தமிழ் நாட்டு பிசிராந்தையாரும் கிரேக்க நாட்டு பிதியாஸும் (Post No.5776)

தமிழ் நாட்டு பிசிராந்தையாரும் கிரேக்க நாட்டு பிதியாஸும் (Post No.5776)

Research Article written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 13 December 2018


GMT Time uploaded in London – 18-28

Post No. 5776


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

கிரேக்க நாட்டு (கிரீஸ்) இலக்கியத்தில் அழியாத இடம் பெற்ற கதை பிதியாஸ்- டாமன் (Pythias- Damon) நட்புறவுக் கதை. அதை சங்க கால இலக்கிய பிசிராந்தையார்- கோப்பெருஞ்சோழன் கதையுடன் ஒப்பிட்டுப் பார்க்கவே இந்த ஆராய்ச்சிக் கட்டுரை.

நட்பின் இலக்கணம் என்ன?

வள்ளுவன் தமிழ் வேதமான திருக்குறளில் அழகாகச் சொல்லிவிட்டான்:

முகநக நட்பது  நட்பன்று நெஞ்சத்து

அகநக நட்பது நட்பு-786

பொருள்

ஒருவரை ஒருவர் சந்தித்துச் சிரித்துப் பேசுவது உண்மையான நட்பு அல்ல; மனத்தளவில் உள்ளன்போடு ஒருவரை ஒருவர் போற்றுவதும் பாராட்டுவதுமே நட்பு

இதற்கு முன்னுள்ள குறளில் இன்னும் தெளிவாகச் சொல்கிறார்:-

புணர்ச்சி பழகுதல்  வேண்டா உணர்ச்சிதான்

நட்பாம் கிழமை தரும் – 785

பொருள்

நட்பு கொள்வதற்கு ஒருவரை ஒருவர் அடிக்கடி சந்தித்து, கட்டித் தழுவி, கை குலுக்கிப் பேச வேண்டும் என்பது  தேவையல்ல; ஒரே மாதிரியான சிந்தனையே (same wave length) நட்பு என்னும் உரிமையைக் கொடுத்துவிடும்.

இதற்கு முன்னுதாரணமான கதை கோபெருஞ்சோழன்  –  பிசிராந்தையார் கதையாகும்.

பலரும் அறியாத பிதியாஸ் – டாமன் கதையை முதலில் பார்த்துவிட்டு பிசிராந்தையாருக்கு வருவோம்.

கிரேக்கநாட்டின் மிகப்பெரிய தத்துவ அறிஞர் பிதகோரஸ் (Pythagoras) . அவர் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். அவரும் வள்ளுவரைப் போலவே நட்பின் இலக்கணத்தை வரையரை செய்துள்ளார். அது என்ன? அதற்கு முன்னுதாரணமான கதைதான் — உண்மைக் கதைதான்  — பிதியாஸ் கதை.

பிதியாஸும் டாமன்   என்பவரும் இணை பிரியாத் தோழர்கள். கிரேக்க நாட்டின் தற்போதைய தலைநகரான ஏதென்ஸில் வாழ்ந்தவர்கள். ஒருமுறை அவர்கள் சைரக்யூஸ் (Syracuse) நகருக்கு வந்தனர். அங்கு டயோனிஸியஸ் (கி.மு. 405-367) என்ற கொடுங்கோலன் ஆட்சி நடாத்தி வந்தான். பிதியாஸ் ஒரு உளவாளி என்று எண்ணி சிறைப் பிடித்தான். எவ்வளவோ மன்றாடியும் மன்னன் விடுவதாயில்லை. மரண தண்டனையும் விதித்தான். இதைக் கேட்ட அவனது ஆருயிர்த் தோழன் டாமன் மனம் வெதும்பினான்.

பிதியாஸ், சாவதற்கு அஞ்சவில்லை. ஆனால் தொலை தூரத்தில் வசிக்கும் தனது தாயார் உடல் நலம் குன்றி இறந்துவிடும் நிலையிலிருந்ததால் மன்னரிடம் ஒரே ஒரு வேண்டு கோள் மட்டும் விடுத்தான்.

