகர், திருவாசகத்தில் கூறியதைப் பார்ப்போம்:-
தனியனேன் பெரும்பிறவிப் பௌவத் தெவ்வத்
தடத்திரையா லெற்றுண்டு பற்றொன்றிக்
கனியை நேர் துவர் வாயாரென்னும் காலால்
கலக்குண்டு காமவாள் சுறவின் வாய்ப்பட்
டினி யென்னே யுய்யுமாறென்றென்றெண்ணி
அஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின்றேனை
முனைவனே முதலந்தமில்லா மல்லற்
கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே (27)
— திருவாசகம் திருச்சதகம்
பொருள்:
கடவுளே! நான் பிறவிப் பெருங்கடலில் (ஒப்பிடுக- குறள் “பிறவிப் பெருங்கடல் நீந்துவார்…..) விழுந்தேன்; துன்பங்கள் என்ற அலைகள் என்னை ஆட்டிப் படைக்கின்றன; கொவ்வைக்கனி போல சிவந்த வாயுடைய பெண்கள் என்ற புயற்காற்றும், காமம் என்னும் சுறாமீன்களும் (ஒப்பிடுக-ஆதிசங்கரரின் விவேக சூடாமணி ஸ்லோகம் 79, 141) என்னைப் பிடித்துவிட்டன. என்ன செய்வதென்று திகைத்தபோது ஐந்தெழுத்து என்னும் படகு கிடைத்தது. அதைப் பற்றிக்கொண்டு விட்டேன்; நீ என்னைக் காத்தருள்வாயாக.
பிறவிப் பெருங்கடல் என்பது கீதை முதலிய சம்ஸ்கிருத நூல்களில் காணப்படும் சம்சார சாகரம் என்பதன் தமிழ் வடிவமாகும்.
பக்தர்கள் இரண்டு வகை. பூனைக்குட்டி, குரங்குக் குட்டி போல இரண்டு வகையினர். ஆனால் மாணிக்க வாசகரும் அப்பரும் அதற்குப் பதிலாக ஏணியையும் தோணியையும் (படகு, தெப்பம்) பயன்படுத்துகின்றனர். ஐந்தெழுத்து என்பது நமசிவாய என்னும் அரிய பெரிய மந்திரம். யஜூர்வேதத்தில் ருத்ரம் என்னும் பகுதியில் அமைந்த மந்திரம் ஆகும்.
மற்கட நியாயம், மார்ஜர நியாயம்
இதை பல தருணங்களில் பல விஷயங்களை விளக்கப் பயன்படுத்தலாம். இருந்த போதிலும் பக்தர்களின் வகைகள் எத்தனை என்று விளக்க இதைப் பெரும்பாலும் பயன்படுத்துவர்.
பக்தி இலக்கியத்தைப் படைத்தவர்கள் பொதுவாக பக்தர்களை இரண்டு வகையாகப் பிரித்து இருக்கின்றனர். குரங்கு போன்ற பக்தர்கள், பூனை போன்ற பக்தர்கள் என்று.
குரங்குகள் என்ன செய்யும்? மரத்தை விட்டு மரத்துக்கு தாவிக் கொண்டே இருக்கும். அதனுடைய குட்டியும் கூடவே செல்ல வேண்டும்.. இதற்கு என்ன வழி? குரங்குக் குட்டி தனது தாயை இறுகக் கட்டிப் பிடித்துக் கொள்ளும். எத்தனை உயரத்தில் இருந்து குரங்குகள் கீழே குதித்தாலும், மேலே தாவினாலும் மிக மிக அபூர்வமாகவே குட்டி கீழே விழும். ஆக பக்தர்களில் குரங்கு போன்ற பக்தர்கள் தாமாகவே சென்று இறைவனைப் பிடித்துக் கொள்வார்கள். தமிழில் ‘குரங்குப் பிடி’ என்ற சொற்றொடரே இருக்கிறது.
மாணிக்கவாசகர் போன்ற அடியார்கள், “சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே” என்று பாடுவர்.
பூனைகள் என்ன செய்யும். குட்டி போட்ட பின்னர், தாய்ப் பூனை இடம் விட்டு இடம் போனால் குட்டியை தானே வாயில் கவ்விக் கொண்டு போகும். குட்டிகளோ வெறும் ஜடம் போல சும்மா இருக்கும். அதாவது எல்லாப் பொறுப்புகளையும் அம்மாவிடம் விட்டுவிட்டு அம்மாவே பார்த்துக்கொள்ளட்டும் என்று குட்டிப் பூனை பேசாமல் இருந்துவிடும். இது மற்றொரு வகை பக்தர்களுக்கு எடுத்துக்காட்டு.
