நாலு குணங்கள் பற்றி வள்ளுவனும் வால்மீகியும் (Post No.5287)

Written by London swaminathan

Date: 4 August 2018

 

Time uploaded in London – 7-31 am  (British Summer Time)

 

Post No. 5287

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

நான்கு குணங்கள் அவசியம் என்று வள்ளுவனும் வால்மீகியும் வலியுறுத்துகின்றனர்.

 

ஸிம்ஹிகை என்னும் கடல் அரக்கியை ஹனுமார் கொன்றவுடன் ஆகாசத்திலுள்ள பூதங்கள் சொன்னார்கள்: உம்மால் பெரும் பூதம் கொல்லப்பட்டது. நீர் எண்ணிய எண்ணியாங்கு எய்துவீர். மேலும்,

 

யஸ்யத் வேதானி சத்வாரி வானரேந்த்ர யதா தவ

த்ருதிர் த்ருஷ்டி மதிர் தாக்ஷ்யம் ஸ்வகர்மஸு ந  ஸீததி

 

சுந்தர காண்டம் 1-216

 

பொருள்

“வானரேந்திரனே!

தைரியம் (உறுதி),

தீர்க ஆலோசனை (கண்ணோட்டம்) , புத்தி,

வலிமை

என்ற இந்த நான்கும் உமக்கு எப்படியோ அப்படி எவனுக்குண்டோ அவன் தனது கார்யங்களில் இடையூறுகளே இராது”

 

இதே கருத்தை வள்ளுவன் இரண்டு இடங்களில் சொல்வான்

 

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்

எஞ்சாமை வேந்தர்க் கியல்பு – குறள் 382

 

பொருள்

அஞ்சாமை,

ஈகை,

அறிவு,

ஊக்கம்-

இந்த நான்கு பண்பு நலன்களும் இருப்பதே தலைவனுக்கு (அரசனுக்கு) சிறப்பு

 

இதையே இன்னும் ஒருமுறை எதிர்மறையில் கூறி வலியுறுத்துகிறார்:–

அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்

தஞ்சம் எளியன் பகைக்கு–குறள் 863

 

 

பொருள்

எதற்கும் அஞ்சுபவனாய் ,

எதனையும் தெரிந்து கொள்ளும் ஆற்றல் அற்றவனாய் ,

பிறரோடு அனுசரித்து வாழும் குணமில்லாதவனாய்,

உலோபக் குணமும்

உடையவனாக  ஒருவன் இருந்து விட்டால் அவன் பகைவர்க்கெல்லாம்  மிக எளியவன் ஆவான்

 

 

ஈகை,(லோபத்துக்கு எதிர்ப்பதம்) ஒன்று மட்டும்தான் வால்மீகிக்கும் வள்ளுவனுக்கும் வேறுபாடு ;மற்ற குணங்கள் அப்படியே இருக்கின்றன!

சான்றோர்  சிந்தனை ஒன்றே!

 

xxx

 

Picture of Tiruvalluvar  from old Tamil Book

தூது பற்றியும் இரண்டு பாடல்கள் உள்ளன

பூதாஸ்சார்த்தா விபத்யந்தே தேஸகால விரோதிதாஹா

விக்லபம் தூதமாஸாத்ய தமஹ ஸூர்யோதயே யதா

-ஸுந்தர காண்டம்

காரியங்கள் முடியக்கூடியனவாக  இருந்த போதிலும் ஸ்திரபுத்தியில்லாத தூதனை அடைந்து தேச காலங்களுக்கு மாறுபட்டு, ஸூர்யோத கால இருள் போல அழிந்து விடுகின்றன.

 

அதாவது நிலையான புத்தியில்லாத தூதனால் செயல்கள் கெட்டுவிடும்.

 

அர்த்தானர்த்தாந்தரே புத்திர்நிஸ்சிதாபி ந சோபதே

தாதயந்தி ஹி கார்யாணி தூதாஹா பண்டிதமனினஹ

 

இது செய்யக்கூடியது, செய்யத் தகதது என்பது நன்றாய் முடிவு செய்தபோதிலும், காரியங்கள் கெட்டுப்போகின்றன.ஏனென்றால் எல்லாம் தெரிந்தவன் என்று எண்ணாத்தால் தூதர்கள் காரியங்களைக் கெடுத்து விடுகிறார்கள்.

 

 

தூது என்னும் அதிகாரத்தில் வள்ளுவனும்,

 

கடனறிந்து காலம் கருதி இடனறிந்து

எண்ணி உரைப்பான் தலை -குறள் 687

 

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்

வாய்மை வழியுரைப்பான் பண்பு- குறள் 688

 

 

பொருள்:

தான் ஆற்ற வேண்டிய செயலை உணர்ந்து, ஏற்ற காலத்தையும் நினைத்து, தக்க இடத்தையும் தேர்ந்து, தான் சொல்ல நினைத்தவற்றை எல்லாம் தக்கவாறு எண்ணித் தெளிவுபட உரைப்பவனே சிறந்த தூதன் ஆவான்.

 

மனம், மொழி, மெய் தூய்மை, சுற்றத்தால் அமைந்த துணை, துணிவு ஆகிய மூன்றிலும் உறுதியாக இருப்பவனே சி றந்த தூதன்.

 

இந்த இரண்டிலும் ஸ்திரமான புத்தி வந்துவிடுகிறது. மனம் மொழி மெய் தூய்மையில் அஹங்காரமின்மை வந்து விடுகிறது.

 

  • xxxx SUBHAM xxxx
Leave a comment

Leave a comment