“என்னுடைய மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்னர், என் தாயாரை மட்டும் தரிசித்துவிட்டு, விடை பெற்று வருகிறேன்; அனுமதி தாருங்கள்; நான் ஓடி விடமாட்டேன்; கட்டாயம் திரும்பி வருவேன்; என்னை நம்புங்கள்” — என்றான்.

கொடுங்கோலன் டயோனிஸஸ் அதை நம்பவில்லை; உன் தாயாரோ தொலைதூர கிராமத்தில் வசிக்கிறாள்; உன்னை வெளியே விட்டால், நீ கூண்டுக் கிளியாகப் பறந்து விடுவாய். நீ திரும்பி வருவாய் என்று நம்புவதற்கு நான் என்ன இளிச்சவாயனா; முடியாது போ– என்றான்.

அப்போது அங்கே டாமன் பிரவேசித்தான்.

மன்னர் மன்னவா; பிதியாஸ் என்னுடைய ஆப்த சிநேகிதன்; அவனுக்கு நான் உத்தரவாதம் தருகிறேன்; அவன் சொன்ன நாட்களுக்குள் திரும்பி வராவிடில், நான் மரண தண்டனையை ஏற்கிறேன்; அவனை விடுத்து அந்த கை விலங்குகளை எனக்குப் பூட்டுங்கள். அவன் வராவிடில் என்னைக் கொல்லுங்கள்- என்றான். மன்னரும் கை விலங்கை மாற்றி பிதியாஸை அனுப்பிவிட்டு டாமனைப் பிடித்து சிறையில் தள்ளினான்.

அம்மாவைப் பார்க்கச் சென்ற பிதியாஸ் வரும் அறிகுறியே இல்லை; நாளையுடன் கெடு முடிகிறது.பிதியாஸ் வராவிட்டால் டாமன் தலை உருளுவது நிச்சயம். ஆனால் டாமநோ கொஞ்சமும் அஞ்சவில்லை. கெடு முடிவதற்குள் பிதியாஸ் வருவது உறுதி என்று கருதினான்.

கெடு முடியும் தருவாய். டாமனை மரண தண்டனை மேடைக்கு இட்டுச் சென்றனர். அப்போது வாசலில் ஒரே ஆரவாரம். காவல் காரன் ஓடி வந்து பிதியாஸ், அரண்மனையை நோக்கி வந்து கொண்டிருப்பதாக அறிவித்தான். உடனே அவனை இங்கே அனுப்பு என்றான் மன்னன்.

பிதியாஸ் மூச்சு இளைக்க இளைக்க பேசினான்,

மன்னர் மன்னவா என்னை மன்னியுங்கள்; என் அருமை நண்பன் டாமனை பெரிய இக்கட்டில் வைத்தது என் தவறே. நான் வரும் வழியில் பருவ மழை கொட்டி கப்பல் திணறிப்போய் தாமதமாகிவிட்டது. டாமனை விடுங்கள் நான் உங்கள் கட்டளைப்படி மரண தண்டனையை ஏற்பேன் என்றான்

இதைக்கேட்ட மாத்திரத்தில் கொடுங்கோல் மன்னனின் மகன், மரண தண்டனையை நிறை வேற்றும் வெட்டியான் ஆகியோர் கண்களில் கண்ணிர் பெருகியது

அரிய நட்பின் பெரிய சின்னம் பிதியாஸ்- டாமன் நட்புறவு என்பதை அறிந்த கொடுங்கோல் மன்னன் டயோனிஸஸ், இருவரையும் விடுதலை செய்தான். நீங்கள் இருவரும் என்னுடனும் நப்பு பாராட்டுங்கள் என்று இறைஞ்சினான்.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

இப்போது எல்லோரும் அறிந்த பிசிராந்தையார்- கோப்பெருஞ் சோழன்  கதையைக் காண்போம்.

