WRITTEN BY S NAGARAJAN
Date uploaded in London – – 18 JULY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
காந்திஜிக்கு அமைக்கப்பட்ட மணப்பெண் அறை!
ச.நாகராஜன்
கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் அழைப்பை ஏற்று மஹாத்மா காந்திஜி சாந்திநிகேதனுக்கு வரப் போகிறார் என்ற செய்தி சாந்தி நிகேதன் முழுவது பரவியது.
அனைவருக்கும் ஒரே சந்தோஷம்!
மூன்று நாள் விஜயமாக அது திகழும் என்பது அதிக சந்தோஷத்தை அனைவருக்கும் அளித்தது.
மாணவர்கள், மாணவிகள், ஆசிரியர்கள் என அனைவரும் உற்சாகமாக காந்திஜியை வரவேற்பதற்கான பணிகளில் ஈடுபட்டனர்.
அந்த நாளும் வந்தது.
பண்டிட் ஜவஹர்லால் நேரு, மஹாதேவ தேசாய் சதீஷ் பாபு ஆகியோருடன் காந்திஜி சாந்திநிகேதனுக்குள் நுழைந்தார்.
ஒரே ஆரவாரம், குதூகலம்.
ரவீந்திரநாத் தாகூர் தானே காந்திஜியின் நெற்றியில் சந்தன, குங்குமம் வைத்து அவரைத் தழுவி வரவேற்றார்.
ஆரவாரத்துடன் காந்திஜிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் காந்திஜியை அவரது அறைக்கு தாகூர் அழைத்துச் சென்றார்.
அறையைப் பார்த்த காந்திஜி திகைத்துப் போனார்.
ஒரே அலங்கார மயம். வண்ணப் பூக்கள் உள்ளிட்டவை அழகுற அலங்கரிப்பட்ட அறை அது.
‘இது என்ன மணப்பெண்ணுக்கான அறையா, என்ன?’ என்று கேட்டார் காந்திஜி
தாகூர் சளைக்கவில்லை. “நீங்கள் ஒரு கவிஞரின் இருப்பிடத்தில் இருக்கிறீர்கள் என்பது ஞாபகம் இருக்கட்டும்” என்று பதில் தந்தார்.
“அது சரி, மணப்பெண் எங்கே?” என்று கிண்டலாகக் கேட்டார் காந்திஜி.
அதற்கும் சளைக்கவில்லை தாகூர்.
“அதுவா, சாந்திநிகேதன், இதயங்களின் இதய ராணி உங்களை வரவேற்கிறாள்” என்றார்.
காந்திஜியும் விடவில்லை :”நிச்சயமாக அவள் பொக்கை வாய் ஏழையை ஒரு முறை பார்க்கக் கூட யோசிப்பாள்!” என்றார்.
“இல்லை” என்று திடமாக காந்திஜியை மறுத்த தாகூர், “ எங்கள் ராணிக்கு சத்தியம் என்றால் மிகவும் பிடிக்கும். நெட்ட நெடுங்காலமாக அவள் அதைத் தான் வழிபடுகிறாள்” என்றார்.
ஆக, “இந்த பொக்கை வாய் கிழவனுக்குக் கூட நம்பிக்கை இருக்கிறது என்கிறீர்கள்” என்று சிரித்துக் கொண்டே சொன்னார் காந்திஜி.
இன்னும் சற்று நேரம் குதூகலமாகப் பேசிய தாகூர் அவரிடமிருந்து விடை பெற்றுக் கொண்டார்.
மறுநாள் காலை 4.30க்கு மணிக்கு பிரார்த்தனை ஆரம்பமானது.
அனைவரும் பிரார்த்தனைக்கு ரெடி.
தாகூர் மெதுவாக காந்திஜியின் அறைக்கு சென்றார்.
அறையைப் பார்த்த அவர் திடுக்கிட்டுப் போனார்.
