WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN
Post No. 10,312
Date uploaded in London – – 8 NOVEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 7-11-2021 அன்று ஒளிபரப்பான உரை!
தாள தாமரைத் தடமணி வயல் திருமோகூர்
நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரிகுழல் கமலக் கண் கனி வாய்
காளமேகத்தை அன்றி மற்றொன்றிலம் கதியே
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!
ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது 108 வைணவ திவ்ய க்ஷேத்திரங்களுள் ஒன்றாகத் திகழும் ‘தாள தாமரைத் தட வயல் சூழ்’ திருமோகூர் திருத்தலம் ஆகும்.இத்தலம் மதுரைக்கு வடகிழக்கே பத்து கிலோமீட்டார் தூரத்தில் உள்ளது.
மூலவர் திரு நாமம் : காளமேகப் பெருமாள்
உற்சவர் : திருமோகூர் ஆப்தன் என்று அழைக்கப்படுகிறார்.
தாயார் : மோகனவல்லி
ஸ்ரீ தேவி பூதேவி சமேதராய் கிழக்கு நோக்கி காளமேகப் பெருமாள் நின்ற கோலத்தில் இருந்து அருள் பாலிக்கிறார்.
பெருமாள் சந்நிதிக்குத் தெற்கே தாயார் சந்நிதி உள்ளது. தாயார் எந்தக் காலத்திலும் கோவில் படியைத் தாண்டியதில்லை. ஆகவே இவர் படி தாண்டாப் பத்தினி என்று பக்தர்களால் போற்றி வணங்கப்படுகிறார்.
ஸ்தல விருக்ஷம் : வில்வம் தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்
பகவான் மோகினி அவதாரம் எடுத்ததால் இந்த ஊர் திருமோனவூர் என்ற பெயரைப் பெற்றது. காலப் போக்கில் மருவி திருமோகூர் என்று இப்போது அழைக்கப்படுகிறது.
இத்தலத்தைப் பற்றிய புராண வரலாறு பிரசித்தி பெற்ற ஒன்று. திருப்பாற்கடல் கடையப்பட்டபோது அமிர்தம் வெளியாகவே அதைப் பெற அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் போட்டி ஏற்பட்டது. மஹாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களை மயக்கி விரட்டவே தேவர்கள் அமுதம் பெற்று மகிழ்ந்தனர். அவர் மோகினி வடிவம் கொண்டு அருள் பாலித்த இந்தத் தலத்திலேயே அவர் அர்ச்சாவதாரமாகக் காட்சி அளிக்குமாறு தேவர்கள் வேண்ட, அப்படியே அவர் இங்கு எழுந்தருளியுள்ளார்.
பிரம்மாண்ட புராணம் பிரம்ம தேவன் இங்கு தவம் இயற்றியதைக் கூறுகிறது.
மத்ஸ்ய புராணம் புகழும் தலம் இது. இத்தலம் பற்றி இன்னொரு வரலாறும் உண்டு. துவாபர யுகத்தில் புலஸ்திய மஹரிஷி தனக்குப் புத்திரன் வேண்டி இங்கு தவம் புரிந்தார். அவரது தவத்தை மெச்சி தரிசனம் தந்த காளமேகப் பெருமாள் அவருக்கு விஸ்ருவர் என்ற மகன் பிறக்க வரம் தந்தார். அவர் வேண்டுதலுக்கு இணங்க இங்கேயே மோகினியாகக் காட்சியளித்தார். இன்றும் காட்சி தருகிறார்.
இங்கு கோயிலின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பீஜாக்ஷரத்துடன் உள்ள சக்கரத்தாழ்வார் சந்நிதி மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். முன்புறம் சக்கரதாழ்வாராகவும் பின்புறம் நரசிங்கப் பெருமாளாகவும் காட்சி அளிக்கும் சக்கரத்தாழ்வார் 48 தேவதைகள் சுற்றிலும் இருக்க, 6 வட்டங்களுக்குள் 154 எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்க, 16 திருக்கரங்களில் 16 படைக்கலங்கள் ஏந்தி 3 கண்களுடன் காட்சி அளித்து அருள் பாலிக்கிறார். அவரது திருமுடி தீயென ஜொலிக்கிறது.
கிழக்கு நோக்கி அமைந்துள்ள பிரம்மாண்டமான திருக்கோவில் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் காணப்படுகிறது. இரு பிரகாரங்கள் உள்ளன. கோவிலின் இடப்புறத்தில் மிகப்பெரிய திருபாற்கடல் தீர்த்தம் உள்ளது. இந்தத் திருக்குளத்தில் அமுதம் கடையும் போது அதன் ஒரு துளி இதில் விழுந்ததால் அது இப்பெயரைப் பெற்றது. அதன் எதிரே பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில் உள்ளது. இன்றும் இயற்கைச் சூழல் மாறாமல் தாள தாமரைத் தடமணி வயல் சூழ் திருமோகூராகவே இத்தலம் இருப்பது இதன் தனிச் சிறப்பாகும்.
கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் வடகிழக்கில் பெருமாள் சயன கோலத்தில் காட்சி அளிக்கிறார். இத்தலத்தில் இவர் பிரார்த்தனா சயனத்தில் காட்சி அளிப்பது ஒரு சிறப்பாகும். காளமேகப் பெருமாள் சந்நிதிக்கு வடக்குப் பகுதியில் ஆண்டாள் சந்நிதி உள்ளது. ஆஞ்சநேயர், நவநீதகிருஷ்ணன் சந்நிதிகளும் பிரகாரத்தில் தெற்கே வடக்குப் பார்த்து தரிசனம் தருகின்றனர்.
நம்மாழ்வார் பல தலங்களுக்கும் சென்று மங்களாசாஸனம் செய்துள்ள போதிலும் இங்குள்ள காளமேகப் பெருமாளே அவருக்கு மோக்ஷம் அடைய வழிகாட்டி அருளினார் என்பது இந்தத் தலத்தின் தனிச் சிறப்பாகும். இங்கு, ஒரே கல்லினால் ஆன பல அருமையான சிற்ப வேலைப்பாடுகள் பார்ப்பவரை பிரமிக்க வைக்கும். பாண்டிய மன்னர்கள், நாயக்க மன்னர்கள், சிவகங்கை மருது பாண்டியர் உள்ளிட்ட ஏராளமான மன்னர்கள் இக்கோவிலில் பல திருப்பணிகளைச் செய்து வந்துள்ளனர்.
நம்மாழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் இத்தலம் பற்றி மங்களாசாஸனம் செய்து அருளியுள்ளனர். இந்தத் தலம் பற்றி சங்க இலக்கியப் பாடல் கூறுகிறது. அது மட்டுமின்றி, அண்மைக்காலம் வரை ஏராளமான இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளன
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் காளமேகப்பெருமாளும் மோகனவல்லித் தாயாரும் சக்கரத்தாழ்வாரும்அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
நம்மாழ்வாரின் அருள் வாக்கு
இது:
துயர் கெடும் கடிதடைந்து வந்து அடியவர் தொழுமின்
உயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திருமோகூர்
பெயர்கள் ஆயிரமுடைய வல்லரக்கர் புக்கழுந்த
தயரதன் பெற்ற மரகதமணித் தடத்தினையே
நன்றி, வணக்கம்!
tags–திருமோகூர் ,ஆலயம் அறிவோம்,