S Nagarajan, Dr Nagaswamy and london swaminathan
Written by London Swaminathan
Date: 25 August 2017
Time uploaded in London- 20-27
Post No. 4162
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google, Wikipedia and newspapers; thanks.
நான் எம்.ஏ. வரலாற்று (M. A. History) மாணவன். மதுரை தினமணியில் உதவி ஆசிரியராக ( Senior Sub Editor, Dinamani, Madurai) வேலை பார்த்தபோது — 1977 ஆம் ஆண்டு என்று ஞாபகம்– டாக்டர் இரா.நாகசாமி தொல்பொருட் துறை இயக்குநராக (Director of Archaeology) இருந்தார். அதற்கு முன்னர் அந்த இலாகாவை எல்லோரும் “புதை” பொருள் ஆராய்ச்சி இலாகா என்று எழுதி வந்தோம். என்ன நிதர்சனமான உண்மை!! அது அப்படித்தான் “புதை பொருள்” ஆராய்ச்சி இலாகாவாக இருந்தது! எவருக்கும் அப்படி ஒரு இலாகா இருப்பதே தெரியாது! டாக்டர் இரா. நாகசாமி பொறுப்பேற்றவுடன் அது தொல்பொருட் துறை என பெயர் பெற்றது. நாள் தோறும் நாங்கள் தினமணியில் ஏதாவது ஒரு கல்வெட்டு கண்டுபிடிப்புச் செய்தியைப் போடுவோம்.
டாக்டர் நாகசாமி சம்ஸ்கிருதத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். ஆனால் சங்க இலக்கியம், தேவாரம், திருவாசகம் ஆகியவற்றின் கரை கண்டவர். அது மட்டுமல்ல. அதை ஆங்கிலத்தில் அழகாக தொகுத்து வழங்க வல்லவர். தமிழனுக்கு ஒரு பெரிய வீக்னெஸ் (Weakenss) உண்டு. தமிழைத் தவிர வேறு மொழி இலக்கியம் தெரியாது. ஆகையால் கிணற்றுத் தவளையாக ஏதாவது உளறிக் கொண்டிருப்பான். அப்படி இல்லாமல் நாகசாமி அவர்கள் மும்மொழி பாண்டித்தியம் பெற்றதால் அவருக்கு உலகம் முழுதும் புகழ். இங்கு லண்டனுக்கு வரும்போதெல்லாம் வீட்டிற்கு அழைப்பேன்.
Dr Nagaswamy with his awards
1977ம் ஆண்டில் அவர் பேசிய ஒரு கூட்டத்தில் பத்திரிக்கை நிருபர் போல நானும் அமர்ந்தேன். அதில் 40+ தமிழ் ஆசிரியர்களுக்குக் கல்வெட்டுப் பயிற்சி தருவதாகவும் சிதம்பரம் முதல் திருவனந்தபுரம் வரை சுமார் 1000 மைல் இலவச தொல்பொருட் துறை சுற்றுப் பயணம் அதில் அடக்கம் என்றும் பத்திரிக்கை நிருபர் கூட்டத்தில் அறிவித்தார். உடனே அவரிடம் நான் சென்று ‘நானும் ஒரு ஆசிரியர்’ (பத்திரிக்கை உதவி ஆசிரியர்) என்றும் ‘இடமிருந்தால் நானும் வரலாமா?’ என்றும் கேட்டேன். ‘தாராளமாக வாருங்கள்’ என்றார். உடனே அலுவலகத்துக்குச் சென்று அவர் வழங்கிய பேட்டியின் சாராம்சத்தை எழுதிவிட்டு என் பாஸ் (boss)ஸிடம் லீவு கேட்டேன். லீவும் கிடைத்தது. எங்களுக்கு மிகவும் நெருங்கிய நண்பரும் சேதுபதி உயர்நிலைப் பள்ளி ஆசிரியருமான வி.ஜி. சீனிவாசனும் அந்தப் பயணத்தில் வந்ததால் ஆயிரம் மைல் பயணமும் இனிதே முடிந்தது.
அது பற்றிப் பின்னர் எழுதுகிறேன்.
இவ்வளவு காலம் — நீண்ட நெடுங்காலம்– தொடர்பு இருந்ததால் இந்தியாவுக்குச் செல்லும்போதெல்லாம அவரை சந்திப்பது வழக்கம். அவர் லண்டனுக்கு பல நாடகக் குழுக்களை அழைத்து வந்த போதெல்லாம் அவருடனே சென்று கூட்டங்களில் பங்கு கொள்வேன். பி.பி.சி. BBC தமிழ்ழோசையில் வேலை பார்த்தபோது அவரைச் சில முறை பேட்டி கண்டு அதை பி.பி.ஸி.யில் ஒலிபரப்பினேன். நேயர்களின் பெருத்த ஆதரவு கிடைத்தது. அவர் வரும் போது அப்பர், சுந்தரர், சம்பந்தர், மணிமேகலை, ராஜேந்திர சோழன் முதலிய நாடகங்களை லண்டனில் உள்ள கோவில்கள் சார்பாகவும், சவுத் இண்டியன் சொஸைட்டி South Indian Society சார்பாகவும், பிரிட்டிஷ் மியூசியம், விக்டோரியா ஆல்பெர்ட் மியூசியம் சார்பாகவும் மேடை எற்றினோம். லண்டன் வாழ் தமிழர்களுக்கு அது பெரிய விருந்து. வெள்ளைக்கார இடங்களுக்குச் சென்றபோது ஆங்கில மொழி பெயர்ப்பும் உண்டு.