ஒரே அலங்கோலம்.
பூக்கள் அங்கும் இங்குமாக சிதறிக் கிடந்தன.
கட்டிலோ அறைக்கு வெளியில் இழுத்து போடப்பட்டிருந்தது. காந்திஜி எப்போதும் திறந்த வெளியில் படுப்பவர். ஆகவே கட்டில் வெளியில் கொண்டு வந்து போடப்பட்டிருந்தது.
பூச்செடிகள் வைக்கப்பட்டிருந்த தொட்டிகள் அறையில் ஒரு மூலையில் தள்ளப்பட்டிருந்தன.
ராட்டினமும் சில பைல்களும் நடுவில் வைக்கப்பட்டிருந்து, அறையை ஆக்கிரமித்திருந்தன.
இப்போது தாகூரின் முறை வந்தது. சிரித்தார். ஹரே ஹரே ராம் என்று கூவினார்.
“எங்கே போனது மணப் பெண் அறை? நான் ஒரு மணப்பெண்ணின் அறையை அல்லவா பார்த்தேன். அந்த ஏழை மணப்பெண் எங்கே, ஓடிப் போய் விட்டாளோ?” என்றார் தாகூர்.
குறும்பு தவழ, காந்திஜி தாகூரை நோக்கி, “நான் தான் முன்பே எச்சரித்தேனே, மணப்பெண் பொக்கை வாய் கிழவனை ஏறெடுத்தும் பார்க்க மாட்டாள் என்று!” என்றார்.
அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.
இந்த நிகழ்ச்சியால் காந்திஜியின் சாந்திநிகேதன விஜயம் மறக்க முடியாத ஒன்றாக ஆயிற்று.
அலங்காரத்தில் பிரியம் கொண்ட கவிஞர் ஒரு புறம்; எளிமையில் விருப்பம் கொண்ட மஹாத்மா மறு புறம்!
சாந்திநிகேதன் அமைதியாக இரண்டையும் பார்த்துச் சிரித்தது!
***
Tags- தாகூர் ,காந்திஜி , மணப்பெண் அறை, சாந்திநிகேதன்
புத்தக அறிமுகம்
ஆலயம் அறிவோம்!
(முதல் பாகம்)
30 திருத்தலங்கள் யாத்திரை
ச.நாகராஜன்
30 திருத்தலங்களைப் பற்றிய முக்கிய விஷயங்களைக் கொண்ட நூல் இது.
இதனுடைய பொருளடக்கம் பின் வருமாறு :
பொருளடக்கம்
என்னுரை
அத்தியாயங்கள்
- மும்பை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்
- மதுரை ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் ஆலயம்
- காஞ்சி ஸ்ரீ காமாக்ஷி அம்மன் கோவில்
- காமாக்யா ஆலயம்
- கன்யாகுமாரி
- ஸ்ரீ வைஷ்ணவி தேவி ஆலயம், ஜம்மு-காஷ்மீர்
- உஜ்ஜயினி
- திருவானைக்காவல்
- மைசூர் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி ஆலயம்,
- கொல்லூர் மூகாம்பிகை
- ராமேஸ்வரம்
- சிதம்பரம்
- திருவண்ணாமலை
- வைத்தீஸ்வரன் கோவில்
- காசி
- கேதார்நாத்
- சோம்நாத்
- கைலாயம்
- பத்ரிநாத்
- ரிஷிகேஷ்
- மதுரா
- பிருந்தாவனம்
- த்வாரகா
- பண்டரிபுரம்
- புரி ஜகந்நாத்
- திருப்பதி
- குருவாயூர்
- திருவனந்தபுரம்
- ஒப்பிலியப்பன்
- ஸ்ரீரங்கம்
நூலில் என்னுரையாக நான் தந்திருப்பது இது:
என்னுரை
ஆலயம் தொழுவது சாலவும் நன்று!
