சாணக்யன் சொன்ன பெண்மணி கதை (Post No.4512)

WRITTEN by London Swaminathan 

 

Date: 18 DECEMBER 2017 

 

Time uploaded in London-  18-34

 

 

Post No. 4512

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பெண்களைத் தவறான எண்ணதுடன் நெருங்கும் ஆண்களுக்கு, பெண்கள் பலவகைகளில் பதில் சொல்லுவர். சில நேரங்களில், அவர்கள் குறிப்பால் உணர்த்துவர். இன்னும் சில நேரங்களில் நேரடியாகவே சொல்லுவர். இதெல்லாம் பழங்கால இந்தியாவில்.இப்போதெல்லாம் இதற்குத் தேவையே இல்லை; முதலில் எச்சரிப்பர்; அத்துமீறினால் காலில் போட்டிருப்பதைக் கையில் எடுத்துக் காட்டுவர்; தேவையானல் போலீஸாரையும் அழைப்பர். அந்தக் காலத்திலோ ஆண்களுக்கு முன் நிற்கவே கூசிய பெண்கள் பேசா மடந்தைகளாக இருந்தனர். இருந்த போதிலும் அழகாக எண்ண

த்தைத் தெரிவித்தனர். இதை விளக்க சாணக்ய நீதியின் ஒரு ஸ்லோகத்தை மேற்கோள் காட்டுகிறேன்.

 

சாணக்கிய நீதி நூலின் 17 ஆவது அத்தியாயத்தில் கடைசி ஸ்லோகம் இதோ:

 

அதஹ பஸ்யஸி பாலே பதிதம் தவ கிம் புவி

ரே ரே மூர்க்க ந ஜானாஸி கதம் தாருண்ய மௌக்திகம்

பொருள்:

ஒரு நடுத்தர வயதுப் பெண்ணைப் பார்த்த ஒரு இளைஞன், அவளை வசப்படுத்த எண்ணினான். நடுத்தர வயது என்று அவள் ‘முகத்தில் எழுதி ஒட்டியிருந்தபோதிலும்’, புன்னகைத்த முகத்துடன் அவளை அழைத்தான்.

 

” ஓ இளம் பெண்ணரசியே, எதையோ தேடுகிறாய் போலும்? எதைக் குனிந்து பார்த்துக்கொண்டு தேடுகிறீர்கள்?” என்றான்

அவளுக்கு இவன் எண்ணம் புரிந்தது. உடனே நேரடியாகவே பதில் சொல்லிவிட்டாள்.

“ஆமாம், அன்பரே! என்னுடைய இளமை என்னும் முத்து உதிர்ந்துவிட்டது அதைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன்”- என்றாள்.

 

இளைஞனுக்குப் புரிந்தது; ஏமாற்றத்துடன் திரும்பினான்.

 

xxxx

இதே போல பிராக்ருத மொழியில் உள்ள காதா சப்த சதியில் ஒரு ஸ்லோகம் உள்ளது. புது மணத் தம்பதிகள் புகுந்த வீட்டில் குடியேறினர். அந்தக் காலத்தில் கூட்டுக் குடும்பம். எல்லோரும் சேர்ந்து வாழ்ந்தனர். புதுக் கணவன் வணிகம் காரணமாக வெளியூர் செல்ல நேரிட்டது.

 

 

 

 

புதுமணப் பெண்ணை, புகுந்த வீட்டில் கொழுந்தன் ஒருவிதமான பார்வையில் பார்த்தான். அதை எப்படி கண்டிப்பது அல்லது நிறுத்துவது என்று தவியாகத் தவித்தாள்.  அதைச் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் கஷ்  டப்பட்டாள். கணவனிடம் சொன்னாலோ குடும்ப உறவுகள் பாதிக்கப்படுமே என்று அஞ்சினாள்.

 

நல்ல வேளையாக அந்த வீட்டுச் சுவரில் ஒரு ராமாயண ஓவியம் இருந்தது. இந்தக் காலத்தில் நாம் காலண்டர் அல்லது ஓவியங்களை கண்ணாடி போட்டுச் சுவரில் மாட்டிவைக்கிறோம்; 2000 ஆண்டுகளுக்கு முன்னர் எல்லார் வீட்டுச் சுவரிலும் தெய்வத்தின் படங்கள் வரையப்பட்டிருந்ததை சங்கத் தமிழ் நூல்களும் குறிப்பிடுகின்றன. அது போல இந்த வீட்டில் ராமனும் லெட்சுமணனும் சீதையும் காட்டில் செல்லும் காட்சி வரையப்பட்டிருந்தது.

 

லெட்சுமணன், அண்ணன் மனைவியான சீதையின்  முகத்தைக் கூடப் பார்க்க மாட்டான்.அவள் காலில் அணிந்திருந்த மெட்டி மட்டுமே அவனுக்குத் தெரியும். அந்தப் படத்தைக் காட்டி அவள் லெட்சுமணனின் பெருமையை கதை சொல்லுவது போலச் சொல்லுகிறாள். இலட்சுமணன் போல அண்ணியை நீயும் தாயாக மதிக்க வேண்டும் என்று சொல்லாமற் சொன்னாள்.

 

இதைச் சொல்லும் பிராக்ருத மொழி ஸ்லோகத்தை மு.கு.ஜகந்நாத ராஜா அழகாக தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இது சாலிவாஹநன் என்ற மன்னன் எழுதியது:

கோதுறு மனமுடைக் கொழுந்தனை நோக்கி

மாதவள் தினமும் போதனை செய்தாள்

இராமனுடன் செலும் இலக்குவன் சரிதம்

சுவரில் வரைந்த சுடரோவியத்தே

–சாலிவாஹனன் (ஹாலன்) 1-35, காதா சப்த சதி

 

கோது= குற்றம்

 

எங்கள் மதுரையில் அந்தக் காலத்தில் கணவன் பெயரைக்கூட பெண்கள் சொல்ல மாட்டார்கள். கணவன் பெயர் சொக்கன் , சுந்தரம், சுந்தரேஸ்வரன் என்றிருந்தால், ‘அதான் இந்த ஊர்க்கடவுள் பெயர்’ என்பார்கள். ராமன், கிருஷ்ணன் என்றிருந்தால் சுவற்றில் மாட்டி இருக்கும் படத்தைக் காண்பிப்பாள் அல்லது சுற்றி வளைத்து ஏதேனும் ஒரு வகையில் விளங்க வைத்துவிடுவாள்.

பெண்கள் கெட்டிக்காரிகள்!

 

–சுபம்—

 

Leave a comment

Leave a comment