சம்ஸ்கிருத செல்வம்–அத்தியாயம் 32 by ச.நாகராஜன்
Post no 867 Dated 26th February 2014
தர்மங்களில் எது உயர்ந்த தர்மம்? அஹிம்சையே உயர்ந்த தர்மம். யாரையும் ஹிம்சிக்காமல் இருப்பது சிறந்த கொடையாகும்.
இதை வலியுறுத்தும் கவிதை இது:
அஹிம்சா பரமோ தர்ம: ததாஹிம்சா பரோ தம: I
அஹிம்சா பரமம் தானம் அஹிம்சா பரமம் தப: II
அஹிம்சா பரமோ தர்ம: – அஹிம்சையே மிக உயர்ந்த தர்மம்
ததாஹிம்சா பரோ தம: – அந்த அஹிம்சை மிக உயர்ந்த சுய கட்டுப்பாட்டாலேயே அடைய முடியும்.
அஹிம்சா பரமம் தானம் – யாரையும் ஹிம்சிக்காமல் இருப்பது மிகச் சிறந்த கொடையாகும்
அஹிம்சா பரமம் தப: – அஹிம்சையே மிக உயர்ந்த தவமாகும்.
தர்மப்படி வாழ வேண்டும் என்கின்றன நமது அற நூல்கள். வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் கவிஞர்கள் இதை வலியுறுத்தத் தவறுவதே இல்லை.
தர்மம் சரத் மா(அ)தர்மம் சத்யம் வதத் நாந்ருதம் I
தீர்கம் பஷ்யத மா ஹ்ரஸ்வம் பரம் பஷ்யத மா(அ)பரம் II
தர்மம் சரத் – தர்மத்தைக் கடைப்பிடி
மா அதர்மம் – அதர்ம வழியை அல்ல
சத்யம் வதத் – உண்மையே பேசு
ந அந்ருதம் – பொய்யைப் பேசாதே
தீர்கம் பஷ்யத பரம் பஷ்யத– தொலைவில் இருந்தாலும் கூட உறுதியான லட்சியத்தின் மீது கண்களைப் பதி
மா ஹ்ரஸ்வம்,மா அபரம் – உடனடியாக நிறைவேறும் அருகில் உள்ள லட்சியத்தின் மீது அல்ல
என்ன அருமையான அறிவுரை! மனத்தில் எப்போதும் நிலை நிறுத்தி வைக்க வேண்டிய அருளுரை அல்லவா இது!
இனி மதங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தெரிவிக்கும் பாடலைப் பார்ப்போம்:
தர்மம் யோ பாததே தர்மோ ந ச தர்ம: ப்ரகீர்தித: I
அவிரோதாத் து யோ தர்ம: ச தர்ம: சத்யவிக்ரம: II
(ய) தர்மம் (அன்யம்) தர்மம் பாததே – எந்த மதமானது இதர மதத்தைப் பின்பற்றுபவர்களை கொடுமைப் படுத்துகிறதோ
ச தர்ம: ந ப்ரகீர்தித: – அந்த மதம் உண்மையான மதம் அல்ல!
ய தர்ம: அவிரோதாத் (ஸ்வீகார்யதே) – எந்த மதமானது மற்றவர்களுக்குத் தடையாக இருக்காமலோ அல்லது மற்றவைகளை அடக்காமல் இருக்கிறதோ
ச தர்ம: சத்யவிக்ரம: – அந்த மதமே உண்மையானது, சாசுவதமாக நிலை பெற்றிருப்பதாகும்.
இந்த சாசுவதமான சத்தியத்தை கவிஞர் வாயிலாக நாம் அறியும் போது உளம் மகிழ்கிறோம்.
இதைப் படிக்கும் போது ஹிந்து மதத்தைச் சார்ந்தோர் பெருமிதம் அடைவர்.
ஹிந்து மதத்தைப் பின்பற்றுவோர் ஒரு நாளும் பிற மதத்தினரை இழிவாகப் பேசுவதில்லை. அடக்குவதில்லை.
சாசுவதமான தர்மத்தை சகிப்புத் தன்மையுடன் சொல்வதோடு அதைப் பின்பற்றுவோர் இதர மதத்தினரை மரியாதையுடன் நடத்துகின்றனர்.
அதனால் தான் அது சனாதன தர்மம் என அழைக்கப்படுகிறது.
அது ஒரு மதம் மட்டுமல்ல; ஒரு வாழ்க்கை முறை; நேற்றும் இன்றும் நாளையும் என்றும் சனாதமாக இருக்கும் ஒரு தத்துவம், சத்தியம் அது!
Contact swami_48@yahoo.com
*****************
You must be logged in to post a comment.