Dr Nagaswamy, Dr N Kala, S Swaminathan and S Nagarajan
சென்னையில் சந்திப்பு
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மும்பையில் கல்யாணத்தில் கலந்து கொண்டுவிட்டு சென்னைக்குப் புறப்பட இருந்த தருணத்தில் எல்லா விமானங்களும் ரத்தானதால் டாக்டர் நாகசாமி அவர்களைப் பார்க்காமலேயே லண்டனுக்குத் திரும்பினேன். இந்த முறை ஆகஸ்ட் 14-ம் தேதி சென்னைக்கு வந்து சேர்ந்தவுடன் ஜெட் களைப்பு Jet lag பற்றிப் பாராமல் ஒரு ஆட்டோவில் நானும் என் அண்ணனும் அவரைப் பார்க்க பெஸண்ட் நகருக்கு விரைந்தோம்.
இன்முகத்துடன் வரவேற்றார்; இது மரியாதையின் (Courtesy Call) பொருட்டு நடைபெறும் சந்திப்புதான் என்றும் அதிகம் அவரைத் தொந்தரவு செய்யப் போவதில்லை என்றும் பீடிகை போட்டுப் பேச்சைத் தொடங்கினேன். அவரது மகள் டாக்டர் என். கலா எங்களுக்கு இனிப்பும் தேநீரும் வழங்க, டாக்டர் ரமாதேவி என்ற மாணவி, அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள உதவ, ஒரு மணி நேரம் ஓடிப் போயிற்று!
என்ன பேசினோம்?
நான் அவருடைய லேடஸ்ட் (Latest Research) ஆராய்ச்சி பற்றிக் கேட்டு பேச்சைத் துவக்கினேன். திருக்குறளின் அறத்துப் பாலும், பொருட்பாலும் அப்படியே சம்ஸ்கிருத நூல்களில் இருப்பதாகவும் அது பற்றி எழுதப் போவதாகவும் சொன்னார். ஜி.யூ. போப் எப்படி திருக்குறளை கிறிஸ்தவ நூல் போலத் திரிக்க முயன்றார் என்பதையும் எடுத்துரைத்தார்.
பின்னர் நான் அவரிடம் இரண்டு வேண்டு கோள்களை முன்வைத்தேன்:
- அவருக்கும் காஞ்சி பரமாசார்ய சுவாமிக ளுக்கும் நடந்த உரையாடல்களை எழுத வேண்டும்
- சத்திரங்கள் (Choultries) என்பது இந்தியாவின் ஒப்பற்ற பண்பாட்டின் தடயம்; வேறு உலகில் எங்கும் காணாத புதுமை; ஆகையால் இது பற்றி கிடைக்கும் தகவல்களை அவர் எழுத வேண்டும்–
என்று கேட்டுக் கொண்டேன்.
Dr R Nagaswamy and his student Dr Ramadevi
உடனே அவர் சத்திரம் பற்றியும், பிராமணர் குடியேற்றத்துக்கு சோழ மன்னர்கள் எடுத்த முயற்சிகளையும் புள்ளி விவரம் வாரியாகச் சொன்னார்.
இந்த வயதிலும் அவர் எல்லா எண்கள், புள்ளி விவரங்களைப் புத்தகத் துணை இல்லாமல் வாரி வழங்கியது எங்களை வியப்பில் ஆழ்த்தியது.
எனது அண்னன் நாகராஜன், உடனே அவர் யூ You Tube ட்யூபில் நாள் தோறும் இது போல ஏ தாவது சொன்னால் பலனுடையதாக இருக்கும் என்றான். அருகில் நின்ற டாக்டர் ரமாதேவியிடம், அவரைப் போன்ற இளம் வயதினர் உதவி செய்தால், டாக்டர் நாகசாமி எளிதில் செய்யலாம் என்றான் . அந்தப் பெண்மணியும் ஆவன செய்வதாகக் கூறினார்.
டாக்டர் நாகசாமி கடைசியாக வெளியிட்ட நூல்களை அன்பளிப்பாகக் கொடுத்தார். அவருடைய மகள் டாக்டர் கலா சென்னைப் பல்கலைக்கழக சைபர் க்ரைம் இயல் (Department of Cyber Crime) தலைவி என்றும் அவரும் சிறுவர்களுக்காக ஒரு நூல் எழுதி இருப்பதாகவும் சொல்லி ஒரு நூலை அன்பளிப்பாகக் கொடுத்தார்.