சுருக்கமாக, நாமே சென்று கடவுளைச் சிக்கெனப் பிடித்தால் நாம் குரங்கு போன்ற பக்தர்கள். எதையுமே கேட்பதில்லை. கடவுள் விட்ட வழி என்று அவனைச் சரண் அடைந்து இருப்பவர்கள் பூனை போன்ற பக்தர்கள்.
இதே மற்கட, மார்ஜர நியாயத்தை அப்பர் பெருமான் தனக்கே உரிய பாணியில் வழங்குகிறார். அவர் பக்தர்களை 1.ஏணி வகை, 2.தோணி வகை என்று இரண்டாகப் பிரிக்கிறார்.
ஏணி என்ன செய்யும்? தாமாக மேலே ஏற முயன்றவர்களை மேலே ஏற்றிச் செல்லும். நாம் தான் ஜாக்கிரதையாகப் பிடித்துக் கொள்ளவேண்டும். இது மற்கட நியாயத்துக்கு சமம். எப்படிக் குரங்குக் குட்டிகள் தாயை இறுகப் பற்றியதோ அப்படி நாமும் ஏணியைப் பிடிக்கவேண்டும். இது ஏணி நியாயம்.
தோணி (படகு) வகைப் பக்தர்கள் எப்படிப்பட்டவர்கள்? படகில் ஏறிவிட்டால், படகோட்டியே நம்மை அக்கரைக்குக் கொண்டு செல்லுவான். அதற்குப் பின்னர் நம் வேலை எதுவும் இல்லை. இது பூனை வகை பக்தர்களுக்குச் சமம். இறைவனைச் சரணடைந்துவிட்டு ஆண்டவனே நீயே என்னை அக்கரைக்கு கொண்டு செல் என்று அவன் கையில் பொறுப்பை ஒப்படைத்து விடும் பக்தர்கள் இந்த வகையில் வருவர். இது தோணி நியாயம்.
இதோ பாருங்கள், அப்பர் பெருமானின் ஆறாம் திருமுறை தேவாரப் பாடலை:–
பேணிய நல் பிறை தவழ் செஞ்சடையினானை
பித்தர் தம் அடியார்க்கு முத்தி காட்டும்
ஏணியை, இடர்க்கடலுள் சுழிக்கப்பட்டு இங்கு,
இளைகின்றேற்கு அக்கரைக்கே ஏற வாங்கும்
தோணியை, தொண்டனேன் தூய சோதிச்
சுலா வெண்குழையானை, சுடர் பொன்காசின்
ஆணியை, — ஆவடுதண்துறையுள் மேய
அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்தேனே (6—461)
பொருள்: பிறை சூடிய பெருமான் (சிவன்), அவனுடைய பக்தர்களை முக்தி பெற அழைத்துச் செல்லும் ஏணி ஆவான். பிறவிக் கடல் என்னும் துன்பக் கடலில் சிக்கித் தவிக்கும் என்னை அக்கரைக்கு , அதாவது, முக்திக்கு அழைத்துச் செல்லும் தோணி போன்றவன் அவன். காதில் ஆடும் அழகான வெள்ளை நிறக் குழை அணிந்தவன். பொற்காசை உரைத்து பார்க்கும் கட்டளைக்கல் போன்றவன். குளிர்ந்த ஆவடுதுறையில் வசிக்கும் அவனைக் கடையனுக்கும் கடையேனாகிய நான் அடைந்து உய்வுபெற்று விட்டேன்.
இவ்வாறு திருக்குறள், விவேக சூடாமணி, தேவாரம், திருவாசகம் ஆகிய பல நூல்களில் ஒரே கருத்து நிலவுவது பாரதீய அணுகுமுறை ஒன்றே என்பதை எடுத்துக்காட்டும்.
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
காதல் வயப்பட்ட ஆணோ பெண்ணோ என்ன செய்வார்கள் என்று வடமொழியில் ஒரு அழகான ஸ்லோகம் இருக்கிறது. இதை அப்பர் என்னும் திருநாவுக்கரசர் பாடிய தேவாரப் பாடலுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது இன்பம் பயக்கும்.
