அதிதி தேவோ பவ; உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே! (POST NO.3796)

Written by London swaminathan

 

Date: 7 APRIL 2017

 

Time uploaded in London:- 14-55

 

Post No. 3796

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

விருந்தோம்பல் என்னும் பண்பை தமிழ், சம்ஸ்கிருத இலக்கியம் வலியுறுத்துவது போல உலகில் வேறு எங்கும் காணமுடியாது.

காளிதாசனும், சங்க இலக்கியப் புலவர்களும் இந்தப் பண்பை எப்படி வலியுறுத்துகின்றனர் என்று ஒரு சில எடுத்துக்காட்டுகளின் மூலம் காண்போம்.

 

ஆரிய-திரவிடப் பிரிவினைகள் பொய்மையானவை என்பதும்  இந்திய கலாசாரம் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே ஒரே கலாசாரம்தான் என்பதும் இந்த ஒரு பண்பில் — விருந்தோம்பல் — என்னும் பண்பில் தெரிந்துவிட்டது. விருந்தினர்களைக் கவனிக்க முடியாத நிலை வந்துவிட்டதே என்று சீதையும் கண்ணகியும் வருத்தப்பட்டதை நமது இலக்கியங்கள் அடிக்கோடிட்டுக் காட்டியதிலிருந்தே நமது பண்பாடு ஒன்று என்பது விளங்கும். அதுமட்டுமல்ல தைத்ரீய உபநிஷத் (1-20) காலத்திலிருந்து இதற்காக பல மந்திரங்களும் பாடல்களும் இருப்பது போல உலகில் வேறு எந்த இலக்கியத்திலும் காணமுடியாது. வள்ளுவர் எழுதிய திருக்குறள் போன்ற நீதி நூல்களில் இதற்கென்று ஒரு அத்தியாயத்தையே ஒதுக்கியதிலிருந்தும் இது விளங்கும்.

 

அதிதி தேவோ பவ விருந்தினரைக் கடவுளாகக் கருதுக – தைத்ரீய உபநிஷத் (1-20)

காளிதாசரின் ரகுவம்சத்தில்

 

“காட்டில் விளையும், ஆரோக்கியத்தைத் தரும் ‘செந்தினை’ எனும் தானியத்தில் ஒரு பகுதி விருந்தினர்களுக்காக ஒதுக்கப்படுகிறதா? அவைகளை மாடுகள் முதலியன மேய்ந்து சேதமாக்காமல் இருக்கின்றனவா? “(ரகுவம்சம் 5-9)

 

“கருணையுள்ள உமது குரு, உங்களை இல்லற வாழ்வுக்குச் செல்ல அனுமதித்தாரா? ஏனெனில் எல்லா ஆசிரமத்திலுள்ளவர்களுக்கும் உதவுவது இல்லற தர்மம்தான்” (ரகு.5-10)

 

नीवारपाकादि कडंगरीयैरामृश्यते जानपदैर्न कच्चित्|
कालोपपन्नातिथिकल्प्यभागं वन्यं शरीरस्थितिसाधनं वः॥ ५-९

nīvārapākādi kaḍaṁgarīyairāmṛśyate jānapadairna kaccit
kālopapannātithikalpyabhāgaṁ vanyaṁ śarīrasthitisādhanaṁ vaḥ || 5-9

 

 

अपि प्रसन्नेन महर्षिणा त्वं सम्यग्विनीयानुमतो गृहाय|
कालो ह्ययं संक्रमितुं द्वितीयं सर्वोपकारक्षममाश्रमं ते॥ ५-१०

api prasannena maharṣiṇā tvaṁ samyagvinīyānumato gṛhāya
kālo hyayaṁ saṁkramituṁ dvitīyaṁ sarvopakārakṣamamāśramaṁ te || 5-10

 

இதே கருத்து திருக்குறளிலும் உள்ளது:—

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை

பொருள்: இல்லறம் நடத்துபவன் மற்ற மூவர்க்கும் ( பிரம்மச்சாரி, வானப்ரஸ்தன், சந்யாசி) ஒரு துணையாவான்.

 

இன்னொரு இடத்தில், “ரகுவம்சத்தில் பிறந்தவர்கள் உயிரையே கேட்டாலும் கொடுப்பார்கள். ஆகவே விஸ்வாமித்ரர் கேட்டபடி ராமரையும் லெட்சுமணரையும் அவருடன் அனுப்பிவைத் தார் தசரதர்”(11-2) காளிதாசன் சொல்கிறான்.

 

இந்தக் கருத்து புறநானூற்றிலும் வருவது குறிப்பிடத்தக்கது:-

 

……… இந்திரர்

அமிழ்தம் இயைவது ஆயினும், இனிது எனத்

தமியர் உண்டலும் இலரே; முனிவு இலர்;

துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சி,

புகழ் எனின் ,உயிரும் கொடுக்குவர்; பழி எனின்,

உலகுடன் பெறினும், கொள்ளலர்

–புறம் 182, க.மா.இளம்பெருவழுதி

 

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல் பற்றி வரும் இடங்கள் கணக்கிலடங்கா; இதோ ஒரு சில எடுத்துக் காட்டுகள்;-

புறம்.173-ல் சிறுகுடி கிழான் பண்ணனை ‘பசிப்பிணி மருத்துவன்’ என்று சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பாராட்டுகிறான்.

புறம்.18-ல் பாண்டியன் நெடுஞ்செழியனை குடபுலவியனார் பாரரட்டுகையில் உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே; என்ற வரியைப் பாடுகிறார்; இதே வரி பின்னர் மணிமேகலையிலும் வருகிறது.

கோவூர்க்கிழார் பாடிய பாடலில் (புறம்.46), விருந் தின் சிறப்பு தி காட்டப்படுகிறது. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்- தமிழரின் பண்பாடு என்பது கோவூர்க் கிழார் கருத்து; இது குறளிலும் வரும் (322).

 

புறம்.141 (பரணர்), புறம்134 (முடமோசி)-ல் மறுமைப் பயனை மனதிற் கொள்ளாமல்,மக்களின் வறுமையைத் தீர்க்கவே ஈத்துவப்பர் என்று கூறப்படுகிறது.

 

அகம்.203, புறம்.177 முதலிய பாடல்களில் வந்த விருந்தினரை உபசரித்துவிட்டு, அடுத்தவர்க்காக காத்திருக்கும் செய்தி வருகிறது!

மணிமேகலையில் சீழ்தலைச் சாத்த்னார் சொல்லுவது:

 

ஆற்றுனர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்

 

ஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர்

 

மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை

 

மண்தினி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்

 

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே (மணி.11-92)

 

xxxx

FROM MY OLD POST:–

 

கிருஷ்ணர் வணங்கும் ஆறு பேர்:–

 

நித்யான்ன தாதா தருணாக்னிஹோத்ரி

 

வேதாந்தவித் சந்திர சஹஸ்ர தர்சீ

 

மாஸோபாவாசீச பதிவ்ரதா ச

 

ஷட் வந்தனீயா மம ஜீவ லோகே

 

பொருள்: இந்த மனிதர்கள் வாழும் பூமியில் நான் ஆறு வகையான மக்களை வணங்குகிறேன்: தினமும் அன்னதானம் செய்வோர், தினமும் அக்னிஹோத்ரம் செய்வோர், வேதம் அறிந்தவர்கள், சஹஸ்ர சந்திர தரிசனம் செய்து—சதாபிஷேகம் செய்துகொண்டோர் – மாதா மாதம் உபவாசம் இருப்போர், பதிவ்ரதையான பெண்கள்.

 

–subham–

Leave a comment

Leave a comment