அடுத்த முறை அவருடைய லண்டன் பயணம் எப்போது? என்று ஆவலுடன் கேட்டேன். வயதாகிவிட்டதால் அவர் ‘பார்க்கலாம்’ என்று கமிட் commit செய்யாமல் பதில் கொடுத்தார். ஏனென்றால் அவரை பிரிட்டிஷ் மியூசியம் அழைத்தது. அதாவது லண்டனிலேயே தங்கி அவர்கள் கருவூலத்தில் உள்ள இந்திய சிலைகளை ( Bronzes and Statues) அடையாளம் காண உதவி கேட்டனர். அவர்களே, இரண்டு மாதம் தங்க வசதி செய்வதாகவும் சொன்னார்கள். ஆனால் அப்படிப்பட்ட கமிட்மெண்டை Commitment – பணியை— ஏற்க முடியாத சுறுசுறுப்பான வாழ்வை உடையவர் டாக்டர் நாகசாமி. அவரை விட்டால் தெளிவாக, கன கச்சிதமாக சிலைகளை, செப்புத் திருமேனிகளை அடையாளம் காணுமறிவுடையோர் இல்லை என்றே சொல்லலாம்.
கற்றோருக்குச் சென்றவிடம் எல்லாம் சிறப்பு என்பதற்கு இலக்கணமாய்த் திகழ்ந்தவர் டாக்டர் நாகசாமி. அவர் பேசும் பேச்சில் (Waste) வீண் என்று எதுவும் இராது. ஒவ்வொரு சொல்லும் அக்ஷர லக்ஷம் பெறும்.
ஒரு அறிஞர் இருக்கும் போதே — உயிர் வாழும்போதே— அவரை மதித்துப் போற்றி வாழ்த்தி வணங்குவதே சாலச் சிறந்தது. அவரைச் சந்தித்ததில் நானும் என் கடமையில் ஏதோ ஒரு பகுதியை நிறைவு செய்தது போல ஒரு உணர்வு.
வாழ்க நாகசாமி அவர்கள்! வளர்க அவர்தம் புகழ்!
–Subham–
R.Nanjappa (@Nanjundasarma)
/ August 26, 2017இந்தக் கட்டுரையைப் படித்ததில் எங்களுக்கும் பரம சந்தோஷம், மனநிறவு. டாக்டர் நாகசாமியைப் பற்றி ஏதோ சிறிது தெரியும். சில கட்டுரைகளையும் அவ்வப்போது படித்திருக்கிறோம். ஆனால் அவர் செய்த பணிகளின் முழுவிவரமும் அவற்றின் முக்கியத்துவத்தையும் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லை! டாக்டர் உ.வே.சா அவர்கள் பழந்தமிழ் இலக்கியத்திற்குச் செய்த சேவை போல, டாக்டர் நாகசாமியவர்கள் தொல்பொருட்துறைக்குச் சேவை செய்திருக்கிறார். ஆனால் ஆரவாரமில்லாமல் அமைதியாகச் செய்ததால் இது பரவலாகத் தெரியவில்லை. அயோத்யா விவகாரத்திலும் அங்கு நடத்த தொல்பொருள் ஆராய்ச்சிபற்றி இவரது கருத்தை அரசு கேட்டது என்று எங்கோ படித்தோம்- ஆனால் அதன் விவரம் தெரியவில்லை!
மும்மொழிகளிலும் பாண்டித்யம் பெற்றவர்கள் அரிதாகவே இருக்கிறார்கள். அவர்களயும் உரியவிதத்தில் பயன்படுத்திக் கொள்வதில்லை! தமிழ் நாட்டில் தொல்பொருட் துறையினருக்கு சம்ஸ்க்ருதம் ஏன் தெரியவேண்டும் என சில நாட்களுக்குமுன் மதுரை உயர் நீதி மன்றத்தில் கேள்வி எழுப்பினர்! இந்த நிலையில் டாக்டர் நாகசாமியவர்கள் லண்டன் மியூசியத்திற்குச் சென்று அவர்கள் கோரிய சில உதவிகள் செய்தால் , அது மிக முக்கியமான தொண்டாக அமையும். ( சில ஐரோப்பிய நாடுகளின் மியூசியங்களில் கண்ட சிலவற்றைப் பற்றி டாக்டர் வே,ராகவன் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன் எழுதினார். டாக்டர் சி.சிவராமமூர்த்தி, ஆனந்த குமாரஸ்வாமி ஆகியவர்களின் எழுத்துக்களும் எளிதில் கிடைப்பதில்லை.)
டாக்டர் நாகசாமி அவர்களின் Intellectual evolution, academic background, professional approach பற்றியும் மேலும் அவர்செய்த அரிய ஆராய்ச்சிகள் பற்றியும் ஒரு Intellectual biography வெளிவரவேண்டும். அவருடைய முக்கியமான கட்டுரைகள், பேச்சுக்களின் தொகுப்பும் நூல் வடிவில் வந்தால் பெரிதும் பயன் தரும். இதற்கு அவருடைய மாணவர்கள்தான் முயலவேண்டும்.