கோப்பெருஞ் சோழனை அவனுடைய மகன்கள் எதிர்த்தபோது, எயிற்றியனார் என்னும் புலவர் சொற்படி, நாட்டை மகன்களிடம் ஒப்படைத்துவிட்டு வடக்கிருந்தார். வடதிசை புனிதமான திசை என்பதால் பாண்டவ சஹோதர்கள் போல வடதிசை நோக்கி நடந்து கொண்டே இருந்து பூமியில் உடல் விழுந்து இறப்பர் பலர்; சிலர் இருந்த இடத்திலேயே வடதிசை நோக்கி அமந்து இறப்பர்; இந்த உண்ணா விரதத்துக்கு பிராயோபவேசம் என்று பெயர். ராமாயணத்தின் கிஷ்கிந்தா காண்டத்திலும் புறநானூற்றிலும் காணலாம்.

கோபெருஞ் சோழன் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதை அறிந்து பலரும் அவருடம் பந்தலில் உடகார்ந்து உயிர்துறந்தனர். பொத்தியார் என்ற புலவரை மட்டும் சோழன் திருப்பி அனுப்பிவிட்டான். நீ ஆண் குழந்தை பிறந்த பின்னர்தான் இப்படி சாக முடியும் என்று வீட்டுக்கு அனுப்பிவிட்டான். ஆனால் மன்னர், ஒரு ஆசனத்தை மட்டும் பிசிராந்தையாருக்காக ‘ரிஸர்வ்’ செய்தான். எல்லோருக்கும் ஆச்சர்யம். மன்னரே; அவரோ தொலைதூரத்தில் உள்ளார் உம்மையோ பார்த்ததே இல்லை. அவரை நண்பர் என்று சொல்லி இடம் ஒதுக்கச் சொல்கிறீரே என்று வியந்தனர்.

அதற்கு சோழன் பதில் சொல்கிறான்

தென்னம் பொருப்பன் நல் நாட்டுள்ளும்

பிசிரோன் என்பஎன் உயிர் ஓம்புநனே;

செல்வக் காலை நிற்பினும்

அல்லற்காலை நில்லலன் மன்னே (புறம் –215)

பொருள்

பாண்டிய நாட்டில் தொலைதூரத்தில் பிசிர் என்னும் ஊரில் என் நண்பன் இருப்பதாகச் சொல்லுவர். அவன் எனக்கு செல்வம் இருந்த காலத்தில் வாராவிட்டாலும் துன்பம் வந்த காலத்தில் வாராது இருக்க மாட்டான்

அவர் சொன்னபடியே பிசிர் வந்தார்! உசிர் தந்தார்!!

அவருடைய ஆரூயிர் நண்பர் புலவர் பிசிராந்தையார். இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்ததே இல்லை. ஆயினும் சோழன் எதிர்பார்த்தது போலவே பிசிராந்தையாரும் சாகும் வரை உண்ணா நோன்பில் கலந்து உயிர்நீத்தார்.

பிதியாஸ் கதைக்கு ஆதாரம்-  கிரேக்க  ஆசிரியர் அரிஷ்டசேன, ரோமானிய ராஜதந்திரி சிஸரோ, கிரேக்க ஆசிரியர் டியோதரஸ் சிகுலஸ்

பிசிராந்தையார் கதைக்கு ஆதாரம்- புறநானூறு பாடல்கள் 213-223

பிசிராந்தையார் யார்?

சங்க காலப் புலவர். அவர் பாடிய நரை முடி இல்லாமைப் பாடல் மிகவும் பிரஸித்தம்:

ஐயா, தொண்டுக் கிழமாகிவிட்டீரே; முடி மட்டும் கருக்கவில்லையே; ஏதேனும் கூந்தல் வளர் தைலம் தடவுகிறீரோ என்று எல்லோரும் வியப்புடன் பார்க்கின்றனர். அவர் சொல்லுகிறார்:- ஐயன்மீர் என் வீட்டிலும் ஓம் சாந்தி, நாட்டிலும் ஓம் சாந்தி, என் மனதிலும் ஓம் சாந்தி; இப்படி சாந்தி நிலவுகையில் முடி எப்படி நரைக்கும்? என்று பாடுகிறார்:–

