பிராமணர்களுக்கு ஜே! மநு நீதி நூல்-7 (Post No.4471)

WRITTEN by London Swaminathan 

 

Date: 8 DECEMBER 2017 

 

Time uploaded in London-  14-52

 

 

Post No. 4471

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

(முதல் ஆறு பகுதிகளைப் படித்துவிட்டு இதைப்படிப்பது பொருள் விளங்கத் துணை புரியும்)

முதல் அத்தியாயம் ஸ்லோகம் 92

மனிதனின் தேகமே பரிசுத்தமானது. அதிலும் முகம் மிகவும் பரிசுத்தமானது

 

93.அந்த பிரம்மாவின் முகத்தில் பிறந்ததாலும், வேதத்தை ஓதுவதாலும், க்ஷத்ரியனுக்கு தர்மத்தைப் போதிப்பதாலும் பிராமணன் உயர்ந்தவனாகக் கருதப்படுகிறான்.

 

94.அந்தச் சுயம்புவான பிரம்மாவானவர், தேவர்கள், பிதுர்களுக்கு

யக்ஞம், சிரார்த்தம் முதலியன செய்து திருப்திப்படுத்துவதற்கும், மற்ற வருணத்தாருக்கு தர்ம உபதேசம் செய்து காப்பாற்றும் பொருட்டும், முகத்தில் இருந்து பிராமணர்களை உருவாக்கினார் அல்லவா?

 

95.பிராமணன் சொன்ன மந்திரத்தினால் தேவர்களும் பித்ருக்களும் தம்தம் அவிர்பாகங்களை (உணவை) அடைகின்றனர். அதனால் அவனைவிட உயர்ந்தவர் இல்லை.

  1. அசையும் அசையாப் பொருட்களில் புழுக்கள் உயர்ந்தன. அவைகளைவிட, அறிவோடு வாழ்கின்ற பசு முதலிய பிராணிகள் உயர்ந்தன. அதைவிட மனிதன் உயர்ந்தவன். அவர்களிலும் வேதம் ஓதும் அந்தணர்கள் உயர்ந்தவர்கள்.

97.அவர்களிலும் வேதத்தின் பொருளை அறிந்த பண்டிதர்கள் உயர்ந்தவர்கள்; அதைவிட விதி விலக்குகளை அறிந்தவர்கள் உயர்ந்தவர்கள். அவர்களிலும் தள்ளுவன தள்ளி, கொள்ளுவன கொண்டு வாழ்வோர் உயர்ந்தவர்கள். அவர்களிலும் பிரம்மத்தை உணர்ந்த ஞானிகள் உயர்ந்தவர்கள்.

 

98.பிராமணன் என்பவன் தர்மத்தின் வடிவமாக இருக்கிறான். தர்மம் விளங்கும் பொருட்டு தோற்றுவிக்கப்பட்ட  அவன் ஞானத்தினால் மோட்சத்திற்கு உரியவன் ஆகின்றான்.

 

99.பூமியில் பிறந்திருக்கின்ற பிராமணன், பெருமை பெற்றவனாய், நால் வர்ணத்தாருடைய தர்மம் என்னும் பொக்கிஷத்தை காப்பாற்றுகிறான்.

 

100.பிராமணன் முதல் வர்ணத்தானவன் என்பதாலும், பிரம்மாவின் முகத்தில் பிறந்ததாலும் எல்லா வர்ணத்தாரிடமிருந்தும் தானம் வாங்க அருகதை உள்ளவன் ஆகின்றான்.

 

101.ஆகையால் பிராமணன் தர்மம் வாங்கினாலும் அவன் பொருளையே — தன் பொருளையே சா     ப்பிடுகிறான்; தன் உடைகளையே உடுத்துகிறான். தன்னுடையதையே தானம் வாங்குகிறான். மற்றவர்கள் அவன் தயவில் வாழ்கிறார்கள்.

  1. அந்த பிராமாணன் உடைய, மற் றவர்களுடைய தர்மங்களை பகுத்தறிவதற்காக, மனித யோனியில் பிறவாத ஸ்வாயம்புவ மநு இந்த சாஸ்திரத்தைப் பிரபலப்படுத்தினார்.

103.இந்த சாஸ்திரத்தின் பயனை அறிந்த பிராமணர்களே இதைக் கற்கலாம்; தனது சீடர்களுக்குக் கற்பிக்கலாம். மற்றவர்களுக்குக் கற்பிக்கக் கூடாது.

104.விரத அனுஷ்டானங்களுடன் இதை பின்பற்றுபவனுக்கு மனம், உடல், சொல்லினால் ஏற்படும் குற்றங்கள் வாராது.

  1. இதை ஓதுகின்ற பிராமணன தன்னுடைய சமூகம் முழுவதையும் தூய்மைப் படுத்துகிறான். தன்னுடைய முன் ஏழு, பின் ஏழு தலைமுறைகளை நல்ல கதி அடையச் செய்கிறான். அவன் இந்த பூமி முழுவதையும் தானம் வாங்குவதற்கு உரியவன் ஆகின்றான்.

106.இந்த சாஸ்திரத்தை ஓதுகின்றவர்களுக்கு இது மங்களத்தையும் கீர்த்தியையும் (புகழ்), ஆயுளையும், உயர்ந்த மோக்ஷ கதியையும் தருகின்றது.

 

  1. இந்த சாஸ்திரத்தில் தொன்றுதொட்டு வந்த நான்கு வருணத்தாரி னொழுக்கங் களும்,வினைகளால் ஏற்படும் விளைவுகளும்,எல்லா அறங்களும் சொல்லப்பட்டுள்ளன.