கொன்றைவேந்தனில் உள்ள 91 பாக்களில் இரண்டாவது பாடலில் ஔவையார் தரும் அன்புரை இது!
உலகநாத பண்டிதர் இயற்றிய உலக நீதியில் அவர் தரும் அறிவுரை இது – ‘கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’.
இன்னும் ஆலயத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் பாடல்கள் தமிழில் ஏராளம்.
ஆலயம் அகவாழ்வு மற்றும் புறவாழ்வு ஆகியவற்றின் மையம். அதை வைத்தே நமது வாழ்க்கை சுழன்றது. சுழல்கிறது. சுழலப் போகிறது.
இந்திய நாட்டில் உள்ள பல்லாயிரக்கணக்கான கிராமங்களிலும், நகரங்களிலும் உள்ள கோவில்களின் எண்ணிக்கை எண்ணுக்கு அடங்காதது.
இப்படிப்பட்ட கோவில்கள் இருக்கும் திருத்தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டு தம் ஆன்மீக வாழ்க்கையை மேம்படுத்திக் கொண்டு வாழ்ந்தனர் அறிவு சால் நம் பாரத மக்கள்.
கன்யாகுமரியிலிருந்து கைலாயம் வரை உள்ள கோவில்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறப்பு உண்டு.
அன்பர்கள் குடும்பத்தோடும், சுற்றத்தோடும் தலம் தலமாக யாத்திரை மேற்கொண்டு அங்கு இருக்கும் சிறப்புகளை அறிந்து அவற்றை எங்கும் பரப்பி வந்தனர்; அருளாளர்கள் பல நூல்களின் வாயிலாக அவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வந்தனர்.
இப்படிப்பட்ட ஆலயங்கள் பற்றிய சிறப்புகளைச் சொல்வதற்கான அரிய வாய்ப்பு லண்டனிலிருந்து ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியின் வாயிலாகக் கிடைத்தது.
நிகழ்ச்சியை இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, ஜெர்மனி, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, இலங்கை, இந்தியா உள்ளிட்ட ஏராளமான நாடுகளில் உள்ள அன்பர்கள் கேட்டனர்; பாராட்டினர்.
அவர்கள் அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக.
ஞானமயம் நிகழ்ச்சியை நடத்தும் திரு சுவாமிநாதன் அவர்களுக்கும் திரு கல்யாணசுந்தர சிவாச்சாரியார் அவர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றி.
ஆலயம் அறிவோம் உரைகளை 2019 செப்டம்பர் இறுதியில் தொடங்கி தொய்வின்றி வாரந்தோறும் லண்டனிலிருந்து ஒளிபரப்பாகிய ஞானமயம் நிகழ்ச்சியில் இனிய குரலில் வழங்கியவர் திருமதி பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
Facebook.com/gnanamayam மற்றும் YOUTUBEஇல் ஆலயம் அறிவோம் தொடரை வாரந்தோறும் கேட்ட பல அன்பர்களும் இந்த உரைகளை அப்படியே நூல் வடிவாக வெளியிட வேண்டும் என்று கூறவே இந்த நூல் இப்போது வெளி வருகிறது.
இதை வெளியிட முன்வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக!
30 திருத்தலங்கள் முதல் பாகத்தில் இடம் பெற, அடுத்த பாகத்தில் இன்னும் பல தலங்கள் இடம் பெறும் என்ற நற்செய்தியுடன் உங்களை திருத்தல யாத்திரைக்கு அழைக்கிறேன்.
சான்பிரான்ஸிஸ்கோ ச.நாகராஜன்
18-6-2022
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்.
தொலைபேசி எண் : 9980387852.
நூல் அழகிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அச்சுப் பதிப்பு நேர்த்தியாக உள்ளது.
***
Tags- தாகூர் ,காந்திஜி , மணப்பெண் அறை, சாந்திநிகேதன், ஆலயம் அறிவோம்(முதல் பாகம்)