யாண்டு பலவாக நரையில வாகுதல்

யாங்கா கியரென வினவுதிராயின்

மாண்டவென் மனைவியொடு மக்களும் நிரம்பினர்;

யான்கண் டனையர் என் இளையரும்: வேந்தனும்

அல்லவை செய்யான்காக்கும்அதன் தலை

ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச்

சான்றோர் பலர் யான் வாழும் ஊரே

——(புறநானூறு ,பாடல் எண். 191)

 பொருள்:-

நுமக்குச் சென்ற ஆண்டுகளோ  பலவாயின; இருந்தும் நரைமுடி காணவில்லை. இது எப்படி? என்று கேட்கிறீர்களா?

என் மனைவி நல்லவள்; என் பிள்ளைகள் கெட்டிக்காரர்கள்; என்னிடம் பணிபுரியும் ஏவலரோ நான் ‘எள் என்றால் எண்ணை யாக’ நிற்பர்; குறிப்பறிந்து ஒழுகும்  தன்மையர். என் அரசன், எந்த தவற்றையும் செய்யான்; இதற்கெல்லாம் மேலாக என் ஊரிலுள்ள அறிஞர்கள் புலன்களை வென்று, உயர்ந்த குறிக்கோள் உடையவர்கள். (எனக்கு கலையே இல்லை; கவலை இல்லாதோருக்கு நரை முடி வராதே!)

புறநானூற்றிலுள்ள (பாடல் 191) படுத்தும்.

xxx

பிதியாஸ் – டாமன் கதை திரைப்படங்களாகவும் நாடகங்களாகவும் பரவியிள்ளது. அவர்கள் நட்புறவு பற்றிய பாடல்களும்  உண்டு.

கிரேக்க கதை காட்டும் மற்ற உண்மைகள்

1. இந்துக்களைப் போலவே அவர்களும் சொன்ன சொல் மீறாதவர்கள். அரிசந்திரனை நினைவு படுத்துகிறது பிதியாஸ் கதை.

2.நட்புறவின் சிறப்பு; பஞ்ச தந்திரக் கதைகளின் முதல் பகுதியே நட்புறவின் சிறப்பைப் பற்றியதே; குசேலர்- கிருஷ்ணரின் நட்புறவு மற்றொரு எடுத்துக் காட்டு; உயிர் காப்பான் தோழன். சார்ல்ஸ் டிக்கன்ஸ் எழுதிய ‘எ டேல் ஆப் டூ சிட்டிஸ்’  (A Tale of Two Cities by Charles Dickens)  நாவலில் சிட்னி கார்ட்டனின் தியாகமும் நினைவு கூறத்தக்கது.

3. தாயைக் காண பிதியாஸ் மன்றாடியது- மாதா, பிதா குரு தெய்வம் என்ற வசனத்தை நினைவு படுத்தும்.

2500 ஆண்டுகளுக்கு முன்பு உலகம், தார்மீக ரீதியில் உளுத்துப் போகாமல் இருந்தது. போகப் போக  கழுதை தேய்ந்து ட்டெறும்பு ஆகி விட்டது.

வாழ்க நட்புறவு!