அஷ்டாங்க மைத்துனம்
ஸ்மரணம் கீர்த்தனம் கேலி: ப்ரேக்ஷணம் குஹ்யபாஷணம்
சங்கல்போ(அ)த்யவசாயஸ்ச க்ரியாநிஷ்பத்திரேவ ச
-விருத்த வசிஷ்டர்
பொருள்:-
ஒரு பெண்ணை நினைத்த்ல், அவளைப் பற்றிப் பிதற்றல், , அவளுடன் விளையடல், அவளைப் பார்த்தல் (அடிக்கடி), அவளுடன் கிசுகிசு ரஹசியம் பேசல் (மொபைல்போன், பேஸ்புக், ஈ மெயில் மூலம்), அவளுடன் அனுபவிக்க வேண்டியது பற்றி எண்ணுதல்/கனவு காணுதல், அவைகளை அடைய திட்டமிடல்/முயற்சி செய்தல், இதன் காரணமாக செய்ய வேண்டிய கடமைகளை மறந்துபோதல் என்று அஷ்டாங்க மைதுனம் (எண்வகைப் புணர்ச்சி) பற்றி முதுவசிட்டன் சொல்லுகிறான்.
இந்தக் கருத்துகளை அப்பர் பெருமான் தனது தேவாரப் பாடலில் அப்படியே வடித்துள்ளார்:
அப்பர் தேவாரம்
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னம் அவளுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்;
அன்னையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தே ஆசாரத்தை
தன்னை மறந்தாள் தன் நாமங் கெட்டாள்
தலைப் பட்டாள் நங்கை தலைவன் றாளே
—–தேவாரம், ஆறாம் திருமுறை, பாடல் 258
சங்க இலக்கியத்தில் அகப்பாட்டுகளைப் படித்தோருக்கு காதலன், காதலியின் நிலை விளங்கும். அப்பர் கூறிய பக்திப் பித்தை, பைத்தியத்தை அங்கும் காணலாம்.
கடவுளை காதலனாக, தாயாக, தந்தையாக, நண்பனாக, எஜமானனாக,வேலைக்கரனாக பார்த்து உரிமை கொண்டாடும் அற்புதமான அணுகுமுறை இந்துமதத்தில் மட்டுமே உண்டு. இதை அடியார்களின் பாடலில் காணலாம். இமயம் முதல் குமரி வரை பல மொழிகளில் இக்கருத்துகள் உள. நமது காலத்தில் பாரதியார், இதே போல கண்ணபிரானைப் பாடிப் பரவியுள்ளார்.
பக்தனின் ஒன்பது நிலைகளை நாரத பக்தி சூத்திரம், பாகவதம் ஆகியவற்றிலும் காணலாம்.
அதாவது கடவுளின் நாமத்தைக் 1.கேட்டல், பக்திப் பரவசத்துடன் 2.பாடுதல், கடவுளின் பெயரை சதாசர்வ காலமும் 3.நினைத்தல், அவனுடைய பாதாரவிந்தங்களில் 4.பணிவிடை செய்தல், பூவாலும் இலையாலும் பொன்னாலும் மணியாலும் அவனை 5.அர்ச்சித்தல், அவனை சிரம் மேற் கைகூப்பி 6.வணங்குதல், அவனுக்கு 7.அடிமைபோல பணியாற்றல், அவனை உயிருக்குயிரான 8.நண்பனாகக் கருதல், இருதயபூர்வமாக 9.தன்னையே அர்ப்பணித்தல் ஆகிய ஒன்பது செயல்களைப் பக்தனிடம் காணலாம். இவைகளை ஆண்டவனுக்கு மட்டுமின்றி இறையடியார்க்கும் செய்வர்.
ஆக, பக்திப் பைத்தியமும் காதல் பைத்தியமும் ஒன்றே! இவ்வளவையும் எழுதிய நம்முடைய முன்னோர்கள் இன்னொரு விஷயத்தையும் தெளிவாக எழுதிவைத்து விட்டனர்.
பக்திப் பைத்தியம், பேரின்ப நிலைக்கு இட்டுச் செல்லும். அது நித்தியானந்தம், பிரம்மானந்தம் தரும். பக்திக்கடலில் நீந்தி, முக்தி நிலையை அடைந்து விடுவர்.
ஆனால் காதல் பைத்தியமோ, சிற்றின்பமே; மேலும் அது சம்சார சாகரத்தில் — அதாவது பிறவிப் பெருங்கடலில் – நம்மை மூழ்கடித்து, தத்தளிக்கச் செய்துவிடும். இது திகட்டக்கூடியது. முன்னது தெவிட்டாத சுவயுடைத்து என்பது ஆன்றோர்களின் அனுபவ மொழி!
You must be logged in to post a comment.