 

108.வேதத்திலும் ஸ்ம்ருதியிலும் உள்ள ஒழுக்கவிதிகளே எல்லோருக்கும் முக்கியமானதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆகையால் யார் சுகம் அடைய விரும்புகின்றனரோ அவர்கள் இதில் ஈடுபடவேண்டும்.

 

109.ஒழுக்கத்தைவிட்ட பிராமணனுக்கு வேதத்தில் சொல்லிய பலன்கள் கிடைப்பதில்லை. ஒழுக்கம் உடைய பிராமணனுக்கு எல்லா நன்மைகளும் கிட்டும்

 

110.முனிவர்கள் ஒழுக்கத்தின் பலனை அறிந்து எல்லாத் தவத்திற்கும் அதுவே முதற்காரணம் என்று சொல்லுகின்றனர்.

எனது கருத்து

இந்தப்  பகுதியைப் படிக்கையில் ,மநு, ஒரேயடியாக பிராமணர்களை உயர்த்தி வைத்ததுபோலத் தோன்றும். ஆனால் 2600 ஆண்டுகளுக்கு முன்னர், யாக யக்ஞங்கள் தேவை இல்லை என்று சொன்ன புத்தரும் பிராமணர்களை உச்சானிக் கொம்பில் வைத்திருப்பதுடன் ஒப்பிட்டு பொருள் காண வேண்டும; புத்தர் அப்படி ஏன் சொன்னார் என்று அதன் தாத்பர்யத்தையும் அறிய வேண்டும்

 

“ஒரு மகானும், பிராமணனும் கடந்த கால பாவங்களினால் பாதிக்க படுவதில்லை; அவன் தனது சொந்த தாய் தந்தையரைக் கொன்று இருந்தாலும், இரண்டு நல்ல அரசர்களிக் கொலை செய்திருந்தாலும்,  ஒரு பெரிய நாட்டையும், மக்களையும் சீரழித்து இருந்தாலும் அவனைப் பாவங்கள் அணுகாது (தம்மபதம் 294) என்று புத்தர் செப்புகிறார்.

 

ஆயினும் 26ஆவது (தம்மபதம்)  அத்தியாயம் முழுதும் பிராமணன் யார் என்று இலக்கணம் கற்பிக்கிறார். அதாவது அன்பும் கருணையும் ஒழுக்கமும் அறிவும் உடையவனே பிராமணன் என்பதைத் தெளிவாக்குகிறார். இது போலவே மநு வும் வேதம் கற்காதவனோ, ஒழுக்கம் இல்லாதவனோ பிராமணன் இல்லை  என்பார். அது மட்டுமல்லாமல் கடு மையான விதிகளையும் விதிக்கிறார்.

 

வள்ளுவரும் அந்தணர் என்போர் அறவோர் என்றும் எவ்வுயிர்க்கும் கருணை காட்டுபவன் என்றும்,கொல்லாமை என்னும் விரதத்தைப் பின்பற்றுபவன் என்றும் பிறப்பொழுக்கம் குன்றாதவன் என்றும் பிராமணர்களுக்கு இலக்கணம் கற்பிக்கிறார் (குறள்  30, 134, 543, 560, 28, 8).

ஆகவே ஒழுக்கமும் அன்பும் கருணையும் உடையவர்களுக்குச் சிறப்பு சலுகை இருப்பதில் வியப்பொன்றும் இல்லை.

அரசாங்கத்தை எதிர்ப்பவர்களை எல்லாம் கடுங்குளிர்ப் பிரதேச கட்டாய முகாம்களுக்கு அனுப்பி’ காணமற் போகச் செய்த’ கம்யூனிஸ ரசும் கூட ரஷ்யாஷ்வின் அணுசக்தி ஆராய்ச்சியின் தந்தை என்று கருதப்பட்ட ஷகாரோவ் அவர்களைக் கொல்லாமல் வெளியேற அனுமதித்தது. அறிவாளிகளையோ, தூதர்களையோ கொல்லக்கூடாது என்ற தர்மத்தைப் பல நாடுகளும் கடைப் பிடித்தன. இந்துக்கள், இத்தோடு பெண்களையும் புற முதுகு காட்டுவோரையும் கொல்லக்கூடாது என்ற தர்மத்தையும் கடைப் பிடித்தனர்.

 

மநு பிராமணர்களுக்கு ஜே போட்டாலும் அத்தகைய இலக்கணத்திற்கு உட்படும் பிராமணர்கள் மிகவும் குறைவு என்பதை நாம் அறிவோம்.

 

மனுவே கூட பூணூல் போட எல்லோரும் உயர்ந்தவர், பிராமண குலத்தில் பிறந்து விட்டாலேயே உயர்ந்தவர் என்று சொல்லாமல், ஒழுக்கமும் வேதம் ஓதுதலுமே பிராம்ம ணத்துவத்தின் உரைகல் என்று பகர்வது கருத்துக்குரியது; கவனத்துக்குரியது.

 

இறுதியாக மநு சொல்லுவதை எழுத்துக்கு எழுத்து அப்படியே எடுத்துக் கொண்டு ‘பொங்கி எழுவோர்’ அவர் சொல்லும் மற்ற விஷயங்களையும் நம்ப வேண்டும்.

அவர் எழுதிய சாத்திரம், சரஸ்வதி- த்ருஷத்வதி நதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் வாழ்வோருக்கு அந்த நதிகள் ஓடிய காலத்தில் (கி.மு.2000க்கு முன்) எழுதப்பட்டது. அதற்குப் பின் அது எவ்வளவோ மாற்றங்களை அடைந்திருக்கிறது; இடைச் செருகலுக்கு உடப்படிருக்கிறது.

 

சுபம்–

 

Leave a comment

Leave a comment