tags–நட்புறவு, 

பிசிராந்தையார், பிதியாஸ்- டாமன்

–subham–

Leave a comment

3 Comments

  1. இது அருமையான, ஆழ்ந்த கருத்து.
    ஒருவரையொருவர் காணாமலேயே நட்பு …இது பின்னர் காதலாகவும் மலர்கிறது, பக்தியாகவும் முதிர்கிறது ! ருக்மிணி கிருஷ்ணருக்கு எழுதிய கடிதத்தில் , அவர் குணங்களை/புகழைக் கேட்டே காதல் கொண்டதாகத்தானே எழுதுகிறார் !
    இந்தக் கருத்தை நமது சினிமாக்காரர்கள் விட்டுவைப்பார்களா? சில பாடல்களில் அருமையாக விளக்கியிருக்கிறார்கள்.
    जाने न नज़र पहचाने जिगर
    ये कौन जो दिल पर छाया
    मेरा अंग अंग मुस्काया –
    ஜானே ந நஃஜர் பஹசானே ஜிகர்
    யே கௌன் ஜோ தில் பர் சாயா
    மேரா அங்க் அங்க் முஸ்காயா
    बिन देखे जिसको प्यार करूँ
    गर देखूँ उस को जान भी दूँ
    பின் தேகே ஜிஸ்கொ ப்யார் கரூ (ன்)
    கர் தேகூ(ன்) உஸ்கோ ஜான் பீ தூ(ன்)
    கண் காணாவிட்டாலும் மனதிற்குத் தெரிந்துவிடும்
    இது யார், மனதில் வந்து நிறைந்தது!
    என் உடல் முழுதும் பூரித்துப் போகிறதே !
    யாரப் பார்க்காமலும் அன்பு கொள்கிறோமோ
    அவரைப் பார்க்க உயிரையும் தருவோம் !
    [ இது 1953ல் வந்த ஆஹ் (Aah) என்ற படத்தில் கவிஞர் ஹஸ்ரத் ஜய்புரி எழுதிய பாடல். இதை தமிழில் டப் செய்த போது தமிழ்க்கவிஞர் “கம்பதாசன்” மிக அருமையாக மொழிபெயர்த்தார்:
    “கண் காணாததும் மனம் கண்டுவிடும்……உடலெங்கும் பொங்கும் கனலாச்சே” என்று வரும். முழுப்பாடலும் நினைவிலில்லை]

    रुक जा ओ जाने वाली रुक जा
    मैं तो राही तेरी मंज़िल का
    ருக் ஜாவோ ஜானேவாலீ ருக் ஜா
    மை தோ ராஹீ தேரி மன்ஃஜில் கா…
    ஓ இங்கிருந்து போய்க்கொண்டிருப்பவளே, சற்று நில்
    நானும் அதே இடத்திற்குத்தான் வந்துகொண்டிருக்கிறேன்!
    देखा ही नहीं तुझको
    सूरत भी न पहचानी
    உன்னை நான் பார்த்ததுகூட இல்லை
    உன் முகமும் எனக்குத் தெரியாது

    मुद्दत से मेरे दिल के
    सपनों की तू रानी है
    अब तक न मिले लेकिन
    पहचान पुरानी है
    முத்தத் ஸே மேரே தில் கே
    ஸப்னோ (ன்) கீ தூ ரானீ ஹை
    அப் தக் ந மிலே லேகின்
    பஹசான் புரானீ ஹை
    வெகு நாட்களாகவே நீதான் என் மனதின் ராணியாக இருக்கிறாய்
    இதுவரை நாம் சந்தித்ததில்லை, ஆனால் நமது பரிச்சயம் நாள்பட்டது !
    [இது 1959 வருஷத்திய Kanhaiya படத்தில் ஷைலேந்த்ரா எழுதிய பாடல்.]
    இது சினிமா பாடலாக இருந்தாலும். ஆழ்ந்த பொருளைக்காணலாம்.

    இத்தகைய உணர்வே முதிர்ந்த நிலையில் பக்தியாகிறது. கடவுள் நினைவும் பழைய “வாசனை” தானே !பூர்வ ஜென்ம கர்மத்தினால் தானே “தெய்வம் என்பதோர் சித்தம்” வருகிறது! “ஏடுடைய மலரால் முனை நாள் பணிந்தேத்த அருள் செய்த” என்று சம்பந்தர் பாடுகிறார். இன்றைய பக்தி பழைய நினைவுகளின் தொடர்ச்சியே போலும்!

  2. both stories – hearing for the first time. Thanks.

  3. Santhanam Nagarajan

     /  December 15, 2018

    அவன் 1953இல் வெளி வந்த படம் ஏ.எம்.ராஜா ஜிக்கி பாடிய பாடல் நேரடியாக மொழி பெயர்க்காமல் உதடசைவுக்குத் தக்கபடியும் பொருள் கருதியும் மொழி பெயர்த்த பாடல் இது என்றார் கம்பதாசன். காலத்தை வென்ற பாடல்

Leave a comment